25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


ஆன்மீகம்

Jan 16, 2026

முக்தி நாராயணர்.

நேபாளம் முஸ்தாங் மாவட்டம் முக்திநாத்தில் ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்ய தேசமான முக்தி நாராயணர் கோயில் உள்ளது. இமயமலைச் சாரலில் உயரமான இடத்தில் அமைந்த கோயில் இது. இப்பகுதியில் சாலமரங்கள் நிறைய இருந்ததால் 'சாளக்கிராம ஷேத்திரம்' எனப்பட்டது. இப்பகுதி மக்கள் 'முக்தி நாராயண ஷேத்திரம்' என்கின்றனர். இங்கு தாமோதர குண்ட் என்ற குளம் உள்ளது. நேபாள பாணியில் அமைந்த இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கியபடி சுவாமி இருக்கிறார். சுயம்பு மூர்த்தியான இவர் மீது திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் பாடியுள்ளனர். ஆனால் முன்பு நின்ற கோலத்தில் வடக்கு நோக்கி சுவாமி இருந்ததாக பழைய நுால்களில் கூறப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வார் தன் பாடலில் இதை உறுதிப்படுத்துகிறார். கால மாற்றத்தால் புதிய சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். சுவாமிக்கு அர்ச்சனை, அபிஷேகம் கிடையாது. செப்பு கிண்ணத்தில் சந்தனம்,குங்குமம், ஜவ்வாது இருக்கும். அதை துணியில் ஒற்றி சுவாமியை துடைப்பர். இதையே அபிஷேகமாக கருதுகின்றனர். விருப்பம் நிறைவேற சிறிய மணிகளை வாங்கி கோயிலில் கட்டுகின்றனர். இங்குள்ள யாகசாலையில் எப்போதும் நெருப்பு எரிகிறது. அதில் பக்தர்கள் அமர்ந்து மந்திரம் சொல்லி ஹோமம் நடத்துகின்றனர். லட்ச தீபம் ஏற்றும்  வழிபாடு இங்குண்டு. கருடன், சந்தோஷி மாதா, லலிதா, விநாயகர், பார்வதி, சிவன் சன்னதிகள் உள்ளன. இங்குள்ள நீர்த்தொட்டியில் தனித்தனி குழாய் வைத்து 108 தீர்த்தங்கள் செயற்கையாக  அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர பாவ, புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அதில் நீராடுவோருக்கு நிம்மதியும், மோட்சமும் கிடைக்கும். நவம்பர் முதல் மார்ச் வரை குளிர் காலம் என்பதால் தீர்த்தத்தில் நீராடுவது  சிரமம். இங்கு கிடைக்கும் சாளக்கிராம கல்லை பூஜையறையில் வைத்து வழிபட தோஷம் எல்லாம் விலகும்.

Jan 09, 2026

கதிர்காமம் முருகன் கோயில்.

இலங்கையின் தென்கிழக்கும் கரையில் ஊவா மாகாணம் கதிர்காமம் கோயில் உள்ளது. இங்கு 'கப்புறாளைமார் என்னும் சிங்களர்கள் தங்களின் வாயைக் கட்டி கருவறையில் உள்ள திரைக்குப் பின்புறம் நின்று பூஜை செய்வர். இதை விட ஆச்சர்யம் என்ன என்றால் திரைக்குப் பின்புறம் முருகனின் சிலை இல்லை, கருவறையில் உள்ள பெட்டிக்கு பூஜை நடக்கிறது.சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்த முருகன் இங்கு வள்ளியை காதல் மணம் புரிந்ததால் இத்தலம் 'கதிர்காமம்' எனப் பெயர் பெற்றது. இவரை கதிர்காம சுவாமி, கதிரை நாயகன், கதிரை வேலன், மாணிக்க சுவாமி, கந்தக்கடவுள் என அழைக்கின்றனர். வள்ளியை மணம் புரிந்ததால் தனக்கு பிடித்த இடம் கதிர்காமம் என இங்கு கோயில் கொண்டார். இன்னொரு வரலாற்றின்படி சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகன் கதிர்காமத்திற்கு வந்தார். இங்கு ஓடும் மாணிக்க கங்கை நதியின் அருகில் பாசறை அமைத்தார். சூரனுடன் போரிட்டு வெற்றி பெற்ற பின் நவகங்கைத் தீர்த்தத்தை உருவாக்கி தேவர்கள் வழிபடுவதற்காக இங்கு எழுந்தருளினார்.காவடி எடுத்தல், கற்பூரச் சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், தேங்காய் உடைத்தல், தீ மிதித்தல் என நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கதிர்காம மலையில் இருந்து கிடைக்கும் வெண்ணிறக் கட்டியை திருநீறாக தருகின்றனர். இங்குள்ள பழங்குடியினர் முருகனைத் தங்களின் மாப்பிள்ளையாக கருதுகின்றனர். 'வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உறைவோனே' என அருணகிரிநாதர் பாடியுள்ளார். இங்கு பூஜை செய்யும் கப்புறாளைமார் என்ற சிங்களர்கள் தங்களை வள்ளியின் வழித்தோன்றல் என்கின்றனர்.எல்லாளன் என்ற தமிழ் மன்னரை வெற்றி பெற விரும்பிய துட்ட கெழுனு என்ற இங்கள மன்னன் கதிர்காமத்து முருகனிடம் வேண்டுதல் வைத்து விரதம் இருந்தான். அதன்படி வெற்றி பெற்றதால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில் எழுப்பினான். விநாயகர், பெருமாள், தெய்வானை சன்னதிகள் உள்ளன. கதிர்காமர் (முருகன்) தெற்கு நோக்கியும், வள்ளி வடக்கு நோக்கியும் எதிரெதிரில் உள்ளனர்.இங்கு முருகனின் கருவறை வண்ணத் திரையால் மூடப்பட்டிருக்கும். அதில் வள்ளி, தெய்வானையுடன் முருகனின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். பக்தர்கள் தரும் அர்ச்சனைப் பொருட்களை திரைக்குள் சென்று கப்புறாளைமார் சுவாமிக்கு சமர்ப்பிப்பர்.காஷ்மீரைச் சேர்ந்தவர் துறவி கல்யாணகிரி. 12 ஆண்டுகள் தவத்தில் ஈடுபட்ட இவரது சமாதி இங்குள்ளது. முத்துலிங்க சுவாமிகள் எனப்படும் இவர் வழிபட்ட சரவணபவ யந்திரமே கருவறையில் இருப்பதாகச் சொல்வர்.

Jan 02, 2026

திருமணம் நடக்க...

விழுப்புரம் அருகிலுள்ள சிறுவந்தாடு கிராமத்தில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமையில் மட்டைத் தேங்காய் கட்டி வழிபட்டால் திருமணம் நடக்கும்.சோழ மன்னர் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில். விஜயநகர மன்னர் அச்சுதராயர் இங்கு திருப்பணி செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. தற்போதுள்ள அமைப்பு 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. மண்டபம் முழுவதும் கருங்கல்லாலும், விமானம் மட்டும் சுதையாலும் ஆனதாகும். கருவறையில் மூலவர் சுகாசனத்தில் அமர்ந்து, மகாலட்சுமி தாயாரை மடியில் தாங்கியபடி இருக்கிறார். தாயாரின் வலதுகை பெருமாளை அணைத்த படியும், இடதுகை தாமரை ஏந்தியும் உள்ளது. அர்த்த மண்டபத்தில் கனகவல்லி தாயார் சன்னதி உள்ளது. எலுமிச்சை மரம் தலவிருட்சமாக உள்ளது.அர்த்த மண்டபத்தின் கூரையில் பல்லி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலிலுள்ள பல்லி போலவே இதன் உருவ அமைப்பு உள்ளது.இதை தொட்டு வணங்குவோருக்கு கிரகதோஷம், நோய், திருஷ்டி விலகும். கருவறையின் பின்புறம் நின்றால் மூலவர், தாயார், ராமர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் விமானத்தை ஒருசேர தரிசிக்கலாம். திருமணத் தடை உள்ளவர்கள் லட்சுமி நாராயணர் முன்பு மட்டைத் தேங்காய் வைத்து வழிபடுகின்றனர். பிரசாதமான அதை வாங்கி வீட்டில் வைத்து தினமும் வழிபட்டால் திருமண யோகம் உண்டாகும்.பக்த ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமையில் துளசிமாலை சாத்தி ,நெய்தீபம் ஏற்ற நினைத்தது நிறைவேறும்.

Dec 26, 2025

ஸ்ரீ ரங்கம் பெரிய பெருமாள் .

108 திவ்ய தேசங்களில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பெருமாளை 'பெரிய பெருமாள்' என அழைப்பர். இக்கோயில் ஏழு பிரகாரங்களுடன் 156 ஏக்கர் பரப்பு கொண்டது. கோயிலைச் சுற்றி ஊர் இருக்கும். ஆனால் இங்கு கோயிலுக்குள் ஊர் இருக்கிறது. உள் வீதிகளில் வாகனங்கள் கூட செல்கின்றன. இங்குள்ள ரங்கநாயகி தாயாரே எல்லா தேவியரிலும் உயர்ந்தவள். பிரசாத பாத்திரம், வாத்தியம், பலகாரம் என எல்லாமே இங்கு பெரியது.உற்ஸவரை மக்களில் பெரியவனான ராஜாவுக்கு ஒப்பிட்டு 'ரங்க ராஜர்' என்றும், நமக்கே உரித்தானவர் என்னும் பொருளில் 'நம்பெருமாள்' என்றும், பேரழகு மிக்கவர் என்பதால் 'அழகிய மணவாளர்' என்றும் அழைக்கின்றனர். நவக்கிரகங்களில் அனைவராலும் விரும்பப்படுபவர் சுக்கிரன். தேவைக்கும்அதிகமாகபணம் வைத்திருப்பவரை,"உனக்கென்னப்பா சுக்கிர திசை' என புகழ்வதுண்டு. வெள்ளிக்கிழமையில் ஸ்ரீரங்கம் கோயிலை தரிசித்தால் வளமான வாழ்வு அமையும்.

Dec 19, 2025

ஆட்கொண்டநாதர் கோயில்.

மயில் வாகனத்தில் முருகப்பெருமானை பார்த்திருப்பீர்கள். ஆனால் மயில் மீது அமர்ந்த வள்ளி, தெய்வானையை பார்த்திருக்கிறீர்களா! சிவகங்கை மாவட்டம் இரணியூர் ஆட்கொண்டநாதர் கோயிலுக்கு வாருங்கள்.நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, அசுரனான இரண்யனை வதம் செய்தார். அதனால் ஏற்பட்ட தோஷம் தீர சிவனை வழிபட்ட போது 'ஆட்கொண்டநாதர்' என்னும் பெயரில் இங்கு எழுந்தருளினார்.நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் 'நரசிம்மேஸ்வரர்' என்றும் பெயருண்டு.இரணியனைக் கொன்ற பாவத்துக்கு விமோசனம் தந்த ஊர் என்பதால் இத்தலம் 'இரணியூர்' என பெயர் பெற்றது.ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக இங்குள்ளார். கருவறை விமானத்தை சுவாமியாக கருதி வழிபடும் வழக்கம் இங்குள்ளது. முன்மண்டபத்தில் இருந்து சுவாமி, விமானத்தை ஒரே நேரத்தில் தரிசிக்கலாம். அறுபது, எண்பது வயதில் நடத்தும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகத்தை இங்கு நடத்துகின்றனர். மாசிமகத்தன்று சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது.சிவபுரந்தேவியம்மன் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். நரசிம்மர் சிவனை வழிபட்ட போது உடனிருந்த அம்பிகை, இரண்ய வதத்தால் உக்கிரமாக இருந்த மகாவிஷ்ணுவின் தோற்றம் கண்டு கோபம் அடைந்தாள். அப்போது அவளிடம் இருந்து ஒன்பது சக்திகள் உருவாயின. அவர்கள் அம்மன் சன்னதி எதிரிலுள்ள துாண்களில் நவசக்திகள் என்ற பெயரில் உள்ளனர். இடது பக்கம் திரும்பிய நாய் வாகனத்துடன் பைரவர் இருக்கிறார்.இவருக்கு கார்த்திகை மாதம் 6 நாள் சம்பகசூர சஷ்டி நடக்கிறது.பிரகாரத்தில் வித்தக விநாயகரின் சன்னதி உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறக்க இவரை வழிபடுகின்றனர். சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி இருக்கிறார். குபேரனும், வாயு பகவானும் குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி உள்ளனர்.

Dec 12, 2025

வேதநாராயணப் பெருமாள் கோவில்.

திருச்சி அருகே திருநாராயணபுரம்எனும் ஊரில் வேதநாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்தல இறை வன் வேதநாராயணப் பெருமாள் எனும் திருநாமத்துடன் வேத நாயகி தாயாருடன் அருள்பாலிக்கிறார்.ஒருமுறை பிரம்ம தேவர், தன் பதவியை இழந்து மீண்டும் படைக்கும் பொறுப்பேற்றார். அப்போது அவர், தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு பெரு மான், இத்தலத்தில் வேதங்களை உபதேசித்து, பின்பு இங்கேயே பள்ளிக்கொண்டார். அதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு 'வேதநாராயணர்' என்ற பெயர் ஏற்பட்டது.பிற்காலத்தில் இங்குள்ள சுவாமியின் சிலை மண்ணால் மூடப் பட்டது, ஒரு சமயம், இவ்வூருக்கு வந்த வானவராயர் என்ற மன்ன னின் கனவில் தோன்றிய பெருமாள், "தனது சிலை மண்ணில் புதைந்திருப்பதாக" உணர்த்தி உள்ளார். இதையடுத்து அந்த சிலையை கண்டெடுத்த மன்னர், கோவிலும் கட்டினார்.இரணியனை அழித்தபோது உக்கிரமாக காட்சி அளித்த நரசிம் மர்,பிரகலாதனுக்கு இத்தலத்தில் சாந்த ரூபமாக காட்சி தந்ததாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயது குழந்தையாக பிரகலாதன் காட்சி அளிக்கிறார்.ஆலயத்தில் அருள்பாலிக்கும் பெருமாள், நான்கு வேதங்களை யும் தலையணையாகக் கொண்டு, ஆதிசேஷன்மீது பள்ளிக் கொண்டபடி, நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மதேவருக்கு வேத உபதேசம் செய்கிறார். பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும் பூதேவியும் இருக்கிறார்கள்.மூலவர்விமானம்வேதவிமானம்எனப்படுகிறது.கோவில் பிரகாரத்தில்ஆண்டாள், ராமானுஜர், நம்மாழ்வார், மணவாளமாமுனிவர், பிள்ளை லோகாச்சாரியார் ஆகியோர் உள்ளனர்.காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இக்கோவிலின் முகப் பில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருக்கிறார். இப்பகுதி மக்களிடையே ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், இவர் முன்பாக பேசி தீர்த்துக் கொள்கிறார்கள். யாராவது பொய் சொன் னாலோ, ஏமாற்றினாலோ இங்குள்ள கம்பத்தடி ஆஞ்சநேயர் முன்பு சத்தியம் செய்யும் வழக்கம் உள்ளது.திருமணத் தடை உள்ளவர்கள், கல்வியில் மேன்மை அடைய விரும்புபவர்கள் இங்குள்ள இறைவனுக்கு துளசி மாலை அணி வித்து, 27 அகல் விளக்கு ஏற்றி ஜாதகத்தை பெருமாள் திருவடி யில் வைத்து வழிபட்டு செல்கின்றனர். தோஷம் உள்ளவர்கள், தங்களின் ஜென்ம நட்சத்திரமன்று இந்த வழிபாட்டை செய்வது விசேஷமாகும்.திருச்சி - முசிறி சாலையில் திருச்சியில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் தொட்டியத்திற்கு அருகில் உள்ள திருநாராயண புரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

Dec 05, 2025

அக்னீஸ்வரர் சன்னதி.

ஒருவருக்கு பெயர், புகழ். அந்தஸ்து ஆகியவற்றை கொடுப்பவர் சூரியபகவான். இவரின் அருளைப் பெற திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகிலுள்ள நெய்தவாயல் அக்னீஸ்வரரை ஞாயிறன்று வணங்குங்கள்.ராஜகோபுரம் இல்லாத சிறிய நுழைவு வாசலே கோயிலில் நம்மை வரவேற்கிறது, பின் நேராக சென்றால் கிழக்கு நோக்கி உள்ள அக்னீஸ்வரரை தரிசிக்கலாம். சிவலிங்கம் சற்று வெள்ளை நிறத்தில் இருக்கும். இங்கு சிறப்பம்சமே தீபாராதனைதான். சுவாமி முன் தீபாராதனை காட்டும் போது வெள்ளையாகவும், பின்புறம் கொண்டு செல்லும் போது கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பு நிறத்தில் மாற ஆரம்பிக்கும்.அதாவது சுவாமிக்கு பின்புறத்தில் தீபாராதனை காட்டினால், சிவலிங்கமே அக்னி ஜ்வாலையாக தெரியும். இதை தரிசித்தால் சூரியதோஷம் நீங்கும். ஞாயிறன்று உச்சிக் காலத்தின் போது தரிசித்தால் அந்தஸ்து உயரும். சர்ப்ப தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள் பால் அபிஷேகம் செய்து வில்வார்ச்சனை செய்கின்றனர்.பிறகு தெற்கு நோக்கியிருக்கும் திரிபுரசுந்தரி அம்மனின் தரிசனம் நம் கண்களை நிறைக்கும். பாசம், அங்குசத்தை கைகளில் ஏந்தியும் அபய, வரத ஹஸ்தத்துடன் காட்சி தரும் இவளை பார்த்தால் மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும்.அம்மனின் முன் ஸ்ரீசக்கரம் வைக்கப்பட்டு பூஜை நடக்கிறது. வெள்ளி அன்று மாலையில் நடக்கும் விசேஷ பூஜையில் பங்கேற்றால் விருப்பம் நிறைவேறும்.சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் கஜபிருஷ்ட அமைப்பைக் கொண்டது. தலவிருட்சமாக வில்வ மரம் உள்ளது.

Nov 28, 2025

நட்சத்திர விருட்ச விநாயகர்.

பிறந்த நட்சத்திர நாளன்று கோயில் வழிபாடு செய்தால் முன்வினை பானம் தீரும். அன்று அவரவர் நட்சத்திரத்திற்கு உரிய தெய்வம். மரத்தை வழிபடுவது இன்னும் சிறப்பு, அதற்குரிய விசேஷ தலமாக திருவண்ணாமலை மாவட்டம் உக்கம்பெரும்பாக்கம் கூழமந்தல் ஏரிக்கரை அருகிலுள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயில் உள்ளது.காஞ்சி மஹாபெரியவரின் வழிகாட்டுதலால் சிவானந்த சரஸ்வதி சதாசிவ சித்தர் சுவாமிகள் இங்கு நட்சத்திர விருட்சங்களை (மரம்) பிரதிஷ்டை செய்தார். பிறந்த நட்சத்திர நாளில் இங்குள்ள விநாயகரை வழிபட்ட பின் நட்சத்திர அதிதேவதைக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்வது நல்லது. அப்போது மரத்தை மூன்று முறை சுற்றுவது அவசியம். இதனால் சகல தோஷங்களும் விலகும். வேலைவாய்ப்பு. திருமணம், குழந்தைப்பேறு என சுபவிஷயங்கள் தடையின்றி நிறைவேறும். நட்சத்திரம் தெரியாதவர்கள் 27 நட்சத்திரம், 12 ராசிக்கான மரங்களை எல்லாம் பொதுவாக வழிபாடு செய்யலாம்.காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிரதிஷ்டை செய்த அத்திருத்ராட்ச லிங்கேஸ்வரர் இங்கு இருக்கிறார். வள்ளி, தெய்வானையுடன் சிவசுப்பிரமணியர், குருபகவான், சனீஸ்வரர், ராகு, கேதுவுக்கு சன்னதிகளும் உள்ளன.

Nov 21, 2025

நாள்பட்ட நோய்கள் தீர்க்கும் தன்வந்திரி கோவில் .

கேரளாவிலுள்ள ஆலப்புழா மாவட்டம் மருத்தோர்வட்டம் சேர்த்தலாவில் தன்வந்திரி கோயில் உள்ளது. இங்கு வழிபடுவோர் நூறாண்டு நோயின்றி வாழ்வர். வயலார் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். வைத்தியம் செய்தும் பலனில்லை. வைக்கம் மகாதேவர் கோயிலுக்கு சென்று தரிசித்தார். வலி குறைந்தது.கோயிலை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் வலி ஏற்பட்டது. எனவே அங்கேயே தங்கினார். அன்றிரவு கனவில், "இங்கிருந்து சேர்த்தலைக்கு செல் அங்குள்ள குளத்தில் மூழ்கினால் மூன்று தன்வந்திரி சிலைகள் கிடைக்கும்.முதலில் கிடைக்கும் சிலை சக்தி வாய்ந்ததால் அதைக் குளத்திலேயே விட்டு விடு. இரண்டாவது சிலையை அந்தணருக்கு தானமாக  கொடு, மூன்றாவது சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் நோய் தீரும்' என்றார் சிவபெருமான். அதன்படி இரண்டாவதாக கிடைத்த சிலையை  வெள்ளுடு மனையை சேர்ந்த நம்பூதிரிக்கு தானம் அளித்தார்.சில ஆண்டுக்கு பிறகு மண்மூஸ் என்பவரின் உதவியுடன் மூன்றாவது சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினார். இருவரின் குடும்பத்தினரும் நிர்வாகத்தை நடத்தினர்.இவர்களின் காலத்திற்குப் பின் கோயில் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை எழுந்தது. இதில் மண்முஸ் குடும்பத்தினர் சிலையின் கையை உடைத்து கோட்டயம் அருகிலுள்ள, ஒளச்ச என்னும் இடத்தில் புதிதாகச் சிலை செய்து கோயில் கட்டினர்.வெள்ளுடு நம்பூதிரியின் குடும்பத்தினர் கை உடைந்த சிலையை மருத்தோர் வட்டத்தில் பிரதிஷ்டை செய்தனர். உடைந்த கையையும் வெள்ளியால் செய்து பொருத்தினர். இங்கு மேற்கு நோக்கியுள்ள வட்ட வடிவ சன்னதியில் சுவாமி இருக்கிறார்.*இக்கோயிலில் முக்குடி என்னும் மருந்தை தயிரில் கலந்து தயாரிக்கின்றனர். பூஜையின் போது சுவாமியின் கையிலுள்ள தங்கக்குடத்தில் இந்த மருந்தை நிரப்புவர். இதைப் பருகினால் நோய் தீரும். குணம் பெற்றவர்கள் சுவாமிக்கு வெண்ணெய், சந்தனம் சாத்துகின்றனர்.உடல் நலம் பெருக 'கயற்றேல் வானம்' என்னும் பூஜையை நடத்துகின்றனர். அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டில் சேப்பங்கிழங்கால் ஆன 'தாள்கறி நைவேத்யம்' செய்வர். இதைச் சாப்பிட்டால் நாள்பட்ட நோய்கள் தீரும்.

Nov 14, 2025

கருமாரியம்மன் .

டில்லி க்யாலாவில் குடியிருக்கும் கருமாரியம்மனை வெள்ளியன்று தரிசித்தால்,திருமணத்தடை விலகும். திங்களன்று 'இங்குள்ள புற்றில் பால் ஊற்றி வழிபட நாகதோஷம் தீரும்.இக்கோயிலில் அகத்திய முனிவருக்கு காட்சியளித்த கருமாரி அம்மனுக்கு ,விளக்கேற்றினால் விரும்பிய வரம் கிடைக்கும். சித்தரான காகபுஜண்டர் இத்தலத்தை 'உத்திர வேதபூமி' எனப் பெயரிட்டு அழைத்தார்.முன்பு இப்பகுதியில் நாகப்புற்று ஒன்று இருந்தது. அதை பக்தர்கள் அம்மனாக கருதி வழிபட்டனர். காலப்போக்கில் கருமாரி அம்மனுக்குகோயில்கட்டப்பட்டது.இங்கு விநாயகர், முருகன், சிவன், ஆஞ்சநேயர், காலபைரவர், தட்சிணாமூர்த்தி, துர்கை, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. தற்போது கோதண்ட ராமர், தன்வந்திரி, சப்த கன்னியர் சன்னதிகள் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் விரைவில் நடக்க இருக்கிறது.ராகுதோஷம், திருமணம் ஆகாதவர்கள் வெள்ளியன்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்துகின்றனர். சித்திரை திருவிழாவில் அக்னி சட்டி எடுத்து தீக்குழி இறங்கும் வைபவம் நடக்கிறது.குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சியின் போது சிறப்பு பூஜை நடக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 17 18

AD's



More News