விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில்வேளாண்மைத்துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், பருத்தி ஆராய்ச்சி விஞ்ஞானிகள், விவசாயிகள் மற்றும் பஞ்சாலை அதிபர்கள்ஆகியோர்களுடனானகலந்துரையாடல் நிகழ்ச்சி (17.10.2025) அன்று நடைபெற்றது. பஞ்சாலை நடத்துபவர்களுக்கும் விவசாயிகளுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பதற்காகஇந்தகலந்துரையாடல்நிகழ்ச்சிநடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில், பருத்தி மற்றும் பருத்தி சார்ந்த தொழில்கள் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் நடைபெறும் விதம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் தான் உலகத்தில் உள்ள எல்லா வகையான பருத்தி இரகங்கள் பயிரிடப்படுகின்றன.மேலும் பருத்தியின் பரப்பளவு உலக நாடுகளில் இந்தியா முதன்மை இடம் வகிக்கிறது. இருந்தாலும் பல இடர்பாடுகளினால் பருத்தியின் விளைச்சல் குறைவதாகவும் அதனால் இங்குள்ள பஞ்சாலைகள் வெளிமாநில பருத்தியை நம்பி இருப்பதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.இந்திய பருத்தி கழக (கோயம்புத்தூர்) பொது மேலாளர் திரு.ஜெயகுமார் அவர்கள் இராஜபாளையதில் ஒரு பருத்தி கொள்முதல் நிலையம் ஆரம்பிக்க உள்ளதாகவும், இதற்கு குறைந்தது 3000 ஹெக்டர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட வேண்டும் எனவும், இந்த பகுதியை சுற்றி பருத்தி பிரித்தெடுக்கும் ஆலைகள், வணிக வளாகம், சேமிப்பு கிடங்கு ஆகியவை இருக்க வேண்டும் என எடுத்துக்கூறினார். மேலும், விவசாயிகள் இக்கொள்முதல் நிலையத்தில் பருத்தியை விற்பதற்கு தரமான பருத்தியை கொண்டு வந்து அதிக விலைக்கு விற்கலாம். இதற்கு முன்னதாக விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டையை வைத்து கப்பாஸ் என்ற இணையதள பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். வியாபாரத்தில் உள்ள இடர்பாடகளான பருத்தியின் அதிக ஈரப்பதம், பருத்தி இழையின் குறைந்த நிளம் ஆகியவை ஆலையின் தொழிலை பாதிக்கின்றன என பஞ்சாலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.இதில் பங்குபெற்ற விவசாயிகள் விதையின் தரம் குறைந்து காணப்படுவதாகவும், அதிகமான பூச்சி நோய்கள், அதிகமான ஆட் கூலி, அதிக செலவு ஆகியவற்றை பட்டியலிட்டனர். இதைத்தொடர்ந்து இதற்கான காரணங்களை தென்னந்திய பருத்தி அபிவிருத்தி ஆராய்ச்சி கழகத்தின் விஞ்ஞானி திருமதி எம்.ஆசாராணி அவர்கள் பட்டியலிட்டார். முக்கியமாக விவசாயிகள் தரமற்ற பருத்தி விதைகளை பயன்படுத்துவதும், விதைகளை பஞ்சாலைகள் மாட்டு தீவனத்திற்கு விற்பனை செய்யும் பன்னி பருத்தி விதையை பயன்படுத்துவதால், இரகத்தின் தூய்மை இழந்து, தரமற்ற பருத்தியை கொடுக்கிறது. இந்த விஞ்ஞான பூர்வமான தகவல்களை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இதை தொடர்ந்து, மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முனைவர் சங்கர் நாராயணன், முனைவர் உஷாராணி, முனைவர் வளர்மதி ஆகியோர் பருத்தி விளைச்சலை ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் அளவுக்கு பெருக்கிட உயர் தொழில் நுட்பங்களை எடுத்துக்கூறினார். மேலும் பருத்தியுடன் ஊடுபயிர் சாகுபடி செய்து மானாவரி நிலத்தில் கூடுதல் வருமானத்தை பெறலாம். சில சமயங்களில் பருவநிலை தவறும் போது ஊடுபயிர்கள் விவசாய செலவை ஈடுகட்ட பயன்படும் என்று எடுத்தும் கூறினார்கள்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் கண்டுபிடிக்கப்பட தொழில்நுட்பங்களை வேளாண்மைத்துறை மூலமாக விவசாயிகளிடம் பரவலாக்கப்படுகிறது. மேலும், பயிற்சிகள், செயல் விளக்கங்கள், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இக்கால சூழ்நிலைகளுக்கு கேற்ப இணைய தளங்கள் மூலமாகவும், கைபேசி மூலாகவும் உடனுக்குடன் தொழில் நுட்பங்கள் பரவலாக்கப்படுகிறது. நல்ல தரமான தங்களின் நிலத்திற்கு ஏற்ற சான்றளிக்கப்பட்ட பருத்தி விதைகள், ஈரப்பதம் குறைந்த சதவீதம் பருத்தி, சருகு மற்றும் தூய்மையான பருத்தி ஆகியவற்றை விவசாயிகள் அடைய தகுந்த பயிற்சி கொடுத்து விவசாயிகளின் நலனை பாதுகாத்து வளர்ச்சியை ஊக்குவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சு.ஜோதிமணி, பொது மேலாளர் திரு.ஆர்.ஜெயகுமார், முனைவர்கள் திரு.சங்கர் நாராயணன், திருமதி உஷாராணி, திருமதி வளர்மதி, மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் விவசாயிகள், மற்றும் பஞ்சாலை அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், எஸ்.ஆர்.அரசு மேல்நிலைப் பள்ளி, என்.மேட்டுப்பட்டியில் (18.10.2025) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நலம் காக்கும் ஸ்டாலின் முகாமானது 02.08.2025 அன்று அமைச்சர் பெருமக்கள் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ் 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவுநோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், இம்முகாமில் குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இந்த முகாமானது நமது விருதுநகர் மாவட்டத்தில் 11-வது முறையாக நடைபெற்று வருகிறது. அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 1400 பேருக்கு இரத்த பரிசோதனைகள், மற்றும் பிற பரிசோதனைகளை செய்து வருகின்றனர். மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருப்பது நமது மருத்துவத்துறையாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.அதன்படி, இன்று சாத்தூர் வட்டம், எஸ்.ஆர்.அரசு மேல்நிலைப் பள்ளி, என்.மேட்டுப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (17.10.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தனர்.மாவட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறை தலைமை அலுவலர்கள் தவறாது கலந்து கொண்டு மனுமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரத்தினை மனுதாரருக்கு கட்டாயம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. வனவிலங்குகளால் பயிர் சேதம் அதிக அளவில் ஏற்படுவதை தடுக்க குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்குமாறும், பயிர்சேத நிவாரணத்திற்கு நடவடிக்கை எடுத்து பயிர் இழப்பீடு உடனடியாக விவசாயிகளுக்கு வழங்கவும், வனவிலங்குகளை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் மற்றும் கிராம அளவில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதை மேல் நடவடிக்கை எடுக்கவும், பருத்தி விலை வீழ்ச்சியால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு பருத்திக்கு உரிய விலை கிடைக்கவும், பருத்தி காட்டன் கார்ப்பரேசன் ஆப் இந்தியா கொள்முதலுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும், தென்னை பயிருக்கு காப்பீடு கிடைக்க மேல் நடவடிக்கை எடுக்கவும், சேதம் அடைந்துள்ள உலர்களங்களை சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் சீரமைத்திடவும், மானியத்தில் சோலார் மின்வேலி வழங்கிடவும், சேத்தூரில் நிரந்தர கொள்முதல் நிலையம் அமைக்கவும், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் சீரமைத்திடவும், நீர் நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.சேதம் அடைந்துள்ள உலர்களங்களை சமூக பொறுப்புணர்வு நிதியில் சீரமைத்திடவும், அத்தி துண்டு முதல் கல்லுக் கட்டு ஊரணி வரை தார்ச்சாலை அமைக்க மேல் நடவடிக்கை எடுக்குமாறும், நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகளவில் திறக்க உரிய மேல் நடவடிக்கை எடுக்குமாறும், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.மேலும், பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்தவும், நீர் நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட திட்ட கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இக்கூட்டத்தில் துணை இயக்குநர்( மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர்) மரு.இரா.முருகன், இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,), திருமதி அ.அம்சவேணி வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி மு.சுமதி, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி இந்திரா, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மற்றும் சாத்தூர் வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,I A S., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் அருகில் அருங்காட்சியகங்கள் துறை சார்பில் ரூ.6.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அருங்காட்சியக கட்டிட பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சத்திரெட்டியபட்டி ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம், குழுவின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மகளிர் சுய உதவி குழுக்களுக்கான அரசு திட்டங்கள், வங்கி கடனுதவி, மானியங்கள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் உப்பத்தூரில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், கட்டப்பட்டு வரும் கீழ்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணிகளின் முன்னேற்றம், அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், சாத்தூர் துணை மின் நிலைய அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்தும், மின் நிலையத்தில் தேவையான மின் உபகரணங்கள் இருப்பு குறித்தும், மழைக்காலங்களில் சேதமடையும் மின் கம்பங்களுக்கு பதிலாக போதுமான அளவு இருப்பு உள்ள மின் கம்பங்கள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் மேட்டமலை ஊராட்சியில் முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகளை நேரில் சென்று வழங்கி, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.அதனைத்தொடர்ந்து, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் சின்னக்காமன்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.மேலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் சின்னக்காமன்பட்டி ஊராட்சியில் மகளிர் குழுவின் மூலம் கடன் பெற்று செயல்பட்டு வரும் பிளவர் மில்லினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு பயன் பெறும் சுய உதவிக்குழுக்களின் நபர்களின் எண்ணிக்கை குறித்தும், இதன் மூலம் சுய உதவி குழுக்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (16.10.2025) வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை துரிதமான முறையில் மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்களின் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,I A S, அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, பொதுமக்களை பாதுகாப்பதற்கு, அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்றப்பட வேண்டும். அதனடிப்படையில் காவல் துறை சார்பில் பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, மீட்புப்பணி மேற்கொள்ள தகுதி வாய்ந்த காவலர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நிலையிலான ஒரு குழுவினை அமைக்கவும், மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் மூலம் மாவட்ட மற்றும் வட்ட அளவில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மேலும், பொதுப்பணித்துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசு கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, பலவீனமான கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றை சீர் செய்திடவேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பாலங்கள் மற்றும் சாலைகளை ஆய்வு செய்து, பலவீனமாக உள்ளவற்றை சீர் செய்திடவும், உணவுப்பொருள் வழங்கல் துறையின் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருட்களை தேவையான அளவு முன்கூட்டியே இருப்பு வைத்து விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பலவீனமான நீர்நிலைகளின் கரைகள் மற்றும் மதகுகளை சரிசெய்திடவும், வடகிழக்கு பருவமழை காலங்களில் கிராமங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் போது மக்களை காப்பாற்றிட ஊராட்சி செயலர்கள் தக்க வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மேலும், சுகாதாரத் துறையின் மூலம் மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வேளாண் துறை மூலம் வெள்ளக் காலங்களில் வேளாண் பயிர்கள், தோட்டப் பயிர்கள் மற்றும் இதரப் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் கண்டறிந்து அறிக்கை அனுப்பிடவும், மேலும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் சார்பில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் மழை நீர் தங்குதடையின்றி செல்ல வழிகள் ஏற்படுத்தவும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் வெளியேற்றிட மாற்று வழிகளை ஏற்பாடு செய்திடவும், மீட்புப் பணிகளுக்கான இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். எனவே, அனைத்துத்துறை அலுவலர்களும், வடகிழக்குப் பருவமழை காலங்களில் ஒருங்கிணைந்து பணியாற்றி பொதுமக்களை இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றிட வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்கள் அனைவரும் மழை வெள்ளக்காலங்களில் தங்களின் தேவைகளுக்கும், புகார் தெரிவிப்பதற்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.தெ.கண்ணன், த.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியைவெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018 ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது. மேலும், உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்குஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலிஎழுப்பும்பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் (ம) காலநிலை மாற்றத்துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் உச்சநீதிமன்ற ஆணையின்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமைபட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்கவேண்டும்.அதிக ஒலி எழுப்பும்மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கவேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள்,நீதிமன்றங்கள்வழிபாட்டுத் தலங்கள் போன்றஅமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.ஆகவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து (15.10.2025)மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலராஜகுலராமன் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் மதிப்பில் நர்சரி பூங்கா அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மேலராஜகுலராமன் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.00 இலட்சம் மதிப்பில் பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டப்பட்டு வருவதையும், சத்திரப்பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10.00 இலட்சம் பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டப்பட்டு வருவதையும், சம்சிகாபுரம் ஊராட்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20.00 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் கட்டுமானப் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், சம்சிகாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு சொத்து வரி வசூலித்தல், வரவு-செலவு தொடர்பான அறிக்கைகள், கோப்புகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.அதனைத்தொடர்ந்து, சம்சிகாபுரம் ஊராட்சி வேலாயுதபுரம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகட்டும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளியிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும், சம்சிகாபுரம் ஊராட்சி வேலாயுதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியினை பார்வையிட்டு மாணவர்களின் கற்றல் மற்றும் எழுத்தறிவுத்திறன் குறித்தும், பயிற்றுவிப்பு முறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை துரிதமான முறையில் விரைந்து முடித்து அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் மேலராஜகுலராமன் ஊராட்சி, சத்திரப்பட்டி மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் நாரணாபுரம் ஆகிய இடங்களில் (15.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. மேலும், இம்முகாம்களை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு, அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். அதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் மேலராஜகுலராமன் ஊராட்சி, சத்திரப்பட்டி மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் நாரணாபுரம் ஆகிய இடங்களில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, அனைத்துத்துறைகளின் சேவைகள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, இம்முகாம்களில் பட்டா வேண்டி மனு அளித்து, தீர்வு பெற்றவர்களுக்கு பட்டா உத்தரவுகளையும், மின் இணைப்பில் பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்த நகலினையும், குடும்ப அட்டைகள் வேண்டி விண்ணப்பித்த மனுதாரர்களுக்கு குடும்ப அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இம்முகாம்களில் வழங்கப்படும் மனுக்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். பின்னர், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர்கள் திரு.ராஜீவ்காந்தி(இராஜபாளையம்), திரு.லட்சம்(சிவகாசி), அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (14.10.2025) அன்று விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகள் குறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் திருமதி ஆர்.ஜெயசுதா அவர்கள் தலைமையில், ஆணைய கூராய்வுக் கூட்டம் நடைபெற்றது.மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் மனசு ஆலோசனைப்பெட்டியும், தனியார் பள்ளிகளில் புகார் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டிகளில் மாணவர்கள் போடப்படும் புகார் கடிதங்களை பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள மூத்த ஆசிரியர் உள்ளிட்ட உறுப்பினர்களை கொண்டு குழுக்கள் அமைத்து அப்புகார் மனுவிற்கு தீர்வு காண வேண்டும். இப்புகார் குறித்த பதிவேடுகளை பள்ளிகளிலும், மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் பராமரிக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ-மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆற்றுப்படுத்துநர்கள கட்டாயம் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கள ஆய்வு மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும், பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியும் தருணங்களில், அக்குழந்தைகளுக்கு முறையாக ஆலோசனை வழங்கி அக்குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். அக்குழந்தைகள் குறித்து முழுமையான சமூக விசாரணை அறிக்கை தயார் செய்து ஆவணப்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம் 2014-ன் கீழ் மாவட்டத்தில் பள்ளிகளின் கீழ் செயல்படும் பள்ளி விடுதிகள் அனைத்து பதிவு மற்றும் உரிமைச்சான்று பெற்றிருக்க வேண்டும். அவ்விடுதியினை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியப்படும் பட்சத்தில், அக்குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நலக்குழு முன் ஒப்படைத்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பின்தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அக்குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை குழந்தைகள் நலக்குழு முன் ஆஜராகி வேண்டும் என தெரிவித்தார். பின்னர், விருதுநகரில் செயல்பட்டு வரும் அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லத்தினை ஆய்வு மேற்கொண்டார். மேலும், சிவகாசியில் செயல்படும் பட்டாசு ஆலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனரா என்றும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் திருமதி ஆர்.ஜெயசுதா அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் . இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கருப்பையா, முதன்மை கல்வி அலுவலர் திரு.இரா.மதன்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 30சதவீத மானியத்துடன் உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அதன்படி, வேளாண்மை / தோட்டக்கலை / வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களின் திறன், விவசாயிகளுக்கு உதவியாக இருந்து, உற்பத்தியை உயர்த்தும் வகையில் உழவர் நலசேவை மையங்கள் 1000 வரை அமைக்க அரசு ரூ.42 கோடி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 முதல் 20 இலட்சம் மதிப்பில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க 30 சதவீத மானியமாக ரூ.3 இலட்சம் முதல் 6 இலட்சம் வரை வழங்கப்படும் .இந்த மையங்களில் உழவர்களுக்கு, தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான மற்றும் நவீன தொழில்நுட்பம் , வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டுதல் குறித்த ஆலோசனை வழங்கப்படும். அத்திட்டத்தில் பயன்பெற வயது 20 முதல் 45-க்குள் இருப்பவர்கள், விரிவான அறிக்கையுடன் வங்கியில் கடன் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.வங்கியில் கடன் ஒப்புதல் பெற்ற பின், மானிய உதவி பெற https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதள முகவரியில் ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை வேளாண் பட்டதாரிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்