25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Oct 23, 2024

போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவத் தூதுவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில்   (22.10.2024) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில், போதைப்பொருட்களுக்கு எதிரான மாணவத் தூதுவர்கள் பங்கேற்ற  விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில், மேனாள் தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு.,I A S., அவர்கள் (பணி நிறைவு) சிறப்புரை ஆற்றினார்கள்.முன்னதாக, இந்நிகழ்ச்சியில், போதைப்பொருள் எதிரான உறுதிமொழியினை மாணவ, மாணவியர்கள் எடுத்துக்கொண்டனர்.அடிக்கடி கைப்பேசி, இணையதளம் பயன்படுத்துதல், பணம் வைத்து சூதாட்டம் விளையாடுதல், இணையதள சூதாட்டம்,  அடிக்கடி கடைகளுக்கு சென்றும், இணையதள மூலமும் பொருட்களை வாங்கி குவித்தல், தொடர்ச்சியாக ஏதாவது ஒன்றை சாப்பிட்டு கொண்டே இருப்பது போன்றவைகள் எல்லாம் நடத்தை தொடர்பான போதை பழக்க வழக்கங்கள்.இதுபோல கைப்பேசி, இணையதளம் இல்லாவிட்டால் பதற்றம் அடைவது, சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் அதிக நேரம் செலவழிப்பது, தொலைக்காட்சியில் நெடுந்தொடர் பார்ப்பது, உடலை பராமரிப்பது, அடிக்கடி சிகை அலங்காரத்தில் கவனம் செலுத்துவது, எப்போதும் பணி தொடர்பான சிந்தனைகள், தோற்றப் பொலிவு, எண்கணிதம்; போன்ற செயல்களிலும் சிலர் போதையாக உள்ளனர்.இப்படி பல விதமான போதைகள் இருந்தாலும், ஒரு தனி மனிதனை அதிகம் பாதிப்பதாக இருப்பது போதை பழக்க வழக்கம் தான். இந்த போதை பழக்க வழக்கங்களில் பழக்கம் மற்றும் அடிமையாவது என இரண்டு கட்டமாக இருக்கிறது. போதை பழக்கத்தில் உள்ளவர் அன்றாட பணிகளில் ஈடுபட முடியும். அவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவது எளிது. ஆனால், போதையில் அடிமையாவது என்பது அதில் மனம், உடல் பாதிக்கப்பட்டு போதை அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. அவர்கள் நினைத்தாலும் அதை நிறுத்த முடியாது.அவர்கள் இயல்பாக இருப்பதற்கே போதை பொருட்களை உட்கொள்ள வேண்டியிருக்கும். இப்படிபட்டவர்களை நிபுணர்களின் உதவியுடன் தான் நாம் மாற்ற முடியும்.போதைப்பொருட்களுக்கு எதிரான மாணவத் தூதுவர்கள் போதை பயன்பாடு எப்படியெல்லாம் தொடங்கி முடிகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். போதைப்பொருளை ஒருமுறை பயன்படுத்தினால் என்ன என்று நினைத்து பயன்படுத்துவது, நண்பர்களின் கட்டாயத்தினால் பயன்படுத்துவது, பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துவது, துக்கமான சூழ்நிலையில் பயன்படுத்துவது உள்ளிட்டவைகள் தான் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கான முதல் படி.முதல் நிலை என்பது இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தி, ஒரு சமூக பழக்கவழக்கமாக மாறி விடுகிறது. இரண்டாம் நிலை என்பது அனைத்து விதமான போதைப்பொருட்களையும் பயன்படுத்துவது என்ற ஆபத்தான பயன்பாடு. மூன்றாம் நிலை சார்ந்திருத்தல் என்பதாகும். இந்த நிலையில் போதைப் பழக்கவழக்கத்திற்கு அந்த உடல் பழக்கம் ஆகிவிடும். எவ்வளவு பயன்படுத்தினாலும் அதை விட அதிகமாக பயன்படுத்த தூண்டும்.நான்காம் நிலை என்பது போதைப்பொருளுக்கு அடிமையாவது. இந்த நிலையின் போது போதைப்பொருள் ஒரு அத்தியாவசியமாகி, அது தான் முதல் தேவையாகி விடுகிறது. போதைக்காக எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். போதைப்பொருள் கிடைக்காமல் போனால் தற்கொலைக்கூட செய்து கொள்வார்கள்.எனவே, மாணவ தூதுவர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் முதலில் தூய்மையோடு இருக்க வேண்டும். எந்த காலகட்டத்திலும்  சக மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். உங்கள் சக மாணவர்களுக்கு போதைப்பொருள் என்பது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும், ஒருமுறை பயன்படுத்தினால் கூட அடிமையாவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும், போதைப் பழக்கத்தினால்; உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்படும் என்பதையும், போதைப்பொருள் பழக்கத்தினால் மனம் மற்றும் உடல் ரீதியாக பாதிப்பு உள்ளது என்பதையும், போதைப் பழக்க வழக்கத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களின் தற்போதைய நிலைமை குறித்தும், அதனால் உறவில் விரிசல், சட்ட சிக்கல் கூட ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதையும் எடுத்துக்கூற வேண்டும்.உடற்பயிற்சி, புத்தகம் வாசித்தல் போன்ற நல்ல பழக்க வழக்கங்கள் மூலம் போதைப்பொருள் இல்லாமலேயே நிறைந்த மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை கற்றுத்தர வேண்டும்.மேலும், போதைப்பொருட்களுக்கு ஆளானவர்களை பற்றியும், போதைப்பொருட்கள் விற்பவர்கள் பற்றியும் தகவல்களை பள்ளி தலைமையாசிரியர், முதல்வர் உள்ளிட்டோரிடம் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளை மாணவ தூதுவர்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தி தமிழகத்திலேயே போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், சுமார் 1200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 23, 2024

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத்தலைவர், அணைக்கட்டு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்கள் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு பரிந்துரை செய்த வளர்ச்சி திட்டப் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத்தலைவர்/ அணைக்கட்டு தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்கள்  திரு.க.அசோகன், திரு.எம்.எஸ்.எம்.ஆனந்தன், திரு.உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திரு.கடம்பூர் ராஜு, திரு.மு.பெ.கிரி, திரு.ஆ.கோவிந்தசாமி, திரு.துரை.சந்திரசேகரன், திரு.ம.சிந்தனை செல்வன், திரு.வி.பி.நாகைமாலி, திரு.த.வேலு, முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர்  (22.10.2024) பல்வேறு பகுதிகளில் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.அதன்படி, விருதுநகரில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் சார்பில் செயல்பட்டு வரும், அரசு கல்லூரி மாணவர் விடுதியினை பார்வையிட்டு, விடுதி அறைகள், குடிநீர், மழைநீர் சேகரிப்பு தொட்டி, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.விடுதி கட்டடமானது ஏறக்குறைய 50 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டுள்ளதாலும், இதில் மாணவர்கள் தங்கி படிப்பதற்கான வசதிகள் இல்லாத காரணத்தினால், புதிய கட்டடம் சுமார் 1.50 கோடி மதிப்பில் கட்டி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு இக்குழு அரசுக்கு பரிந்துரை செய்கிறது என கூறினார்கள்.அதனை தொடர்ந்து, அருப்புக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கினை பார்வையிட்டு, அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து, அங்கிருந்து  கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பல்வேறு பொது விநியோக அமைப்புகளுக்கு விநியோகிக்கப்படுவது குறித்து கேட்டறிந்தார்கள்.பின்னர், சாத்தூர் வட்டம், அப்பையநாயக்கன்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள தனியார் சூரிய மின் உற்பத்தி நிறுவனத்தினை பார்வையிட்டு, அது செயல்படும் விதம், உற்பத்தி திறன், உற்பத்தியில் அரசுக்கு வழங்கப்படும் மின் அளவு மற்றும் கட்டணத்தொகை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.சாத்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் நியாயவிலைக்கடையினை பார்வையிட்டு, அங்குள்ள பொருட்களின் இருப்பு, தரம், பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட அரசு அலுவலர்கள் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை பார்வையிட்டு, கட்டடத்தின் தரம், கட்டடத்தின் உறுதி தன்மை, குடிநீர் மற்றும் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்  குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் இணைச் செயலாளர் திருமதி பி.தேன்மொழி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.ரமேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி.கார்த்திகாயினி, தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர்(பொது) திருமதி.மாலதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் திரு.திருநாவுக்கரசு, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.வள்ளிக்கண்ணு, வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 23, 2024

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான ஆய்வுக் கூட்ட

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (22.10.2024) நடைபெற்ற  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதன்மைச்  செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில்,  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத்தலைவர்/ அணைக்கட்டு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள்  திரு.க.அசோகன், திரு.எம்.எஸ்.எம்.ஆனந்தன், திரு.உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திரு.கடம்பூர் ராஜு, திரு.மு.பெ.கிரி, திரு.ஆ.கோவிந்தசாமி, திரு.துரை.சந்திரசேகரன், திரு.ம.சிந்தனை செல்வன், திரு.வி.பி.நாகைமாலி, திரு.த.வேலு, முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் தணிக்கைப் பத்திகள் மற்றும் பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்களுடன்  விவாதித்து ஆய்வு செய்தனர்.பின்னர் இக்கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்  ஆகிய துறைகளில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையின் வினாக்களுக்கான தணிக்கைப் பத்திகள் மற்றும் பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும், பொது நிறுவனங்களுக்கு அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை பொது நிறுவனங்கள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நிதிமேலாண்மையை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.மேலும், பொது நிறுவனங்கள் சார்பில் செயல்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்தும், தற்போது செயல்பாட்டில் உள்ள  புதிய திட்டங்களின் நிலை குறித்தும் தொடர்புடைய அலுவலர்களுடன் கேட்டறிந்து ஆய்வு செய்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) (பொ) திரு.தருண்குமார்,இ.வ.ப., சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்,I A S, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா, கோட்டாட்சியர்கள், பொது நிறுவனங்களின் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 22, 2024

அரசுப்பள்ளி மாணவர்கள் ஹைதராபாத் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CSIR-Indian Institute of Chemical Technology) நடைபெற்ற 2 நாட்கள் ஜிக்யாசா(Jigyasa) உண்டு உறைவிடப் பயிற்சி முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் வேதியியலில் மிகுந்த ஆர்வம் மற்றும்  கல்வியில் சிறந்த 100 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு ஹைதராபாத் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CSIR-Indian Institute of Chemical Technology)) மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளை இணைக்கும் விதமாக 2 நாட்கள் நடைபெற்ற ஜிக்யாசா(Jigyasa) உண்டு உறைவிடப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.அதன்படி, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம்(CSIR-Indian Institute of Chemical Technology) நிறுவனம்  மற்றும் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம்(CSIR- National Geophysical Research Institute), உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம்(CCMB- The Centre for Cellular & Molecular Biology) ஆகிய நிறுவனங்கள் இணைந்து 17.10.2024 மற்றும் 18.10.2024 ஆகிய 2 நாட்கள் நடத்திய உண்டு உறைவிடப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.இப்பயிற்சி முகாமில் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR- National Geophysical Research Institute) இயக்குநர் டாக்டர் பிரகாஷ்குமார் அவர்கள் "தாய் பூமி" மற்றும் பூமியின் இயற்கை செல்வத்தை ஆராய்வதிலும் பாதுகாப்பதிலும் புவி இயற்பியல் மற்றும் புவியியல் ஆய்வுகளின் முக்கியத்துவம் பற்றிய விரிவுரையுடன் நிகழ்வை துவக்கி வைத்தார். எதிர்கால சந்ததியினருக்கான நிலைத்தன்மை மற்றும் வள நிர்வாகத்தை உறுதி செய்வதில் பூமி அறிவியலின் முக்கிய பங்கை அவரது உரை வலியுறுத்தியது.இரண்டாம் நாள், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின்(CSIR-Indian Institute of Chemical Technology) இயக்குநர் டாக்டர் சீனிவாச ரெட்டி அவர்கள், அன்றாட வாழ்வில் வேதியியலின் முக்கியத்துவம், ஆராய்ச்சிப் பணிகளின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்தில் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (CSIR-Indian Institute of Chemical Technology) பங்களிப்புகளை வலியுறுத்தும் வகையில் மாணவர்களிடம் உரையாற்றினார். மாணவர்கள் அங்குள்ள ஆய்வகங்களை பார்வையிட்டு, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி தங்களது கேள்விகள் மற்றும் சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெற்றனர்.இதன் மூலம் எதிர்கால வாய்ப்புகள் குறித்து விஞ்ஞானிகளிடம் நேரடியாக கேட்டு அறிந்து தெளிவு பெறுவதற்கும், அறிவியல் மனநிலை மற்றும் ஆராய்ச்சி மனப்பாங்கை வளர்ப்பதற்கும் இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமைந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.

Oct 22, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்    முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் தலைமையில்  (21.10.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு,  விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  முன்னதாக, இராஜபாளையம் வட்டம், செவல்பட்டியை சேர்ந்த லேட்.திரு.ராமசுப்பு என்பவர் பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி இறந்ததால், வாரிசுதாரரான அவரது மனைவி திருமதி சரண்யா  என்பவருக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.1 இலட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.மேலும், சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தை சேர்ந்த திரு.செல்வநாயகம் என்பவரது மகன் திவாகர் தண்ணீர் பேரலில் விழுந்து மூச்சுத்திணறி இறந்ததால், அவரது தந்தைக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.1 இலட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர்    திருமதி அனிதா, மாவட்ட உதவி ஆணையர் (கலால்) திரு.கணேசன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Oct 22, 2024

"Coffee With Collector” என்ற 112-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (21.10.2024) வத்திராயிருப்பு ரங்காராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 40 மாணவர்களுடனான "Coffee With Collector” என்ற 112-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்     முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 112-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள்; உற்சாகத்துடன் கலந்து கொண்டு,  இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.  

Oct 22, 2024

விஜயகரிசல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி செல்வி பா.மாலதி என்பவர் மதுரையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் (School Games Federation of India) கலந்து கொண்டு, மாநில அளவில் ஐந்தாம் இடம் பெற்றார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெம்பக்கோட்டை வட்டம், விஜயகரிசல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி செல்வி பா.மாலதி என்பவர் மதுரையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் (School Games Federation of India) கலந்து கொண்டு, மாநில அளவில் ஐந்தாம் இடம் பெற்றார். அம்மாணவிக்கு சொந்தமாக பயிற்சி செய்வதற்கு துப்பாக்கி இல்லாததால் அவர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ. 13.300/- மதிப்பிலான பயிற்சி துப்பாக்கியினை (177 Air Raffle) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S அவர்கள் (21.10,2024) வழங்கினார்.

Oct 22, 2024

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம்கள் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது

விருதுநகர் மாவட்ட  ஆட்சித்தலைவர் வழிகாட்டுதலின்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம் செப்டம்பர் 20-ம் தேதி முதல் அந்தந்த வட்டார பஞ்சாயத்து அலுவலகங்களில் விடுபட்ட பயனாளிகளுக்கு புதியதாக பதியப்பட்டு வருகிறது. இதுவரை இம்முகாமில் 19,412 பயனாளர்களுக்கு புதியதாக மருத்துவ காப்பீட்டு அட்டை பதியப்பட்டுள்ளது. மேலும் கீழ்க்காணும் அட்டவணைப்படி அக்டோபர் 22-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.முகாம் நடைபெறும் நாட்கள் விபரம்:விருதுநகர் யூனியனில் 22ம் தேதி துலுக்கப்பட்டியிலும், 23 மற்றும் 24 -ம் தேதி ஆமத்தூரிலும், 25-ம் தேதி கடம்பன்குளத்திலும், 26ம் தேதி மெட்டுக்குண்டுலும், 27ம் தேதி சென்னல்குடியிலும்,  அருப்புக்கோட்டை யூனியனில் 22ம் தேதி செம்பட்டியிலும், 23ம் தேதி கோபாலபுரத்திலும், 24ம் தேதி செட்டிபட்டியிலும், 25ம் தேதி வில்லிபத்திரியிலும், 26ம் தேதி T.மீனாட்சிபுரத்திலும், 27ம் தேதி திருவிருந்தாள்புரத்திலும்,காரியாபட்டி யூனியனில் 22ம் தேதி பந்தனேந்தலிலும், 23ம் தேதி பாப்பனத்திலும், 24ம் தேதி T.வேப்பங்குளத்திலும், 25ம் தேதி T.செட்டிகுளத்திலும், 26ம் தேதி வக்கணாங்குண்டுலும், 27ம் தேதி A.தொட்டியன் குளத்திலும்,நரிக்குடி யூனியனில் 22ம் தேதி மேலபருத்தியூரிலும், 23ம் தேதி இசலிலும், 24ம் தேதி வேலனேரியிலும், 25ம் தேதி பூமாலைப்பட்டியிலும், 26ம் தேதி பனைக்குடியிலும், 27ம் தேதி எழுவாணியிலும்,ராஜபாளையம் யூனியனில் 22ம் தேதி சோழபுரத்திலும், 23ம் தேதி சோலைச்சேரியிலும், 24ம் தேதி முதுகுடியிலும், 25ம் தேதி நக்கனேரியிலும், 26ம் தேதி கிழவிக்குளத்திலும், 27ம் தேதி ஜமீன்கொல்லங்கொண்டானிலும்,ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் 22ம் தேதி A.ராமலிங்கபுரத்திலும், 23ம் தேதி மல்லிபுதூரிலும், 24ம் தேதி திருவண்ணாமலையிலும், 25ம் தேதி வு.மானகசேரியிலும், 26ம் தேதி பூவாணியிலும், 27ம் தேதி விழுப்பனூரிலும்,திருச்சுழி யூனியனில், 22ம் தேதி நார்த்தம்பட்டியிலும், 23ம் தேதி பரளச்சியிலும், 24ம் தேதி மறவர்பெருங்குடிலும், 25ம் தேதி மு.செட்டிகுளத்திலும், 26ம் தேதி விடத்த குளத்திலும், 27ம் தேதி செங்குளத்திலும்,வத்றாப் யூனியனில், 22ம் தேதி சேதுநாராயணபுரத்திலும், 23ம் தேதி நத்தம்பட்டியிலும், 24ம் தேதி இலந்தைகுளத்திலும், 25ம் தேதி தம்பிபட்டியிலும், 26ம் தேதி S கொடிக்குளத்திலும், 27ம் தேதி ஆயர்தர்மத்திலும்,விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டில், 22ம் தேதி பெரியபள்ளிவாசல் வளாகத்திலும், 23ம் தேதி பெரியபள்ளிவாசல் வளாகத்திலும், 24ம் தேதி பெரியபள்ளிவாசல் வளாகத்திலும், 25ம் தேதி TVS பாலாசங்கா வளாகத்திலும், 26ம் தேதி முத்துராமன்பட்டியிலும், 27ம் தேதி முத்துராமன்பட்டியிலும்,அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வார்டில், 22ம் தேதி காமராஜ் திருமணமண்டபத்திலும், 23ம் தேதி ஆயிரங்கண்மாரியம்மன் கோவில்மண்டபம் & VASS திருமண மண்டபத்திலும், 24ம் தேதி கம்மவார் மண்டபம் ரூ வேலாயுதபுரம் சமுதாயக்கூடத்திலும், 25ம் தேதி ஆசாரிமார் மண்டபம் ரூ தெற்குதெரு சவுண்டம்மன் கோவில் மண்டபத்திலும், 26ம் தேதி ராமசாமிபுரம் நகராட்சி பள்ளிகூடத்திலும், 27ம் தேதி மதுரைரோட்டில் உள்ள அல்அமின்பள்ளியிலும்,ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டில், 22ம் தேதி சிவகாமிபுரம் சாலியர் சமுதாயக்கூடத்திலும், 23ம் தேதி மூதனூர் சாவடியிலும், 24ம் தேதி பெரியகொட்டி முக்கலூர் தாயாதியர் சமுதாயகூடத்திலும், 25ம் தேதி கம்மவார் சமுதாய கூடத்திலும் நடைபெறுகின்றன. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள முகாமில் குடும்பஅட்டை மற்றும் ஆதார்அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு இது வரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் விவரம்:   மாவட்ட திட்ட அலுவலர், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், விருதுநகர் மற்றும் கைப்பேசி எண். 73730 04974 - என்ற எண்ணை  தொடர்பு கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 22, 2024

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் , அணைக்கட்டு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்கள் பல்வேறு அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் / அணைக்கட்டு தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில் பொது நிறுவனங்கள் குழு(2024-2025) 22.10.2024 விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தன்னாய்வு செய்ய உள்ளது.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவானது 22.10.2024 அன்று முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்களுடன், விருதுநகர் சுற்றுலா மாளிகையில் கூடி மேற்கூறிய நிறுவனம் /வாரியம் / கழகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.தொடர்ந்து  பிற்பகல் 03.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் தணிக்கைப் பத்திகள் மற்றும் மேற்படி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட உள்ளது.

Oct 21, 2024

117- வது தேவர் ஜெயந்தி மற்றும் 62-வது தேவர் குருபூஜை மற்றும் மருது சகோதரர்கள் நினைவு தினம் தொடர்பானஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  கூட்டரங்கில், 117-வது தேவர் ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா மற்றும் மருது சகோதரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் (19.10.2024) நடைபெற்றது.117-வது தேவர் ஜெயந்தி மற்றும் 62 -வது குருபூஜை விழா மற்றும் மருது சகோதரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் BNSS பிரிவு-163(1) ன் கீழ் தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் விழாவிற்கு செல்பவர்கள், பொது மக்களின் நலன் கருதி அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் அனைவரும் தவறாது கடைபிடிக்க வேண்டும்.மரியாதை செலுத்த செல்ல விரும்பும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள்/ பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் / பிரதிநிதிகள் (5 நபர்களுக்கு மிகாமல்) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முன் அனுமதி மற்றும் வாகனத்திற்கான முன் அனுமதியை பெற்று அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து மரியாதை செலுத்த அனுமதிக்கப்படுகிறது. அனுமதி பெற விரும்பும், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள்/ பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள்/ பிரதிநிதிகள் 23.10.2024-ம் தேதிக்குள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முன் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் செல்லும் பொழுது உடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்,  மேலும் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு செல்ல வேண்டும்.மரியாதை செலுத்த செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு சென்று திரும்ப வேண்டும். சட்டம் ஒழுங்கை கருத்திற்கொண்டு காவல்துறையினர் ஏற்படுத்திய சோதனைச் சாவடிகளில் வாகனங்களை சோதனைக்குட்படுத்தி காவல்துறையினரின் பணிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். சொந்த வாகனங்கள் மூலம் (கார், வேன் மற்றும் பிற இலகு வாகனங்கள் மட்டும்) வருகை தருபவர்கள் வாகன எண், வாகனத்தில் பயணம் செய்வோர் விபரங்களை 23.10.2024 ஆம் தேதிக்கு முன்பாக காவல்துறை மூலமாக வாகன அனுமதி சீட்டு (Vehicle Pass) பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.  சொந்த வாகனத்தை வாடகைக்கு விடக்கூடாது. வாகன தணிக்கையின் போது வாகனத்தில் வாகன உரிமையாளர் இருக்க வேண்டும், அசல் ஒட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.வாடகை வாகனங்கள்(T.Board) மற்றும் திறந்த வெளி வாகனங்களில்(Open type)  செல்ல அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸ் (TATA ACE) வேன், சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்லஅனுமதி இல்லை. வாகனத்தின்(பேருந்துக்கள் உட்பட) மேற்கூரை மற்றும் படிக்கட்டுகளில் பயணம் செய்யக் கூடாது. வாகனத்தில் (பேருந்துக்கள் உட்பட) ஆயுதங்கள் ஏதும் எடுத்து செல்லக் கூடாது. அஞ்சலி செலுத்த செல்லும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வாகனத்தில் ஒலிபெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது. வாகனத்தில்(பேருந்துக்கள் உட்பட)  ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது.  வாகனங்களில் செல்பவர்கள் மேளதாளம் அடித்துச் செல்லக்கூடாது.  வாகனங்களில் செல்பவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் 29.10.2024 மற்றும் 30.10.2024-ம் தேதிகளில் கமுதிக்கு கூடுதல் பேருந்து வசதி செய்து தரப்படும். பசும்பொன் செல்ல கூடுதல் பேருந்து தேவைப்படும் கிராமத்தினர் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பரிந்துரை பெற்று அரசு போக்குவரத்து கழகத்திடம் மனு அளித்திட வேண்டும். அஞ்சலி செலுத்துவதற்காக கிராமங்களிலிருந்து பேருந்துகளில் வருபவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து காலை 08.00 மணிக்குள் புறப்பட வேண்டும். வாகனங்களில் (பேருந்துகள் உட்பட) பிளக்ஸ் போர்டு, பேனர், கட்சி கொடிகள் மற்றும் ஒலிபெருக்கி  ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.  மேலும் ஜோதி தொடர்பான உபகரணங்களை   பேருந்துகளில் எடுத்து வரக்கூடாது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிளக்ஸ் போர்டுகள் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. மேலும் மேற்படி நிகழ்ச்சி தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் கொடிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள், தோரண வளைவுகள் வைக்க அனுமதி இல்லை. அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் செல்லுதல், தலைவர்களின்  வேடமணிந்து செல்லுதல், நடைபயணமாக செல்லுதல் ஆகியவற்றிற்கும் அனுமதி இல்லை. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி செல்லவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. வாகனங்களில் செல்லும் பொழுது வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடங்களில் நிறுத்தக் கூடாது. கிராமங்களில் தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்கள் / உட்கோட்ட காவல் அலுவலகங்களில் முறையான அனுமதி பெற்று, உள்ளுர் நிலைமைக்கு ஏற்ப காவல் துறையினர் (ம) வருவாய்த்துறையினர் சார்பில் தெரிவிக்கப்படும் நிபந்தனைகளை கடைபிடித்து விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.மேற்படி நிகழ்ச்சி தொடர்பாக பேனர் மற்றும் கட்அவுட்கள் வைக்கக் காவல் துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினரிடம் முன்அனுமதி பெற்ற பின்னரே  வைக்க வேண்டும்.   அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் கட்அவுட்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றப்படும். மேலும் சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரம் செய்வதற்கு அனுமதி இல்லை. மேற்படி விழாவினை முன்னிட்டு அன்னதானக்கூடம் அமைப்பவர்கள் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் முறையான முன் அனுமதி பெற்று, பின்பு மேற்படி அன்னதானகூடம் அமையவுள்ள இடமானது புலத்தணிக்கை செய்த பின்னரே அன்னதாகக்கூடம் அமைக்கப்பட வேண்டும். அன்னதானக் கூடத்தில் வழங்கப்படும் உணவுகளை, உணவு கட்டுப்பாட்டு துறையினர் மூலம் பரிசோதனை செய்த பின்னரே பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அன்னதானக்கூடத்திற்கு அமைக்கப்படும் பந்தல்களுக்கு உறுதித்தன்மை சான்றிதழ் பொதுப்பணித்துறையினரிடமிருந்தும், மின்சாரத்துறையினயிடமிருந்து மின்னழுத்த நிலைத்தன்மை சான்றிதழ் பெறப்பட வேண்டும். மேலும் அன்னதானப்பந்தல்கள் அமையவுள்ள இடத்திற்கு முன்பாக வாகனங்கள் நிறுத்துவதற்கு முறையான இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.மேற்கூறிய விதிமுறைகளை மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்களின் மீதும், அமைப்புகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்பவர்கள் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட கீழ்கண்ட வழித்தடங்களில மட்டுமே செல்லவேண்டும்.1. இராஜபாளையம் -திருவில்லிபுத்தூர்- சிவகாசி - சாத்தூர்- விருதுநகர் - தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலிருந்து புறப்படும் பசும்பொன் செல்லும் வாகனங்கள் (அருப்புக்கோட்டை - காந்தி நகர் - இராமலிங்கா மில் - கல்லூரணி - எம்.ரெட்டியபட்டி - மண்டபசாலை - கமுதி விலக்கு (கானாவிலக்கு) - கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே  மீண்டும் திரும்ப வேண்டும்.)2. ஆவியூர், காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் கல்குறிச்சி - பாலையம்பட்டி பை-பாஸ் - காந்தி நகர்-  இராமலிங்கா மில், கல்லூரணி - எம்.ரெட்டியபட்டி - மண்டபசாலை - கமுதி விலக்கு (கானாவிலக்கு)  - கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே  மீண்டும் திரும்ப வேண்டும்.  3. திருச்சுழியிலிருந்து வரும் வாகனங்கள் இராமலிங்கா மில், கல்லூரணி, கமுதி விலக்கு (கானாவிலக்கு), கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே  மீண்டும் திரும்ப வேண்டும்.4. நரிக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் வீரசோழன் விலக்கு, பிடாரிசேரி, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் சென்றடைய வேண்டும். பின்னர் மீண்டும் திரும்பும்பொழுது, பசும்பொன் - கோட்டைமேடு - நகரத்தார்குறிச்சி -அபிராமம் வழியாக பார்த்திபனூர் - பிடாரிசேரி - வீரசோழன் விலக்கு வழியாக வரவேண்டும்.மேற்படி விழாவிற்கு செல்லும் வாகனங்கள் கண்டிப்பாக முத்துராமலிங்கபுரம்-புதூர், மண்டலமாணிக்கம் வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், சமுதாய தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 69 70

AD's



More News