திருஷ்டி பூசணிக்காய்.
தவறை 'தவறு' செய்கிறோம் என்று தெரிந்தே பலர் செய்கின்றர். எதற்காக? தன்னை நல்லவன் என்றும், உயர்ந்தவன் என்றும் தான் நன்றாக வாழ வேண்டும்என்பதற்காக பல தவறுகளை செய்து கொண்டே இருக்கின்றனர். இவை தெரிந்து செய்யும் தவறுகள். தவறு செய்பவர்கள் அனுபவிக்கத்தான் போகிறோம் என்று தெரிந்தும் ''அப்ப பார்த்துக்கலாம்" என்று இன்னொரு காரணத்தை சொல்லி சமாளிப்பார்கள்.
ஆனால் 'தவறை ' தவறே இல்லை என்று எத்தனை தவறுகள் செய்து கொண்டிருக்கிறோம் தெரியுமா? கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் தெரியும். பழகி விட்ட தவறுகளைப் பற்றி.
தன் கடையில் வியாபாரம் ஓஹோ என்றிருந்தாலும், வியாபாரம் இல்லை என்றாலும் 'கண் திருஷ்டி' என்று பூசணிக்காய் மேல் சூடம் ஏற்றி சுற்றி நடுத்தெருவில் போட்டு உடைத்து விட்டு திருப்தியாகச் செல்கின்றனர். தங்களுடைய கடைக்கு ரெம்ப பக்கத்தில் உடைத்தால் மறுநாள் சுத்தப்படுத்த வேண்டும் என்று தான்.
சரி திருஷ்டி சுற்றி விட்டு சாலையில் சிதறிய பூசணிக்காயோடு தங்களுடைய கஷ்டங்களெல்லாம் தீர்ந்த விடும் என்று நினைப்பவர்களுக்கு ,அடுத்த பெரிய பாபச் செயல் (கொலைக்குச் சமமான) செய்திருக்கிறோம் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்ப்பதில்லை. அவ்வழியே வேகமாக வரும் ஸ்கூட்டர், பைக் சறுக்கி பல உயிர்கள் எதிரே வரும் வாகனங்களில் அடிபட்டு மரணம் அல்லது காயமடைந்து, படுத்த படுக்கையாகி விடுகின்றனர் என்று பல செய்திகளைப் பார்க்கிறோம். உங்கள் வாழ்க்கையை சுகமாக்க இன்னொருவர் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறீர்கள். இது எப்பேர்பட்ட தவறு. பாவம். உயிர்களை காவு வாங்கும் இந்த திருஷ்டி பரிகாரம் தேவையா? இந்த செய்தி வாசிக்கும் வரை யாருக்கும், தான் செய்தது தவறு என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சரி தெரிந்த பின்பாவது அந்தத் தவறை மற்றவர்கள் செய்யாமல் இருக்கலாம் அல்லவா? 'ம்ஹீம்' நோ சான்ஸ். 'அவன் விதி', அதுக்கு நான் திருஷ்டி பூசணிக்காயை நடுரோட்டில் தான் உடைப்பேன் என்று அடம் பிடிக்கின்றனர். இதை மனிதர்களின் அறியாமை, முட்டாள்தனம் என்றும் சொல்லிவிட முடியுமா? பின்பு இவர்களை எதில் சேர்ப்பது?பழகிவிட்ட இத்தவறினை தவறு என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் திருஷ்டி சுற்றும் பூசணிக்காய் உங்கள் மகனையோ, உங்களுடைய சொந்தங்களையோ காவு வாங்கினால் என்ன செய்வீர்கள்?இவை எல்லாம் மற்றவர்களுக்கு எவ்வளவு இடைஞ்சல் தரும் என்பதை கொஞ்சமாவது சிந்திக்கவேண்டாமா? பழகிவிட்ட தவறினை, இனிவரும் சமுதாயத்தினருக்காவது தவறு ,என்று புரிய வைப்பது நமது கடமையாகும்.
திருமதி. குணா பாஸ்கர் ராஜா
0
Leave a Reply