25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவத் தூதுவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவத் தூதுவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில்   (22.10.2024) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில், போதைப்பொருட்களுக்கு எதிரான மாணவத் தூதுவர்கள் பங்கேற்ற  விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில், மேனாள் தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு.,I A S., அவர்கள் (பணி நிறைவு) சிறப்புரை ஆற்றினார்கள்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில், போதைப்பொருள் எதிரான உறுதிமொழியினை மாணவ, மாணவியர்கள் எடுத்துக்கொண்டனர்.
அடிக்கடி கைப்பேசி, இணையதளம் பயன்படுத்துதல், பணம் வைத்து சூதாட்டம் விளையாடுதல், இணையதள சூதாட்டம்,  அடிக்கடி கடைகளுக்கு சென்றும், இணையதள மூலமும் பொருட்களை வாங்கி குவித்தல், தொடர்ச்சியாக ஏதாவது ஒன்றை சாப்பிட்டு கொண்டே இருப்பது போன்றவைகள் எல்லாம் நடத்தை தொடர்பான போதை பழக்க வழக்கங்கள்.இதுபோல கைப்பேசி, இணையதளம் இல்லாவிட்டால் பதற்றம் அடைவது, சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் அதிக நேரம் செலவழிப்பது, தொலைக்காட்சியில் நெடுந்தொடர் பார்ப்பது, உடலை பராமரிப்பது, அடிக்கடி சிகை அலங்காரத்தில் கவனம் செலுத்துவது, எப்போதும் பணி தொடர்பான சிந்தனைகள், தோற்றப் பொலிவு, எண்கணிதம்; போன்ற செயல்களிலும் சிலர் போதையாக உள்ளனர்.

இப்படி பல விதமான போதைகள் இருந்தாலும், ஒரு தனி மனிதனை அதிகம் பாதிப்பதாக இருப்பது போதை பழக்க வழக்கம் தான். இந்த போதை பழக்க வழக்கங்களில் பழக்கம் மற்றும் அடிமையாவது என இரண்டு கட்டமாக இருக்கிறது. போதை பழக்கத்தில் உள்ளவர் அன்றாட பணிகளில் ஈடுபட முடியும். அவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவது எளிது. ஆனால், போதையில் அடிமையாவது என்பது அதில் மனம், உடல் பாதிக்கப்பட்டு போதை அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. அவர்கள் நினைத்தாலும் அதை நிறுத்த முடியாது.அவர்கள் இயல்பாக இருப்பதற்கே போதை பொருட்களை உட்கொள்ள வேண்டியிருக்கும். இப்படிபட்டவர்களை நிபுணர்களின் உதவியுடன் தான் நாம் மாற்ற முடியும்.போதைப்பொருட்களுக்கு எதிரான மாணவத் தூதுவர்கள் போதை பயன்பாடு எப்படியெல்லாம் தொடங்கி முடிகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். போதைப்பொருளை ஒருமுறை பயன்படுத்தினால் என்ன என்று நினைத்து பயன்படுத்துவது, நண்பர்களின் கட்டாயத்தினால் பயன்படுத்துவது, பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துவது, துக்கமான சூழ்நிலையில் பயன்படுத்துவது உள்ளிட்டவைகள் தான் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கான முதல் படி.

முதல் நிலை என்பது இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தி, ஒரு சமூக பழக்கவழக்கமாக மாறி விடுகிறது. இரண்டாம் நிலை என்பது அனைத்து விதமான போதைப்பொருட்களையும் பயன்படுத்துவது என்ற ஆபத்தான பயன்பாடு. மூன்றாம் நிலை சார்ந்திருத்தல் என்பதாகும். இந்த நிலையில் போதைப் பழக்கவழக்கத்திற்கு அந்த உடல் பழக்கம் ஆகிவிடும். எவ்வளவு பயன்படுத்தினாலும் அதை விட அதிகமாக பயன்படுத்த தூண்டும்.நான்காம் நிலை என்பது போதைப்பொருளுக்கு அடிமையாவது. இந்த நிலையின் போது போதைப்பொருள் ஒரு அத்தியாவசியமாகி, அது தான் முதல் தேவையாகி விடுகிறது. போதைக்காக எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். போதைப்பொருள் கிடைக்காமல் போனால் தற்கொலைக்கூட செய்து கொள்வார்கள்.

எனவே, மாணவ தூதுவர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் முதலில் தூய்மையோடு இருக்க வேண்டும். எந்த காலகட்டத்திலும்  சக மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். உங்கள் சக மாணவர்களுக்கு போதைப்பொருள் என்பது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும், ஒருமுறை பயன்படுத்தினால் கூட அடிமையாவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும், போதைப் பழக்கத்தினால்; உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்படும் என்பதையும், போதைப்பொருள் பழக்கத்தினால் மனம் மற்றும் உடல் ரீதியாக பாதிப்பு உள்ளது என்பதையும், போதைப் பழக்க வழக்கத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களின் தற்போதைய நிலைமை குறித்தும், அதனால் உறவில் விரிசல், சட்ட சிக்கல் கூட ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதையும் எடுத்துக்கூற வேண்டும்.உடற்பயிற்சி, புத்தகம் வாசித்தல் போன்ற நல்ல பழக்க வழக்கங்கள் மூலம் போதைப்பொருள் இல்லாமலேயே நிறைந்த மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை கற்றுத்தர வேண்டும்.

மேலும், போதைப்பொருட்களுக்கு ஆளானவர்களை பற்றியும், போதைப்பொருட்கள் விற்பவர்கள் பற்றியும் தகவல்களை பள்ளி தலைமையாசிரியர், முதல்வர் உள்ளிட்டோரிடம் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளை மாணவ தூதுவர்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தி தமிழகத்திலேயே போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், சுமார் 1200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News