விருதுநகர் மாவட்டத்தில், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவினை பெற்ற பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை எய்திடும் வகையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் SVEEP (Systematic Voters' Education and Electoral Participation) ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களிடையே நேரடியாக விளக்க கூட்டம் நடத்துதல், விழிப்புணர்வு பேரணி, துண்டுப்பிரசுரம் வழங்குதல், கையெழுத்து இயக்கம் நடத்துதல், உறுதி மொழி எடுத்தல் போன்ற நிகழ்வுகள் மூலமாகவும், தொலைகாட்சிகள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், மாவட்டத்தின் 7-சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் 60 சதவீதத்துக்கு குறைவான வாக்குப்பதிவு பதிவான பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில் தனிக்கவம் செலுத்தி, அங்குள்ள பொதுமக்களிடையே தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், 7-சட்டமன்றத் தொகுதிகளிலும் குறைவான வாக்குப்பதிவு பதிவான பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களின் இல்லங்களுக்கே களப்பணியாளர்கள் நேரடியாக சென்று வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தும், “என் வாக்கு, என் குரல்”, “100 சதவீதம் வாக்களிக்க தயாராகுவோம்” என்ற வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை(Stickers) ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஊர்வலம்:
தொடர்ந்து, அப்பகுதிகளில்”ஜனநாயகத்தின் கூர்மையான ஆயுதம் நம் வாக்குரிமை, அதனை மழுங்காமல் காப்பது நம் கடமை” மற்றும் “100 சதவீதம் அனைவரும் வாக்களிப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி, வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
கையெழுத்து இயக்கம்:
மேலும், "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
உறுதிமொழி:
"இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையுள்ள குடிமகனாகிய நான், நாட்டின் ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்துவேன் என்றும், எந்தவொரு தூண்டுதலுக்கும் ஆட்படாமல், எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல், நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எனது வாக்கினை நேர்மையாகப் பதிவு செய்வேன் என்றும் உறுதி கூறுகிறேன்." என்ற உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.இறுதி நிகழ்வாக, வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
0
Leave a Reply