25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முதல் பக்க கட்டுரை

Oct 01, 2024

உதவி

 வாட்ட சாட்டமாக இருந்து கொண்டு வேலைக்குச் செல்லாமல் ,நாலு இடத்திலே பிச்சை எடுத்து சாப்பிட்டு விட்டு சுகமாகத் தூங்குபவர்களுக்கு, பிச்சையிடுவதில் பயன் இல்லை. இப்பொழுது பிச்சைக்காரர்கள் செல்போன் சகிதமாக அலைந்து திரிந்து, பிச்சையெடுத்த  பணத்தை அந்திம காலத்திற்கு வங்கியில் பணம் போட்டு வைத்து ஒய்யாரமாக பிச்சை எடுக்கிறார்கள்.சமீபத்தில் இறந்து போன பிச்சைக்காரன் குடியிருக்கும் வீட்டில் மூட்டை மூட்டையாக கோடிக் கணக்கில் பணம் இருந்தது என்று கூறுகின்றனர். அதுவும் அந்த பிச்சைக்காரன் இறந்து போனதால் இந்த விஷயம் வெளியில் வந்தது.வசதியாக வாழ்ந்தாலும் கையில் இருந்து சல்லி காசு செலவு செய்யாமல் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் பலர். இவர்களுக்கு உதவி செய்தால் வாங்கியவர்கள் நம்மை ஏமாளிகள், என்று நினைத்து பல விதங்களில் தங்கள் கஷ்டங்களைக் கூறி, உதவி கோருவார்கள். இவர்களுக்கு உதவி செய்வதில் எந்த ப்ரயோஜனமும் இல்லை.அன்னதானம், அனைவரும் இந்த தானம் செய்வதற்கு தயாராக இருக்கின்றனர் விரும்பியும் செய்கின்றனர். அன்னதானம் செய்கிறேன். என்ற பெயரில் நன்கொடை கேட்டு ,நோட்டும் பேனாவுமாக பலர் தொழிலே செய்கின்றனர். ஐம்பதோ, நூறோ கொடுங்கள் என்று சிட்டையை நீட்டுகின்றனர். ஐம்பது, நூறு இந்த காலத்தில் மிகச் சிறிய தொகைதான். இந்த நன்கொடை ரசீதை எத்தனை பேரிடம் காட்டி வாங்குகிறார்கள் என்பதே கேள்வி. ஆயிரம் பேரிடம் வெறும் 50 ரூபாய் வாங்கினால் எவ்வளவு வரும் கணக்கு போடுங்கள் 50 × 1000 = 50000 ஆயிரம் ரூபாய் வசூல் செய்கின்றனர். அன்னதானத்திற்கு 25000 ரூபாய் செலவழித்து விட்டு ,மீதியை பாக்கெட்டில் போட்டுக்கொள்கின்றனர்.எப்படியோ எடுத்துத் தொலையட்டும் நாம சமைத்துப் போட முடியாது. இவர்களாவது செய்கிறார்களே என்று விட்டு விடுகிறோம். இப்படி விடக் கூடாது என்று ஒரு குழுவினர் தாங்களாகவே கடைகளில் தயிர் சாதம், சாம்பார் சாதம், இட்லி, சட்னி, பொட்டலங்களை தினமும் ஐந்தோ, பத்தோ, பாக்கெட்களை வாங்குகின்றனர். அவர்கள் ஆபிசிற்கோ, தொழிற்சாலைக்கோ செல்லும் வழியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர், வயதானவர்கள் இவர்களை கவனித்து அவர்கள் கையில் பொட்டலத்தை பிரித்து கொடுக்கின்றனர். அவர்களும் சந்தோஷமாக சாப்பிடுகின்றனர். இந்த அன்னதானம் மேலான அன்னதானம்.அன்னதானம் என்ற பெயரில் நன்றாக உழைப்பவர்கள் கூட வேலைக்கு லீவு போட்டு ,வயிறார அன்னதானச் சாப்பாட்டை சாப்பிட்டுச் செல்கின்றனர். இவற்றை அன்னதானம் செய்வோர் தவிர்க்க முடியாது தான்.எந்த உதவி ஒருவர் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தி, அவர்களுடைய வாரிசுகளுக்கும் நல்ல வாழ்க்கையை கொடுக்கிறதோ அதுவே உதவி.   உதவி பணத்தால் மட்டும் செய்வது இல்லை. எத்தனையோ விஷயங்களில் செய்யலாம். கல்வியால், சேவையால், வாழ்க்கையை முன்னேறச் செய்யும் பல நல்ல விஷயங்களால் ,இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் பொழுது பயோடேட்டா பார்க்க முடியுமா? என்கிறீர்களா ? முடியாதுதான். உதவி செய்யும் பொழுது மனம் இரங்கி 'பாவம்' என்று , நம் கையிலிருந்து காசையோ, பணத்தையோ, கொடுக்கிறோம், சற்று யோசித்து இவர்களுக்கு கொடுக்கலாமா ? என்று யோசித்துக் கொடுக்கவும். சென்னை போன்ற பெருநகரங்களில் சிக்னல்களில் பச்சிளங் குழந்தைகளை கையில் ஏந்திப பிச்சை எடுப்பவர்கள் பலர். அப்படி இருப்பவர்கள் குழந்தைக்கு 1 நாள் வாடகை 100 பெற்றோரிடம் கொடுத்துவிட்டு, காயும் வெயிலில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பிச்சை எடுக்கின்றனர். குழந்தைக்கு வாய்இல்லையே ! இவர்களுக்கு பிச்சை போட்டு குழந்தையின் சாபத்தை நாம் பெற வேண்டாமே ! இந்தக் கொடுமையை உதவி செய்து, மேலும் வளர்க்க வேண்டாம்.இப்படி எத்தனையோ தானங்கள் உரியவர்களுக்குச் சென்றடைவதில்லை. (உதவியை காலமறிந்து இடமறிந்து செய்யும் உதவியே சரியான உதவியாகும்) ஆக உதவியை செய்வதற்கு முன் யாருக்குச் செய்வது என்பது மிக முக்கியம்.நல்லவர்களுக்கு நாம் செய்யும் உதவிகள் ,கல்லில் பதித்த எழுத்துக்களாக என்றும் மறையாது. ஆனால் "ஈரம் இல்லாத நெஞ்சங்களுக்கு செய்யும் உதவி நீரின் மேல் எழுதியதற்குச் சமம்".

Sep 01, 2024

இந்தியாவை உலுக்கிய  வயநாடு நிலச்சரிவினால் மனிதம் பிறந்தது

 இயற்கையே!!! இருப்பவன் சுரண்டியதற்கு!!! இல்லாதவனை மண் வாரி !!! சுருட்டி கொண்டாயோ!!! ஏன் !!!இருப்பவனை கண்டு நீயும்!!! அஞ்சுகிறாயோ !!!இல்லாதவனை நீயும் !!! ஏளனமாக பாக்கிறாயோ !நான் கொண்ட ஆத்திரத்தில் உன்னை அழித்திடுவேன்!!! முடியவில்லை.  ஏனென்றால்!!! நானும் இல்லாதவன் தான்.இத்தகைய இருண்ட காலத்திலும் இதுபோன்ற நிஜ வாழ்க்கை சூப்பர் ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது. வயநாடு மக்களை உயிரை கொடுத்து காப்பாற்றிய இந்திய இராணுவம் நிலச்சரிவு மீட்பு பணியின் பொது ஓய்வு எடுக்க தங்களுக்கு கிடைத்த  கொஞ்சம் நேரத்தில் எந்த ஆடம்பர வசதி களும் இல்லாமல் தூங்கும் இந்திய ராணுவ வீரர்கள்.அனைத்து இராணுவ வீரர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது. வயநாடு மக்களை உயிரை கொடுத்து காப்பாற்றிய இந்திய இராணுவம் நிலச்சரிவு மீட்பு பணியின் பொது ஓய்வு எடுக்க தங்களுக்கு கிடைத்த  கொஞ்சம் நேரத்தில் எந்த ஆடம்பர வசதி களும் இல்லாமல் தூங்கும் இந்திய ராணுவ வீரர்கள்.அனைத்து இராணுவ வீரர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டையே ஒரு சம்பவம் உலுக்கி உள்ளது. அது என்னவென்றால் காடு தான் உலகம். குகை தான் வீடு. 21ம் நூற்றாண்டிலும் பழங்களை தின்று கற்கால வாழ்க்கை நடத்திய 4 குழந்தைகள் உள்பட 6 பேர் அடங்கிய ஆதிவாசி குழந்தைகளை மீட்டது தான்தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆதிவாசி குடும்பத்தை மீட்ட வனத்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. நமக்காக பல துன்பங்களையும் பேச்சுகளையும் தாங்கி குடும்பங்களை விட்டு காவல் காக்கும் காவல் துறைக்கு ,விடுமுறை இல்லாமல் சரியான உணவு உறைவிடம் இல்லாமல் 24 நேரம் நமக்காக உழைக்கிற முக்கியமான துறை காவல் துறை.வயநாடு நிலச்சரிவில் அட்டமாலா வனப்பகுதியில் சிக்கித்தவித்த பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேரை 8 மணி நேரம் போராடி மீட்ட கேரள வனத்துறை அதிகாரிகள்அஹலியா பாராமெடிக்கல் சயின்சஸ் பள்ளி வயநாட்டில் தாய் தந்தைகளை இறந்த குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு நல்ல படிப்பையும் இருப்பிடத்தையும் கொடுப்போம் என கேரளாவில் உள்ள துபாயை சேர்ந்த அகல்யா குழுமம் கூறியுள்ளது.வயநாடு நிலச்சரிவு, பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 வீடுகள் கட்ட 1000 ஏக்கர் தந்த வள்ளல்!கடந்த ஆண்டு, கேரளாவில் நாய்கள் வெட்டப்பட்டன, இன்று அதே நாய்கள் அவர்களை காப்பாற்றுகின்றன.வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ALL KERALA CATERERS ASSOCIATION கேரள சமையற் கலைஞர்களின் கூட்டமைப்பினர் சொந்த செலவில் உணவு வழங்கி வருகின்றனர்.மேப்பாடி முகாமில் தங்க 'வைக்கப்பட்டுள்ள 600 பேருக்கு 3 வேளையும் இலவசமாக உணவுகளை தயார் செய்து கொடுத்து பசியாற்றி வருகின்றனர்.வயநாடு சோகத்தில் 40 அடி ஆழத்தில் புதையுண்டவர்களைக் கண்டுபிடிக்க உதவிய  நாய்கள் மாயா, மர்பி மற்றும் மேகி ஆகியோருக்கு மாபெரும் வணக்கம்.நாய்கள் உயிர்களைக் காப்பாற்றியது.மாயா மற்றும் மர்பி ஆகியவை 40 அடி ஆழம் வரை படுத்திருக்கும் மனித உடல்களின் வாசனையைத் துல்லியமாகக் கண்டறிவதில் வல்லுனர்கள்  .மறுபுறம்  இடி பாடுகளில் சிக்கி உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் .வயநாடு நிலச்சரிவு, கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கிய தமிழக செஸ் வீரர் குகேஷ்.இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக தான் சம்பாதித்த பணத்தில் 10 லட்சம் வழங்கிய குகேஷ் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்.கேரளாவைச் சேர்ந்த இந்த ஜவுளி உரிமையாளர், வயநாடு நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களுக்கு தனது கடையில் இருந்த அனைத்து புதிய சரக்குகளையும் வழங்கினார்.நிதி சேகரிக்க வந்தவர்களிடம் எதை வேண்டுமானாலும் பேக் செய்து எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அதையெல்லாம் மீண்டும் சம்பாதிக்க முடியும், ஆனால் பிரிந்த ஆன்மாவை மீண்டும் கொண்டு வர முடியாது என்றும் அவர் கூறினார்.அட்வென்சர் சுற்றுலா என்ற பெயரில், இயற்கை பேரிடர் ஏற்படும் இடங்களில் சிக்கி தவிக்கும் சுற்றுலா பயணிகளின் நிலை கவலைக்கிடமாகியுள்ள நிலையில், வயநாட்டில் சசகல வசதிகளும் அதிகம். அதிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எக்கச்சக்கமான ரிசார்ட்டுகளை பார்க்க முடியும்.இதற்காகவே, ஆண்டுதோறும் இப்பகுதிகளில் புதிய கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் இருந்துள்ளன.மலைகளுக்கு நடுவில் மவுன்டைன் வியூவுடன் கூடிய ரிசார்ட்டுகள், நீச்சல் குளங்களுடன் கூடிய ரிசார்ட்டுகள், கிளாஸ் ரிசார்ட்டுகள் என பல ரிசார்ட்டுக  சாகசத்தை விரும்பும் இளசுகளுக்காக, ஸ்கை டைவிங்க், ஸ்கை சைக்கிளிங், ஜிப் லைன், அந்தரத்தில் கண்ணாடி மீது நடப்பது, போன்றவையும் இங்கு படு ஃபேமஸ். இவற்றையெல்லாம் மக்களுக்கு பரிட்சையப்படுத்த, சமூக வலைத்தள பிரபலங்களும் ப்ரமோஷன் செய்வது உண்டு.சுற்றுலா செல்ல எது உகந்த காலம் என எதையும் கவனிக்காமல், மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துகள் குறித்து ஏதும் சிந்திக்காமல் சுற்றுலா செல்கின்றனர். இதில் பலர், பெற்றோரிடம் கூட தகவல் கொடுக்காமல், அட்வென்சர் பயணங்களுக்கு புறப்பட்டு விடுகின்றனர். அப்படி தான், தற்போதைய பேரிடரிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர். அவர்களை ராணுவத்தினர், சகதிகளுக்கு இடையில் கயிறுகளை பயன்படுத்தி பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் விவரங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதே நிலை தான் வயநாடு அடுத்த முண்டகை, மேப்பாடி பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ரிசார்ட்டுகளிலும். இந்நிலையில் வயநாட்டில் கடந்த ஒரு வாரமாக செய்யும் வகையில் பருவகாலங்களை கருத்தில் கொண்டு பயணத்தை திட்டமிட வேண்டும் என்பது பாடமாக மாறியுள்ளது.ஓவர் டூரிசம் தான் வயநாட்டின் தற்போதைய நிலைக்கு காரணம் .வயநாட்டில், சடலங்களை தேடும் போது 4 லட்சம் ரூபாய் மீட்பு. பாறை இடுக்கில், கவரில் சுற்றப் பட்டிருந்த பணம், போலீசாரிடம் ஒப்படைப்பு.எவ்வளவு கஷ்டப்பட்டு எந்த ஒரு நல்ல காரியத்துக்காக சேர்த்து வைத்த பணமோ, மீட்பு பணியாளர்கள் அதை  உரியோர்கள்  ஒப்படைக்க போலீஸில் கொடுத்தனர் இந்த மனசு தான் கடவுள். இந்தியாவை உலுக்கிய  வயநாடு நிலச்சரிவினால் மனிதம் பிறந்தது.

Jul 02, 2024

உதவி

வாட்டசாட்டமாக இருந்து கொண்டு வேலைக்குச் செல்லாமல் நாலு இடத்திலே பிச்சை எடுத்து சாப்பிட்டு விட்டு சுகமாகத் தூங்குபவர்களுக்கு பிச்சையிடுவதில் பயன் இல்லை. இப்பொழுது பிச்சைக்காரர்கள் செல்போன் சகிதமாக அலைந்து திரிந்து பிச்சையெடுத்து அந்திம காலத்திற்கு வங்கியில் பணம் போட்டு வைத்து ஒய்யாரமாக பிச்சை எடுக்கிறார்கள். வசதியாக வாழ்ந்தாலும் கையில் இருந்து சல்லி காசு செலவு செய்யாமல் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் பலர். இவர்களுக்கு உதவி செய்தால் வாங்கியவர்கள் நம்மை ஏமாளிகள் என்று நினைத்து பல விதங்களில் தங்கள் கஷ்டங்களைக் கூறி உதவி கோருவார்கள். இவர்களுக்கு உதவி செய்வதில் எந்த ப்ரயோஜனமும் இல்லை. அனைவரும்  அன்னதானம், செய்வதற்கு தயாராக இருக்கின்றனர். விரும்பியும் செய்கின்றனர். அன்னதானம் செய்கிறேன். என்ற பெயரில் நன்கொடை கேட்டு நோட்டும் பேனாவுமாக பலர் தொழிலே செய்கின்றனர். ஐம்பதோ, நூறோ கொடுங்கள் என்று சிட்டையை நீட்டுகின்றனர். ஐம்பது, நூறு, இந்த காலத்தில் மிகச் சிறிய தொகைதான். இந்த நன்கொடை ரசீதை எத்தனை பேரிடம் காட்டி வாங்குகிறார்கள். என்பதே கேள்வி ஆயிரம் பேரிடம் வெறும் 50 ரூபாய் வாங்கினால் எவ்வளவு வரும் கணக்கு போடுங்கள். 50 * 1000  = 50000 ஆயிரம் ரூபாய் வசூல் செய்கின்றனர். அன்னதானத்திற்கு 25,000 ரூபாய் செலவழித்து விட்டு மீதியை பாக்கெட்டில் போட்டுக் கொள்கின்றனர்.எப்படியோ எடுத்துத் தொலையட்டும், நாம சமைத்துப் போட முடியாது. இவர்களாவது செய்கிறார்களே என்று விட்டு விடுகிறோம். இப்படி விடக் கூடாது என்று ஒரு குழுவினர் தாங்களாகவே கடைகளில் தயிர் சாதம், சாம்பார் சாதம், இட்லி, சட்னி, பொட்டலங்களை தினமும் ஐந்தோ, பத்தோ, பாக்கெட்களை வாங்குகின்றனர். அவர்கள் ஆபிசிற்கோ, தொழிற்சாலைக்கோ செல்லும் வழியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர், வயதானவர்கள் இவர்களை கவனித்து அவர்கள் கையில் பொட்டலத்தை பிரித்து கொடுக்கின்றனர். அவர்களும் சந்தோஷமாக சாப்பிடுகின்றனர். இந்த அன்னதானம் மேலான அன்னதானம்.அன்னதானம் என்ற பெயரில் நன்றாக உழைப்பவர்கள் கூட வேலைக்கு லீவு போட்டு வயிறார அன்னதானச் சாப்பாட்டை சாப்பிட்டுச் செல்கின்றனர். இவற்றை அன்னதானம் செய்வோர் தவிர்க்க முடியாது தான்.எந்த உதவி ஒருவர் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தி அவர்களுடைய வாரிசுகளுக்கும் நல்ல வாழ்க்கையை கொடுக்கிறதோ 'அதுவே உதவி' உதவி பணத்தால் மட்டும் செய்வது இல்லை. எத்தனையோ விஷயங்களில் செய்யலாம். கல்வியால், சேவையால், வாழ்க்கையை முன்னேறச் செய்யும் பல நல்ல விஷயங்களால் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் பொழுது பயோடேட்டா பார்க்க முடியாமா ? என்கிறீர்களா ? முடியாதுதான். உதவி செய்யும் பொழுது மனம் இரங்கி 'பாவம்' என்று தான் நம் கையிலிருந்து காசையோ, பணத்தையோ கொடுக்கிறோம். சற்று யோசித்து இவர்களுக்கு கொடுக்கலாமா ? என்று யோசித்துக் கொடுக்கவும். சென்னை போன்ற பெருநகரங்களில் சிக்னல்களில் பச்சிளங் குழந்தைகளை கையில் ஏந்தி பிச்சை எடுப்பவர்கள் பலர். அப்படி இருப்பவர்கள் குழந்தைக்கு 1 நாள் வாடகை ரூ.100 பெற்றோரிடம் கொடுத்துவிட்டு காயும் வெயிலில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பிச்சை எடுக்கின்றனர். குழந்தைக்கு வாய் இருக்கிறதா ? இல்லையே ! இவர்களுக்கு பிச்சை போட்டு குழந்தையின் சாபத்தை நாம் பெற வேண்டாமே ! இந்தக் கொடுமையை உதவி செய்து மேலும் வளர்க்க வேண்டாம்.இப்படி எத்தனையோ தானங்கள் உரியவர்களுக்குச் சென்றடைவதில்லை. (உதவியை காலமறிந்து, இடமறிந்து, செய்யும் உதவியே சரியான உதவியாகும்) ஆக உதவியை செய்வதற்கு முன் யாருக்குச் செய்வது என்பது மிக முக்கியம்.நல்லவர்களுக்கு நாம் செய்யும் உதவிகள் கல்லில் பதித்த எழுத்துக்களாக என்றும் மறையாது. ஆனால் “ஈரம் இல்லாத நெஞ்சங்களுக்கு செய்யும் உதவி, நீரின் மேல் எழுதியதற்குச் சமம்.

Jun 01, 2024

குறை குடம் கூத்தாடும்

குடத்தில் நிறைய தண்ணீர் இருந்தால் அலம்பாமல் தலை மேல் ஒரு குடமும், இடுப்பில் ஒரு குடமும் கையில் எடுத்துக் கொண்டு கி.மீ. கணக்கில் வேகமாக நடந்து செல்லும் பல பெண்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அதே போல் அரை குடம் தண்ணீர் கொடுத்து எடுத்து வரச் சொன்னால் 5 அடி கூட செல்ல முடியாது. குடத்தினில் இருக்கும் தண்ணீர் இங்கும் அங்கும் அலைந்து டபக் கலக் என்ற சப்தத்துடன் தண்ணீரும் வீணாகி குடமும் கீழே விழுந்து விடும்.நிறைய விஷயம் தெரிந்தவர்கள்.நிறைவான குணம் உள்ளவர்கள் அமைதியாகவே இருப்பார்கள். நேரம் வரும்பொழுது மாத்திரம் விஷயங்களைப் பற்றி அலசிப் பேசுவார்கள். ஆனால் விஷயம் தெரியாதவர்களோ தனக்கு அதிகம் தெரிந்ததைப் போல பல விஷயங்களைப் போட்டு ரீல் விட்டுக் கொண்டே செல்வார்கள். தன்னைப் போல குணமும், அறிவும், விஷயமும் மற்றவர்களுக்குத் தெரியவே தெரியாது என்று முடிவே செய்து கொண்டு குறை குடத்தைப் போல அலைபாய்வார்கள். தனக்கு நல்ல குணம் இருப்பதைப் போல காட்டிக் கொள்வார்கள். தன்னுடைய குறைகளை மறைக்க மற்றவர்களை குறை சொல்வார்கள். இவர்கள் காலப் போக்கில் மன நிம்மதியை இழந்து, தானும் தாழ்ந்து, தன்னுடைய குடும்பத்தினரையும் முன்னுக்கு வரவிடமாட்டார்கள். இல்லாதவற்றை இருப்பதைப் போலவும், நடக்காதவற்றை நடத்ததைப் போலவும் சொன்னால் எல்லோரும் முதலில் ஒப்புக் கொண்டாலும் காலப்போக்கில் இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள நிறைய வருஷங்கள் ஆகாது. பின்பு இப்படிப்பட்டவர்கள் என்னதான் உண்மையானவற்றையும், நடப்பதையும் கூறினால் யாருமே நம்பமாட்டார்கள்.  தேவையில்லாமல் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்து தவறான  கருத்துக்களை தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். இதை உணர்ந்தவர்கள் நமட்டுச் சிரிப்பு சிரித்தாலும் அவர்களுக்குப் புரியாது. புரிந்தாலும் கோபப்படுவார்களே தவிர தன்னுடைய தவறினை திருத்திக் கொள்ள மாட்டார்கள். பொய்யாகக் காணும் விஷயங்களை தவறாகப் புரிந்து கொள்ளுவதும், சந்தேகங்களும், உறுதியில்லாத அறிவும், மனமும் இவர்களை முன்னுக்கு வர விடாமல் தடுக்கும்.சஞ்சலமான மனதை அலைபாயாமல் தடுத்தல் அவசியமான ஒன்றாகிவிட்டது. நாம் எதிர்நோக்கும் எல்லா பிரச்னைகளையும் நிறைகுடம் போல ஆடாமல், அசையாமல் ஒரே மனதுடன் இருந்துவிட்டால் தீர்த்துவிடலாம். எதற்க்கும் அசராத மனமே வெற்றிக்குப் பெரிய காரணமாக இருக்கும் பொழுது நாம் ஏன் குறை குடமாக இருக்க வேண்டும். நிறைகுடமாகவே நிறைந்து இருக்கலாம். 

May 01, 2024

நாம் செய்வது சரியா? தவறா?

பலருடைய உள்ளத்தில் இந்த ஒரு கேள்வி எழாமல் இருப்பதில்லை. தான் செய்யும் ஒவ்வொரு செயலும் சரியா? தவறா? என்று யோசிப்பதிலேயே காலத்தையும், மனசையும் கெடுத்துக் கொள்கின்றனர்.ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பெரியவர்கள் கூட 'உனக்கு எது சரின்னு படுதோ அதைச் சட்டுபுட்டுன்னு செய்வியா?' என்பார்கள்.ஏனென்றால் முடிவெடுப்பதில் யோசித்துக் கொண்டு யாரிடமாவது கேட்டு முடிவெடுக்கலாம் என்றால் அவசர முடிவுகளுக்கு என்ன செய்வார்கள்.சரியா? தவறா? என்ற யோசனை சாதாரண உடை விஷயத்திலிருந்து அடுக்கிக் கொண்டே போகலாம். திருமணத்திற்கோ நிச்சயதார்த்தம், சங்கவிழா, ஏன் துஷ்டி வீட்டிற்குப் போவதற்குக் கூட பல பெண்கள் என்ன புடவை, என்ன நகை போடுவது என்று அலைபாய்ந்து நொந்து போகின்றனர். அவர்கள் மனம் எது சரி? என்ற தெளிவான சிந்தனையை சிந்திப்பதில்லை, சரி சமையலை எடுத்துக் கொள்வோம். விருந்தாளி வருகிறார்கள், வகையா சமைக்கணும், என்ன சமைப்பது என்று யோசித்தே சமைக்க ஆரம்பிப்பதற்கு முன்பே தலைவலியில் படுத்து விடுகின்றனர்.வியாபாரத் துறையிலும் சரி முடிவெடுப்பதற்கு படாதபாடு படுவார்கள். பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவெடுப்பதற்குள் உள்ளம் பதறி மனம் படபடத்து செய்வதறியாது திருமணத்தை தள்ளிப் போடுபவர்கள் பலர்.இந்த மனிதர்களிடையே ஒரு சிலா முடிவெடுப்பதில்  தாமதிக்காமல் டக்கென்று முடித்து விடுவார்கள். இப்ப என்ன? நடக்கிறது நடக்கட்டும். எந்த வியாபாரம்  தான் டென்ஷன்  இல்லாதது, வரும் போது பார்த்துக்கலாம் என்று தைரியமாக முடிவெடுப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பிரகாசிக்கிறார்கள். பெற்றவர்களாகஎன்ன ஆகி விடுமோ? என்ற பயம் இருக்கும் வரை நம் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. அதனால் முடிவெடுப்பதில் முட்டாள் தனமான முடிவும் கஷ்டத்தில் கொண்டு போய் தள்ளிவிடும்.நாள், நட்சத்திரம் பார்த்து பல விஷயங்களைத் தள்ளிப் போடுபவர்கள் அவசரமாக வைத்தியம் செய்வதைத் தள்ளிப் போட்டு உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வருபவர்கள் பலர் உண்டு.வீட்டை விட்டு புறப்படும் பொழுது மந்தாரமாக இருக்கே குடை எடுத்துட்டுப் போகவா? வேண்டாமா? என்று ரெம்ப நேரம் குழம்புவார்கள். முடிவெடுப்பதில் உள்ள குறை. 'ஒன்று குடை எடுத்துட்டுப் போங்க, இல்லாட்டி நனைஞ்சுட்டு வந்தா உங்க மண்டையிலே என்ன செடியா முளைச்சிடும். துணி தானே நனையும் காயப் போட்டுக்கலாம்! இது துரிதமாக முடிவெடுக்கும் மனைவியின் அபிப்ராயம்.என்ன நடந்தாலும் பரவாயில்லை. நடப்பது நடக்கட்டும் எனக்கு இது சரியென்று படுது நான் செய்கிறேன். தவறாயிட்டா அப்புறம் திருத்திக்கிறேன். இது முடிவெடுப்பதில் தைரியம் உள்ளவர்களின் மனப்பான்மை.நீங்க எப்படி? சரியா இது ? தவறா?   ….சரிதான்.

Mar 30, 2024

'வானர சைன் யங்கள்'

 விடுமுறை குஷியில் குழந்தைகள் கொண்டாட, பெற்றோர்களுக்கு வானர சைன்யங்களின் படை யெடுப்பை என்ன செய்வது? என்ற கலக்கல்கள் நிச்சயம். சில விஷமங்கள் நினைத்து, நினைத்து காலம் பூராவும் சிரிக்க வைக்கின்றன. காலேஜ் பிள்ளைகள் வீட்டிற்கு லேட்டாக வருவது பெண் பிள்ளைகள் தோழியிடம் பேசுகிறேன் என்று சல் மான்கான், சாருக்ஹான்,விஜய் கட்சி ஆரம்பித்தது பற்றிய விவாதங்கள்IPL  கிரிக்கெட் பிளேயர்ஸ் பற்றிய கருத்துக்கள், அம்பானி வீட்டு கல்யாண விஷயங்கள், சீமான், அண்ணாமலை பற்றிய பேச்சுக்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. செல்போன் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர். செல்போன் ரீசார்ஜ் செய்ய பணம் கேட்டுத் தொல்லை பிறந்த குழந்தைகளில் இருந்து கிடு கிடு தாத்தா வரைக்கும் செல்போன்தான். போன்பில்கள், செல்பில்கள் எகிறுகின்றன. இப்போ பள்ளிக் கூட குட்டீஸ் புராணம் போகலாமா?இன்றைய பெற்றோர்கள் உலகத்தில் உள்ள எல்லா கலைகளும் தங்கள் குழந்தைகள் கற்க வேண்டும். விஷமம் மாத்திரம் பண்ணக்கூடாது."விஷமக்கார கண்ணன்' என்ற பாடலில் கண்ணன் செய்யும் எல்லா குறும்பு விளையாட்டுக்களையும் சொல்லி மகிழ்ந்து சிரித்து, அக்கண்ணனை வணங் கவும் செய்கிறோம். நடைமுறையில் நம் குழந்தை கள் செய்வதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.தன் ரப்பரைக்காணும் என்று6வயது குட்டி கண் கசக்க2 வயது குட்டி சமத்தாக உட்கார்ந்து ரப்பரை ருசி பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த தாய்க்கு எப்படி இருக்கும். எட்டு வயது வாண்டு வாசிங் மிஷினில் வாட்டர் கலரை கொட்டி தண்ணீர் ஊற்றி அப்பாவுடைய வெள்ளைத் துண்டை போட்டு எப்படி நிறம் மாறுகின்றது என்று கவனிக்கிறான். இன்னொருவர் வீட்டிலுள்ள தாத்தா காலத்து கடிகாரத்தை தனித் தனியாகப் பிரித்து இன்ஞினியரிங் வேலை புது சோப்பை ஒரு பக்கெட் தண்ணீரில் கரைப்பது, பக்கத்து வீட்டுக்குச் சென்று மாமி எனக்கு சாப்பாடு வைய்யுங்கோ,எங்க வீட்டு சாப்பாடு சகிக்கலை இப்படிக் கொஞ்சம்.தாத்தா பல் செட்டை எடுத்துக் கொண்டு போய் எங்காவது ஒளித்து வைத்துவிடுவது. பாட்டியுடைய தண்ணீர் செம்பில் தான் தண்ணி குடிப்பேன் என்று அடம் பிடிப்பது, பாட்டி தாத்தாவிடம் கதை சொல்லும் படி அடம் பிடிப்பது. மதிய நேரம் கண் சொக்கும் நேரத்தில் அம்மா பாட்டி என்று செல்ல மாகக் கொஞ்சுவது. பபுள்கம்மை நன்றாக மென்று சோபாவில் ஒட்டுவது.பாட்டு, டான்ஸ், கராத்தே, நீச்சல் என்று எல்லா கிளாசிற்கும் சென்று விட்டு வந்தே இவ்வளவு என்றால் வீட்டிலேயே வைத்திருந்தால் என்னாகும். எப்படி குழந்தைகளின் விஷயங்களில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதைப் பற்றி கூட பெற்றோர்களுக்கு வித்தியாசமாக கிளாஸ் எடுத்தால் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.Preschool எங்கு பார்த்தாலும் காளான் போல முளைத்து விட்டது. வித்தியாசமாக பெற்றோருக்கு ஸ்கூல் எடுக்கலாமே! நல்ல வியாபாரம்!தூங்கிக் கொண்டிருக்கும் அண்ணன், அக்கா, தங்கை, தம்பிக்கு மீசை வரைந்து விடுதல் உறவினர்கள் வீட்டிற்குள் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தால் அவர்களைப் பார்த்து எப்போ நீங்க வீட்டுக்கு போ வீங்க என்று கள்ளங்கபடமில்லாமல் கேட்பது12லிருந்து18வரை காது செவிடாகும் படியாக பாட்டை சப்தமாக விட்டு உல்லாசமாக டான்ஸ் ஆடி பெற்றோர்களின், பக்கத்து வீட்டுக்காரர்கள் மண்டைவலி டென்ஷன் எல்லாமே எகிறிவிடுகின்றது. அதுவும் ரிடையர்ட் பெரிசுகளுக்கு” என்ன வந்தது இந்த வானர சைன்யங்களுக்கு” என்று ஆச்சரியப்படுகின்றனர். இப்படிக் கேட்காதீங்க நல்ல கதை கேளுங்க என்று மகாபாரதக் கதைக் சொல்லும் பொழுது பீமனுடைய பலத்தை விமரி சிக்கும் பாட்டியிடம் குழந்தை விஜய், விஷால்(நடிகர்கள்) மாமாவை விடவா பலசாலி என்று கேட்கின்றனர். நீ சக நண்பர்களுடன் நீ பீமன் நான் விஜய் நீ விஷால் என்று டிஸ்யும் செய்ய ஆரம்பித்து பீமனை தோற்கடித்து விட்டு“பாட்டி பாத்தியா பீமனால் விஜய், விஷாலை சமாளிக்க முடியாது” என்று எள்ளி நகையாடுகின்றனர்.கம்ப்யூட்டரில் கூகுள் சர்ச் செய்து எல்லா விஷயத்தையும் அலசி ஆராய்வது. கூகுள்க்கு தெரியுமா? இது சர்ச் செய்வது 5 வயதுப் பையன் என்று அம்மா, அப்பா செல்லை எடுத்துக் கொண்டு போய் பதுங்கி இருந்துஅதை ஆட்டை போடுவது,செல்போன் எனக்கு வேண்டும், உனக்கு வேண்டும் என்ற சண்டை குழந்தைகளிடையே இவற்றையெல்லாம் தாண்டி அம்மாவும், அப்பாவும் செல்போன் பார்க்க நேரம் தேடுவது என்று ஒரே அல்லோகளம் தான்.அவர்களை இழுத்துப் பிடித்து உட்கார வைத்து கார்ட்டூன் சுட்டிடிவி பார்க்க வைக்கின்றனர். இதை பார்த்து விட்டு வேறு விதமான எதிர்பாராத விஷ மங்கள் கூடுகின்றன. என்ன தான் கம்யூட்டர் காலமானாலும் காலத்திற்கேற்ப விஷமங்கள் கூடிக் கொண்டே செல்கின்றன. குரங்கிலிருந்து தான் மனிதன் பிறந்தான் என்ற ஆராய்ச்சியின் முடிவு இந்த வானர சைன்யங்கள் மூலமே தெரிந்து கொள்ளலாம்.ஜீன்1ஆம் தேதி முதல் இந்த சைன்யங்கள் அடுத்த வருடத்து தாக்குதலை தயார் படுத்திக் கொண்டு 2025 ஏப்ரலுக்காக காத்துக் கிடக்கின்றனர். இந்த அன்புத் தொல்லை 'வானர சைன் யங்கள்' 

Mar 01, 2024

தனிமை

மனிதர்கள் பிறந்ததிலிருந்து குழந்தை, மாணவன், இளைஞன், கணவன், மனைவி, தகப்பன், தாய், தாத்தா, பாட்டி, என்று ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவரைச் சார்ந்து அதாவதுபற்றுதலுடன் தங்களுடைய உள்ளுணர்வுகளைச் சொல்லிக் கொள்ளும் வாய்ப்பு கணவன் மனைவியிடையே கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.கணவனுடைய தேவையை யார் அறிவார் மனைவி உருவில் உள்ள தெய்வமே அறியும் என்பது ஆண்களின் கருத்து, பெண்களுக்கு கணவன் தான் என்பதும் யாரும் வேண்டாம் நாம் இருவர் மாத்திரமே இருந்து கொள்ளலாம் என்று நிம்மதியாக இருக்கும் காலத்தில் காலனுடைய கட்டாயத்தில் யாராவது ஒருவரை பிரிய வேண்டிய நிர்பந்தத்தில் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தனிமை இவர்களை அதிகமாகவே ஏக்கத்திற்கு உள்ளாக்குகின்றது.  தனிமையின் கொடுமை அதை அனுபவித்தால்தான் தெரியும். உங்களுக்கென்ன எல்லாவற்றையும் துறந்து நிம்மதியாக இருக்கிறீர்கள். காலைக் கடன்களை முடித்து2 மணி நேரம் பூஜை செய்து, தனக்கு மட்டும் வேண்டிய ஆகாரத்தை செய்து கொண்டு10 மணிக்கு எல்லா வேலைகளையும் முடித்துவிடுகின்றனர். காலை பத்து மணியிலிருந்து இரவு 10 மணிவரை கிட்டத்தட்ட12 மணி நேரம் என்னதான் டி.வி. பார்ப்பது. சுலோகம் சொல்வது வீட்டை துடைப்பது. என்ற பல காரியங்கள் இருந்தாலும் இந்த நேரத்தை எப்படிக் கடத்துவது என்று பலர் அவதிப்படுகின்றனர்.தனிமை படுத்தப்பட்டவர்கள் இளம் வயதினராக இருந்தால் தனக்குப் பிடித்த தொழில், பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பது என்று எத்தனையோ விதமான வேலைகளை ஏற்றுக் கொண்டு தனிமையை விரட்டலாம். வேலை செய்ய முடியாத அளவிற்கு வயோதிகம் அதிகரிக்க , அதிகரிக்கதனிமையில் மன நோய்க்கு ஆளாகி விடுகின்றனர். இப்படி பட்டவர்களுக்கு கொஞ்சம் சமூக சேவை எண்ணம் உள்ளவர்கள். ஏன் தாத்தாக்களைப் பார்த்து பேசுவது சிரிக்க, சிரிக்க அன்பான வார்த்தைகளைக் கூறுவது, பாசத்துடன் உடன் நலனை விசாரிப்பது,கால், கை, வலி என்றால்கை, கால் நீவி விடுவது தலைவலி என்றால் தலை வலித் தைலம் தேய்ப்பது என்ற சிறு சிறு வேலைகளை ஆத்மார்த்தமாகச் செய்ய வேண்டும். நாம் அவர்களுக்குச் செய்யும் சேவைகளால் அவர்கள் கூறும் வாழ்த்துக்கள் இருக்கின்றதே அவைகள் போதும். கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்க தினமும் செல்பவர்கள் வாரத்திற்கு5 நாட்கள் இச்சேவையை செய்ய பழகிக் கொள்ளுங்கள், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற பழமொழி இருக்கிறதே.இதை கவனிக்கும் இளைய தலைமுறையினர்5 வயதிலிருந்தே அவர்கள் ஒரு வீட்டிற்கு சென்றால் அங்கு தாத்தா, பாட்டி ரூமிற்கு சென்று பேசவேண்டும் என்ற கொள்கையை நாம் சொல்லாமலே அவர்கள் கடைபிடிப்பார்கள். யாராவது ஒரு தெருவில் இப்படி ஆரம்பித்து அதனுடைய பின் விளைவுகளை நம் பத்திரிக்கையில் பகிர்ந்து கொள்ளலாமே!.

Feb 01, 2024

கருடா சௌக்யமா ?

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு 'சொன்னது கருடா சௌக்யமா? அதற்கு கருடனும் எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியம்தான் என்றதாம். நாம் எப்படி அர்த்தம் கொள்ள வேண்டும். பாம்பும் கருடனும் எப்பேற்பட்ட எதிரிகள் அவர்கள் இருவரும்! அருகருகிலேயே இருப்பினும் பாம்புக்கு ஆபத்து இல்லாமல் பரமசிவனுடைய கழுத்தில் இருந்து கொண்டு கருடனை குசலம் விசாரிக்கின்றது. அப்பாம்பு அந்த இடத்தைவிட்டு ஓர் அடி நகன்றாலும் கருடன் கொத்தி தன்னுடைய ஒரு வேளை உணவிற்காக திருப்தியாக சாப்பிட்டுவிடும்.பாதுகாப்பு என்ற எல்லைக்கோட்டை விட்டு சிறிது நகன்றாலும் நம்முடைய கதி பாம்பின் கதி தான். ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டால் அது தன் தாயை விட்டு மற்றவரிடம் செல்ல யோசிக்கும். காரணம் தாயின் இருப்பிடம்தான் பாதுகாப்பானது என்பதை குழந்தை உணர்ந்து கொள்கின்றது.5, 6 வயது வரையிலும் கூட விளையாடிக் கொண்டிருந்தாலும் 1 மணி நேரத்திற்கு ஒரு தடவை அம்மா என்று ஓடி வந்து சிறிது நேரம் தாயின் மடியில் உட்கார்ந்துவிட்டு மீண்டும் ஓடி விடும். (Secure Feeling) பாதுகாப்பான உணர்வுதான் இதற்குக் காரணம் என்று கண்டறிந்து உள்ளனர்.குழந்தைக்கு இவ்வளவு அழகாகத் தெரியும் பொழுது பெரியவர்களாகிய நாம் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம். புகை பிடித்தல், மது போதைக்கு அடிமையாகுதல், டி.வி. சீரியல்களுக்கு அடிமையாகுதல், தவணை முறையில் சாமான்களை வாங்குதல், அதிரடித் தள்ளுபடிக்கு அடிமையாகுதல், நம் தகுதிக்கு மீறிய நகை, வீடு வாங்குதல் ஆகியவை நமக்கு பாதுகாப்பற்ற விஷ அரக்கர்கள். ஒரு முறை தானே என்று ஆரம்பித்து புகை, மது போன்ற பொருட்களின் மீது அடிமையாகி நாம் மட்டும் இல்லாமல் குடும்பமே நடுத்தெருவிற்கு வருவது. டிவி. சீரியல்களுக்கு அடிமையாகி பசி நேரத்தில் பசியோடு வரும் குழந்தைகளையும், கணவனையும் கண்டுகொள்ளாமல் தன்னை மறந்த நிலையில் பரிமாறுதல், உங்களுடைய தாய்மை உணர்விற்கும் அன்பிற்கும் சேதம் விளைவிக்கும். தவணை முறையில் சாமான்களையும், நகைகளையும், வீட்டையும் மற்றவர்களுக்காக பெருமை காட்டிக் கொண்டு நாம் மாத்திரம் மனதில்  படக்படக்கொன்று. பேங்க்காரன் வருவானோ?  வட்டிக்காரன் வந்துவிடுவானோ என்ற பயத்தில் ஏன் காலத்தை ஓட்டவேண்டும். எந்த ஒரு பொருளும் நம்முடைய சௌகரியத்துக்குதானே தவிர மற்றவருக்காக அல்ல என்பதை ஒரு போதும் நாம் மறக்கக் கூடாது. நமக்கு நாமே பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மாட்டிக் கொள்கிறோம்.பணக்காரர்களுடைய சிநேகமும், பகையும் ஆகவே ஆகாது. சிநேகம் இருந்தால் அவர்களுடைய வசதியைப் பார்த்து, ஒன்று பொறாமை அல்லது அவர்களை மாதிரி ஏதாவது ஒன்றை  வாங்கலாமே  என்று நம்முடைய பட்ஜெட் நம்மை அறியாமலேயே காலியாகும். சிநேகமாவது பராவாயில்லை பகை இருக்கிறதே அது மகா தவறு. பகைமை கொண்டால் பணக்காரன் எப்பொழுது நேரம் கிடைக்கும் என்று ஏதாவது ஒரு வழியில் வஞ்சம் தீர்த்துக் கொள்வான். இவன் பணக்காரன் மீது பகை வைத்திருக்கிறான் இவனோடு நாம் இருந்தால் பணப்படைத்தவன் நம்மையும் ஒதுக்கி விடுவான் என்று மற்றவர்களும் நம்மை ஒதுக்கி விடுவார்கள். பணக்காரர்களை குற்றம் சொல்லவில்லை. நம்முடைய மனதில் பலஹீனத்தை தூண்டும் இவை தேவையில்லை.ஹலோ, ஹலோ இதுவே போதும் நாமும், நம் குடும்பமும் பாதுகாப்பான ஒரு  எல்லைக் கோட்டிற்குள் தமக்கு என்று வழிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டு பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பைப் போன்று குசாலம் விசாரித்துக் கொண்டு நிம்மதியாக வாழலாம். பகட்டிற்காக நம் பாதுகாப்பிற்கு எந்த விதமான இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நம் கடமை நல்லவனாக இரு. இல்லாவிட்டால் நல்லவனோடு இரு என்று ஏன் கூறினார்கள் புரிகின்றதா? 

Dec 30, 2023

பேசுவது கலையா?

எத்தனையோ கலைகள் உள்ளன. பேசவதற்கு கூடவா கலை, வாய்க்கு ? வந்தபடியெல்லாம் பேசினால் நன்றாகவா இருக்கும். பேசுவது ரெம்ப சாதாரண விஷயம் என்று பலர் நினைக்கின்றனர். பேசுவதிலும் ஒரு கட்டுப்பாடு, பண்பாடு, கண்ணியம் வேண்டும். எப்படி ? நாம் பேசும் பேச்சு மற்றவர்களின் மனதைப் புன்படுத்தாமல் பேசுவதுதான். யாராவது இதைப் பற்றி யோசித்திருக்கிறார்களா ?ஒரு கடைக்குப் போகிறோம். இது என்ன விலை ? என்று கேட்கிறோம். கடைக்காரர்கள் அதிலேயே விலை இருக்கு பாத்துக்கங்க. என்றால் எப்படி இருக்கும். அந்தக் கடைக்காரன் இருங்கம்மா பாத்துச் சொல்றேன். ஏன்று அமைதியாகச் பேசினால் உங்கள் மனம் குளிருமில்லையா ? எந்தப் பொருளைப் பற்றி நயமாகஎடுத்துக் கூறினால் நீங்களல் வாங்காமல் வருவீர்களா ? பண்பொழுக பேசும் பேச்சில் மயங்காதவர்கள் உண்டா ?மறைந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிறந்த நகைச்சுவை நடிகர் அவர்கள் கட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றார். எதிர் கட்சியாளர் அவ்வூரில் பிரபல டாக்டர். அவ்வூர் மக்கள் அவர் மீது மிகுந்த மரியாதையும். அன்பும் வைத்திருந்தனர். இதை கேட்டவுடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒப்புக் கொண்டார்.இக்காலத்து தேர்தல் பிரச்சாரம் என்றால் காதை பொத்திக் கொண்டு ஓடும் அளவிற்கு பண்பற்ற வார்த்தைகள் வரும்.ஆனால் திரு. என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களோ, அந்த டாக்டரின் மருத்துவத்தை பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்தார். தனக்காக பிரச்சாரம் செய்ய வந்தவர் இப்படிப் பேசுகிறாரே ? என்று வெளிறிப் போனார். ஆனால் கலைவாணர் அவர்களோ இவ்வளவு பெரிய டாக்டரை தேர்ந்தெடுத்து சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினால், உங்கள் ஊர் நல்லதொரு மருத்துவரை இழந்து விடும் என்று கண்ணியமாகப் பேசினார். அவர் பிரச்சாரத்தினால் கட்சி வெற்றி பெற்றது.முன்னுக்கு வரும் ஒரு இசையமைப்பாளர் தான் இசை அமைத்ததற்கு தயாரிப்பாளரிடம் ஒரு தொகையைக் கேட்டார். உடனே அந்த தயாரிப்பாளரோ இப்பொழுது நம்பர் ஒன் இசையமைப்பாளருக்கு கொடுத்த செக் ஜெராக்சை காண்பித்து அவருக்கே இவ்வளவு தான் கொடுத்திருக்கிறேன். நீங்கள் கேட்பது நியாயமா ? என்றார். உடனே இளம் இசையமைப்பாளர் எனக்கு குரு, அனுபவம் மிக்க திறமைசாலி, நீங்கள் கொடுத்தது அவருக்கு சின்ன வேலை தான். ஆனால் நானோ முட்டாள். நான் கடுமையாக உழைக்க வேண்டும். என்று மூத்தவரை காயப்படுத்தாமல் தன் வேலையை சாதித்துக் கொண்டார்.ஒரு குழந்தை துறுதுறு என்று இருக்கிறது. அட எவ்வளவு அழகான குழந்தை உடம்பெல்லாம் மின்னுதே என்று சொல்லிவிடக் கூடாது. ஏதாவது குழந்தைக்கு வந்துவிட்டாள் 'சண்டாளன் வாயிலே பட்டே என் குழந்தைக்கு இப்படி வந்து விட்டது' என்பார்கள். அதைத் தவிர்த்து 'கடவுளுடைய ஆசிர்வாதத்தால் நீ நன்றாக இரு' என்று சொல்லிவிட்டால் பிரச்சனை இல்லை.இப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. இப்பொழுது தெரிகிறதா! என்ன இருந்தாலும் பேசித் தீர்த்துக்குவோம் என்கிறார்கள் பல சண்டை சச்சரவுகளை கண்ணியமான பேச்சினால் பேசித் தீர்த்துக்கலாம். இப்போ தெரியுதா பேசுவது கூட சுவை என்று. புதுவருடமான இன்றிலிருந்து கண்ணியமாக மற்றவரை புண்படுத்தாத பேசும் கலையை உயர்த்திக் கொள்ளுங்கள். என்னத்தால் கெட்டான் ? பேசியே கெட்டான் என்பர் பலர் .பேச்சையும் அளந்து அளவோடு பேசனும். சிலரை அன்பால் அரவணைத்து பேசி நம்முடைய காரியத்தை சாதிக்கலாம். ஆனால் சிலருக்கு அன்பாக பேசினால் கூட அலட்சியம் காண்பிப்பார்கள். அவர்களை எல்லாம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, நயமாக கடிந்து பேச வேண்டும். அதைக் கூட அடாவடியாகப் பேசக் கூடாது. பேச நன்றாகக் கற்றுக் கொண்டுதான் பேச வேண்டும். அதிகாரத்தில் இருக்கிறோம் என்று விட்டு எறிந்து பேசக் கூடாது ஆக பேசவது கலைதான்.

Dec 02, 2023

சுமை தாங்கும் முதுமை

மனிதனாகப் பிறந்த எல்லோருக்குமே 40 வயதைத் தாண்டியவுடன் கதிகலங்க ஆரம்பித்து விடுகிறது. லேசாக மூட்டுவலி, தலைநரை, இளம் வயதில் உள்ள உற்சாகம், வேகம், எல்லாமே கொஞ்சம், கொஞ்சமாகக் குறைகிறது. ஆனாலும் உழைக்கிறார்கள். தன் குழந்தைகளின் படிப்பு, திருமணம், சொத்து சேர்ப்பது, இவை மட்டும் தான் முன்பெல்லாம் இருந்தது. 'ஒரு வீடு இருந்தால் போதும் நிம்மதி' என்ற வார்த்தைக்கு 'குட்பை' சொல்லும் காலம் வந்து விட்டது.பையனோ, பொண்ணோ, யாருக்குமே தன்னுடைய பெற்றோர்களை வயதான காலத்தில், பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு, கனவில் கூட இல்லை என்றே சொல்லலாம். ஏழைகளுக்கு பணக்கஷ்டம், செலவு செய்ய முடியாது. முதியவர்களை Extra பாரமாக தங்களுடைய வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள், பணக்காரர்கள் வேலைக்கு ஆட்களை அமர்த்தி கவனித்துக் கொள்வார்கள். மாதம் ஒரு முறையோ, 2 முறையோ, 'ஹலோ' சொல்வார்கள். அதுவும் வெளிநாட்டில் இருந்தால் வருடக் கணக்குதான். நடுத்தர வர்க்கத்தினரோ 2 நாள் பார்ப்பார்கள். அப்புறம் விட்டு விட்டு பார்ப்பார்கள். அவர்களால் பார்க்கவும் முடியாது. பார்க்காமல் இருக்கவும் முடியாது. பெற்றோர்களுக்கு கஷ்டம் இருந்தால் பார்ப்பார்கள் என்றே சொல்லலாம்.வயதான காலத்தில் மனதாலும், உடலாலும் பாதிக்கப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய், யாரும் எதிர்பார்க்காத ஒரு செயலை செய்வார்கள். ஒன்று சொல்வதையே திருப்பி, திருப்பி சொல்வார்கள். சின்ன விஷயத்திற்குக் கூட டென்ஷன் ஆகி விடுவார்கள்.அவர்களுடைய கேள்விகளுக்கு இந்த தலைமுறையினரால் பதிலே சொல்ல முடியாது. அடுத்த தலைமுறையினரைப் பற்றி சொல்லவே வேண்டாம்.இப்படி இருக்க முதியவர்கள்நாம் ஏன் பிறந்தோம் ? எப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறோம். குழந்தைகளை வளர்த்து ஆளாக்க, படிக்க வைக்க வைத்தியம் செய்ய என்று பல வேலைகளுக்கு நாயாக உழைத்திருக்கிறோம். அவரவர்களுடைய தகுதிக்கேற்ப பல இன்னல்களால் கஷ்டப்பட்டு, அவமானப்பட்டு, தங்களுடைய குழந்தைகளை வளர்த்திருக்கிறோம். இவர்களுக்கு ஏன் நம்முடைய கேள்விகளுக்கு பதில் தர கூட பொறுமையில்லை?ஏதோ வேண்டா வெறுப்பாக நம்மைப் பார்க்கின்றனர். 'என்னப்பா முகம் வாடியிருக்கே' 'ஆபிசிலே கஷ்டமா' 'வியாபாரத்தில் ஏதாவது சிக்கலா என்று கேட்டால் கூட ஆரம்பிச்சுட்டீங்களா ! 'நீங்க பாட்டுக்கு நிம்மதியா இருங்கப்பா' நான் பார்த்துக்கிறேன்' என்னை டென்ஷன் ஆக்காதீர்கள் என்று எரிந்து விழுகின்றனர். குடும்பத்தில் என்ன நடக்கிறது ? என்பது கூட தெரியாமல் தத்தளிக்கின்றனர்.எங்களுக்கு தேவையில்லாத விஷயம்தான் எங்களால் சரி பண்ண முடியாதது தான். ஆனால் எங்கள் அனுபவம் சில யோசனைகளைக் கூறுமே ? அதை ஏற்றுக் கொண்டால் என்ன ? என்று வருந்துகின்றோம்.காலையில் எழுந்தவுடன் பொழுது போகாமல் எதையாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். ஏதாவது ஏடா கூடமாகச் செய்து இளையவர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கின்றனர். பேசாமல் வாய்மூடி, கைகட்டி, வேளாவேளைக்கு சாப்பாடு மட்டும் சாப்பிட்டுக் கொண்டு டி.வி. பார்த்துக் கொண்டு இருக்க எங்களால் முடியவில்லையே? என்று ஆதங்கப்படுகின்றனர். இந்த நிலைமையில் யார்தான் உயர்வாழ விரும்புவார்கள். பேப்பரில் தன்னைவிட வயதில் சிறியவர்கள் இறந்த செய்தியைப் பார்த்தால் சின்னப் பிள்ளைக்கு சாவு வந்திருக்கே, எனக்கு வரல்லையே, என்று தன் உயிரின் மீதுள்ள வெறுப்பை வெளிக்காட்டிக் கொள்வார்கள்.அதுவும் சொத்துப் பிரிக்கிறதுக்கு அவர்கள் படும்பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. தன் குழந்தைகள் வெளியூருக்குச் சென்றால் கூட அவர்கள் வெளியூரில் இருக்கும்போது நாம் இறந்து விட்டால் அநாதைப் பிணமாகப் போய் விடுவோமா ? என்ற சந்தேகம். அந்த பயத்தின் விளைவால் எப்ப வருவே ? என்று இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள். மரணத்திற்கு தயாராக இருந்தாலும் என்ன ஆகுமோ? என்ற மரண பயம் இருக்கத்தான் செய்கிறது. இந்த முதியவர்களுக்கு, தான் பெற்ற குழந்தைகள் தங்களை உதாசீனப்படுத்தும்போது நாம் ஏன் இவர்களை இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தோம். அவமானங்களைப் படவா? என்று ஏங்கி ஏங்கி வாழ்கின்றனர்.ஆமா நமக்கு வயசாயிடுச்சு, குழந்தைகளை கஷ்டப்பட்டு ஆளாக்கினோம். அது நம் கடமை, அதற்கான பிரதிபலனை எதிர்பார்க்கக் கூடாது. முதுமை என்றால் பல சுமைகளைத் தாங்கி, தாண்டி வரத்தான் வேண்டும். இப்படி எண்ணினால் முதுமை எப்படி இருக்கும். கண்டிப்பாக ஒவ்வொரு முதுமையும் வாழ்நாளெல்லாம் நாம் ஏன் இவ்வளவு பாடுபட்டோம். இந்த சுமையுள்ள முதுமையைத் தாங்கவா? என்று எண்ணாமல் இருப்பதில்லை. பல்வேறு பட்ட சுமைகளைத் தாங்கும் முதுமை இனிக்குமா? கசக்குமா? இல்லை இரண்டுமில்லா சுமை தாங்கும் முதுமையா ? அவர்களுடைய மனநிலையை பொறுத்தும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும் பொறுத்துதான். ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தாலும் சுமையைத் தாங்கித்தான் ஆக வேண்டும் முதுமை. 

1 2 3 4

AD's



More News