சென்னம்பட்டி இடது பிரதான கால்வாய் புனரமைத்தல் பணிகளை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், சென்னம்பட்டியில் நீர்வளத்துறைச் சார்பில், குண்டாறு வடிநிலக்கோட்டத்தில், ரூ.22.50 கோடி மதிப்பில் சென்னம்பட்டி இடது பிரதான கால்வாய் புனரமைத்தல் பணிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு நீர் வளத்தைப் பெருக்குவதற்காக பல்வேறுத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வானம்பார்த்த பூமியான நமது பகுதியில் அடிப்படையான பணியாக விவசாயம் இருக்கிறது. மண்ணையும், மழையையும், நம்பி இருக்கக்கூடிய இந்தபகுதியில் பாசனத்திட்டங்களை பெருக்கக்கூடிய நலத்திட்டங்கள் தேவை என்பதை உணர்ந்து தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டத்தில் உள்ள 19 கண்மாய்களுக்கும் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள 2 கண்மாய்களுக்கும் பாசனநீர் வழங்குவதற்காக மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டம் சென்னம்பட்டி கிராமத்தில் கவுண்டாநதியின் குறுக்கே அணைக்கட்டு கட்டி வலது மற்றும் இடது கால்வாய்கள் 1986-1991 ஆம் வருடத்தில் அமைக்கப்பட்டது.சென்னம்பட்டி அணைக்கட்டின் இடது கால்வாயின் மொத்த நீளம் 15,785 மீட்டர் ஆகும். இக்கால்வாய் மூலம் 1686 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றன. சென்னம்பட்டி இடது கால்வாயில் உள்ள கட்டுமானங்கள் அனைத்தும் சிதிலமடைந்து இருப்பதால் கால்வாயிலிருந்து தண்ணீர் கசிந்து வீணாகிறது. வாய்காலில் மண் படிந்து மேடாக இருப்பதால் தண்ணீர் செல்லும் திறன் வெகுவாக குறைந்து கடைமடை வரை தண்ணீர் செல்வதில்லை.
எனவே, இக்கால்வாயினை புனரமைப்பு செய்ய வேண்டியுள்ளதால் புனரமைப்பு பணிகளுக்கு அரசாணை மூலம் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் 6 மடைகள் மறுகட்டுமானம் மற்றும் மறுசீரமைத்தல், 3 பாலங்கள் மறுசீரமைத்தல், ஒரு மேலோட்ட நீர்போக்கி மறுகட்டுமானம் மற்றும் மறுசீரமைத்தல், ஒரு தொட்டிபாலம் மறுகட்டுமானம், 3 சுரங்கவழி நீர்போக்கி மறுகட்டுமானம் மற்றும் மறுசீரமைத்தல், 4 சுரங்கவழி ஒடை நீர்போக்கி மறுகட்டுமானம் மற்றும் மறுசீரமைத்தல், கரிசல்குளம் கண்மாயின் நீர் கட்டுப்படுத்தி மறுகட்டுமானம், தலை மதகு மறுகட்டுமானம் மற்றும் மறுசீரமைத்தல், சுமார் 550 மீட்டர் வழிபடுத்துச் சுவர்கள் கட்டும் பணிகள், 15,785 மீ. பிரதான வாய்க்கால் துார்வாரும் பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன.
இப்பணிகள் மூலம் சென்னம்பட்டி இடது கால்வாயின், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டத்தில் உள்ள 10 கண்மாய்களும், மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள 2 கண்மாய்களும் போதிய பாசனநீர் பெற்று, சுமார் 1,686 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைந்து அதிக பயிர் மகசூல் பெறும். மேலும், இப்பணிகள் மூலம் கண்மாய்களுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்கும் நிலையில் அப்பகுதிகளில் உள்ள கிராமங்களின் நிலத்தடிநீர் வெகுவாக உயர்ந்து கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு நிரம்பி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் பிரச்சனை தீர்வதுடன் இப்பகுதி கிராமமக்களின் வாழ்வாதாரம் உயரும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர்(வைப்பாறு வடிநில வட்டம்) திரு.மதன சுதாகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர் கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பாசன விவசாயிகள், கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply