25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 06, 2025

வேலைதேடும் இளைஞர்கள் இணையதள முகவரியில் பதிவுசெய்து தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பினை பெற இயலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

தமிழக அரசு வேலைதேடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம் ஒன்றை உருவாக்கியுள்ளது.இத்தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்தில், இதுவரை மாநில அளவில் 725 தனியார் துறை நிறுவனங்கள் 43 துறைகளில், 31,553 பணிக்காலியிடங்களை இதுவரையில் உள்ளீடு செய்துள்ளன.  விருதுநகர்  மாவட்டத்தினை பொறுத்தமட்டில்  146 தனியார் துறை நிறுவனங்கள், 19 துறைகளில், 2128 பணிக்காலியிடங்களை உள்ளீடு செய்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள்; https://www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்து தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பினை பெற இயலும்.மேலும் விவரங்களுக்கு விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 93601-71161 எண்ணை தொலைபேசி வாயிலாக தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 06, 2025

மார்ச்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் மார்ச்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2025 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Mar 05, 2025

2025 -26 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, புதிதாக சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், சந்திரகிரிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், (03.05.2025) 2025 -26 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் துவக்கி வைத்து, புதிதாக சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினார்.

Mar 05, 2025

பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 08.03.2025 அன்று நடைபெறவுள்ளது

பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களிலும் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை/ நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறை தீர்வு முகாம் 08.03.2025- அன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.எனவே, இக்குறைதீர்வு முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 05, 2025

“ஒவ்வொருவருக்கும் இலக்கியம் ஏன் தேவை” என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மேட்டமலை ஸ்ரீகிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (05.03.2025) மாவட்ட நிர்வாகம், கரிசல் இலக்கிய கழகம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இணைந்து, “ஒவ்வொருவருக்கும் இலக்கியம் ஏன் தேவை” என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.ஒவ்வொருவருக்கும் இலக்கியம் ஏன் தேவை என்ற பொருண்மையில் நிகழும் இந்த கருத்தரங்கில் பேசுவதற்கும், இலக்கிய வெளிச்சத்தில் உலகை காண்பது எப்படி என்ற ஒரு சில அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கும் இந்த கருத்தரங்கம் மிகச் சிறந்த வாய்ப்பை தந்திருக்கிறது.மனிதர்களினுடைய வாழ்க்கையிலிருந்து பெற்றதுதான் இலக்கியம். இலக்கியம் என்பது மனிதர்களுக்கு அப்பாற்பட்டது அல்ல.இலக்கியம் என்பது கற்று அறிந்தவர்களுக்கும், அந்த துறை சார்ந்த அறிவு பெற்றவர்களுக்கும் மட்டுமல்ல, இலக்கியம் என்பது எல்லா தரப்பு மனிதர்களுக்கும் காலம் காலமாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் மனிதர்களின் மிகப்பெரிய செல்வமாக கருதப்படுவது, கருத வேண்டியது கேள்விச் செல்வம் தான். இந்த பூமி பந்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் வாழ்ந்து முடிக்க வேண்டும்.அதுதான் அந்த உயிருக்கான விதிக்கப்பட்ட வாழ்க்கை முறை. அதற்கென்று ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கிறது, வயதிருக்கிறது. மனிதர்களுக்கு இந்திய சராசரியின் படி 75 ஆண்டுகள் அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்து முடிக்க வேண்டும். அவர் வாழ்ந்து முடிப்பதற்கு மிகப்பெரிய துன்பங்களை எதிர்கொண்டு தான் தன்னுடைய வாழ்வை முடிக்கின்றான். அந்த துன்பத்தில் இருந்து இரண்டு செய்திகளை அவன் பெற்றுக்கொள்ள வேண்டும்.ஒன்று துன்பமில்லாமல் வாழ்வது எப்படி அல்லது துன்பம் வருகின்றபோது எதிர்கொள்வது எப்படி. இந்த இரண்டிற்கும் விடைகள் தான் ஒருவனுடைய வாழ்க்கை சக்கரம் நடந்து கொண்டே இருக்கிறது. இதை ஒட்டி நடக்கக்கூடிய வாழ்க்கையில் இலக்கியம் எந்த இடத்தை பெறுகிறது என்ற கருத்து கேள்வியை முன்வைத்து அதற்கான விடையை தேடினால் அதற்கு இலக்கியம் மிகப்பெரிய வெளிச்சத்தை தரும்.பூமியில் பிறக்கக்கூடிய எல்லா உயிரினங்களுக்கும் மிகப்பெரிய வலிமை இருக்கிறது, அதில் ஆறறிவு உள்ள மனித இனம் பகுத்தறிவு ஆற்றலை பெற்றிருக்கின்றது. அந்த பகுத்தறிவு ஆற்றலின் வளர்ச்சி தான் அறிவியல் தொழில்நுட்பங்களோடு மனிதன் வாழ பழக்கப்பட்டது. பிறகுதான் மற்ற எல்லா உயிரினங்களையும் அவன் அடக்கி வாழ்வதற்கு வலிமை பெற்றான்.பெரிய யானையைக் கூட மனிதனுடைய அறிவாற்றல், பகுத்தறிவு சிந்தனையால் அடக்கி ஆள்வதற்குரிய செல்வாக்கை மனிதன் பெறுகிறான். ஆனால் அப்படிப்பட்ட மனிதர்களுக்கு கூட இயற்கையின் வழியாக வரக்கூடிய மரபு சார்ந்த அறிவு, மற்ற உயிரினங்களை விட மனிதர்களுக்கு குறைவாக தான் இருக்கிறது.மற்ற உயிரினங்களுக்கு அது இயல்பாகவே மரபு வழியாகவே இது போன்ற உயிர் பண்புகள் கடத்தப்படுகிறது. ஆனால் மனிதனுக்கான வாழ்க்கைத் திறன்கள் பொதுவாக இது போன்று மரபு வழியாக கடத்தப்படுவது இல்லை. அதனால் தான் மனிதன் அனுபவங்களை பெறுவதன் மூலமாக மட்டுமே தனக்கு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களை எதிர்கொள்வதற்குரிய ஆற்றலை பெறுகிறான். இதுதான் மனிதனுடைய பரிமாண வளர்ச்சி விதி.மனிதன் தான் வாழ்ந்து முடிக்க வேண்டிய வாழ்க்கையில் அவருக்கான துன்பங்களை எதிர்கொள்வதற்கு நிறைய அனுபவங்கள் தேவைப்படுகிறது. அந்த அனுபவங்களை இரண்டு வகைகளில் அவன் பெற்றுக் கொள்ள முடியும். ஒன்று எந்த ஒன்றையும் தானாக செய்து பார்த்து, நன்மையோ தீமையோ, வெற்றியோ தோல்வியோ என அறிந்து, அதன் மூலமாக வரக்கூடிய அளவுகோலை வைத்து அடுத்த சிறப்பாக செயல்படுவது.இன்னொன்று அடுத்தவர்களுடைய அனுபவங்களின் மூலமாக கற்றுக்கொள்வது. இந்த இரண்டாவது வாய்ப்பை இரண்டு வழிகளில் நாம் கற்றுக் கொள்ளலாம். ஒன்று பாடத்திட்டங்களில் கல்லூரிகளின் வழியாக நமக்கு சொல்லித் தரப்படுவது. மற்றொன்று மனிதர்களிடமிருந்து கற்றுக் கொள்ளக்கூடியவை. அந்த இரண்டாவது வகையில் இருக்கக்கூடிய மனிதர்களுடைய வாழ்க்கை அனுபவங்களை நமக்கு சொல்லித் தருவது தான் இலக்கியம்.நாம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரக்கணக்கான சொல்லப்படாத கதைகள் இருக்கின்றது. ஒவ்வொருவருக்குள் எழுதி முடிக்கப்படாத குறுங்கதைகள், காவியங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் எழுதுவதற்கும் அவற்றை எல்லாம் ஆவணப்படுத்துவதற்கும் நாம் பழகிக்கொண்டால் அடுத்த தலைமுறைக்கு அது ஒரு வழிகாட்டியாக இருக்கும் எனவும், தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், புறனானூறு உள்ளிட்ட பல்வேறு இலக்கியங்கள் நமக்கு எவ்வாறு வாழ்வில் துணை புரிகின்றன. அதிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள் குறித்து உதாரணங்கள், பாடல்கள் மூலம் எடுத்துரைத்தார்.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 05, 2025

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப்பலன்களைப் பெறுவதற்கு தங்களது நிலஉடைமை விவரங்கள், பயிர்சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை எவ்வித கட்டணமுமின்றி 31.03.2025-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப்பலன்களைப் பெறுவதற்கு தங்களது   நிலஉடைமை விவரங்கள், பயிர்சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை  ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத்திட்டம் (AgriStack) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.தற்போது, விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண், கைபேசி எண், நிலஉடைமை விவரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி சம்பந்தப்பட்ட  வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் விவசாயிகள் பொது சேவை மையம் (CSCs) சென்று அங்கும் நிலஉடைமை விவரங்கள் இணைக்கப்பட்ட பின்னர் அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும். 2025-26 ஆம் நிதி ஆண்டு முதல், பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம் (PMKISAN), பயிர்க்காப்பீடுத் திட்டம் (PMFBY) போன்றஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை – உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள்,  அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசிஎண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி 31.03.2025-ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 05, 2025

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் - 2025

விருதுநகர் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PM NATIONAL APPRENTICESHIP MELA (PMNAM)) 10.03.2025 அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் காலை 9.30 மணிமுதல் மாலை 5.00 மணிவரையில் நடைபெறவுள்ளது.  இந்த தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில், அரசு / பிரபல முன்னணி தனியார் தொழிற்நிறுவனங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.  மேலும் ஐ.டி.ஐ- ல் உள்ள தொழிற்பிரிவுகான Fitter, Machinist, MMV, R&AC> ELECTRICIAN, Turner, Welder, Wireman, Surveyor, COPA மற்றும் இதர பிற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று இதுநாள் வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள் மற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும் இத்தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.தொழிற்பழகுநர் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சிகாலத்தில் தொழிற்நிறுவனங்களின் நிலைக்கேற்ப மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7700/- முதல் ரூ.13500/- வரை வழங்கப்படும்.  மேலும் தொழிற்பழகுநர் பயிற்சிக்குப்பின் மத்திய அரசின் தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate- NAC)  மற்றும் முன்னணி நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பும் (Placement) வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,  அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Mar 04, 2025

மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் குழந்தைகள் கொண்டாடும் 21-ம் ஆண்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஜெயந்த்  மலைவாழ் பழங்குடியின மாணவ, மாணவியர் விடுதியில், (04.03.2025) ராம்கோ குரூப் மற்றும் பி.ஏ.சி.ஆர்.சேதுராமம்மாள் அறக்கட்டளை இணைந்து நடத்தும், மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் குழந்தைகள் கொண்டாடும் 21-ம் ஆண்டுவிழா  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இவ்விழாவில், மலைவாழ் குடும்பங்களுக்கு புதிய ஆடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.சமுதாயத்தில் மிகவும் ஒரு விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய பழங்குடியினருக்கு அவர்களுடைய கல்வி, வாழ்க்கை தரம் இரண்டையும் உயர்த்த வேண்டும் என்பதற்காக ராம்கோ நிறுவனத்தினுடைய சேதுராமம்மாள் அறக்கட்டளையின் சார்பில் நிறைய பணிகளை செய்து கொண்டு வருகிறது.நமது விருதுநகர் மாவட்டத்தில், குறிப்பாக  இராஜபாளையம், வத்திராயிருப்பு வட்டங்களில் நான்கு இடங்களில் பழங்குடியினர் மக்கள் வசித்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கக்கூடிய புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தால், அவர்களுடைய கல்வித்தரம் எவ்வாறு இருந்தது,  அவர்கள் எந்த அளவிற்கு பள்ளிக்கல்வியையும், உயர்கல்வியையும் பெற்றிருந்தார்கள் என்று பார்த்தால் அது  மிக குறைவான அளவில் தான் இருந்தது. இன்று  அனைத்து மாணவ மாணவிகளும் பள்ளி படிப்பிற்கு வருகிறார்கள். பள்ளி படிப்பு முடித்து உயர்கல்விக்கு கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.மேலும், இந்த விடுதியில் இருந்து படித்து செவிலியர் பட்டம் பெற்று இன்று செவிலியராக பணிபுரியக் கூடிய ஒரு பெண்ணும், பொறியியல் படிக்கக்கூடிய மாணவர்களும் அதிகமாக இருக்கிறார்கள்.  மேலும், மலைவாழ் பழங்குடியின மாணவர்களுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அவர்களுக்கு அதனை பற்றி எடுத்து சொல்ல வேண்டும். குறிப்பாக மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விக்கும், ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட இந்தியாவின் தலைசிறந்த தொழில் நிறுவனங்களிலும் பயில்வதற்கு பழங்குடியினர் பிரிவிலிருந்து நமது தமிழ்நாட்டில் இருந்து செல்லக்கூடிய மாணவர்களின்  எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்வதற்கு மட்டுமல்லாமல், அரசு வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் இட ஒதுக்கீடு இருக்கிறது. அதனை எல்லாம் மாணவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். நாம் செய்கின்ற உதவிகளில் மிகவும் முக்கியமான உதவி என்பது அவர்களுக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான்.அதனை ஜெயந்த்  மலைவாழ் பழங்குடியின மாணவ, மாணவியர் விடுதி சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். மொழித்திறனாக இருந்தாலும், மதிப்பெண்களாக இருந்தாலும், விடுதியில் அவர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய புதிய திறன்களாக இருந்தாலும், அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்கின்ற பொழுது அவர்கள் சிறந்த மனித வளமாக மாறுகிறார்கள்.எனவே காலம் காலமாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மலைகளில் இருந்து  நிறைய வாய்ப்புகளை பெறாமல் விட்டவர்கள், மறுக்கப்பட்டவர்கள் இது போன்ற வாய்ப்புகளை பெற்று புதிய உயிரோட்டத்திற்கு வருகின்ற பொழுது இன்னும் நாம் அவர்களை நன்கு ஊக்கவிக்க வேண்டும்.மேலும், இப்பகுதி மலைவாழ் மக்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், ராம்கோ நிறுவன சேர்மன் திருமதி நிர்மலா ராஜா, மலைவாழ் பழங்குடியின மக்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 03, 2025

சிவகாசி நகரத்திற்கு வெளிவட்ட புறவழிசாலை அமைக்கும் பணிகளுக்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வடமலையாபுரம் சோதனைச் சாவடி அருகில் இன்று (03.03.2025) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில்,  ரூ.120 கோடி மதிப்பில், திருவில்லிபுத்தூர் - சிவகாசி   சாலையை சிவகாசி -  விருதுநகர் சாலை உடன் இணைக்கும் சிவகாசி நகரத்திற்கு வெளிவட்ட புறவழிசாலை அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும்  சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., அவர்கள்,  ஆகியோர் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு  அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், சிவகாசி நகரத்திற்கு வெளிவட்ட சாலை அமைப்பதற்கான ஒரு கட்டமாக இன்று ரூ.120 கோடி மதிப்பில்  திருவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையை  சிவகாசி - விருதுநகர் சாலை உடன் இணைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சியில் பட்டாசு தொழிற்சாலை மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் சிவகாசி மாநகராட்சி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் காரணமாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, சிவகாசி நகருக்கு வெளிப்புற சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.தற்போது சிவகாசி நகருக்கு வெளிப்புற சுற்றுச்சாலை அமைக்கும் பணி 3 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிவகாசி வெளிப்புற சுற்றுச்சாலை அமையவுள்ள சாலையின் மொத்த நீளம் 33.520 கி.மீ ஆகும். இதனால் திருவில்லிபுத்தூர் - சிவகாசி சாலை விருதுநகர் சிவகாசி -சாலை, சாத்தூர் சிவகாசி கழுகுமலை சாலை சிவகாசி ஆலங்குளம் சாலை,  சிவகாசி எரிச்சநத்தம் சாலை, சிவகாசி - கன்னிசேரி சாலை மற்றும் விஸ்வநத்தம் வெங்கடாசலபுரம் - சாலை உள்ளிட்டவை சுற்றாக இணைக்கப்படும்.இதில் கீழத்திருத்தங்கல், ஆனையூர் என இரு பகுதிகளில் இரயில் தண்டவாளங்கள் செல்வதால், அந்த இடங்களில் இரயில்வே மேம்பாலம் அமைக்க இரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.தற்போது வடபட்டி, நமஸ்கரித்தான்பட்டி, கீழத்திருத்தங்கல், அனுப்பன்குளம், நாரணாபுரம், கொங்கலாபுரம் ஆகிய 7 வருவாய் கிராமங்களுக்கு நில ஒப்படைப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக பூவநாதபுரம் விலக்கு முதல் வடமலாபுரம் பாலம் வரை 9.92 கி.மீ. சாலை அமைக்க ரூ.120 கோடி மதிப்பீட்டில் வேலை உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இப்பணியானது திருவில்லிபுத்தூர்- சிவகாசி சாலை முதல் சிவகாசி எரிச்சநத்தம் சாலை மற்றும் சிவகாசி - எரிச்சநத்தம் சாலை முதல் சிவகாசி விருதுநகர் சாலையை இணைக்கிறது என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Mar 03, 2025

சமுதாய வளைகாப்பு விழாவில் திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அமலா திருமண மண்டபத்தில் (03.03.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான, தமிழ்நாடு அரசின் சார்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இன்றைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.நம்முடைய பாரம்பரியத்தின்படி, கர்ப்பிணி பெண்கள், கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் நாளைய சமுதாய குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும்.ஒரு அரசு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை வடிவமைத்து தருகிறது. பல்வேறு கட்டமைப்புகள் தேவையாக இருந்தாலும் அடிப்படையில் ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக்கு மிக  முக்கியமான  காரணிகளாக இருப்பது, அந்த நாட்டிலே இருக்கக்கூடிய சமுதாயம் எப்படி வாழ்கிறது என்பது தான்.ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், அந்த நாட்டில் வலுவான தலைமுறையினரை நாம் உருவாக்க வேண்டும். ஒரு சமுதாயம் எழுச்சிமிக்க சமுதாயமாக, தலை நிமிர்ந்த சமுதாயமாக இருக்க வேண்டும். நமக்கு பின்னால் வரக்கூடிய தலைமுறைகள் நிறைந்த அறிவாற்றல் பெற்றவர்களாக இருந்தால்தான், இனி வரக்கூடிய காலங்களிலே நம்முடைய வலிமையை உலகத்தில் நிரூபிக்கும்.அப்படிப்பட்ட ஒரு அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கக்கூடிய குழந்தைகளை எதிர் காலத்தில் நாம் உருவாக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு கல்வி முக்கியம். அந்த கல்வியை உங்களுக்கு கொடுக்கக்கூடிய ஒரு நல்லாட்சியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு அமைந்திருக்கிறது. கல்விக்கு அடுத்து நாம் எதிர்கால தலைமுறைகளாக இருக்கக்கூடிய குழந்தைகள் நல்ல உடல் நலத்தோடும், ஆரோக்கியமாக இருந்தால் தான் கல்வி கற்றல் மூலம் கிடைக்கக்கூடிய பயன்களை பெற முடியும்.எனவே தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு கல்வி மற்றும் பொது சுகாதாரத்துக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. ஒரு அருமையான சமுதாயத்தை, எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய கடமையையும், பொறுப்பையும் கர்ப்பிணி தாய்மார்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.இந்த பொறுப்பை நீங்கள் சுமந்து கொண்டிருக்கிற போது, உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும், உங்களின் ஆரோக்கியத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அந்த பொறுப்பை நம்முடைய மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் உள்ளிட்ட துறைகள் இணைந்து செயலாற்றி வருகிறது.தமிழ்நாடு அரசு பெண்களை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர்க்கான பேருந்து பயணம் திட்டம், புதுமைப்பெண், மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பணிதாய்மார்களும், இந்த கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என  அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இவ்விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் (பொ) திருமதி பத்மாவதி, பேரூராட்சி தலைவர்கள் திரு.செந்தில்(காரியாபட்டி), திரு.துளசிதாஸ்(மல்லாங்கிணறு),  முக்கிய பிரமுகர்கள் திரு.கண்ணன், திரு.செல்லம் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கர்ப்பிணி தாய்மார்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 106 107 108 109 110 111 112 ... 121 122

AD's



More News