விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் செல்வி. ச.கீரத்தனா அவர்களை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (15.05.2026) பூங்கொத்து வழங்கி வரவேற்றார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் என்.ஸ்ரீநாதா,இ.கா.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் ஆகியோர் உள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (14.05.2026) நடைபெற்ற நிகழ்வில், இளைஞர் நீதிக் குழுமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது கல்வியைத் தொடர்வதற்காக, 2026-2027 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை ரூ. 24,000/- க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் மாணவரின் பெற்றோரிடம் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த மாணவர், தான் இளைஞர் நீதிக் குழுமத்தைச் (Juvenile Justice Board - JJB) சார்ந்த இளஞ்சிறார் பிரிவில் உள்ளதாகவும், தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தனது குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதால், மேல்படிப்பைத் தொடர கல்வி உதவித்தொகை வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.அம்மாணவரின் கோரிக்கையை ஏற்று, அவரது கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகையாக ரூ. 24,000/- வழங்கப்பட்டது. இதற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவரின் பெற்றோரிடம் நேரில் வழங்கினார். இந்நிகழ்வில், இளைஞர் நீதிக் குழும உறுப்பினர் திருமதி முனியம்மாள், கல்லூரி முதல்வர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மே - 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22.05.2026 அன்று காலை 11.00 மணியளவில், விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S,.அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயப் பெருமக்கள், விவசாயம் சார்ந்த பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனுக்களாக அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவாதங்களின் போது ஒவ்வொரு வட்டாரத்திற்கும் இருவர் வீதம் (வட்டாரத்திற்கு இருவர்) பொதுவான கோரிக்கைகள் குறித்து மட்டும் விவாதிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தைச் சிறந்த முறையில் நடத்திட விவசாயப் பெருமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பன்முக திறமை கொண்டவர்களுக்கு 2027-ஆம் ஆண்டு ஜனவரி -26-ஆம் தேதி குடியரசு தின விழாவில் "பத்ம விருது" வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.2025-ம் ஆண்டு பத்ம விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள்:1. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் (ஆண்/பெண்) விண்ணப்பிக்கலாம்.2. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப்பணிகள், வர்த்தகம் மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்குவராக இருத்தல் வோர்டும்.3. பத்ம விருது குறித்த விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் (https://awards.gov.in) 15.03.2026 முதல் வெளியிடப்பட்டுள்ளது.4. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.07.2026 இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.5. இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தலா 3 நகல்கள் 31.07.2026-ற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், கருத்துருக்களை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதநகர். 04562-252 701 என்ற முகவரிக்கு சமர்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான சிறப்பு தடுப்பு பணி பிரிவு (District Level Task Force) மற்றும் மணல் ஒருங்கிணைப்புக் குழு (Sand Co-ordination Committee) கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தலைமையில் (13.05.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாவட்டத்தில் சட்டவிரோத மணல் மற்றும் கனிமக் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் 2026 மாதங்களில் வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் கனிம வளத்துறை இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனைகள் மற்றும் வழக்குகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.குறிப்பாக, சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள் பரிசீலிக்கப்பட்டன.மேலும், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகள், கிரானைட் குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு, விதிமுறைகள் மீறப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டனர்.கனிமக் கடத்தலைத் தடுக்கும் வகையில் வருவாய், காவல், சுரங்கத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அனைத்து வட்டார அளவிலும் வட்டாட்சியர்களால் பணிக்குழு கூட்டங்களும் முறையாக நடத்தப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.மேலும், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக கனிமங்கள் பயன்படுத்தப்படும் போது, விதிகளின்படி அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், பயன்பாட்டு சான்றிதழ்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S., உதவி இயக்குநர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) முனைவர்.சி. சுகதாரஹிமா, கோட்டாட்சியர்கள், காவல் துறை, சுரங்கத்துறை மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் (14.05.2026) மாவட்ட நிர்வாகம், போக்குவரத்துத் துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு பணிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் என்.ஸ்ரீநாதா, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வில் தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் கட்டுப்பாடு மற்றும் நடைமுறை படுத்துதல்) விதிகள் 2012-ன் படி, தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா, உரிய மருத்துவ உபகரணங்களுடன் கூடிய முதலுதவி பெட்டி பொருத்தப்பட்டுள்ளதா, அவசரகால வழிகள் (Emergency Exit) அமைக்கப்பட்டுள்ளதா, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, உரிய நடத்துநர் உரிமம் பெற்ற உதவியாளர் (Attender), ஓட்டுநருக்கு உதவியாக மாணவ, மாணவியர்கள் உரிய முறையில் வாகனத்தில் ஏறி இறங்கும் பொழுது உதவி புரியும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளாரா, மாணவ, மாணவியர் வாகனத்தின் எளிதாக ஏறும் வகையில் படிக்கட்டின் முதல் படி தரையில் இருந்து 25 செ.மீ இல் இருந்து 30 செ.மீ;-க்குள் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளதா, வாகன ஓட்டுநரின் இருக்கைப்பகுதி தனியாக பிரிக்கப்பட்டுள்ளதா, இருக்கைகள் முறையாக வாகனத்தின் தரைதளத்துடன் Bolts மூலம் பொருத்தப்பட்டுள்ளதா, புத்தகப்பைகள் வைத்திட தனியாக Racks அமைக்கப்பட்டுள்ளதா, வாகனத்தின் தரைத்தளம் முழுமையாக ஒன்றாக நல்ல தரத்துடன் பொருத்தப்பட்டுள்ளதா, வாகனத்தின் பக்கவாட்டு ஜன்னல்கள் மாணவ, மாணவியர் கரம், சிரம் நீட்டாதவாறு, மூன்று நீளமாக கிடைமட்ட கம்பிகளால் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்தும், போதிய பராமரிப்பு உள்ளதா போன்றவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (கட்டுப்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துதல்) சிறப்பு விதிகளின்படி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத்துறை, பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகள் இணைந்து பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்து வருகிறார்கள்.அதனடிப்படையில், விருதுநகர் போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள 46 பள்ளிகளைச் சேர்ந்த 249 வாகனங்கள், திருவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 27 பள்ளிகளைச் சேர்ந்த 84 வாகனங்கள், சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 38 பள்ளிகளைச் சேர்ந்த 185 வாகனங்கள், அருப்புக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 43 பள்ளிகளைச் சேர்ந்த 182 வாகனங்கள், இராஜபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 45 பள்ளிகளைச் சேர்ந்த 177 வாகனங்கள் என மொத்தம் 199 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 877 வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 688 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில் 656 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி உடையவையாக உள்ளன. 32 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி இல்லாத காரணத்தினால் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட வாகனங்கள் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர், பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், மாணவர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயல்படுவோம் என்ற உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.இந்த ஆய்வின் போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திரு.மாணிக்கம்(விருதுநகர்), திரு.சந்திரசேகர்(திருவில்லிபுத்தூர்), வேலுமணி(சிவகாசி), சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், வாகன ஆய்வாளர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (14.05.2026) பள்ளிக்கல்வித்துறை சார்பில், 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 603- மாணவர்களை கண்காணித்து, சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் தொடர்பாக ஒன்றிய வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் தனி பொறுப்பு அலுவலர்களுடனான (Nodal Officers) ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் - ஏப்ரல் 2026ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள், விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் 219 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 99 தேர்வு மையங்களில் 9,731 மாணவர்களும், 11,599 மாணவியர்களுமாக மொத்தம் 21,330 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இம்மாணவர்களில், 20,727 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், 603-தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்காணித்து, சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது: மாணவர்களை அவர்களின் இல்லத்தில் சந்தித்து, மறுதேர்வு எழுதுவது தொடர்பாக உரிய விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக மறுதேர்வு எழுதுவதை தவிர்க்கும் மாணவர்களை கண்டறிந்து பெற்றோருடன் தொடர்பு கொண்டு மாணவர்கள் மீண்டும் தேர்விற்கு தயாராகும் வகையில் ஊக்குவிக்க வேண்டும்.சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும். மாணவர்களின் வருகை மற்றும் முன்னேற்றத்தை வாரந்தோறும் கண்காணிக்க வேண்டுமெனவும், தொடர்புடைய அலுவலர்கள் உடனடியாக மேற்படி பணிகளை மேற்கொண்டு மாணவர்கள் 100% தேர்ச்சி பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.அரவிந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக, சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்15.05.2026 அன்று வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I.A.S., அவர்கள் தகவல்விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 15.05.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், விருதுநகர் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BHAVAN, SAMARTHANAM TRUST FOR DISABLED, CEPHAS MEDICAL, VISTAAR FINANCE, ABIS FOODS AND PROTEIN PVT LTD போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு I.T.I.டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 15.05.2026 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு சுய விவரச் சான்றிதழ் (RESUME) அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும், இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnrjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I.A.S.., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (11.05.2026) அன்று தென்மேற்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I.A.S.., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:மழையினால் பாதிப்புக்குள்ளாகும் இடங்களை கண்டறிந்து பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏதுவாக, நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்து அதன் பொறுப்பு அலுவலர்களுக்கு சம்மந்தப்பட்ட துறையினருடன் சேர்ந்து ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்.இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாக்க சட்டம் ஒழுங்கு கடைப்பிடிக்க வேண்டும். மழைக்காலங்களில் சாலையோரம் மரங்கள் விழும் பொழுது போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும்.மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வட்ட மற்றும் வட்டார அளவில் மாதிரி வெள்ள மீட்பு ஒத்திகைகள் (Mock Drills) நடத்தி நாளேடுகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் MI Tank ஆய்வு செய்திருக்க வேண்டும். வெள்ள நீர் சீரான முறையில் செல்வதை தடுக்கும் முட்செடிகள் மற்றும் புதர்களை அகற்றுதல் சிறுபாசனக் கண்மாய்கள், ஊரணி, குளங்கள் திறந்தவெளிக் கிணறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், இவைகளிலுள்ள விரிசல்கள், உடைப்புகளை சரி செய்தல், குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் சூழ்வதை தவிர்த்தல், போதிய அளவு மணல் மூட்டைகள், சாக்குப் பைகளை உடைப்புகளை சரிசெய்யும் பொருட்டு இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஊரணிகளை ஆய்வு செய்ய வேண்டும். வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பொருட்டு ஜேசிபி மற்றும் கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் உறுதியாளர்கள் கைபேசி எண், மாவட்ட நிலை அதிகாரிகளின் தொடர்பு எண்களை பெற்று ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.மழை வெள்ள காலங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுதல் மற்றும் மழை வெள்ளத்தினால் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்படுதல் போன்ற இடங்களில் உடனடியாக சீரமைப்புப் பணிகள் செய்ய தேவையான நவீன உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் மணல் மூடைகளை தயார் நிலையில் போதுமான அளவு வேண்டும்.அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், சாக்குப் பைகள் மற்றும் இதர உணவுப் பொருட்களை போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ளவும்,மற்றும் மனிதவளம் உள்ளதை உறுதி செய்யவும், நியாய விலைக் கடைகளில் போதுமான அளவு அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு வைக்கவும், மண்ணெண்ணெய், எரிவாயு மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.மருத்துவமனையில் நோய்த்தடுப்பு மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் தொற்று நோய் தடுப்பு மருந்துகள் தேவையான அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.பகுதி வாரியாக மருத்துவக் குழுக்கள் அமைத்து அவற்றை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆம்புலன்ஸ், ஜெனரேட்டர் போன்ற வசதிகளை மருத்துவமனையில் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.உயர்அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் கம்பி, மின்மாற்றிகளை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும். தாழ்வாக உள்ள மின்கம்பிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்பேரிடர் காலங்களில் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வட்டார போக்குவரத்து துறையில் இருந்து வாகனங்களை ஏற்பாடு செய்தும், அரசு துறைகளில் உள்ள வாகனங்களை ஆய்வு செய்து நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, சார் ஆட்சியர் திரு.முகமது இஃர்பான், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (11.05.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டது.இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.