விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தானூர் ஊராட்சியில் (23.06.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.06.2025) துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 11.06.2025 அன்று மாநில அளவில் மணிமேகலை விருதினை பெற்ற விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகராட்சி ஜெயம் மகளிர் சுய உதவி குழு மற்றும் இராஜபாளையம் நகராட்சி 16 வது வார்டு நகர்ப்புற அளவிலான கூட்டமைப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் I A S, அவர்கள் பாராட்டி காசோலையினை வழங்கினார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள குரூப் ‘B’ மற்றும் ‘C’ பணிகளுக்கு SSC (Staff Selection Commission) தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். Inspector of Income Tax, Postal Assistan in Dept of Posts, Tax Assistant in CBDT உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு SSC, CGL தேர்வு மூலம் தோராயமாக 14,582 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் SSC, CGL தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 04.07.2025 மற்றும் தேர்வு தேதி 13.08.2025 முதல் 30.08.2025 வரை நடைபெற உள்ளது. மேலும், MTS/Junior Engineer/Examiner/Accountant/Nursing Office உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு SSC Selection Post Exam-2025 (Phase-XIII) தேர்வு மூலம் 2,423 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10th / 12th / ITI / டிப்ளோமா / பட்டப்படிப்புடன் விண்ணப்பிக்கும் பணிக்குரிய தொழில்நுட்பக் கல்வித் தகுதி அல்லது பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் 23.06.2025, மற்றும் தேர்வு தேதி 24.07.2025 முதல் 04.08.202 வரை நடைபெற உள்ளது. தேர்விற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.100 பெண்கள் SC /ST /PWD /Ex-SM பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு www.ssc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். எனவே. மேற்காணும் தேர்வை மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் (23.06.2025) நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், பழங்குடியினர் பிரிவு மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் தலைசிறந்த கல்லூரிகளில் உள்ள வாய்ப்புகள், அதனை அடைவதற்கான வழிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழக அரசு மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக “நான் முதல்வன்” திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்க்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விகடன் குறித்த தகவல்களும் எதிர்கால வேலைவாய்ப்புகள், உயர்கல்வி பிரிவுகள் மற்றும் படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.பள்ளிக்கல்வித்துறையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சியின் உடைய நோக்கம் நாம் பள்ளிகளில் பயிலும் போது, பெற்றோர்கள், ஆசிரியர்கள் எல்லாம் நன்றாக படிக்க வேண்டும். நன்றாக படித்து நல்ல மதிப்பெண்களை எடுத்தால் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று சொல்வார்கள். அதோடு சொல்லப்படாத ஒரு நுணுக்கமான, முக்கியமான, நடைமுறைக்கு மிகவும் ஒத்து வரக்கூடிய ஒரு செய்தியை நாம் வலியுறுத்துவது இல்லை. அது என்னவென்றால் நமக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்த ஒரு விழிப்புணர்வு.மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி அரசு பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, கட் ஆப் மதிப்பெண்கள், உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்து கொள்ளவேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப உயர்கல்வியில் உள்ள சிறந்த வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து பயிலவேண்டும்.தமிழக அரசு மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் கீழ் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 12-ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படித்தவர்கள் தமிழ்நாடு அரசு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் எந்த தொழிற்கல்விக்கு சென்றாலும் கட்டணம் இலவசமாக அளிக்கப்படுகிறது.அதைவிட மிக முக்கியம் பல்வேறு இட ஒதுக்கீட்டில் வரக்கூடியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர்கள் வகுப்பைச் சார்ந்த பிரிவினர் ஆகிய மூன்று பிரிவினர்கள் இந்திய அளவில் இருக்கக்கூடிய உயர் கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான விண்ணப்பங்கள் மிக குறைவாக வருகிறது.விண்ணப்பம் அளித்து குறைந்த அளவு முயற்சி செய்தாலே, இந்தியாவினுடைய தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் பயிலவதற்கான வாய்ப்பை பெற முடியும்.மிகப்பெரிய வாய்ப்புகள் உங்கள் கைகளில் இருக்கிறது. அந்த வாய்ப்புகள் என்பது பள்ளி படிப்பு மட்டுமல்ல, அதைத் தாண்டி உங்களுக்கு இருக்கக்கூடிய எதிர்கால வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வும் புரிதலும் இல்லை என்றால் நிறைய வாய்ப்புகளை நீங்கள் தவற விடுகிறார்கள் என்று அர்த்தம்.நீங்கள் இருப்பது என்பது வாய்ப்புகள் நிறைந்த ஒரு சுரங்கம். அந்த சுரங்கத்தில் யார் ஆழமாகவும், அகலமாகவும் சென்று தோண்டுகிறார்களோ, அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன.இந்திய அளவில் இருக்கக்கூடிய தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வாய்ப்புகள் உங்களைப் போன்று, உங்களைவிட சற்று அறிவில் குறைவானவர்களுக்கு கூட விழிப்புணர்வு இருப்பதால் கிடைத்து விடுகிறது. உங்களுக்கு அந்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் வாய்ப்புகளை தவற விட்டு விடாதீர்கள். உங்களுக்கு வழிகாட்டுதலுக்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும் உயர்வழிக்கல்விக்கென்று தனியாக ஆசிரியர்கள் குழு இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி உதவி மையம் செயல்படுகிறது.பொருளாதார வசதி இல்லாத குழந்தைகளுக்கு அவர்கள் விண்ணப்பம் அளிப்பதிலிருந்து பயிலும் வரை உதவுவதற்கு விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளை உருவாக்கி இருக்கின்றோம். அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நீங்கள் சிறந்த, உயர்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்று, என்றாவது ஒருநாள் நீங்கள் சிறந்த நிறுவனத்தில் பணிபுரிந்து, உங்களது வாழ்வு உயரமடைந்தால் அதுதான் இந்த நிகழ்ச்சிக்கு பெருமை.எனவே, எல்லோருக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அந்த சிறந்த வாய்ப்புக்களை எதிர்காலத்தில் வெற்றிக்கான வாய்ப்புகளாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் அனைவரும் முன்னேற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கடந்தாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்வின் மூலம் பயிற்சியும், வழிகாட்டுதலும் பெற்று, கிளாட், ஐ.ஐ.டி.டி.எம்- ஜே.இ.இ உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று, தற்போது NLU, IITM, NCHM, APU போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலவுள்ள மாணவர்கள் பங்கேற்று, தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
2025-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு / தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற் பிரிவுகளில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) 23.06.2025 முதல் சேர்க்கை நடைபெறுகிறது. ஏற்கனவே விண்ணப்பித்து ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதாவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவ / மாணவிகள், அரசு நிர்ணயித்துள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் சேர்ந்து கொள்ளலாம்.அரசு / தனியார் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை அணுகி நேரடி சேர்க்கை மூலம் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கொள்ளலாம். அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, 2 செட் சீருடை, பாடநூல், வரைபடக்கருவிகள், மூடு காலணி, இலவச பஸ்பாஸ் வழங்கப்படும். மேலும், மாதந்திர உதவித்தொகை ரூ.750- மேலும் அரசு பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000- உதவித் தொகை வழங்கப்படும். தகுதியான மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000- உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சியாளர் பயிற்சி முடிவில், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் மூலம் 18.06.2025 நேற்று காலை 9 மணி முதல் 19.06.2025 இன்று காலை 9 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டனர்.அதன்படி இரண்டாம் நாளான இன்று சாத்தூர் வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.சாத்தூர் நகராட்சியில், நென்மேனி சாலை பகுதியில் தண்ணீரில் கலந்துள்ள குளோரின் அளவு குறித்து ஆய்வு செய்து, குடிநீர் விநியோகம் செய்யப்படும் முறை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, அண்ணா நகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சுழற்சி முறையில் கூட்டுத்துப்புரவு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.பின்னர், மேலக்காந்தி நகர் பகுதியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், செயல்பட்டு வரும் சமையலறை பகுதியனை பார்வையிட்டு, அங்கு மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்டுள்ள காலை உணவினை உட்கொண்டு, உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.இந்த நிகழ்வின் போது, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், சாத்தூர் நகராட்சி ஆணையாளர் திருமதி ஜெகதீஸ்வரி, சாத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.குருசாமி, வட்டாட்சியர் திரு.ராஜாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டாரத்திற்கு உட்பட்ட வச்சகாரப்பட்டி ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் அமைக்கப்பட்டுள்ள விருமதி உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் (19.06.2025) திறந்து வைத்தார்.பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், சுய உதவிக்குழுக்களுக்கு இந்த்pயன் வங்கி மூலமாக 76.36 ஆயிரம் வங்கிக்கடன் இணைப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், உதவி திட்ட அலுவலர் (வாழ்வாதாரம்), மாவட்ட விற்பனை சங்க அலுவலர், மாவட்ட வள பயிற்றுநர்கள், வட்டார இயக்க மேலாண்மை அலுவலகப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 2024-2025 கோடை பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்திடும் பொருட்டு இராஜபாளையம், வத்ராயிருப்பு மற்றும் காரியாபட்டி ஆகிய வட்டங்களில் 15 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த 26.05.2025 முதல் செயல்பட்டு வருகிறது. மேற்படி நெல் கொள்முதல் நிலையங்களில் 14.06.2025 வரை 393 விவசாயிகளிடமிருந்து 3375.960 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.5,83,00,000/- (ரூபாய் ஐந்து கோடியே என்பத்து மூன்று லட்சம் மட்டும்) விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லினை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் முகாமானது இன்று 18.06.2025 காலை 09.00 மணி முதல் மறுநாள் 19.06.2025 அன்று காலை 09.00 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் முதல் நாளான இன்று, மாவட்ட ஆட்சித்தலைவர், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, சாத்தூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ் ரூ.31.30 இலட்சம் மதிப்பில் மதுரை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், சாத்தூர் நகராட்சியில் 2025-2026-ம் ஆண்டிற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.79 கோடி மதிப்பில் வெம்பக்கோட்டை சாலையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுவருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனைதொடர்ந்து, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், நென்மேனி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 இலட்சம் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்; நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.நென்மேனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, அங்குள்ள ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி தரம், கற்பிக்கும் முறைகள், வருகைப்பதிவேடு, உள்ளிட்டவைக் குறித்து கேட்டறிந்தார்.மேலும், நென்மேனி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் (PMGSY) கீழ் ரூ.18.25 கோடி மதிப்பில் புதிதாக பாலம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனைத்தொடர்ந்து, நென்மேனி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.மேலும், அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில், மாவட்டம் நிர்வாகம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை உயர்கல்வியில் சேர்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை பெறுவதற்காக கடந்தாண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்வின் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு நுழைவு தேர்வு பயிற்சிகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விழிப்புணர்வு பெற்று, பயிற்சியின் மூலம் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான சேர்க்கை பெற்று வருகின்றனர்.அந்த வகையில், கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று, நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்வின் மூலம் பயிற்சியும், வழிகாட்டுதலும் பெற்று, அம்ரிதா என்பவர் கிளாட்(CLAT) நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று ஜபல்பூரில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்திலும், ஆறுமுகம் மற்றும் ஆர்.விஜய் ஆகியோர் ஐ.ஐ.டி.டி.எம்- ஜே.இ.இ நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று புவனேஷ்வரில் உள்ள ஐ.ஐ.டி.எம்(IITM) கல்வி நிலையத்திலும் சேர்க்கை பெற்றுள்ளனர்.மேலும், வத்திராயிருப்பு வட்டம் மகாராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் மகன்களான பி.விஜயகுமார் மற்றும் பி.தினேஷ் ஆகியோர் Indian Institute of Hotel management -லும், சிவகாசி வட்டம், பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் மரியராஜ் பாண்டியன் என்பவர், இந்திய கடல்சார் பல்கலைக்கழக IMU நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று Marine Engineering படிப்பிற்கும் தேர்வாகி உள்ளனர்.அதுபோல, கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பயின்று 8 மாணவர்கள் NLU, IITM, NCHM, APU போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ள இந்த 14 மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து தலா ரூ.5000 வீதம் மொத்தம் ரூ.70,000 மதிப்பிலான தொகைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.