சின்ன விஷயம் .
சின்னக் குழந்தைகள் சண்டை போடுகின்றனர். ரஜினி, ஜாக்கி, செராப் ஸ்டைலில் சண்டை போடுகிறார்கள். ரசிக்கின்றனர், பல பெரியவர்கள், 'சண்டை போடுகிறான் பாரு', 'சூப்பரா போடுகிறான்' என்று ரசித்து சந்தோஷப் படுகின்றனர். பெற்றோர்கள் ஊக்குவித்ததால் அக்குழந்தை மனதில் பயமின்மையால் அதே சண்டையை பள்ளியில் பெஞ்ச் மீது தாவிக் குதித்து தன் மண்டையை உடைத்துக் கொண்டு 'கோமா' நிலையடைந்து படுக்கையில் இருக்கிறான். சின்ன விஷயந்தானே என்று அலட்சியப் படுத்தியதின் பின் விளைவு எப்படி இருக்குய்யா!
காலில் துருப்பிடித்த இரும்புக் கம்பிகுத்திவிட்டது. சின்ன காயம் தானே போகட்டும். துடைச்சி மண்ணை தெளித்து ஒட்டிக்கொள் என்று விட்டு விடுகின்றனர். அந்தக் குழந்தையின் காலில் புரை ஏறி விட்டது. தாங்க முடியாத வலியுடன் டாக்டரிடம் செல்கின்றனர். டாக்டர் பார்க்கிறார். ஏய்யா! நீ படிச்சவன் தானே? புண் வந்து 2 மாசமாக இருக்கு இப்போ சொல்றியே! முன்னமே வர வேண்டியது தானே! இன்னும் ஒரு வாரம் ஆகியிருந்தால் காலையே எடுக்க வேண்டியிருக்கும். 'இப்பவாவது வந்து தொலைஞ்சியே' என்று ஏசும் டாக்டர்களைப் பார்த்திருக்கிறோம்.
சின்ன விஷயம் தானே என்று அலட்சியப் படுத்தியதின் பின் விளைவுகளைப் பார்த்தீங்களா? எப்பேற்பட்ட விபத்தினைக் கொண்டு வருகிறது. வேறு சில சின்ன விஷயங்கள் எத்தனை நன்மைகளை உண்டாக்குகிறது என்று பார்க்கலாமா? ஆலமரவிதை சின்னதாக ரவை சைஸ்ஸீக்குத் தான் இருக்கும். அதை ஊன்றி வைத்தால் மெதுவாக குச்சி மாதிரி வளர்ந்து சின்ன கிளைவிட்டு அதிலிருந்து மற்றொரு கிளைவிட்டு அப்படி, இப்படி வளர்ந்து விழுதுகளுடன் கூடிய மரமாக மாறி கம்பீரமாக நிற்கிறது. அப்பொழுது கொஞ்சம் சிந்தித்தோமானால் அந்த இத்துணூண்டு விதையை விதைத்து தண்ணீர் விட்டதின் பின்விளைவைப் பார்த்தால் ரெம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும். அம்மரங்கள் பறவைகளின் சரணாலயமாகவும், குரங்குகளின் இருப்பிடமாகவும் திகழும். அதைவிட ஒருபடி மேல் சென்று கல்யாணச் சமையலும், கல்யாணமும் அம்மர நிழலில் அமோகமாக நடைபெறுவதை நாம் கண்கூடாக கிராமங்களில் பார்க்கிறோம். அந்தச் சின்ன விதை எத்தனை - பேருக்கு இருப்பிடமாகவும், நிழல் தருவதாகவும் இருக்கிறது.
ஒரு பெரியவர் வெளியூருக்குச் செல்ல எந்த பஸ்ஸில் ஏறுவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் 26 வயது மதிக்கத்தக்க வாலிபன் அப்பெரியவரிடம் ஐயா எங்கே போகணும் என்று கேட்டு, அவர் செல்ல வேண்டிய பஸ்ஸில் ஏற்றி பஸ்ஸில் உட்கார வைத்து விட்டு வெளியில் செல்கிறான். அந்த 10 நிமிட உதவி அப்பெரியவருக்கு எவ்வளவோ சந்தோஷத்தைக் - கொடுத்து 'மஹாராசா' 'நீ நல்லாயிருக்கணும்' என்று வாழ்த்துகிறார். அந்தச் சின்ன உதவி (தர்மம்) சொர்க்கத்தை விட மேலானதாகிறது.
நன்றாகப் படிக்கும் ஊமைப் பையனுக்கு பெரிய படிப்பு படிப்பதற்கு வசதியில்லை. யாரிடம் கேட்பது என்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறான். ஒருவர் தன்னால் முடியாது என்று தெரிந்தும் தனக்குத் தெரிந்த தனவான்களிடம் எடுத்துரைத்து அக்குழந்தை மேலும் படிப்பைத் தொடர்வதற்கான பண உதவியைச் சேர்த்துக் கொடுக்கிறார். தன்னிடம் இல்லை. இன்னொருத்தரிடம் சொல்வது சின்ன விஷயம் தான். அதனுடைய பின் விளைவு, அச்சிறுவனுக்கு மிகப் பெரிய கல்வி செல்வம் கிடைப்பதற்கு முக்கிய காரண கர்த்தாவாகிறார்.
சின்ன விஷயம் தானே என்று அலட்சியப் படுத்தாமல் கவனித்துச் செய்யலாமே! இதைப்படிப்பது சின்ன விஷயம் தான். ஆனால் எத்தனை விஷயங்கள் அடங்கியிருக்கிறது இல்லையா!
0
Leave a Reply