25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 02, 2024

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சட்டத்திற்கு புறம்பான நிகழ்வுகளை தடுத்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பான கிராம ஒருங்கிணைப்புக்குழு பணிகளை முறையாக செயல்படுத்துவது குறித்த பயிற்சிக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் (01.08.2024) மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சட்டத்திற்கு புறம்பான நிகழ்வுகளை தடுத்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பான கிராம ஒருங்கிணைப்புக்குழு பணிகளை முறையாக செயல்படுத்துவது குறித்த பயிற்சிக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் பல்வேறு துறைகளின் கீழ் ஊராட்சி அளவில் கல்விக்குழு, பணிகள் குழு, வேளாண்மை மற்றும் நீர்பிரிமுகடு, வளர்ச்சிக்குழு, பள்ளி மேலாண்மைக்குழு, பல்லுயிர் மேலாண்மைக்குழு, குழந்தைகள் பாதுகாப்புக்குழு மற்றும் கிராம அளவிலான போதைப்பொருள் ஒழிப்பு குழு ஆகிய 8 குழுக்கள் செயல்படுத்தப்பட்டு, கிராம அளவில் செயல்பாட்டில் உள்ளன.இக்குழுக்கள் அனைத்தும் கிராம அளவில் வெவ்வேறு தினங்களில் கூட்டம் நடத்துவதால் கிராம அளவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் பொருட்டு, மாதத்தில் ஓர் நாள் (இறுதி வெள்ளிக்கிழமை அன்று) நடத்திட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.போதைப் பொருட்கள், குழந்தை திருமணம், பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளர், பள்ளிகளில் சாதியம், மதம் மற்றும் சாதி வாரிய வன்கொடுமைகள், சட்டத்திற்கு புறம்பான பட்டாசு தயாரித்தல் உள்ளிட்டவைகளை தடுத்தல் மற்றும் ஒழித்தல் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினருக்கு தகவல் அளித்தல் இந்த கிராம ஒருங்கிணைப்புக்குழுவின் முக்கிய நோக்கங்களாகும்.இக்குழுவின் உறுப்பினர்-செயலர் என்ற அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் கூட்டங்கள் நடத்தி விவாதிக்கப்பட்ட இனங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும்.ஒவ்வொரு அரசுத் துறைகளுக்கும் ஒழுங்காற்று பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் என இரண்டு பணிகள் உள்ளன.மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் சட்டத்திற்கு புறம்பான நிகழ்வுகளை கண்டறிந்து அதனை  தடுத்தல் மற்றும் ஒழித்தல் ஒழுங்காற்று பணிகளாகும்.கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டிலேயே மகப்பேறுவின் போது எந்த தாயும் இறக்காத ஒரே மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் உள்ளது. இதற்கு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் சிறப்பான பணிகள், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. மேலும் இதனுடைய தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் குழந்தை திருமணத்தை முக்கியமாக தவிர்க்க வேண்டும்.நமது மாவட்டத்தில் கடந்த ஆண்டு குழந்தை திருமணம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நமது கவனத்திற்கு வராமல் நடக்கும் குழந்தை திருமணங்களை முறையாக கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒவ்வொரு கிராமத்திலும் அந்த கிராம அளவிலான ஒருங்கிணைப்பு குழு முழுமையாக முயற்சி செய்தால்  மட்டுமே பிரச்சினைகளை சரி செய்ய முடியும்.கிராம அளவில் பணிபுரியக் கூடிய நீங்கள் உங்கள் பணி காலத்தில் அந்த கிராமத்தில் எந்த தவறும் நடக்கவில்லை, சட்ட ஒழுங்கு பிரச்சினை இல்லை, அப்படி பிரச்சினை வந்தாலும் அதனை பெரிய அளவில் நடைபெறாமல் சரி செய்வதற்கு முயற்சி செய்தேன், அந்த கிராமத்தில் இருக்கக்கூடிய பல ஏழை எளிய மனிதர்களுக்கு நேரடியாக சேவை செய்வதற்கு என்னுடைய அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்தினேன் என்று பொதுமக்கள் பாராட்டக்கூடிய அளவிற்கு உங்கள் பணிகள் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திருமதி விசாலாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.பாலச்சந்திரன், உதவி இயக்குநர்(தணிக்கை)திரு.பிரபாகரன், விருதுநகர் துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமதி பவித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Aug 02, 2024

‘Coffee With Collector” என்ற 90-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (01.08.2024) திருவில்லிபுத்தூர் லயன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களின் திறமைகளை பாராட்டும் விதமாகவும் நடைபெற்ற  ‘Coffee With Collector”   என்ற 90-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S.,  அவர்கள்  மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உள்ள அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில்  கல்வி,  பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில்  மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மாணவ, மாணவியர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 90-வது முறையாக பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடல் நிகழ்;ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்ற பல்வேறு காரணங்கள் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு இந்த காரணங்கள் ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களுடைய லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்களுக்கு பிடித்த விளையாட்டு, வீரர்கள், அவர்களுடைய பொழுதுபோக்கு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மாணவர்களும் தங்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மருத்துவம், வழக்கறிஞர், தொழிலதிபர், விளையாட்டு வீரர், இசையமைப்பாளர் உள்ளிட்;ட பல்வேறு துறைகளில் படிப்பதற்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்தனர்.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது, இப்பொழுது உள்ள சூழ்நிலையில் உங்கள் பெற்றோர்களை காட்டிலும் உங்களுக்கு வாழ்க்கையில் படிப்பதற்கும், உங்கள் இலக்கு, ஆசை, இலட்சியத்தை அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும், அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும், உங்கள் இலட்சியத்தை அடைவதற்கு உங்களுடைய பின்புலமோ, ஏழையா, வசதி படைத்தவரா,நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பது முக்கியமில்லை, நீங்கள் எங்கு போய் சேர்கீர்கள், உங்கள் இலட்சியத்தை எவ்வாறு அடைகிறீர்கள் என்பதுதான் முக்கியம். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். எனவே, வாழ்க்கையில் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் கடினமாக  உழைத்தால் வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். வாழ்க்கையில் தோல்வி என்ற ஒன்றை சந்திக்காமல் சாதித்த மனிதரே இங்கே யாரும் இருக்க முடியாது. எனவே வாழ்வில் தோல்வியோ, கஷ்டமோ வரும் போது அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.

Aug 02, 2024

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் வீடு பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றிய 200 மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு வீடு வழங்கிட தகுதியான நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன்பெற சொந்த வீடு, நிலம் , காலியிடம் இருக்ககூடாது, வருட வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், விண்ணப்பித்தவர்களில் இராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்தளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இராஜபாளையம் மற்றும் பிற பகுதியை சேர்ந்தவர்கள்;, கண்டிப்பாக புது இருப்பிடத்திற்கு குடிபெயர வேண்டும். குடியிருப்பிற்கான பயனாளிகள் பங்களிப்பு தொகையாக ரூ.89,000 பணம் செலுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும், விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் கிடைக்கப்பெற கடைசி நாள்: 09.08.2024. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-2, வருமான சான்றிதழ்) மேலும் விவரம் பெறுவதற்கு  மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்: 04562-252068 -யை தொடர்புக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட  ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 01, 2024

‘Coffee With Collector” என்ற 89-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனியார் கல்லூரிகளில் பயிலும்; 32 மாணவ / மாணவியர்களுடனான ‘Coffee With Collector”  என்ற 89-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூhயில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 89-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.  

Aug 01, 2024

மாநில அளவிலான (State level) பள்ளி மாணவர்களுக்கான பால்பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்றுமுதலிடம் பெற்ற வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவர் அணி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், (31.07.2024) திண்டுக்கலில் உள்ள P. S. N.A பொறியியல்கல்லூரியில் வைத்து கடந்த 26.07.2024 மற்றும் 27.07.2024 ஆகிய 2 நாட்கள் மாநில அளவிலான (State level) பள்ளி மாணவர்களுக்கான பால்பேட்மிட்டன் போட்டிகள் நடைபெற்றது. தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 48 பள்ளிகளைச் சார்ந்த மாணவர் அணி பங்கு பெற்றனர். இதில் பங்கேற்று வெற்றிக்கோப்பையையும், ரூ.15000/- ரொக்கப் பரிசினையும் பெற்று முதலிடம் பெற்ற வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவர் அணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

Aug 01, 2024

பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

நிலையான உற்பத்தி, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, இயற்கைவள பாதுகாப்பு மற்றும் மண்வள ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக இந்திய அரசும், தமிழக அரசும் பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகிறது.2023-24-ஆம் ஆண்டுக்கான பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக 300 எக்டர் மற்றும் பிற விவசாயிகளுக்கு என 140 எக்டர் ஆக மொத்தம் 440 எக்டரில் செயல்படுத்தப்பட உள்ளது.பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக சேர்ந்து பயன்பெற ஒரு கிராமத்தை சேர்ந்து அல்லது அருகிலுள்ள 2-3 கிராமத்திலுள்ள, குறைந்தது 20 விவசாயிகள் ஒன்று சேர்ந்து 20 எக்டர் கொண்ட தொகுப்பினை உருவாக்கி பாரம்பரிய விவசாயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும். இத்திட்டத்தில் ஒரு எக்டருக்கு முதலாம் ஆண்டு ரூ.16,500, இரண்டாம் ஆண்டு ரூ.17,000 மற்றும் மூன்றாம் ஆண்டு ரூ.16,500 என மொத்தம் ஒரு எக்டருக்கு ரூ.50,000 மானியம் வழங்கப்படும்.பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் மற்றொரு துணை திட்டமாக ஏற்கனவே பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தனி விவசாயிகள், குழுவாக சேர்ந்து பயன்பெற இயலாத விவசாயிகள், வேறு எந்த திட்டத்திலும் பயன்பெறாத பாரம்பரிய விவசாயிகளுக்கு பதிவு கட்டணமாக இத்திட்டத்தில் ஒரு எக்டருக்கு முதலாம் ஆண்டு ரூ.2,000, இரண்டாம் ஆண்டு ரூ.2,000 மற்றும் மூன்றாம் ஆண்டு ரூ.2,000 என மொத்தம் ஒரு எக்டருக்கு ரூ.6,000 மானியம் வழங்கப்படும்.பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக சேர்ந்து பயன்பெறும் விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு முதல் ஆண்டில் குழுவினை உருவாக்கிட ரூ.1,000 குழுவின் தகவல் சேகரித்து பராமரித்திட ரூ.1,500, மண்டல ஆலோசனை மற்றும் பதிவு கட்டணமாக ரூ.700, பாரம்பரிய விவசாயம் செய்திட ஊக்கத்தொகை ரூ.12,000 மற்றும் விளம்பர செலவினங்கள் ரூ.1,300 என மொத்தம் ஒரு எகடருக்கு முதலாம் ஆண்டு ரூ. 16,500 மானியம் வழங்கப்படும். எனவே அனைத்து வட்டார விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் திரு.வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 01, 2024

வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் (31.07.2024) இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நடைபெற்ற மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள்,  மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகள், அவற்றிக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது மற்றும் தங்களை தயார் செய்து கொள்ளுதல்  குறித்து உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் மத்திய அரசு பணியிடங்களான யு.பி.எஸ்.சி, ரயில்வே, எஸ்.எஸ்.சி, வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்களை மாநில அரசுத்துறை மூலமாக நிரப்பப்படும் பணியிடங்கள் குறித்து விரிவாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எடுத்துரைத்தார்.மேலும், இந்த பணியிடங்களுக்கான பல்வேறு போட்டித்தேர்வுகள், தங்களை தயார் படுத்துதல், கட்ஆப் மதிப்பெண்கள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கம் அளித்தார்.பின்னர் மாணவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தான் அரசுதேர்வில் வெற்றி பெற்ற வழிமுறைகளையும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது மற்றும் தங்களை தயார் செய்து கொள்ளுதல்  குறித்து மாணவ, மாணவியர்களுடன் தனது அனுபவங்களை எடுத்துக்கூறி உரையாற்றினார்.தொடர்ந்து அரசு பணியிடங்கள் குறித்த மாணவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.  இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் திரு.சிவக்குமார், கல்லூரி பேரராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 01, 2024

மாணவர்களுக்கு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், சிறுசேமிப்பின் மூலம் மாவட்டத்தில் எதிர்வரும் புத்தகத்திருவிழாவில் மாணவர்கள் புத்தகங்கள் வாங்கும் விதமாக புத்தக உண்டியல்களை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார். ---

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  (31.07.2024) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், சிறுசேமிப்பின் மூலம் மாவட்டத்தில் எதிர்வரும் புத்தகத் திருவிழாவில் மாணவர்கள் புத்தகங்கள் வாங்க புத்தக உண்டியல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்.புத்தக வாசிப்பை குறிப்பாக மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் நோக்கில், ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நமது மாவட்டத்தில் புத்தக திருவிழா விரைவில் நடைபெற இருக்கிறது.கடந்தாண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு, புத்தகங்களை வாங்கினார்கள். இந்த ஆண்டும் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், புத்தக உண்டியல் வழங்கப்பட்டுள்ளது.இதன்மூலம் அன்றாடம் சேமிக்கும் பணத்தை கொண்டு புத்தகம் வாங்க வரும் மாணவர்களுக்கு, ஏற்கனவே உள்ள 10 சதவிகித தள்ளுபடியுடன், கூடுதலாக 10 சதவிகித தள்ளுபடி வழங்கப்படும்.  அடுத்தவர்களின் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்பவன் அறிவாளி. அனுபவங்களை எளிதாக பெற வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி புத்தகங்கள் மட்டும்தான்.புத்தகங்கள் என்பது யாராவது ஒருவரின் அனுபவங்கள் அல்லது யாராவது செய்த தவறுகளின் மொத்த தொகுப்பு ஆகும். எது சம்மந்தமான புத்தகங்களை படிக்கும் போதும் அது குறித்தான ஆர்வங்கள் உண்டாகும். அதனால் ஒரு கனவு உருவாகும். அந்த கனவை அடைய வேண்டும் என்றால் அதற்கு தேவையான உழைப்பு, அதை பற்றி தேவையான அறிவு இவற்றையெல்லாம் இதுபோன்ற புத்தகவாசிப்பு உங்களுக்கு அளிக்கிறது.மாணவர்கள் வரலாறு, கதை உள்ளிட்டவை குறித்தும், பெண்களுக்கான உரிமைகள் எவ்வாறு கிடைத்தது, பெண்களுக்கான வாக்குரிமை, சொத்துரிமை, அதற்கு பின்னால் இருந்த போராட்டம் என்ன உள்ளிட்ட நிறைய பெண்கள் முன்னேற்றம் தொடர்பான புத்தகங்களும் இருக்கின்றன. இது போன்ற ஏதாவது ஒரு பகுதியில் நீங்கள் வருடத்திற்கு ஒரு புத்தகத்தில் இருந்து ஆரம்பித்தால் அறியாமை விலகும்.இந்த முயற்சி என்பது மாணவர்களை புத்தகங்கள் வாங்குவதற்கு ஊக்குவிப்பதற்கான செயல்பாடு. எனவே இதை நீங்கள் பயன்படுத்தி புத்தக திருவிழாவில் வந்து முடிந்த அளவிற்கு அதிகமான புத்தகங்களை வாங்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 31, 2024

ரூ.6.44 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

விருதுநகர் வட்டம், கன்னிச்சேரி புதூர்  அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் ரூ.6.44 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கட்டடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை இயக்குநர் மரு.தி.சி.செல்வவிநாயகம் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்,  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் இன்று (30.07.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கான மருந்து பெட்டகம், பிரசவித்த தாய்மார்களுக்கு தாய் மற்றும் சேயுடன் கூடிய புகைப்படத்துடன் தாய் சேய் நலப்பெட்டகம், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்; அவர்கள் வழங்கினார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் மூலம் சிறந்த மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்கி, அதன் மூலம் பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் வழங்கும் நோக்கில் எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி செயலபடுத்தி வருகிறது.தமிழ்நாட்டில் உள்ள வருவாய் மாவட்டங்களில் விருதுநகரில் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய மருத்துவ திட்டங்கள் போல் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதிக அளவில் திட்டங்கள் மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அதன்படி, கன்னிசேரி புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பில் புற நோயாளிகள் பிரிவு கட்டடம், வச்சக்காரபட்டியில் ரூ.35 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய புதிய கட்டடம், அல்லம்பட்டியில் ரூ.35 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் புதிய கட்டடம், விருதுநகரில் ரூ.45 இலட்சம் மதிப்பில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கூடுதல் கட்டடம், பந்தல்குடியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், ம.புதுப்பட்டியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மல்லியில் ரூ.20 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார மையம் புதிய கட்டடம், இடையன்குளத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார மைய கட்டடம், குன்னூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், இராஜபாளையம் பி.எஸ்.கே.மாலையாபுரத்தில் ரூ.36 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார மையம் புதிய கட்டடம் மற்றும் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.243 இலட்சம் மதிப்பில் சிடி ஸ்கேன் மையம் என மொத்தம் ரூ.6.44 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமப்புறங்களில், மலை கிராமங்கள் மற்றும் குக்கிரமங்களில் இருக்கும் மக்களுக்கு நாய்க்கடி, பாம்பு கடி என்றால், பெரிய நகரங்களில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளுக்கு சென்று தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களில், நாய்க்கடி, பாம்புக்கடிக்கான மருந்துகள் உள்ளன. இதயம் காப்போம் திட்டம்  மூலம் மாரடைப்பு அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு முதற்கட்ட சிகிச்சை அள்க்கும் வகையில் 14 மாத்திரைகள் கொண்ட பெட்டகத்தை அனைத்து மருத்துவமனைகளிலும் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்திட்டம் மூலம் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 9,166 நபர்களும், துணை சுகாதார நிலையத்தில் 570 நபர்களும் பயனடைந்துள்ளனர். இதுபோன்ற திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.விருதுநகர் மாவட்டத்தில், சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.3.71 கோடி மதிப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவும், அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.30 கோடி கூடுதல் கட்டடங்களும், இராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த ரூ.40 கோடி மதிப்பில் கட்டடங்களும், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.54 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடமும் கட்டும் பணிகளும்,அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாயில்பட்டியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார அலகும், இராஜபாளையம்  மாடசாமி கோவில் தெருவில் ரூ.60 இலட்சம் மதிப்பில் நகர ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும், ஜமீன்கொல்லன்கொண்டானில் ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார அலகும்,  நரிக்குடியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார அலகும், ம.ரெட்டியபட்டியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார அலகும், பரளச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடமும், வீரசோழன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.20 கோடி  மதிப்பில்  கூடுதல்   கட்டடமும்,   ம.புதுப்பட்டி   ஆரம்ப  சுகாதார    நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு கட்டமும், மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு கட்டமும், சாத்தூரில் ரூ.1.20 கோடி மதிப்பில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடமும்,நாலூர், பட்டம்புதூர், டி.செட்டிகுளம், தொப்பலாக்கரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, கரிசல்பட்டி, கீழகோடாங்கிபட்டி, கிருஷ்ணாபுரம், நல்லமுத்தன்பட்டி, பள்ளபட்டி, பெரியார் நகர், ஸ்டாண்டர்டு காலனி ஆகிய துணை சுகாதார நிலையங்கள் தலா ரூ.30 இலட்சம் மதிப்பிலும், எதிர்கோட்டை, கொங்கன்குளம் ஆகிய துணை சுகாதார நிலையங்கள் தலா ரூ.35 இலட்சம் மதிப்பிலும் என ஆக மொத்தம் ரூ.119.45 கோடி செலவில் 29 மருத்துவ கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு விருதுநகர் மாவட்டத்தில், ரூ.5.25 கோடி  மதிப்பில்  23 துணை சுகாதார நிலைய கட்டிடங்கள்,ரூ.4.75 கோடி மதிப்பில் 13 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டார பொது சுகாதார அலகு, மருத்துவ அலுவலர் குடியிருப்பு, செவிலியர் குடியிருப்பு, புறநோயாளிகள் பிரிவு, பிரசவ பின் கவனிப்பு வார்டு மற்றும் தாய் சேய் நலக் கட்டிடம், ரூ.6.89 கோடி மதிப்பில் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு கட்டிடம், ரூ.380.2 கோடி மதிப்பில் விருதுநகர் அரசு மருத்துவக்  கல்லூரி கட்டிடம், மருத்துவமனை கட்டிடம், தீக்காய சிகிச்சை பிரிவு படுக்கை புண்சிகிச்சை பிரிவு, தீவிர நுரையீரல் சிகிச்சை பிரிவு ஆகிய வசதிகள் தொடங்கி வைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்பு என்பது மிகப் பெரிய அளவில் உண்டாயிருக்கிறது. எனவே, பொதுமக்கள் ஒரு வளமான சமுதாயத்தை உருவாக்க, இந்த மருத்துவக் கட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Jul 31, 2024

தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் விவசாயிகள் ரூ.30,000/- பின்னேற்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டமானது விவசாயிகள் தங்களிடம் இருக்கின்ற இயற்கை வளங்களை மேம்படுத்தி உரிய முறையில் வளங்களை பயன்படுத்தவும், பயிர் சாகுபடி முறையில் அதிகபட்ச உற்பத்திக்கான நுட்பங்களை பயன்படுத்தவும், பண்ணை கழிவுகளை உற்பத்தி நேக்கங்களுக்காக மறு சுழற்சி செய்யவும், காலநிலை மற்றும் சமூக பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு கறவை மாடு, கோழி, தேனீ வளர்ப்பு போன்ற கலவையான செயல்பாடுகள் மூலம் ஆண்டு முழுவதும்  நிலையான வருமானம் கிடைக்க வழி செய்கிறது.2024-25-ம் ஆண்டுக்கான தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த  பண்ணைய அமைப்பு விருதுநகர் மாவட்டத்தில் 500 எக்டரில் செயல்படுத்திட ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக வேளாண்மைத் துறை மூலம் 500 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளியாக இணைக்கப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தது ஒரு ஏக்கர் நில உரிமை உடையவராக இருக்க வேண்டும். மேலும் தனது சொந்த செலவில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இனங்களான பயிர் செயல் விளக்கத்திடல், மண்புழு உர தொட்டி மற்றும் கால்நடை இனங்களான ஒரு கறவை மாடு அல்லது 10 ஆடுகள் மற்றும் தோட்டக்கலை இனங்களான பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்புப் பெட்டி போன்றவற்றை திட்ட வழி காட்டுதலின்படி அமைக்க வேண்டும்.இவ்வாறு ரூ.60 ஆயிரம் மதிப்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை உருவாக்கிய விவசாயிக்கு பின்னேற்பு மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். எனவே, விருதுநகர் மாவட்ட  விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் பயன் பெறலாம்.மேலும், தமிழக அரசின் சிறப்பினமாக இத்திட்டத்தில் தேர்வாகும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு மட்டும் கூடுதலாக 20 சதவீத சிறப்பு மானியத்துடன் எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.12 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும். ஆதி திராவிட மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 26 27 28 29 30 31 32 ... 69 70

AD's



More News