விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் செங்குன்றாபுரம் கிராமத்தில் விவசாயிகள் விளைநிலங்களில் பயிர் செய்துள்ளதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (01.09.2026) பார்வையிட்டார்.தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் பரப்பளவு, பயிர் வகைகள், சாகுபடி நிலை உள்ளிட்ட விவரங்களை துல்லியமாக பதிவு செய்யும் வகையில் டிஜிட்டல் முறையில் பயிர் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்னணு முறையில் பயிர்கணக்கெடுப்பு பணியானது நவீன தொழில் நுட்பங்கள் துணையுடன் நிகழ்கால பயிர் கணக்கெடுப்பு விவசாய நிலங்கள் புகைப்படத்தோடு கைப்பேசி செயலி மூலம் அனைத்து விவசாயிகளின் நிலங்களிலும் விடுதலின்றி ஒவ்வொரு பருவத்திலும் பயிர்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி, வத்திராயிருப்பு, திருவல்லிபுத்தூர், சிவகாசி, திருச்சுழி, விருதுநகர், இராஜபாளையம், காரியாபட்டி, வெம்பக்கோட்டை, சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 601 கிராமங்களில் 9,40,138 புல உட்பிரிவுகளில் உள்ள நிலங்களில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 2,35,357 புல எண்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,04,781 புல எண்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி, விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு பணிகளில், களப்பணியாளர்கள் அலைபேசி செயலி வாயிலாக பயிர் வகை, சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பளவு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், கணக்கெடுப்பு பணிகளின்போது விவசாயிகளிடமிருந்து பெறப்படும் தகவல்கள் சரியாகவும், முழுமையாகவும் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், கள ஆய்வின்போது நிலத்தின் உண்மை நிலவரத்துடன் பதிவுகள் பொருந்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பயிர் கணக்கெடுப்பு மூலம் பெறப்படும் தரவுகள், மாவட்டத்தில் வேளாண் சாகுபடி நிலவரத்தை துல்லியமாக அறிந்து கொள்வதற்கும், விவசாயிகளுக்கான அரசு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கும், வங்கிக்கடன் பெறுவதற்கும், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கான நிவாரணம், பயிர் காப்பீடு மற்றும் வேளாண்மை தொடர்பான திட்டமிடல் பணிகளுக்கும் முக்கிய ஆதாரமாக அமையும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அ.அம்சவேணி, தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.ஆறுமுகம், வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (01.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் விதமாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகின்ற 15.09.2026 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 60 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 அரசு மருத்துவமனைகள், 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் 15.09.2026 அன்று முதல் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு சராசரியாக 25 முதல் 30 குழந்தைகள் பிறக்கின்றன.அதன்படி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.இந்த ஆய்வின்போது, தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், தங்க மோதிரம் வைப்பறைகள், அதற்கான பாதுகாப்பு வசதிகள், நிகழ்ச்சி நடைபெறும் இடம், பயனாளிகள் அமர்வதற்கான ஏற்பாடுகள், வருகை தரும் பயனாளிகளுக்கு முறையாக வசதிகளை ஏற்படுத்தி தருதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.வே.யசோதாமணி, மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், அழகாபுரியில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் திருநர்களுக்காக நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவியல்(AI and Robotics) தொழில்நுட்பப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (01.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருநர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்களுக்கு சுயதொழில் மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இத்தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் 10 திருநர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.இப்பயிற்சியில் பங்கேற்ற திருநர்களிடம் பயிற்சியின் மூலம் தங்களுக்கு கிடைக்கும் பயன்கள், கற்றுக்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மற்றும் பயிற்சிக்குப் பின்னர் மேற்கொள்ள விரும்பும் சுயதொழில் நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.திருநர்களின் திறன்களை மேம்படுத்தி, சுய தொழில் புரிந்து பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கும், சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இப்பயிற்சியில் கலந்து கொண்ட திருநர்கள், தங்களுக்கு பயனளிக்கும் வகையில் தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாங்கள் பயிற்சி பெற்று, வேலைவாய்ப்பை பெறுவதோடு, எங்களைப் போன்ற திருநர்களுக்கும் இந்த பயிற்சியை வழங்க முடியும். இதனால் எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். இந்த வாய்ப்பளித்ததற்கும், திருநர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வின்போது, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.ம.சு.சரவணன், ஆவின் பொது மேலாளர் திருமதி தேவகி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், அரசு அலுவலர்கள், பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியில் பங்கேற்ற திருநர்கள் உடனிருந்தனர்.
தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் அனைத்து சுற்றுலா ஏற்பாட்டளர்கள், சுற்றுலா தொழில் முனைவோர்கள் மற்றும் ஓட்டல் முகவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.எனவே, இவ்விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணைய தள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்தபயணபங்குதாரர் , சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம் , தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், பல்வேறு சுற்றுலாப்பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர், சிறந்த சிறப்பு சுற்றுலா நிறுவனம்-சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம், சிறந்த சாகச மற்றும தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் உள்ளிட்ட 13 வகையான விருதுகள் சுற்றுலாத்துறையின் மூலம் வழங்கப்படுகின்றன.எனவே மேற்குறிப்பிட்ட விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வருகின்ற 30-9-2026க்குள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் சார்ந்தவர்களும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S, அவர்கள் தலைமையில் (31.08.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பணியின் போது உயிர்நீந்தவரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையையும் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால், நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு பணி நியமன ஆணையையும் வழங்கினார். 2025 – 2026 ஆம் கல்வியாண்டில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அரசு செவித்திறன் குறையுடையோர்க்கான சிறப்பு பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற/தேர்ச்சி பெறாத மாணவர்கள் தொழிற் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக சிறப்பு முகாம்கள் 27.08.2026 மற்றும் 28.08.2026 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இம்முகாமின் மூலம் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி, வாழ்த்துக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 556 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.சையது முகமது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.முருகானந்தம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி மோகனா, ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் திருமதி சாந்தி, முதன்மை கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரம்ம நாயகம், பொது மேலாளர் (தாட்கோ) திருமதி இந்திராகாந்தி, அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் செயல்பட்டு வரும் உடற்பயிற்சி கூடமானது தற்போது நவீனமயமாக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையமாக மாற்றி அமைக்கப்பட்டு 30.08.2025 அன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது.அனைத்து வயதினரின் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் மேம்படுத்திடும் நோக்கத்துடன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முலம் மேம்படுத்தப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக உறுப்பினர் சந்தா கட்டண விவரங்கள் தலைமையலுவலகத்தினால் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, 01.09.2026-இல் இருந்து உறுப்பினர் சந்தா கட்டணம் 1 மாதத்திற்கான தவணை முறை கட்டணமாக ரூ.525/-, 3 மாதங்களுக்கான தவணை முறை கட்டணமாக ரூ.1260/-, 6 மாதங்களுக்கான கட்டணமாக ரூ.2310/-, 1 வருடத்திற்கான கட்டணமாக ரூ.4410/-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட பயிற்சியாளரைக் கொண்டு உடற்பயிற்சி கூடமானது செயல்பட்டு வருகின்றது. மேலும், நவீன உடற்பயிற்சி கூடத்தினைப் பயன்படுத்தும் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள கட்டணத்தொகையில் 50% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தெரிவித்துளாளர்.
மக்கள் தொடர்பு திட்ட முகாம் 09.09.2026 அன்று சிவகாசி வட்டம், நாரணாபுரம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.ஒவ்வொரு மாதமும் 2-ஆவது புதன்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், வருகின்ற 09.09.2026 அன்று சிவகாசி வட்டம், நாராணாபுரம் கிராமத்தில் உள்ள லலிதா மஹாலில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.இம்முகாமில் பல்வேறு துறைசார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளன.பொதுமக்கள் மனுக்கள் வழங்கி தீர்வு பெறலாம். ஏற்கனவே, பெறப்பட்ட மனுவின் மீது தீர்வு காணப்பட்டு, தகுதியுள்ள மனுதாரர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI- Top Class education in schools for OBC, EBC & DNT Students) செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, 2026-27 ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) அறிவிக்கப்பட்டுள்ளது. (Top class School) சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100% தேர்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் – 12 வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தில் புதுப்பித்தல் மற்றும் புதியதாக விண்ணப்பிப்பதற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarship.gov.in) விண்ணப்பிக்கலாம்.இத்திட்டத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயில்பவருக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.75,000/-, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1,25,000/- வரை உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற 30% மாணவியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் பயன்பெற மாணவ/மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-26 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் 2025-26 கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ/மாணவியர்கள் நடப்பாண்டில் (2026-27) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு விண்ணப்பத்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதிசெய்து (National Scholarship Portal - (https://scholarship.gov.in) கல்வி உதவித்தொகை படிவத்தை புதுப்பித்தல் (Renewal) செய்து இணைப்பில் பூர்த்தி செய்து 31.08.2026க்குள் விண்ணப்பித்திட வேண்டும். இணையதளத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள மாணவ/மாணவிகளின் விண்ணப்பங்களை தத்தம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரிபார்ப்பதற்கான (புதுப்பித்தல் - for Renewal) கடைசி நாள்: 15.09.2026.மேலும், இத்திட்டத்திற்கு 2026-27-ஆம் ஆண்டிற்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிப்பதற்கான தேதி NSP இணையத்தில் அறிவிக்கப்படும்.மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship portal (https://scholarship.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணைதளத்தில் (https://socialjustice.gov.in) அறிந்துக் கொள்ளலாம். தகுதியான மாணவ/மாணவியர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறு, சிறு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் புதிய ஒப்பந்தப்பணிகளை பெற்றிடும் வகையில் நடத்தப்பட்ட தனியார் துறை விற்பனையாளர் மேம்பாட்டுக் கண்காட்சியில் பங்குபெற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் (27.08.2026) நினைவு பரிசுகளை வழங்கினார். பாரத பிரதமர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் உள்ள குறு, சிறு நிறுவனங்கள், புதிய தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் 27.08.2026 மற்றும் 28.08.2026 ஆகிய இரண்டு நாட்கள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் கண்காட்சி அரங்குகளை அமைத்து, தங்களது உற்பத்திப் பொருட்கள், சேவைகள் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை காட்சிப்படுத்தினர்.மேலும், மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள், கொள்முதல் நடைமுறைகள், ஒப்பந்தப்பணிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.இதன் மூலம், உள்ளூர் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திறனை அதிகரித்து, புதிய சந்தை வாய்ப்புகளைப் பெறுவதுடன், மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதல் நடவடிக்கைகளில் பங்கேற்று வளர்ச்சியடைய வழிவகை ஏற்படுத்தப்பட்டது.இக்கண்காட்சியில் அரசு மற்றும் பொதுத்துறையைச் சேர்ந்த 40 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க திட்டம், டான்சி மத்திய காலனி பயிற்சி மையம், தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகம், காதி கிராம தொழில் வாரியம், உணவுப் பாதுகாப்பு கழகம், ஒருங்கிணைந்த ஜவுளி மேம்பாட்டு மையம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம், மத்திய இரயில்வே, இந்திய அஞ்சல் துறை, அரசு இ-வணிக (GEM), கல்பாக்கம் அனல் மின்நிலையம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்திய கனரக வாகன உற்பத்தி தொழிற்சலை போன்ற நிறுவனங்கள் பங்கேற்றனர்.இந்த வாய்ப்புகளை மாவட்டத்தில் உள்ள குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்காக ஏற்படுத்தி தந்தமைக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் குறு, சிறு தொழில் நிறுவனம் இணை இயக்குநர் திரு.தயாளன், தமிழ்நாடு தொழில் மையம் பொது மேலாளர் திரு.கண்ணன், உதவி இயக்குநர் திரு.கிரண் தேவ் சடுலூரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள்(கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின் படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.களி மண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும்பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயனசாயம்/ எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்குகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகு படுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்.அதன்படி, விருதுநகரைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து வரும் சிலைகள் கல் கிடங்கிலும், ஆவுடையாபுரத்திலிருந்து வரும் சிலைகள் அங்குள்ள உபயோகப்படுத்தாத கிணற்றிலும், சிவகாசி நகர்புறங்களில் இருந்து வரும் சிலைகள் தெய்வானை நகரில் உள்ள உபயோகப்படாத கிணற்றிலும், எம்.புதுப்பட்டி, மாரனேரி ஊர்களில் இருந்து வரும் சிலைகள் மாரனேரி கண்மாயிலும்,ஸ்ரீவில்லிபுத்துார் நகரிலிருந்து வரும் சிலைகள் ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகத்திலும், பந்தல்குடியை சுற்றியுள்ள இடங்களில் இருந்து வரும் சிலைகள் பந்தல்குடி பெரிய கண்மாயிலும், இராஜபாளையம் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள சிலைகள் ஜெயவிலாஸ் பஸ் கம்பெனிக்கு எதிர்புறம் உள்ள வடுகவூரணியிலும், அம்மாபட்டி, ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளத்திலிருந்து வரும் சிலைகள் அப்பகுதியிலுள்ள உபயோகப்படுத்தப்படாத கிணறு, தெப்பம் மற்றும் ஆலங்குளம் குவாரி பகுதியிலும்,கிருஷ்ணன் கோவில் சிலைகள் ராமச்சந்திராபுரம் கண்மாய் குன்னுார் சிலைகள் குன்னுார் கண்மாயிலும், வத்திராயிருப்பு மற்றும் கூமாபட்டி சிலைகள் மகாராஜபுரம் மற்றும் கூமாபட்டி பெரியகுளம் கண்மாயிலும், அருப்புக்கோட்டை நகர்புறத்தில் இருந்து வரும் சிலைகள் பந்தல்குடி ரோட்டிலுள்ள பெரிய கண்மாயிலும், ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவிலிருந்து வரும் சிலைகள் திருவண்ணாமலை கோனகிரி குளத்திலும் கரைக்க வேண்டும்.எனவே, விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.