விருதுநகர் மாவட்டம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (12122025) எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு முன்னதாக, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என். ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் (12.12.2025) நடைபெற்ற அரசு விழாவில், வெல்லும் தமிழ்ப் பெண்கள் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் (12.12.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுமான் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் ஆகியோர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், 38,263 மகளிருக்கு ரூ.3 கோடியே 82 இலட்சம் மதிப்பில் கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறும் வகையில் மகளிர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான 2023 செப்டம்பர் 15 ஆம் நாள் காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிக்கு மாதம் ரூ 1000/ (ஆண்டிற்கு ரூபாய் பன்னிரெண்டாயிரம் மட்டும்) கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் தொகையாக வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 1,11,637 பயனாளிகளுக்கு ரூ.1000/- வீதம் மாதந்தோறும் ரூ.1.12 கோடி வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விதிகளை தளர்வு செய்து புதிய பயனாளிகள் தேர்வு செய்யும் பொருட்டு, மாவட்டத்தில் ஜீலை -2025 முதல் நவம்பர் -2025 முடிய நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் 67,551 புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு செய்து, இதில் 38,263 தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, அருப்புக்கோட்டை வட்டத்தில் 5,199 பயனாளிகள், காரியாபட்டி வட்டத்தில் 2,202 பயனாளிகள், இராஜபாளையம் வட்டத்தில் 7,305 சாத்தூர் வட்டத்தில் 2,190 பயனாளிகள், சிவகாசி வட்டத்தில் 7,800 பயனாளிகள், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 2,944 பயனாளிகள், திருச்சுழி வட்டத்தில் 1,762 பயனாளிகள், வெம்பக்கோட்டை வட்டத்தில் 2,393 பயனாளிகள், விருதுநகர் வட்டத்தில் 3,869 பயனாளிகள், வத்திராயிருப்பு வட்டத்தில் 2,599 பயனாளிகள் என மொத்தம் 38,263 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1000- வீதம் மாதந்தோறும் ரூ.3.83 கோடி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவுள்ளது.இதன் மூலம் நமது விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டம் 1,11,637 மற்றும் இரண்டாம் கட்டம் 38,263 ஆக மொத்தம் 1,49,900 பயனாளிகள் மாதந்தோறும் ரூ.14.99 கோடி பெற்று பயனடைய உள்ளனர்.அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில் 1200 பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் (ATM Cards) வழங்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் திரு.காளிமுத்து, திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் மைக்கேல் ஆண்டனி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, சாத்தூர் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிச்செல்வன், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் திரு.ஆர்.மாதவன், திருவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவர்திரு. ரவிக்கண்ணன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் 2026 ஆம் ஆண்டிற்கான " கபீர் புரஸ்கார் விருது" ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால் குடியரசு தினவிழாவின் போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா – ரூ.20.000/-. ரூ.10.000/- மற்றும் ரூ.5,000/- என தகுதியுடையோர்க்கு வழங்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர். மேலும் இவ்விருதானது ஒரு இனம் வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற இனவகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது வீரம் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு இணையதள முகவரியான http://awards.tn.gov.in. மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 15.12.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும் அதற்கு பின்னர் தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 19.12.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், விருதுநகர் சூலக்கரையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BHAVAN, ANAAMALAIS TOYOTA, TTK HEALTH CARE, SRI RAM MOTORS, DEVENDRAN PLASTICS போன்ற 20 க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு I.T.I. டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்ய உள்ளார்கள்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலை நாடுநர்கள் 19.12.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு சுயவிவரச் சான்றிதழ் (RESUME), அனைத்து கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnrjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், உப்பத்தூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் (10.12.2025) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின்(தாட்கோ) சார்பில் ஆடு/மாடு வளர்ப்பு தொழில் புரிவதற்கு கடனுதவி பெற்ற 24 பயனாளிக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 இலட்சம் மானியத்திற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசானது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நலனுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதோடு, ஆதிதிராவிடர் / பழங்குடியினர் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை / சுய வேலைவாய்ப்புக்காக திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல் மற்றும் அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்ட கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி, தாட்கோ நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு, நிலம் வாங்கும் திட்டம், சுய உதவி குழுக்களுக்கு பொருளாதார உதவி, திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட வாழ்வாதாரத் திட்டங்கள் மூலம் வங்கி கடனுதவிக்கான மானியங்களையும்,சுகாதாரப் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீட்டு, இயற்கை மரணத்திற்கு உதவி, இறுதிச் சடங்குகளுக்கு உதவி, திருமணத்திற்கான உதவி, மகப்பேறு உதவி, கண் கண்ணாடி, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட நிதியுதவிகளையும் வழங்கி வருகிறது.அந்த வகையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், உப்பத்தூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் (10.12.2025) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிமற்றும்மேம்பாட்டுக்கழகத்தின்(தாட்கோ) சார்பில் ஆடு/மாடு வளர்ப்பு தொழில் புரிவதற்கு கடனுதவி பெற்ற 24 பயனாளிக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 இலட்சம் மதிப்பிலான மானியத்திற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், பயனாளிகளிடம் குடும்பத்தின் வாழ்வாதாரம், பொருளாதார மேம்பாடு, குழந்தை கல்வியின் முக்கியத்துவம், அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினார்.இத்திட்டத்தின் கீழ், பயனடைந்தவர்கள் எங்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்கான கடனுதவிகளை வழங்கியதோடு, அதற்கான மானியத்தையும் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வில், தாட்கோ மாவட்ட மேலாளர்(பொ) திருமதி அ.மஞ்சுளா, சாத்தூர் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ரா.பாண்டிச்செல்வன், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய வாக்காளர் அடையாள அட்டை/ இறந்த நபரின் பெயரை நீக்கம்/திருத்தம்/பகுதி மாற்றம் செய்தல்/ வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்தல் முறையே படிவம் 6, படிவம் 7 மற்றும் படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்குவதற்கு அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் 10.12.2025 புதன் மற்றும் 11.12.2025 வியாழக்கிழமை ஆகிய இரண்டு தினங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மேற்படி முகாமினை பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04562)-1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/-(ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தகுதியுரையுயம் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதலமைச்சர் அவர்களால் தேர்வு செய்யப்படுகிறார்.2025ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம். தங்களது விண்ணப்பம், சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2025ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 18.12.2025 என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., எனத் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.12.2025 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும், விவசாயிகள் வட்டாரத்திற்கு இருவர் வாரியாக பொதுவான கோரிக்கைகள் மட்டும் விவாதிக்கவும், சிறந்த முறையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தினை நடத்திட முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2026- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு முன்னதாக, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தையும் சரிபார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டுமென்பதால், விருதுநகர் மாவட்டம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம். தளத்தில் (பழைய DRDA அலுவலகம்) வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 11.12.2025 முதல் முதல்நிலை சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது.மேற்படி, 11.12.2025 முதல் விருதுநகர் மாவட்டம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் (பழைய DRDA அலுவலகம்) வைப்பறை கிட்டங்கி, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் தலைமையில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்(LA) மேற்பார்வையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கிட்டங்கி திறக்கப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெல் நிறுவன பொறியாளர்களால் சரிபார்க்கப்படும்.மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அல்லது அவர்களால் நியமிக்கப்படும் முகவர்கள் காலை 09.00 மணி முதல் மாலை 07.00 வரை நடைபெறும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை நேரில் பார்வையிடலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர்-விருதுநகர் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 407 Rly KM: 541/200-300 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.எனவே, 10.12.2025 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 வரை பராமரிப்பு பணிகளுக்காக, அந்த ஒரு வழித்தடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.