காரியாபட்டி வட்டம், பிசிண்டி கிராமத்தில் குண்டாற்றின் குறுக்கே அணைக்கட்டு அமைத்து பாசன நீர் வழங்கும் கட்டுமானப் பணிகளை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், பிசிண்டி கிராமத்தில் நீர்வளத்துறை சார்பில் குண்டாற்றின் குறுக்கே ரூ.23.85 கோடி மதிப்பில் அணைக்கட்டு கட்டுமானம் அமைத்து வக்கணாங்குண்டு கண்மாய் மற்றும் இதர கண்மாய்களுக்கு பாசன நீர் வழங்கும் கட்டுமானப் பணிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், பிசிண்டி கிராமத்தின் வழியே செல்லும் குண்டாறு வடிநிலக் கோட்டம் குண்டாற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டுமானம் அமைத்து தலை மதகின் வழியே வழங்கு வாய்க்கால் மூலம் வக்காணாங்குண்டு மற்றும் இதர கண்மாய்களுக்கு பாசன நீர் வழங்கும் திட்டத்திற்காக தமிழக அரசால் அரசாணை பெறப்பட்டு, அதற்கான பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, புதிதாக அமையவுள்ள இந்த அணைக்கட்டு 170 மீட்டர் நீளம், 2 மீட்டர் உயரத்துடன் விநாடிக்கு 42,000 கன அடி நீர் வெளியேற்றும் திறனுடனும், 4 எண்ணம் மணற்போக்கி(2.10 x 2.00 மீட்டர்) வினாடிக்கு 3240.00 கன அடி வெளியேற்றும் திறனுடனும், 2 எண்ணம் தலைமதகு (1.80 x 0.60 மீட்டர்), வினாடிக்கு 62 கன அடி வெளியேற்றும் திறனுடனும் அமையவுள்ளது.இந்த புதிய அணைக்கட்டு அமைப்பதன் மூலம் வக்கணாங்குண்டு கண்மாய், சித்துமூன்றடைப்பு கண்மாய், அல்லிகுளம் கண்மாய் மற்றும் அத்திகுளம் கண்மாய் ஆகிய கண்மாய்களுக்கு பாசன நீர் சென்று பிசிண்டி, வடகரை, கரிசல்குளம், வக்கணாங்குண்டு, சித்துமூன்றடைப்பு, அல்லிகுளம் மற்றும் அத்திகுளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 284 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
மேலும், இவ்வணைக்கட்டினால் சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிராம பொது மக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்கும் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் திரு.மதன சுதாகரன், உதவி பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பாசன விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply