25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆன்மீகம்

Aug 28, 2026

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாளைத் தரிசிப்போம்.

 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று ஆண்டாள் திருப்பாவையில் இவரை போற்றுகிறாள்.வாமனர் வடிவில் வந்த மகாவிஷ்ணு வானுக்கும் மண்ணுக்குமாக விஸ்வரூபம் எடுத்தார். இந்த காட்சியை மிருகண்டு முனிவர் தரிசிக்க விரும்பினார். இதற்காக பிரம்மாவின் வழிகாட்டுதலுடன் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள திருக்கோவிலுாரில் தவம் புரிந்தார்.முனிவரின் மனைவி மித்ராவதியும் உடனிருந்து அன்னதானம் செய்து வந்தார். முனிவரைச் சோதிக்க விரும்பிய மகாவிஷ்ணு, அவர் முன்பு ஒரு முதியவர் முதியவர் வடிவில் தோன்றி பிச்சை கேட்டார். மிருகண்டு முனிவர் தன் மனைவியிடம் அதை கூறினார். ஒரு நெல்மணி கூட இல்லாத நிலையில் மித்ராவதி, "நான் கற்பில் சிறந்தவள் என்பது உண்மையானால் இந்த பாத்திரத்தில் அன்னம்நிரம்பட்டும்" என்றாள். மகாவிஷ்ணுவின் அருளால் அன்னம் நிரம்பியது.உடனே முதியவராக வந்த மகாவிஷ்ணு சுயவடிவில் காட்சியளித்தார். அவரே உலகளந்த பெருமாளாக இங்கு அருள் புரிகிறார்.மகாவிஷ்ணுவின் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் ஏந்தியிருப்பது வழக்கம். ஆனால் இங்கு முனிவரின் உபசரிப்பால் தன்னை மறந்த நிலையில், வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் ஏந்தி இருக்கிறார். உலகளந்த பெருமாள், ஆயனார், இடைக்கழி ஆயன் என்ற பெயர்கள் இவருக்கு உண்டு. மரத்தால் செய்யப்பட்ட இவரது திருமேனியே 108 திவ்யதேசங்களில் உயரமானது. கருவறையில் மூலவர் வலது காலால் ஆகாயத்தை அளந்த படியும்,இடது காலை பூமியில் ஊன்றியும் நிற்கிறார். துாக்கிய வலது திருவடிக்கு பிரம்மா தீர்த்தத்தால் அபிஷேகம் செய்கிறார். கீழே ஊன்றிய இடது திருவடியின் கீழ் மகாபலியின் மகன் நமச்சு மகாராஜா இருக்கிறார். பெருமாளுக்கு அருகில் மகாபலியின் தாத்தா பிரகலாதன், மகாலட்சுமி, மகாபலி, மிருகண்டு முனிவர், மித்ராவதி உள்ளனர். பூங்கோவல் நாச்சியார் என்ற பெயரில் தாயார் தனி சன்னதியில் இருக்கிறார்.உற்ஸவரின் திருநாமம் கோபாலன். 5 ஏக்கர் பரப்பு கொண்ட கோயிலின் ராஜகோபுரம் 192 அடி. 11 நிலை கொண்ட இக்கோபுரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம். (முதலாவது ஸ்ரீரங்கம், இரண்டாவது ஸ்ரீவில்லிபுத்துார்) பெருமாள் சன்னதிக்கு எதிரில் 40 அடி உயர ஒரே கல்லால் ஆன கருடத்துாண் உள்ளது.மூலவரின் பின்புறம் உள்ள வாமனரை ஓணத்தன்று சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம்.கோயில் நுழைவு வாயிலின் வலப்புறம் சாளக்கிராம கிருஷ்ணர் இருக்கிறார்.வீர ஆஞ்சநேயர்,லட்சுமி நரசிம்மர்,ராமர், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன.

Aug 21, 2026

திருமணம் நடக்க வேண்டுமா. சென்னை திருவொற்றியூர் வடிவுடை அம்மனை தரிசியுங்கள்.

திருவள்ளூர் மீஞ்சூர் அருகே உள்ள மேலுார் திருமணங்கீஸ்வரர் கோயிலில் அம்மனுக்கு சிலை செய்வதற்காக பாறையை வாகனம் ஒன்றில் கொண்டு வந்தார் சிற்பி ஒருவர்.வழியில் அந்த பாறை மூன்றாக வெடித்தது. வருத்தம் அடைந்த சிற்பி, உயிரை விட நினைத்தார். அப்போது சிற்பிக்கு காட்சி தந்த அம்மன், உடைந்த பாறைகளில் மூன்று சிலையை வடி என உத்தரவிட்டாள். சிலைகள் சென்னை மேலுார், திருவொற்றியூர், இந்த திருமுல்லைவாயில் கோயில்களில் பிரதிஷ்டை செய்தார்.இந்த அம்மன்களை பவுர்ணமி அன்று வழிபடுவது விசேஷம். ஞானசக்தியான வடிவுடையம்மனை வழிபட்டால் கல்வி வளர்ச்சி ஏற்படும்.மலர் ஆடை அலங்காரம் செய்தால் நல்ல மணவாழ்க்கை அமையும். உச்சிக்கால பூஜையின் போது, அம்மனுக்கு சிவப்பு புடவை அணிவித்து பலாப்பழம் நைவேத்தியம் செய்ய நினைத்தது நிறைவேறும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர், வள்ளலார் இங்கு பாடியுள்ளனர்.

Aug 14, 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருத்தல வரலாறு.

பூமாதேவியின் அம்சமாகக் கருதப்படும் ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் நந்தவனத்தில் துளசிச் செடியின் அடியில் அவதரித்ததாக ஐதீகம். அவரைக் கண்டெடுத்த பெரியாழ்வார், இறைவனின் அருளால் குழந்தைக்கு ‘கோதை’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.சிறுவயது முதலே கண்ணன் மீது அளவற்ற பக்தி கொண்ட ஆண்டாள், பின்னர் அவரையே தன் கணவனாக எண்ணி வாழத் தொடங்கினார். பெரியாழ்வார் பூஜைக்காகத் தயாரிக்கும் பூமாலையை, ஆண்டாள் முதலில் தன் தலைமீது சூடி பார்த்து, பின்னர் பெருமாளுக்கு அணிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆண்டாளின் தூய பக்தியை ஏற்ற இறைவன், அவள் சூடிய மாலையையே விரும்பி ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாக ஆண்டாள் ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ எனப் போற்றப்படுகிறார்.மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய 30 பாசுரங்களைக் கொண்ட திருப்பாவை, வைணவ சமயத்தின் மிகச் சிறப்புமிக்க பக்தி நூல்களில் ஒன்றாக விளங்குகிறது. கண்ணனை அடைய விரும்பும் கோபிகைகளுடன் இணைந்து நோன்பிருந்து, தோழியரை எழுப்புவது போன்ற அமைப்பில் திருப்பாவை பாடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விமானத்தில் தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் அந்த விமானம் ‘திருப்பாவை விமானம்’ என அழைக்கப்படுகிறது.ஆண்டாள் திருக்கல்யாணம்.பங்குனி உத்திரத் திருநாளில் ஆண்டாளுக்கும் ரெங்கமன்னாருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அப்போது பெரியாழ்வார் மற்றும் அவரது வம்சாவழியினர் ஆண்டாளை மணப்பெண்ணாக ஏற்று, பூரணகும்ப மரியாதையுடன் கன்னிகாதானம் செய்து கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. பின்னர் ரெங்கமன்னார் ஆண்டாளுக்கு மாலை சூட்டி தமது மனைவியாக ஏற்றுக்கொள்கிறார்.ஆண்டாளின் கையில் இருக்கும் கிளி.ஆண்டாளின் திருவுருவத்தில் இடக்கையில் கிளி இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும். கண்ணனை மணக்க விரும்பிய ஆண்டாள், தனது காதல் செய்தியைத் தெரிவிக்க கிளியைத் தூதாக அனுப்பியதாக ஐதீகம். இதன் நினைவாக இன்றும் ஆண்டாளுக்கு தினமும் இலைகளால் செய்யப்பட்ட கிளி அணிவிக்கப்படுகிறது. மாலை பூஜையில் வைக்கப்படும் இந்தக் கிளி, மறுநாள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.பச்சை பரத்தல்.மார்கழி பகல்பத்து திருநாளின் முதல் நாளில், ஆண்டாள் தனது பிறப்பிட வம்சாவழியினரான வேதபிரான் பட்டர் வீட்டிற்குச் செல்வதாக ஐதீகம். அங்கு காய்கறிகளைப் பரப்பி வைத்து ஆண்டாளை வரவேற்கும் நிகழ்வு ‘பச்சை பரத்தல்’ எனப்படுகிறது. திரட்டுப்பால், மணிப்பருப்பு போன்ற நைவேத்தியங்களும் ஆண்டாளுக்கு படைக்கப்படுகின்றன. இந்த வழக்கம் ஆண்டாளின் திருமணத்தை நினைவுகூரும் வகையில் இன்றும் தொடர்கிறது.108 திவ்யதேச பெருமாள்கள்.ஆண்டாள் 108 திவ்யதேசங்களில் அருள்புரியும் பெருமாள்களைத் தனது மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். இதனை நினைவுகூரும் வகையில் ஆண்டாள் கோயிலின் முதல் பிரகாரச் சுவர்களில் 108 திவ்யதேச பெருமாள்களின் திருவுருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரே திருத்தலத்தில் பல திவ்யதேச பெருமாள்களின் தரிசனத்தைப் பெறும் சிறப்பும் பக்தர்களுக்கு கிடைக்கிறது.பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை.சீதாதேவியை ஜனக மகாராஜன் பூமியில் கண்டெடுத்ததைப் போலவே, பெரியாழ்வாரும் ஆண்டாளை நந்தவனத்தில் கண்டெடுத்தார். இதனால் ஆண்டாள் பூமாதேவியின் அம்சமாகப் போற்றப்படுகிறார்.ஆண்டாளுக்கு பெரியாழ்வார் தந்தையாக மட்டுமல்லாமல், இறைவனை அடையும் வழியைக் காட்டிய ஆசாரியராகவும் விளங்கினார். அதனால் ‘பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை’ என்ற சிறப்புப் பெயர் ஆண்டாளுக்கு வழங்கப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருத்தலம், ஆண்டாளின் பக்தி, திருப்பாவை, திருக்கல்யாணம் மற்றும் பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு முறைகளால் சிறப்புப் பெற்ற புனிதத் தலமாக விளங்குகிறது.

Jul 31, 2026

பசுபதீஸ்வரர் திரிபுர சுந்தரியம்மன்  கோயில்.

திருமணம் நடத்துவதற்கு ஓரிரு மாதம் முன்பாக நிச்சயதார்த்தம் நடத்துவது வழக்கம். ஆனால் கடலுார் மாவட்டம் திருவாமூர் மக்கள் திருமணத்தன்று காலையில் நிச்சயதார்த்தம் நடத்துகின்றனர்.ஏனெனில் இங்கு அவதரித்த திலகவதியாரின் திருமணம், நிச்சயத்திற்கு பின் நின்றதே இதற்கு காரணம்.திருவாமூரில் வாழ்ந்த புகழனார், மாதினியார் தம்பதிக்கு பிறந்தவர்கள் திலகவதியார், திருநாவுக்கரசர். இதில் திருநாவுக்கரசருக்கு பெற்றோர் வைத்த பெயர் மருள் நீக்கியார். இளமையிலேயே பெற்றோர் இறந்ததால், நாவுக்கரசர் சகோதரியின் பராமரிப்பில் வளர்ந்தார். போர் வீரரான 'கலிப்பகையார்' என்பவருக்கு திலகவதியாரை மணம் பேசி முடித்த உறவினர்கள், நிச்சயதார்த்தம் நடத்தினர். இதன் பின் எதிரிகளை அடக்குவதற்காக கலிப்பகையாரின் தலைமையில் வீரர்களை அனுப்பினார் அந்நாட்டு மன்னர்.ஆனால் போரில் கலிப்பகையார் வீரமரணம் அடைந்தார். மனம் வருந்திய திலகவதியார், இல்லறத்தில் ஈடுபடாமல் சிவபக்தியில் ஈடுபட்டார். இதனிடையே தம்பியான மருள்நீக்கியார் சிவவழிபாட்டை கைவிட்டு சமண மதத்தில் சேர்ந்தார். தன் பெயரை 'தர்மசேனர்' எனவும் மாற்றிக் கொண்டார்.மீண்டும் சைவ சமயத்திற்கு தம்பி திரும்ப வேண்டும் என சிவனிடம் முறையிட்டார் திலகவதியார்.இந்நிலையில், மருள்நீக்கியாருக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. சமணத்துறவிகள் நோயைப் போக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. பின்னர் திலகவதியார் சிவனை வழிபட்டு, திருநீற்றை வயிற்றில் பூச நோய் குணமானது. இதன்பின் மருள்நீக்கியார் சிவபக்தியுடன் தேவாரம் பாடினார்.காட்சியளித்த சிவபெருமான், 'பாட்டால் என்னைக் கவர்ந்ததால் 'நாவுக்கரசன்' எனப் பெயர் பெறுவாய்' என வாழ்த்தினார்.திருத்தல யாத்திரை புறப்பட்ட நாவுக்கரசர் தம் 82ம் வயதில் சித்திரை மாதம் சதயநட்சத்திரத்தன்று சிவனடியில் கலந்தார்.திலகவதியாருக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளை கலிப்பகையார் போரில் இறந்ததால், இவ்வூர் மக்கள் தங்கள் வீட்டு திருமணங்களில் அன்று காலையில் நிச்சயதார்த்தம் நடத்துகின்றனர்.நாவுக்கரசர் பிறந்த தலமான இங்கு பசுபதீஸ்வரர் திரிபுர சுந்தரியம்மன் கோயில் உள்ளது. திலகவதியார், நாவுக்கரசருக்கு சன்னதிகள் உள்ளன.இங்குள்ள களரி வாகை மரத்தடியில் நாவுக்கரசருக்கு தனிக்கோயில் உள்ளது.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இம்மரம் உள்ளது. ஒரே சன்னதியில் எட்டு பைரவர்கள் இக்கோயிலில் உள்ளனர்.

Jul 24, 2026

எங்கள் குலதெய்வம் சுந்தராட்சி அம்மன்.

இஷ்ட தெய்வங்கள் பல இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் இருக்கும். அப்படிப்பட்ட குலதெய்வமான சுந்தராட்சி அம்மனை அனைவரும் 'எங்க குலதெய்வம்' எனக் கொண்டாடுகின்றனர். துாத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் இந்த கோயில் உள்ளது.சோழ மன்னரான கரிகாலன் குழந்தைப்பேறு இல்லாமல் தவித்தார். காசி முதல் கன்னியாகுமரி வரை புனித யாத்திரை மேற்கொண்டார். அதில் திருச்செந்துார் முருகனை தரிசித்து விட்டு திரும்பும் வழியில் சம்முகன், கருமுகன் என்ற இரண்டு நாய்கள் எதிரே வந்தன. இரண்டும் முயல் ஒன்றை பிடிக்க ஓடின. ஆனால் முயலோ அந்த நாய்களை கடித்து விட்டு புதர் ஒன்றில் மறைந்தது.ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்த மன்னர் புதரை தோண்ட உத்தரவிட்டார். அப்போது ரத்தம் பீறிடவே பணியை நிறுத்தினார்.அன்றிரவு மன்னரின் கனவில் சிறுமி வடிவில் தோன்றிய சுந்தராட்சி அம்மன், 'காட்டில் முயலாக காட்சியளித்தவள் நானே. புதரை வெட்டும் போது என் மூக்கில் காயம் பட்டுவிட்டது. என்னை எடுத்து கோயில்கட்டு' என ஆணையிட்டாள். மறுநாள் அங்கு தோண்டிய போது அம்மன் சிலை ஒன்று மூக்கில் வெட்டுப்பட்ட நிலையில் கிடந்தது. அங்கேயே மன்னர் கோயில் கட்டினார். இதன் பலனாக மன்னருக்கு ஆண்குழந்தை பிறக்க, 'தமகப்பூராஜன்' எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.பலரும் இந்த அம்மனை குலதெய்வமாக வழிபடுகின்றனர்.இவர்கள்சுந்தராட்சிஎனபெண் குழந்தைகளுக்கும், சுந்தரம், சுந்தரராஜன் என ஆண் குழந்தைகளுக்கும் பெயர் வைக்கின்றனர். கடைசியாக 2019ல் இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.ஐப்பசி மாதம் இரண்டாவது செவ்வாய் அன்று கொடை திருவிழா நடக்கிறது. அன்று சுந்தராட்சி அம்மன் தன் தங்கை உச்சிமகாகாளி கோயிலில் ஒருநாள் தங்கி பின் திரும்புகிறாள்பவுர்ணமியன்று அம்மனை தரிசிப்பவர்களின் விருப்பம் நிறைவேறும்.

Jul 17, 2026

'தேக்கடி தேவி' கோயில்.

காவல் தெய்வமான காளியை 'தேக்கடி தேவி' என பக்தர்கள் அழைக்கின்றனர். மனக்குறை தீர வெள்ளியன்று குருதி பூஜையை நடத்துகின்றனர்.200 ஆண்டுக்கு முன்பு கேரள, தமிழக பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு தங்கியிருந்தனர். வனவிலங்குகள் அதிகம் இருந்ததால் வனதெய்வமான காளியம்மனை வழிபட்டனர். அதன் அடையாளமாக குலமாவு என்ற இருளி மரத்தின் அடியில் திரிசூலம் வைத்து வழிபட்டனர். அதன் அருகில் இருந்த கல்லில் சுயம்பு மூர்த்தியாக காளியம்மனும் காட்சியளித்தாள். பின்னர் அம்மனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.கொடிமரம் பிரதிஷ்டை செய்த போது துர்கை அம்மனுக்கும் சன்னதி கட்டப்பட்டது.விநாயகர், நாகேஸ்வரர், கருப்ப சுவாமி,சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. தினமும் இரண்டு கால பூஜை நடக்கிறது. ஆயில்யம் நட்சத்திரத்தன்று நாகருக்கு பாலாபிஷேகம் செய்தால் நாகதோஷம், விஷபயம் விலகும். நிலம், பூமி தொடர்பான வழக்குகள், பிரச்னை தீர வேண்டி அம்மனின் பாதத்தில் நிலத்தின் மண்ணை வைத்து வழிபடுகின்றனர். இளநீர் வைத்து வழிபட்டால் பயம் மறையும். இதை நடைகுருதி பூஜை என்கின்றனர்.திருவிழாவின் போது தேவி புறநாதஸ் காவல் தெய்வமான காளியை 'தேக்கடி தேவி' என பக்தர்கள் அழைக்கின்றனர். மனக்குறை தீர வெள்ளியன்று குருதி பூஜையை நடத்துகின்றனர்.200 ஆண்டுக்கு முன்பு கேரள, தமிழக பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு தங்கியிருந்தனர். வனவிலங்குகள் அதிகம் இருந்ததால் வனதெய்வமான காளியம்மனை வழிபட்டனர். அதன் அடையாளமாக குலமாவு என்ற இருளி மரத்தின் அடியில் திரிசூலம் வைத்து வழிபட்டனர். அதன் அருகில் இருந்த கல்லில் சுயம்பு மூர்த்தியாக காளியம்மனும் காட்சியளித்தாள். பின்னர் அம்மனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.கொடிமரம் பிரதிஷ்டை செய்த போது துர்கை அம்மனுக்கும் சன்னதி கட்டப்பட்டது.விநாயகர், நாகேஸ்வரர், கருப்ப சுவாமி,சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. தினமும் இரண்டு கால பூஜை நடக்கிறது. ஆயில்யம் நட்சத்திரத்தன்று நாகருக்கு பாலாபிஷேகம் செய்தால் நாகதோஷம், விஷபயம் விலகும். நிலம், பூமி தொடர்பான வழக்குகள், பிரச்னை தீர வேண்டி அம்மனின் பாதத்தில் நிலத்தின் மண்ணை வைத்து வழிபடுகின்றனர். இளநீர் வைத்து வழிபட்டால் பயம் மறையும். இதை நடைகுருதி பூஜை என்கின்றனர்.திருவிழாவின் போது தேவி புராணத்தை ஏழு  நாள் பாராயணம் செய்வர். இதனை 'சப்தாஹம் 'என்கின்றனர்.

Jul 10, 2026

கதிர்காமம் முருகன்.

முருக வழிபாட்டின் பழமையை பறை சாற்றும் தலம் கதிர்காமம்.இலங்கையின் தென்கிழக்குக் கரையில் ஊவா மாகாணத்தில் இக்கோயில் உள்ளது கப்புறாளைமார் என்னும் சிங்களர்கள் தங்களின் வாயைக் கட்டி திரைக்குப் பின்புறம் நின்று இங்கு பூஜை செய்கிறார்கள். இதை விட ஆச்சர்யம் என்ன என்றால் கருவறையில் முருகன் சிலை கிடையாது. அங்குள்ள பெட்டிக்கே பூஜை நடக்கும். அதை பக்தர்கள் காண முடியாது.சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்த முருகன் இங்கு வள்ளியை காதல் மணம் புரிந்ததால் இத்தலம் 'கதிர் காமம்' எனப் பெயர் பெற்றது. இவரை கதிர்காம சுவாமி, கதிரை நாயகன், கதிரை வேலன், மாணிக்க சுவாமி,கந்தக்கடவுள் என அழைக்கின்றனர். வள்ளியை திருமணம் புரிந்த முருகன் தனக்கு விருப்பமான இடம் கதிர்காமம் என இங்கு கோயில் கொண்டார்.இன்னொரு வரலாற்றின்படி சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகன் கதிர்காமத்திற்கு வந்தார். இங்கு ஓடும் மாணிக்க கங்கை நதியின் அருகில் பாசறை அமைத்தார். சூரனுடன் போரிட்டு வெற்றி பெற்ற பின் நவகங்கைத் தீர்த்தத்தை உருவாக்கி தேவர்கள் வழிபடுவதற்காக இங்கு எழுந்தருளினார்.காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், தேங்காய் உடைத்தல், தீ மிதித்தல் என நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துகின்றனர். கதிர்காம மலையிலிருந்து கிடைக்கும் வெண்ணிறக் கட்டியை திருநீறாக தருகின்றனர்.இங்குள்ள பழங்குடி வேடுவர்கள் ,முருகனைத் தங்களின் மாப்பிள்ளையாக கருதுகின்றனர்.அருணகிரிநாதர் 'வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உறைவோனே' என பாடியுள்ளார். கதிர்காமத்தில் பூஜை செய்யும் கப்புறாளைமார் என்னும் சிங்களர்கள் தங்களை வள்ளியின் வழித்தோன்றல்கள் என்கின்றனர்.எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி பெற விரும்பிய துட்டகெமுனு என்ற சிங்கள மன்னன் கதிர்காமத்து முருகனிடம் வேண்டுதல் வைத்து விரதமிருந்தான். அதன்படி வெற்றி பெற்றதால் 2100 ஆண்டுகளுக்கு முன் கோயில் எழுப்பினான்.விநாயகர், பெருமாள், தெய்வானை சன்னதிகள் உள்ளன. கதிர்காமர் (முருகன்) சன்னதி தெற்கு நோக்கியும், வள்ளி சன்னதி வடக்கு நோக்கியும்எதிரெதிரில்உள்ளன.இங்கு முருகனின்கருவறைவண்ணத்திரையால்மூடப்பட்டிருக்கும்.அதில்வள்ளி, தெய்வானையுடன் முருகனின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். பக்தர்கள் தரும் அர்ச்சனைப் பொருட்களை 'கப்புறாளைமார்' திரைக்குள் சென்று முருகனுக்கு சமர்ப்பிப்பர்.

Jul 03, 2026

அனுமந்தபுரம் வீரபத்திரர்.

தட்சனின் யாகத்தை நிறுத்த வீரபத்திரரை அனுப்பினார் சிவபெருமான். தட்சனின் தலையை வீரபத்திரர் வெட்ட, அவனது தலை யாகத்தீயில் விழுந்தது. இதைக் கண்ட தட்சனின் தந்தையாகிய பிரம்மாவின் ஆணையால் ஆட்டின் தலை தட்சனுக்குப் பொருத்தப்பட்டது. அங்கிருந்து சினத்துடன் புறப்பட்ட வீரபத்திரர் பூலோகத்தில் அனுமந்தபுரம் வெற்றிலை தோட்டத்தில் தங்கி சாந்தம் அடைந்தார். அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. அமாவாசையன்று தீர்த்தத்தில் நீராடி சுவாமி வெற்றிலை மாலை சாத்துகின்றனர்.விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து 10 கி.மீ.,

Jun 26, 2026

நந்தி பிறந்த ஊர் ஸ்ரீசைலம்.

நந்தி பிறந்த ஊர், 51 சக்தி பீடங்களில் சைல சக்தி பீடம், சித்தி, புத்தியை விநாயகர் மணந்த தலம் என பல பெருமைகளைக் கொண்டது ஸ்ரீசைலம். ஜோதிர்லிங்க தலத்தில் ஒன்றாகவும், தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும் உள்ள இக்கோயில் ஆந்திர பிரதேசம், நந்தியால் மாவட்டத்தில் உள்ளது.சிலாதர் என்னும் மகரிஷி குழந்தை வரம் வேண்டி தவமிருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்னும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.ஒருமுறை குழந்தைகளைக் காண வந்த சனகாதி முனிவர்கள், 'குழந்தையான நந்தி சிலகாலம் மட்டுமே இந்த பூமியில் வாழ்வான்' என தெரிவித்தனர். தந்தையான சிலாதர் மிகவும் வருந்தினார். இதையறிந்த நந்தி, 'தந்தையே ... கலங்காதீர்கள். தவம் இருந்து சாகாவரம் பெறுவேன்' என சபதமிட்டு தவம் புரிந்து சிவனுக்கு வாகனமாகும் பாக்கியம் பெற்றார். கைலாய மலையில் தன் அனுமதி இல்லாமல் யாரும் சிவனை பார்க்க முடியாது என வரம் பெற்றார். இதற்கிடையில் நந்திதேவரின் தம்பி பர்வதனும் தவத்தில் ஈடுபட்டு பர்வத மலையாக மாறினார்.இந்த பர்வத மலையின் உச்சியில் மல்லிகார்ஜுனேஸ்வரர் என்ற பெயரில் சிவன் கோயில் கொண்டார். கிழக்கு நோக்கிய கோயிலில் நான்கு புறமும் வாசல்கள் உள்ளன. வாசல் அருகிலுள்ள மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது. நந்தி தவம் செய்த இடமான 'நந்தியால்'' மலை அடிவாரத்தில் உள்ளது.முன்பு மல்லிகாபுரி என்னும் இப்பகுதியை ஆட்சி செய்த சந்திரகுப்தனின் மகளான சந்திரரேகா மல்லிகைப் பூவால் சிவனை பூஜித்தாள். இதனால் சுவாமிக்கு 'மல்லிகார்ஜுனர்' எனப் பெயர் ஏற்பட்டது.பக்தர்கள் தங்கள் கைகளாலேயே சுவாமிக்கு இங்கு அபிஷேகம் செய்யலாம்.இவரை ஒருமுறை தரிசித்தால் கங்கையில் இரண்டாயிரம் முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல ஆண்டு தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாலும் கிடைக்கும் புண்ணியம் நம்மைச் சேரும்.அம்மனின் திருநாமம் பிரமராம்பாள். அம்மன் சன்னதிக்குச் செல்ல 30 படிகள் ஏற வேண்டும்.துறவிகள், யோகிகள் தவம் செய்வதால் இத்தலத்திற்கு 'தட்சிண கைலாசம்' என பெயருண்டு. கிருத யுகத்தில் இரணியனும், திரேதாயுகத்தில் ஸ்ரீராமரும், துவாபர யுகத்தில் பாண்டவர்களும், கலியுகத்தில் ஆதிசங்கரரும், சத்ரபதி சிவாஜியும் பூஜை செய்துள்ளனர். ஸ்ரீபர்வதம், ஸ்ரீநகரம், ஸ்ரீகிரி,ஸ்ரீசைலம் என அழைக்கப்படும் இத்தலத்திற்கு வந்தால் மோட்சம் கிடைக்கும்.

Jun 19, 2026

வரம் தரும் வள்ளல் சிந்தாமணி விநாயகர்.

கேட்டதை எல்லாம் அள்ளித் தரும் வள்ளல் தான் சிந்தாமணி விநாயகர். இவர் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கேதார் காட் பகுதியில் கோயில் கொண்டிருக்கிறார்.சிந்தாமணி என்ற தெய்வீக ரத்தினம் கபில முனிவரிடம் இருந்தது. கணர் என்னும் மன்னர் எப்படியாவது அதை தனக்கு சொந்தமாக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அது நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் முனிவரிடம் இருந்து திருடினார். விநாயகரின் திருவடியில் சரணடைந்தார் கபில முனிவர். தன் பக்தனுக்கு அருள்புரிய மாறுவேடத்தில் வந்த விநாயகர் சாதுர்யமாக பேசி ரத்தினத்தை வாங்கி கபிலரிடம் கொடுத்தார். மகிழ்ச்சியில் திளைத்த கபிலர் அதை விநாயகருக்கே காணிக்கையாக கொடுத்தார். இதனால் 'சிந்தாமணி வினய்' எனப் பெயர் பெற்றார்.சுயம்புவான விநாயகர் எட்டுக்கைகளுடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால் விரும்பிய வரங்கள் கிடைக்கும். முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். இதனால் இவர் 'விக்ன ஹர்த்தா' (தடைகளை நீக்குபவர்), 'சங்கத் மோச்சன்' (தொல்லைகளை நீக்குபவர்) என்றும் அழைக்கப்படுகிறார். கேது தோஷத்தால் சிரமப்படுபவர்கள் கேது சாந்தி பூஜை செய்கின்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 20 21

AD's



More News