25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 02, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் .

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (01.06.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் பணியிடத்தில் விபத்து மரணமடைந்த திரு.அர்ச்சுணன்(லேட்) மற்றும் திரு.ரவிச்சந்திரன்(லேட்) ஆகிய 2 கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணியிடத்து விபத்து மரண உதவித் தொகையாக ரூ.8 இலட்சம் வீதமும்,கட்டுமானப் பணியிடங்களில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இறந்த திரு.கணேசன்(லேட்) மற்றும் திரு.சீத்தாராமன்(லேட்) ஆகிய 2 கட்டுமானத் தொழிலாளர்களின் பணியிடத்து விபத்து மரணத்திற்கு தலா ரூ.5 இலட்சம் வீதமும் என பணியிடத்தில் விபத்து மரணம் அடைந்த 4 தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு மொத்தம் ரூ.26 இலட்சம் மதிப்பில் உதவித்தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர்  அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.கு.மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 02, 2026

தமிழ்நாட்டில்  உள்ள பள்ளி வாசல்களில்  பணியாற்றும்  உலமாக்களுக்கு  இருசக்கர  வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தில் விண்ணிப்பிக்கலாம்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல்  60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு  புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியத்தொகை ரூ.50,000/-  வழங்க  தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில்  பணியாற்றும்  பேஷ்இமாம்கள்,  ஆலிம்கள்,  அரபி ஆசிரியர்கள்/ஆசிரியைகள்  உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 5-வது தளத்தில் (அறை எண்- 505) இயங்கும்  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இருசக்கர வாகனம் வாங்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் 5-வது  தளத்திலுள்ள (அறை எண்- 505) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்  நல அலுவலகம்/ சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.06.2026-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 02, 2026

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் சிறப்பு தொழில் கடன் முகாம் 01.06.2026 முதல் 30.06.2026 வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949 ஆம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கு, உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.மேலும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கடனுதவிக்கு அப்பாற்பட்ட சேவைகளையும் செய்து வருகிறது (Lending Plus Service Provide to MSME).சிவகாசி கிளை அலுவலகத்தில் (முகவரி:- 98/சி4 சேர்மன் சண்முக நாடார் ரோடு, 2 வது தளம், சிவகாசி, விருதுநகர் மாவட்டம் 626 123) குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 01.06.2026 முதல் 30.06.2026 வரை நடைபெறுகிறது. மாநில அளவில் நடப்பு நிதியாண்டின் கடன் இலக்காக ரூ.2125/- கோடியாக நிர்ணயத்து முனைப்புடன் பணியாற்றி வருகிறோம். விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் கடன் இலக்காக ரூ.61.00 கோடி இலக்குடன் பணியாற்றி வருகிறோம்.         இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி. (TIIC)யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS), கலைஞர் பசுமை ஆற்றல் திட்டம் (Kalaingar Green Energy Scheme) போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகிதம் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும். கூடுதல் மானியமாக 10 சதவிகிதம் மற்றும் மகளிர் தொழில் முனைவோருக்கு 5 சதவிகிதம் சிறப்பு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் நவீனபடுத்துவதற்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 5 சதவிகிதம் வட்டிமானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.மேலும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் (AABCS) கீழ் SC/ST தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பில் 35 சதவிகிதம் முதலீட்டு மானியம் மற்றும் 6 சதவிகிதம் வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தகவலுக்கு கிளை மேலாளர் - 9445023477, திட்ட அலுவலர்கள் - 9500301892, 8838195375, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 02, 2026

பிற்படுத்தப்பட்டோர் ,மிகப்பிற்படுத்தப்பட்டோர் ,சீர்மரபினர் மாணவர்களுக்கான பள்ளி/ கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 தமிழ்நாடு அரசால் விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மாணவர்களுக்கு 25 பள்ளி விடுதிகளும், 3 கல்லூரி விடுதிகளும் மற்றும் மாணவியர்களுக்கென 18 பள்ளி விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும் என மொத்தம் 48 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.         பள்ளி விடுதிகளில் 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்/ மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ/மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.விடுதிகளில்  எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும்  சலுகைகள் வழங்கப்படுகின்றன.   அனைத்து விடுதி மாணவ / மாணவியர்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.   4-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும்.   10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு NEET / JEE  நுழைவுத்தேர்வுக்கான வினாவங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும். விடுதிகளில் மாணவ / மாணவியர்கள் சேர்க்கைக்கான தகுதிகள்பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கீ.மீ. க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.தகுதியுடைய மாணவ/மாணவியர் விண்ணப்பங்களைச் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் /காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 18.06.2026-க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2026-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, பள்ளி / கல்லூரி மாணவ / மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 01, 2026

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அகில இந்திய நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பின் நிறைவு விழா .

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில்(27.05.2026) மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திசை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அகில இந்திய நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பின் நிறைவு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S அவர்கள் மற்றும் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் முன்னிலையில்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

May 28, 2026

"திசை" திட்ட நிறைவு விழா: அமைச்சர் சான்றிதழ்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான "திசை" போட்டித் தேர்வு பயிற்சி முகாமின் நிறைவு விழா (27.05.2026) நடைபெற்றது.முக்கிய நிகழ்வுகள்:விருதுகள்: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.கவிதைத் தொகுப்பு: மாணவர்களின் கவிதைத் தொகுப்பை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா அமைச்சரிடம் வழங்கினார்.அமைச்சர் அறிவுரை: மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்; கைப்பேசியை கல்விக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார்."திசை" திட்டத்தின் சாதனைகளும் விவரங்களும் (ஆட்சியர் உரை):திட்டத்தின் நோக்கம்: அரசுப் பள்ளி மாணவர்கள் JEE, NEET, CUET போன்ற தேசிய அளவிலான தேர்வுகளில் வென்று, நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் (IIT, AIIMS, NIT) பயில வழிவகை செய்தல்.பயிற்சி விவரம் (2026):முதற்கட்டம்: 12-ஆம் வகுப்பு முடித்த 310 மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் NEET / CUET பயிற்சி அளிக்கப்பட்டது.இரண்டாம்கட்டம்: தற்போது 11-ஆம் வகுப்பு முடித்த 613 மாணவர்களுக்கு (186 மாணவர்கள், 427 மாணவிகள்) மே 1 முதல் 27 வரை சிறப்பு உண்டு உறைவிடப் பயிற்சி வழங்கப்பட்டது.விண்ணப்பங்கள்: இவ்வாண்டு இத்திட்டத்தின் மூலம் 207 பேர் CUET தேர்விற்கும், 455 பேர் JEE Main தேர்விற்கும், 447 பேர் NEET தேர்விற்கும் விண்ணப்பித்துள்ளனர்.சாதனை: 15 நாட்கள் சிறப்புப் பயிற்சியின் மூலம் இதுவரை 11 அரசுப் பள்ளி மாணவர்கள் JEE Advanced தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.ஆசிரியர்கள் பங்களிப்பு: மாவட்டத்தின் 605 ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தன்னார்வமாக வழிகாட்ட முன்வந்துள்ளனர்.அடுத்தகட்ட நடவடிக்கை: ஜூன் 2026 முதல் கல்வியாண்டு முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரித் தேர்வுகள் மற்றும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் சிறப்பு வகுப்புகள் தொடரும்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.கார்த்திக், முதன்மைக் கல்வி அலுவலர் கு.அரவிந்தன் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

May 27, 2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். 

விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்களை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (26.05.2026) பூங்கொத்து வழங்கி வரவேற்றார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் என்.ஸ்ரீநாதா,இ.கா.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் ஆகியோர் உள்ளனர். 

May 27, 2026

கல் குவாரி தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள், வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து திடீர் கள ஆய்வு.

தமிழ்நாடு முழுவதும் அரசு அனுமதி பெற்று செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கனிமங்கள் வெட்டப்படுவதாகவும், பல இடங்களில் சட்டவிரோத குவாரிகள் செயல்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குவாரிகளையும் ஆய்வு செய்து உடனடி அறிக்கை சமர்ப்பிக்குமாறு புவியியல் மற்றும் சுரங்கத்துறை மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், மேலூர் துரைசாமிபுரம் கிராமம், அரசு புறம்போக்கு நிலம் புல எண் 328 (Part-V)-ல் செயல்பட்டு வந்த கல் குவாரி தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள், வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர். திருமதி கா.செல்வி என்பவருக்கு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959-ன் கீழ் குத்தகையாக வழங்கப்பட்டிருந்தாலும், குத்தகை ஒப்பந்த பதிவு பணிகள் முழுமையாக நிறைவு பெறுவதற்கு முன்பே குவாரி பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும், அனுமதியின்றி வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு கல் வெட்டும் இயந்திர செயல்கள் மற்றும் வெடி வெடிப்பு பணிகள் நடைபெற்றதாகவும் தெரியவந்தது.இத்தகைய நடவடிக்கைகள் சட்டவிரோத கனிம வெட்டும் செயலாக கருதப்படுவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தக்கூடிய மிகக்கடுமையான விதிமீறலாகும். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதுடன், ஆய்வின்போது கண்டறியப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பயன்படுத்தி குவாரி பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், உரிய அனுமதியின்றி வெடிபொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் யாரேனும் சட்டவிரோத கனிம வெட்டுதல், அனுமதியற்ற வெடிபொருள் பயன்பாடு அல்லது விதிமீறிய குவாரி செயல்பாடுகள் குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

May 27, 2026

வண்டல் மண், களிமண் இலவசமாக எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்.

 விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் நீர் வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள பரிந்துரை செய்யப்பட்ட நீர் நிலைகளில் இருந்து இலவசமாக வண்டல் களிமண் எடுத்துக்கொள்ள மாவட்ட அரசிதழில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி மேல் வைப்பாறு வடிநிலக் கோட்டம், இராஜபாளையம், வைப்பாறு வடிநிலக் கோட்டம், விருதுநகர், குண்டாறு படுகை (Gundaru Basin) மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் கீழ் முறையே மொத்தம் 403 நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.உள்ளூர் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் (இதர வீட்டு பயன்பாட்டிற்கு) வண்டல் மண் அல்லது களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.தகுதியுடைய பயனாளிகள் tnesevaitngov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பயனாளிகளின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல் மண் அல்லது களிமண் தூர்வாரி எடுத்து செல்லப்பட வேண்டிய நீர்நிலைகள் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் வட்டத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் பெற விண்ணப்பிக்கும் நபர், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளராக இருப்பின், விண்ணப்பித்த பின்பு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அதனை முறைப்படி உறுதி செய்தபிறகு அனுமதி வழங்கப்படும்.இந்த அனுமதியானது விவசாய நில மேம்பாட்டிற்காக (2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் ) நன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றுக்கு 75 கன மீட்டர் (ஹெக்டேருக்கு 185 கண மீட்டர்) என்ற அளவிலும், புன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றுக்கு 90 கனமீட்டர் (ஹெக்டேருக்கு 222 கனமீட்டர்) என்ற அளவிலும், மண்பாண்ட தொழிலுக்கு 60 கன மீட்டருக்கு மிகாமலும், இதர வீட்டு பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர் அளவிலும் கட்டணமின்றி மண் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.விண்ணப்பத்தாரரால் அளிக்கப்பட்ட தகவல்கள் விதிமுறைகளை பூர்த்தி செய்திருப்பின், சம்பந்தப்பட்ட தாசில்தாரால் 10 நாட்களுக்குள் அனுமதி ஆணை வழங்கப்படும்.தாசில்தாரால் அனுமதி ஆணை கிடைக்கப்பெற்ற பயனாளிகள், தொடர்புடைய நீர்நிலை ஆதாரங்களின் பொறுப்பு அலுவலர்களை அணுகி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் வரையறை செய்யும் பகுதியில் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டும் வண்டல் மண் அல்லது களிமண் எடுத்துச்செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 27, 2026

பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு, சுதந்திர தின விருது – 2026 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சுதந்திர தின விழாவின் போது,  தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு, சுதந்திர தின விருது - 2026  வழங்கப்பட உள்ளது.விருது விபரம்:சிறந்த சமூக சேவகர்: ரூ.50,000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்.சிறந்த தொண்டு நிறுவனம்: ரூ.1,00,000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்.தகுதி மற்றும் விதிமுறைகள்:விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையிலான பணிகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து, மக்களுக்குத் தொடர்ந்து தொண்டாற்றி இருக்க வேண்டும். தொண்டு நிறுவனம் அரசின் உரிய அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை:மேற்குறிப்பிட்ட தகுதியுடைய சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், https://awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமாக வருகிற *19.06.2026-க்குள்* விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பித்த விவரங்களை *23.06.2026-க்குள்* மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இது தொடர்பான விவரங்களை கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.முகவரிமாவட்ட சமூக நல அலுவலர்,மாவட்ட சமூக நல அலுவலகம்,மாவட்ட ஆட்சியரக வளாகம்,விருதுநகர் மாவட்டம் – 626002.தொலைபேசி எண்: 04562-252701

1 2 3 4 5 6 7 8 9 10 ... 126 127

AD's



More News