25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 14, 2026

காவல்துறையில் “Orderly System” நடைமுறையில் இருப்பதாக யாரிடமாவது தகவல் இருந்தாலோ அல்லது அதுகுறித்து புகார் அளிக்க விரும்பினாலோ, பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகள் மூலம் மாவட்ட அளவிலான குழுவிற்கு புகார் அளிக்கலாம்.

அரசு வெளியிட்ட G.O.(Ms) No.29, Home (Police–VI) Department, நாள் 21.01.2026 மற்றும்  சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில், காவல்துறையில் நடைமுறையில் இருந்த “Orderly System” (ஆர்டர்லி முறை) முறையை முழுமையாக ஒழிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.மேற்கண்ட உத்தரவுகளை செயல்படுத்தும் பொருட்டு, விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, காவல்துறையில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து, அதன் நடைமுறையை உறுதிசெய்யும். எனவே, காவல்துறையில் “Orderly System” நடைமுறையில் இருப்பதாக யாரிடமாவது தகவல் இருந்தாலோ அல்லது அதுகுறித்து புகார் அளிக்க விரும்பினாலோ, பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகள் மூலம் மாவட்ட அளவிலான குழுவிற்கு புகார் அளிக்கலாம்.புகார்கள் அளிக்கும் வழிமுறைகள்:தொலைபேசி மூலம்:மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி எண்.1077) மின்னஞ்சல் மூலம்:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம்.(மின்னஞ்சல் முகவரி. collrvnr@nic.in)எழுத்து மனு மூலம்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனு அளிக்கலாம். புகார்கள் அளிக்கும் போது, நிகழ்ந்த இடம், தொடர்புடைய நபர்கள் மற்றும் புகாரின் தன்மை போன்ற விவரங்களை தெரிந்தவரையில் குறிப்பிடலாம். புகார்கள் எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அளிக்கலாம். பெறப்படும் அனைத்து புகார்களும் மாவட்ட அளவிலான குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு, குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை உட்பட தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.புகார் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும். காவல்துறையில் “Orderly System” முறையை முழுமையாக ஒழிக்க பொதுமக்கள் முன்வந்து தகவல் அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார். 

Mar 13, 2026

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு கடனுதவிகளை அமைச்சர்அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில், (12.03.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவிகள் வழங்கும் விழாவில்,  நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் 1245 பயனாளிகளுக்கு ரூ.15.48 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.மேலும், 5 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கும், சமுதாய திறன் பள்ளி திட்டத்தின்கீழ் நிறைவு செய்த 120 இளைஞர்களுக்கு சான்றிதழ்களும், 4 சுய உதவிக் குழுக்களுக்கும் மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுகளை  நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் 450 ஊராட்சிகளில் 10,347 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. நகர்புறப் பகுதிகளில் 1 மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் மொத்தம் 3,943 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டிற்கு (2025-26) விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.1007 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்க இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு நாளது தேதி வரை 8,948 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.922.38 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக, இன்று மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 1245 பயனாளிகளுக்கு ரூ.15.48 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊரகம் மற்றும் நகர்ப்புறப்பகுதிகளில் 54,325 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3787.46 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டு சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையச் செய்திட வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது ஒரு எண்ணிக்கையாக மாத்திரம் இல்லாமல் இது ஒவ்வொரு பெண்கள், தாய்மார்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் தான் இதனுடைய வெற்றி இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கக் கூடிய காரணத்தினால் தான் எப்போதும் இல்லாத வகையில் இந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாபெரும் ஒரு ஆதரவு கரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், இந்த துறையின் அமைச்சர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் நீட்டியிருக்கிறார்கள்.நிதி அமைச்சர் என்கின்ற வகையில் ஒவ்வொரு மாதமும் நான் வங்கிகளை அழைத்து எவ்வளவு பேருக்கு கடன் வழங்கப்படுள்ளது. வங்கிகள் எந்த வகையில் பெண்களுக்கு ஆதரவு தருகிறீர்கள், மாவட்ட நிர்வாகம் இதை எந்தளவிற்கு ஒருங்கிணைக்கிறது என்பதை முன்னோடி வங்கியுடன் இணைந்து, பல்வேறு வங்கிகளையும் அழைத்து ஆலோசனை செய்து தேவைப்படக் கூடிய அளவிற்கு கடனுதவிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். கடன் பொருளாதாரம் நம் வாழ்க்கையினுடைய முன்னேற்றத்திற்கு ஒரு முக்கியமான பொருளாதாரமாக இருக்கிறது. கடன் பொருளாதாரத்தின் வாயிலாக கடைக்கோடி பகுதிகளில் இருக்கக்கூடிய மகளிரினுடைய முன்னேற்றத்திற்கு நாம் மிகப்பெரிய அளவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.கடன் பொருளாதாரத்தின் வாயிலாக மட்டுமல்லாமல் அவர்களுடைய  வாழ்க்கையில் சமூக நிலையிலும் உயர்த்த வேண்டும். பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல சமூக வளர்ச்சியும் அவர்களுக்கு மிக முக்கியமான ஒன்று. பெண்களுக்கான கல்வி, போக்குவரத்து வசதிகளில், சமுதாயத்தில் பெண்களுக்கென்று மிக முக்கியமான இடம் அமைய வேண்டும்.பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகின்ற போது அந்த பெண் வளரக்கூடிய வளர்ச்சி அந்த பெண்ணிற்கான வளர்ச்சியாக மட்டுமல்ல, அந்த குடும்பத்திற்கான வளர்ச்சியாக மட்டுமல்ல, அந்த பெண் இருக்கக்கூடிய இடத்திற்கான வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் உடைய வளர்ச்சிக்கும் இது ஊன்றுகோலாக அமைகின்ற என்கின்ற வகையில்தான், ஒவ்வொரு திட்டங்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தீட்டுகிறார்கள்.இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 1.31 கோடி பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மகளிர் விடியல் பயணம் மூலம் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு பெண்ணும் ஏறத்தாழ ரூ.888 அவர்கள் சேமிக்க முடிகிறது என்பதை இலக்காகக் கொண்டு இந்த பயணம் உறுதி செய்யப்படுகிறது. பெண் பிள்ளைகள் உயர் கல்விக்கு செல்கின்ற பொழுது அவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.காலை வேளைகளில் பெண்கள் எண்ணற்ற வேலைகளை எடுத்துக் கொண்டு செய்கின்ற போது, அவர்கள் வேலைப்பளுவை குறைக்க வேண்டுமென்ற நோக்கில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தின் மூலம் பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதெல்லாம் ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றமாக உருவாக்குவதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இவைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.வளர்ச்சி என்று வருகின்ற பொழுது, அந்த வளர்ச்சி நீடித்த வளர்ச்சியாக இருக்கின்றதா, சுற்றுச்சூழலோடு இணைந்து போகக்கூடிய வளர்ச்சியாக இருக்கின்றதா என்று பார்த்தால், இன்றைக்கு நிதி ஆயோக் நிறுவனம் தேர்ந்தெடுக்கக்கூடிய இலக்குகளில் மிகப்பெரிய அளவிலே முன்னோடியாக இருக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று சொன்னால் சுற்றுச்சூழலோடு இணைந்து இருக்கக்கூடிய பொருளாதார வளர்ச்சியை நாம் இலக்காகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.எனவே அனைவருக்குமான லட்சியம் ஒரு அற்புதமான சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும். முதலமைச்சர் அவர்கள் காணக்கூடிய கனவு பெண்களுக்கான விடுதலை, பெண்களுக்கான தற்சார்பு, கல்வி, கௌரவம், பொருளாதார வளர்ச்சி. பெண்கள் என்று சொன்னால் அந்த பெண்கள் சக்தி என்பதை நாம் நிரூபிக்க கூடிய மாநிலமாக உருவாக வேண்டும் என தெரிவித்தார்.சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்று சுய சார்புடன் தமது சொந்தகாலில் நிற்க வேண்டும் எண்ணத்துடன் அவர்களை ஆற்றல்படுத்திடவும் அதிகாரப்படுத்திடவும், மகளிர் வாழ்வில் உள்ள வறுமை என்னும் இருளை நீக்கி வளம் என்னும் ஒளியை பரவச் செய்வதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசால் மகளிர் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட அமைப்பே தமழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகும். ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களை கண்டறிந்து அவர்களை செய்திடும் நோக்கத்துடன் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறவனமானது மகளிர் திட்டம் என்ற சீரிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.அதனடிப்படையில், இன்றைய தினம் காரியாபட்டி நகர்ப்புற பகுதிகளில் உள்ள 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.67 இலட்சம் மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 24 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.31 கோடி மதிப்பிலும், நரிக்குடி ஊரகப் பகுதிகளில் உள்ள 20 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.04 கோடி மதிப்பிலும், திருச்சுழி ஊரகப் பகுதிகளில் உள்ள 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.24 கோடி மதிப்பிலும்,சிவகாசி நகர்ப்புற பகுதிகளில் உள்ள 14 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.88.63 கோடி மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 25 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.48 கோடி மதிப்பிலும், விருதுநகர் என மொத்தம் 19 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.55 கோடி கடனுதவிகளும்.அமுத சுரபி நிதி 293 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.04 கோடி கடனுதவிகளும், வட்டார வணிக வள மையம் மூலம் 16 பயனாளிகளுக்கு ரூ.8 இலட்சமும், சமுதாய முதலீட்டு நிதி 502 குழுக்களுக்கு ரூ.3.14 கோடி கடனுதவிகளும், நலிவு குறைப்பு நிதி 240 பயனாளிகளுக்கு ரூ.67.61 இலட்சம் கடனுதவிகளும், நுண் நிறுவன நிதி 106 பயனாளிகளுக்கு ரூ.65.50 இலட்சம் கடனுதவிகளும், ஆக மொத்தம் 1245 பயனாளிகளுக்கு ரூ.15.48 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இதுபோன்ற, பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும்,  தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும்,  அமைச்சர் பெருமக்களும் நமக்கு வழங்கியுள்ளனர். இவற்றையெல்லாம் பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Mar 13, 2026

விருதுநகர் மண்டலம் சார்பில் திருவில்லிபுத்தூர் கிளையில் சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விபத்தில்லா ஓட்டுநர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழகம்(மதுரை கோட்டம்) விருதுநகர் மண்டலம் சார்பில் திருவில்லிபுத்தூர் கிளையில் சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விபத்தில்லா ஓட்டுநர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா (11.03.2026) மேலாண்மை இயக்குனர் திரு.வி.சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சாலை விதிகள், தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் போக்குவரத்து வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த   ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு விழா நடத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் இவ்வாண்டு நமது மதுரை கோட்டத்தில் உள்ள மூன்று மண்டலங்களில் மதுரை மற்றும் திண்டுக்கல் மண்டலத்தில் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் மூன்றாவது விழாவாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா விருதுநகர் மண்டலத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான பாதுகாப்பான பேருந்து  சேவைகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து செயல்படுத்தியுள்ளார்கள்.குறிப்பாக மகளிர்களுக்கான விடியல் பயணத்திட்டத்தின் வாயிலாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.அதுபோல மாற்றுத்திறனாளிகள்,  பள்ளி மாணவ மாணவியர்கள், திருநங்கைகள் உட்பட எண்ணற்றவர்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.பொதுமக்களுக்காக சேவையாற்றி வருகிற ஓட்டுநர்கள் சாலைவிதிகளை கண்டிப்பாக கடைபிடித்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பான  பயணத்தினை  உறுதிப்படுத்த  வேண்டும் எனக் கேட்டுகொண்டார்.பின்னர் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் பாதுகாப்பாக பேருந்தைகளை இயக்கிய 50 ஓட்டுநர்களுக்கும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்திய 27 ஓட்டுநர்களுக்கும், சிறந்த தொழில்நுட்ப பணியாளர்கள், சிறந்த பொறியாளர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.இவ்விழாவில்  மண்டல பொது மேலாளர் திரு.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். உதவிமேலாளர் (தொழில் நுட்பம் ) திரு.சத்தியமூர்த்தி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Mar 13, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான ‘பசுமை சாம்பியன்’ விருதுகள் மற்றும் தலா ரூ.1 இலட்சம் பரிசுத்தொகைகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் (12.03.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர், அமைப்பு, கல்வி நிறுவனம் என  மூவருக்கு 2025  ஆம் ஆண்டிற்கான ‘பசுமை சாம்பியன்’ விருதுகள் மற்றும் தலா ரூ.1 இலட்சம் பரிசுத்தொகைகளை  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு சட்டமன்றத்தில் 03.09.2021 அன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, மாநில அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குச் சிறந்த பங்களிப்பை வழங்கும் 100 தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் 'பசுமை சாம்பியன் விருது' மற்றும் தலா ரூ. 1 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, 2025-ஆம் ஆண்டிற்கான விருதுநகர் மாவட்ட அளவிலான வெற்றியாளர்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு தேர்வு செய்தது. அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில், தேர்வு செய்யப்பட்ட திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த திரு.மாரியப்பன் என்பவருக்கு தனிநபர் பிரிவிலும், சிவகாசி பேஸ்புக் பிரண்ட்ஸ் என்ற அமைப்புக்கும், மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த திருமதி சுதா என்வருக்கு கல்வி நிறுவன பிரிவிலும் என மூன்று வெற்றியாளர்களுக்குப் பசுமை சாம்பியன் விருது மற்றும் தலா ரூ. 1 இலட்சத்திற்கான காசோலையினை நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் (TNPCB) மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த விருதுகள், கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் காட்டும் முன்மாதிரியான முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர்நிலை பாதுகாப்பு மற்றும் மரம் நடுதல் போன்ற பணிகளில் தீவிரமாகப் பங்காற்றியதற்காக இவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிகழ்வில் திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்) திரு.சு.இலக்குவன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.ஹேமந்த் ஜோசன்(தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், விருதுநகர்), காரியாபட்டி பேரூராட்சி தலைவர் திரு.செந்தில்,  உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 12, 2026

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில்,மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில், (11.03.2026) நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவிகள் வழங்கும் விழாவில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் 1071 பயனாளிகளுக்கு ரூ.17.80 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்று சுய சார்புடன் தமது சொந்தகாலில் நிற்க வேண்டும் எண்ணத்துடன் அவர்களை ஆற்றல்படுத்திடவும் அதிகாரப்படுத்திடவும், மகளிர் வாழ்வில் உள்ள வறுமை என்னும் இருளை நீக்கி வளம் என்னும் ஒளியை பரவச் செய்வதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசால் மகளிர் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட அமைப்பே தமழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகும். ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களை கண்டறிந்து அவர்களை செய்திடும் நோக்கத்துடன் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனமானது மகளிர் திட்டம் என்ற சீரிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறதுவிருதுநகர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் 450 ஊராட்சிகளில் 10,347 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. நகர்புறப் பகுதிகளில் 1 மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் மொத்தம் 3,943 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டிற்கு (2025-26) விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.1007 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்க இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு நாளது தேதி வரை 8,948 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.922.38 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் ஊரக மற்றும் நகர்ப்புறப்பகுதிகளில் தகுதிபெற்ற மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கிட ஏதுவாக வட்டார அளவில் தரமதிப்பீடு முகாம்கள் தொடர்ச்சியான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், இன்றைய தினம் அருப்புக்கோட்டை நகர்ப்புற பகுதிகளில் உள்ள 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.31.48 இலட்சம் மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.81.54 இலட்சம் மதிப்பிலும், இராஜபாளையம் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.56.8 இலட்சம் மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 22 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.58 கோடி மதிப்பிலும், சாத்தூர் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30.75 இலட்சம் மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 19 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலும், திருவில்லிபுத்தூர் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.54 இலட்சம் மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.39.66 இலட்சம் மதிப்பிலும், வெம்பக்கோட்டை ஊரகப் பகுதிகளில் உள்ள 14 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.56 கோடி மதிப்பிலும், வத்திராயிருப்பு நகர்ப்புற பகுதிகளில் உள்ள 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25.68 இலட்சம் மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலும் என மொத்தம் 99 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10.33 கோடி கடனுதவிகளும்அமுத சுரபி நிதி 264 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.88 கோடி கடனுதவிகளும், வட்டார வணிக வள மையம் மூலம் 83 பயனாளிகளுக்கு ரூ.41.50 இலட்சமும், சமுதாய முதலீட்டு நிதி 115 குழுக்களுக்கு ரூ.1.39 கோடி கடனுதவிகளும், நலிவு குறைப்பு நிதி 469 பயனாளிகளுக்கு ரூ.1.54 கோடி கடனுதவிகளும், நுண் நிறுவன நிதி 41 பயனாளிகளுக்கு ரூ.24.30 இலட்சம் கடனுதவிகளும், ஆக மொத்தம் 1071 பயனாளிகளுக்கு ரூ.17.80 கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊரகம் மற்றும் நகர்ப்புறப்பகுதிகளில் 54,325 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3787.46 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டு சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையச் செய்திட வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பெண்களின் உரிமைக்காகவும், மேம்பாட்டிற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் இது போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தும்தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசுக்கு தொடர்ந்து தங்கள் ஆதரவு வழங்க வேண்டும் என  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்   திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்  தெரிவித்தார்.தொடர்ந்து, சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கு 24 சான்றிதழ்களும், சமுதாய திறன் பள்ளி திட்டத்தின்கீழ் நிறைவு செய்த 160 இளைஞர்களுக்கு சான்றிதழ்களையும், 6 சுய உதவிக் குழுக்கள், ஒரு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் ஒரு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உள்ளிட்டவைகளுக்கு மணிமேகலை விருதுகளையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்   திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்  வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்) திரு.சு.இலக்குவன், அருப்புக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திருமதி சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி வசுமதி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 12, 2026

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல்  60 வயது வரை உள்ள உலமாக்கள் இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற விண்ணப்பிக்கலாம் .

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல்  60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு  இருசக்கர வாகனம் வாங்க மானியத்தொகை ரூ.25,000/- லிருந்து ரூ.50,000/-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள  பள்ளிவாசல்களில்  பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள்/ஆசிரியைகள்  உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும்  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்/சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இருசக்கர வாகனம் வாங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்  நல அலுவலகம்/ சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 13.03.2026 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 12, 2026

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வுகளுக்கான (தொகுதி-II மற்றும் தொகுதி -II-A)முதன்மை எழுத்துத் தேர்வு எதிர்வரும் (15.03.2026) அன்று நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்  எதிர்வரும் 15.03.2026  அன்று  முற்பகல் மற்றும்  பிற்பகல் ஒருங்கிணைந்த   குடிமைப்பணிகள்  தேர்வு -II  ( தொகுதி -II மற்றும் தொகுதி -II-A) முதன்மை எழுத்துத் தேர்வு - (Main Written Examination)    பதவிக்களுக்கான  போட்டித் தேர்வு விருதுநகர் , கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியில்   (K.V.S HR SEC SCHOOL VIRUDHUNAGAR) நடைபெற உள்ளது. முற்பகல் 229 தேர்வர்கள் மற்றும் பிற்பகல் 232 தேர்வர்கள் மொத்தம் 461 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இது குறித்து விருதுநகர் மாவட்ட  ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் வரும் 15.03.2026 அன்று முற்பகல் மற்றும்  பிற்பகல்  ஒருங்கிணைந்த   குடிமைப்பணிகள்  தேர்வு -II  ( தொகுதி -II மற்றும் தொகுதி -II-A) முதன்மை எழுத்துத் தேர்வு - (Main Written Examination)  நடைபெறவுள்ளது. தேர்வு நடைபெறும் மையத்திற்கு  தேர்வர்கள் முற்பகல் நடைபெறும் தேர்விற்கு காலை  08.30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு நுழைவுச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.   தேர்வுக்கான நுழைவுச்சீட்டு  (Hall Ticket) www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு நாள் அன்று ( 15.03.2026) காலை 09.00 மணிக்கு மேல்  தேர்வு கூடத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் . மேலும்  தேர்வர்கள் 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். பிற்பகல் நடைபெறும் தேர்விற்கு பிற்பகல்  01.30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு நுழைவுச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். பிற்பகல் 02.00 மணிக்கு மேல்  தேர்வு கூடத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் . மேலும்  தேர்வர்கள் பிற்பகல் 05.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.   தேர்வர்கள் கருப்புநிற பந்துமுனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  மேலும் தேர்வர்கள் தேர்வு கூடத்தின் உள்ளே மொபைல் போன், மின்னணு கைக்கடிகாரம் (Electronic Watch ) புளுடூத் (Bluetooth)  போன்ற  மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் தேர்வு கூடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்து  வசதிகள்  தேர்வு நாளன்று காலை 06.00 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட முக்கிய அறிவுரைகளை பின்பற்றி தேர்வில் வெற்றி பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ சுகபுத்ரா, I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 12, 2026

கட்டுமானப் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் பதிவு பெற்ற, பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளிகளின் வாரிசுதாரர்களுக்கு காசோலையினை மாவட்ட ஆட்சியர்அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (11.03.2026) கட்டுமானப் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் பதிவு பெற்ற/ பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளிகளின் வாரிசுதாரர்களுக்கு ரூ.28 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் தமிழ்நாடு உடலுழைப்பு நலவாரியம் முதலான 20 நலவாரியங்கள் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மேற்படி 20 அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம், ஓய்வூதியம் நிதி உதவி விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.கட்டுமானப் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் பதிவு பெற்ற/ பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளியின் வாரிசுதாரர்களுக்கு பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை 11.06.2025 அன்று ரூ.8,00,000/- ஆக உயர்த்தப்பட்டது. அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணமடைந்த ஒரு தொழிலாளியின் வாரிசுதாரருக்கு ரூ.8 இலட்சத்திற்கான காசோலையினையும், மேலும், கட்டுமானப் பணியிடங்களில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இறந்த 4 கட்டுமானத் தொழிலாளர்களின் பணியிடத்து விபத்து மரணத்திற்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.20 இலட்சத்திற்கான காசோலையினையும் என ஆக மொத்தம் ரூ.28 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

Mar 11, 2026

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோணுகால் ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோணுகால் ஊராட்சியில்  (10.03.2026) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர். 

Mar 11, 2026

ரூ.30 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இராஜபாளையம் இணைப்புச்சாலையினை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் (10.03.2026) நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024-2025 கீழ் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முதல் இராஜபாளையம் அரசு மருத்துவமனை வரை ரூ.30 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இணைப்புச்சாலையினை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இந்த இணைப்பு சாலை இன்றைக்கு நேற்று போட்ட திட்டமல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு துணை முதலமைச்சராக இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த போது, இந்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்ல புதிய பேருந்து நிலையத்திற்கும் - தென்காசி சாலைக்கும் ஒரு இணைப்பு இருந்தால்தான் ஏதுவாக இருக்கும் என கணித்தார்.அந்த வகையில், அன்று அவர் கணித்த இந்த இணைப்பு சாலை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசினாலே தொடங்கி முடிக்கப்பட்டுள்ளது.இந்த இணைப்பு சாலை பணிக்கு ரூ.30.00 கோடியும், நில எடுப்பிற்காக  ரூ.8.34 கோடியும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு மொத்தம் ரூ.38.34 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  இராஜபாளையம் நகரமானது வளர்ந்து வரும் ஒரு முக்கிய நகரமாகும். இந்நகரத்தில் பின்னலாடைகள் மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால், இராஜபாளையம் நகருக்குள் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இராஜபாளையத்தின் புதிய பேருந்து நிலையம் இராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளதால்,மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் தென்காசி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் முக்கிய வீதிகளில் சென்று வருகிறது. அவ்வாறு வருவதால், பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதித்த வண்ணம் உள்ளது. இவற்றை கருந்தில் கொண்டு இந்த புதிய சாலையை அமைப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு சாலைப்பணிகள் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கி இப்பணிகள் முடிக்கப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் திருநெல்வேலி, சங்கரன்கோவில், இராஜபாளையம், மதுரை, தென்காசி, கொல்லம் போன்ற வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் ஊருக்குள் சென்று நெரிசல் ஏற்படுத்தா வண்ணம் மக்களுக்கு இடையூறு இன்றி புதிய சாலை வழியாக இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று அதே வழியில் திரும்பி செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது.மேலும், இச்சாலையானது இராஜபாளையம், புதுப்பாளையம், கடம்பன்குளம், செட்டிகுளம், நடுவக்குறிச்சி, இந்திரா நகர், ஸ்ரீரங்கபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதி மக்களின் போக்குவரத்திற்கு பயனுள்ள வகையில் இருக்கும்.  இதனால் இராஜபாளையத்திற்கு போக்குவரத்து நெரிசல் குறையும்.இது மட்டுமல்லாமல், இராஜபாளையம் நகருக்கு மேம்பாலமும், தாமிரபரணித் திட்டமும் என கடந்த ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இராஜபாளையம் நகரத்தில் என்னென்ன திட்டங்கள் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து கொடுத்திருக்கின்றோம்.மேலும், கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதை 2000 ரூபாவாக உயர்த்தி வழங்கப்படும் என  முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.அதுபோல அரசு பள்ளியில் படித்திருக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என ஒவ்வொன்றாக சிந்தித்து திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துகிறார்கள். மேலும், நியாய விலைக்கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவது என்பது வயதானவர்களுக்கு மிகப்பெரிய காரியமாக இருந்தது. அதனை மாற்றி தாயுமானவர் திட்டத்தின் மூலம் ரேஷன் கடை ஊழியர்கள் வயதானவர்களுக்கு வீடு தேடி பொருள்களை வழங்கி வருகிறார்கள்.இது போன்ற எண்ணற்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வரும் இந்த அரசுக்கு பொதுமக்கள் என்றும் ஆதரவாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 122 123

AD's



More News