25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 02, 2026

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய இடங்களில் (28.02.2026)  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்,  நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அருப்புக்கோட்டை,சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரங்களைச் சேர்ந்த 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான, தமிழக அரசின் சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இன்றைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதன பொருட்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதிற்கொண்டு கர்ப்பிணி பெண்கள், கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும்.வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மையும் கிடைக்காமல், அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டம் இந்த வளைகாப்பு திட்டமாகும். சாதி மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பகால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணித் தாய்மார்களை சென்றடைய செய்து, அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உயர்த்துதல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துதல், மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், குழந்தைகளின் வளர்ச்சிப் படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகப்பேறு உதவித் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள், இணை உணவின் அவசியம், குழந்தைகள் நோய் வாய்ப்படும் போது அளிக்கப்பட வேண்டிய கவனிப்பு போன்ற பல விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் முன்னேறியிருக்கிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு கட்டணமில்லா பேருந்து, மகளிர் உரிமைத்தொகை, புதுமைபெண் திட்டங்கள் மூலம் மாதந்தோறும் ரூ.1000- வழங்குதல் உள்ளிட்ட பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரங்களைச் சேர்ந்த 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.எனவே, இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பணிதாய்மார்களும், இந்த கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என  வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.இவ்விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர்  திருமதி இராஜ ராஜேஸ்வரி, அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் திருமதி சுந்தரலட்சுமி சிவப்பிரவேசம்,  சாத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.குருசாமி,  குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி சண்முகசுந்தரி,   உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 02, 2026

ரூ.6.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையத்தை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் (28.02.2026) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில்   ஒட்டுமொத்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.6.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளபுதிய திருச்சுழிஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள்   திறந்து வைத்தார்.திருச்சுழி ஒன்றியப்பகுதியில் நீண்ட நெடுங்காலமாக மக்களுடைய கோரிக்கையாக இருந்து வந்த பேருந்து நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.திருச்சுழி பகுதியானது இன்றைக்கு வேகமாக முன்னேற்றம் காணக்கூடிய வளர்ந்து வரும் தொகுதியாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் சாலைகள் இல்லாமல் இருந்த இந்த பகுதி, தற்போது ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரங்களுக்கு இடையில் மாவட்ட சாலைகள் மற்றும் மாநில நெஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.திருச்சுழி தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவமனை, தொழிற்பயிற்சி நிலையம், சமூக சுகாதாரக் கூடங்கள், மகளிர் காவல் நிலையங்கள் என அனைத்து வசதிகளிலும் முன்னேறி இருக்கக்கூடிய பகுதியாக மாறி வருகிறது. திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.6.18 கோடி மதிப்பில் 1097.22 சதுர மீட்டர் பரப்பளவில் பேருந்து நிற்கும் இடம், கடைகள், ஓய்வறை, மழைநீர் வடிகால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இருசக்கர வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் சாலைகளாக இருந்தாலும் சரி, குடிநீராக இருந்தாலும் சரி அல்லது ஒவ்வொரு கிராமங்களுக்கும் இருக்கக்கூடிய அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.இதுபோன்ற மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என  அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) வீ.கேசவதாசன்,  உதவி செயற்பொறியாளர் திருமதி அனிதா, முன்னாள் திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.பொன்னுத்தம்பி,   முக்கிய பிரமுகர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  உள்ளாட்சி பிரதிநிதிகள், உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 02, 2026

நெடுஞ்சாலைத்துறை சார்பில், மல்லாங்கிணர் நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணரில்  (28.02.2026) நெடுஞ்சாலைத்துறை சார்பில்,  ரூ.39.95 கோடி மதிப்பில் மல்லாங்கிணர் நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்,   நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்  அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான  ஆட்சியில் எண்ணற்ற சமுதாய முன்னேற்றத்திற்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்பதை நாம் அறிவோம்.ஒரு சமுதாயம் என்றிருக்கின்ற போது  அதில் பல்வேறு தரப்பு மக்கள் இருப்பார்கள். அதில் அடித்தட்டு நிலையில் உள்ள மக்களை கை தூக்கி விடுவது தான் ஒரு சிறந்த அரசாங்கத்திற்கு  இலக்கணமாக இருக்க முடியும்.அதுவும் குறிப்பாக பெண்கள் நம்முடைய சமுதாயத்திலே மிக கவனமாக அவர்களுடைய உயர்வினை கையாள்வது ஒவ்வொரு அரசுக்கும் மிக மிக முக்கியம். பெண்கள் நலத்திட்டங்கள் என்றால் பொதுவான திட்டங்களை தாண்டி அவர்கள் பொருளாதாரத்திலேயே தற்சார்பை பெற வேண்டும், யார் கையையும் எதிர்பார்த்து இருக்க கூடிய சூழ்நிலையில் இருக்கக் கூடாது. அவர்கள் சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என்கின்ற பல்வேறு திட்டங்களுக்கு மத்தியில் நம்முடைய  முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த மகத்தான திட்டம் கலைஞர் மகளிர் உரிமை திட்டம்.இன்றைக்கு தமிழ்நாட்டிலேயே ஒரு கோடி 31 இலட்சம் மகளிர்கள் இந்த திட்டத்தில் பயன் பெறுகிறார்கள்.ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்த முதலமைச்சர் அவர்கள், திடீரென்று  இன்ப அதிர்ச்சியாக நம்முடைய மகளிர்களுக்கு ரூ.5000  முன்பணமாக வழங்கி உங்களை கௌரவப்படுத்தினார்கள்.சமூக நலத்திட்டங்களை  நிறைவேற்றுவதில் எந்த அளவிற்கு இந்த அரசு ஆர்வம் காட்டுகிறதோ, அதே போல ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதிலும் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்  தனி கவனம் செலுத்தி வருகிறார்கள்.அப்படி பல துறைகளை நாம் எடுத்துச் சொல்ல முடியும்.மக்களுடைய அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு நம்முடைய இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மல்லாங்கிணறு பேரூராட்சியில் எண்ணற்ற திட்டங்களை நாம் நிறைவேற்றி இருக்கின்றோம். குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. மல்லாங்கிணர்  பெரியகுளம் கண்மாய்க்கும், மல்லாங்கிணரை சுற்றி இருக்கக்கூடிய    கிராமங்களில் நாம் இன்றைக்கு பாசன வசதிகளை கொண்டு வருவதற்காக சென்னம்பட்டியினுடைய வலது பிரதான கால்வாய் சீரமைக்கப்பட்டு ஏறத்தாழ 40 வருடங்களுக்குப் பிறகு தண்ணீர் கொண்டு வரக்கூடிய முயற்சியில் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம்.அந்த வகையில் நம்முடைய நீண்ட கால கோரிக்கையாக இருந்த  மல்லாங்கிணரில் இருந்து விருதுநகருக்கும் காரியாபட்டிக்கும் செல்லக்கூடிய சாலை ஒரு காலத்தில் இந்த சாலையை பார்த்தோம் என்று சொன்னால் மிகுந்த போக்குவரத்துக்கு சிரமமான சாலையாக இருந்தது. கலைஞர் அவர்களுடைய  தலைமையிலான ஆட்சி அமைந்த பொழுது தான், இந்த சாலையை 7 மீட்டர்  சாலையாக  அகலப்படுத்தினோம். இன்றைக்கு கலைஞருடைய மகன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்  ஆட்சியில் தான் அந்த ஏழு மீட்டர் சாலை என்பது 10 மீட்டர் சாலையாக இன்னும் அகலப்படுத்தி அந்த பணிகள் நடைபெற்றுக் கூறிக் கொண்டிருக்கின்றது.காரணம் ஊர் வளர்ந்து கொண்டிருக்கின்றது. நம்முடைய கிழக்குப்  பகுதியான  காரியாபட்டி, மாவட்ட  தலைநகராக இருக்கக்கூடிய  விருதுநகரை இணைக்கக்கூடிய ஒரு  கேந்திரமான சாலையில் அமைந்திருக்கக் கூடிய ஒரு பேரூராட்சி இது.வருங்கால போக்குவரத்தை நாம் கருத்தில் கொண்டு அதை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டபோது, முதலமைச்சர் அவர்களும்,  நெடுஞ்சாலை துறை அமைச்சர் அவர்களும் மிகுந்த அன்போடு ஏறத்தாழ 16 கிலோமீட்டர் இருக்கக்கூடிய அந்த சாலையை ஏறத்தாழ ரூபாய்  55 கோடி  ஒதுக்கப்பட்டு அந்த பணிகள் நடந்து கொண்டிருப்பதை நாம் காண முடியும்.  மல்லாங்கிணர் ஊருக்குள் செல்லும் பொழுது காலையில் போக்குவரத்து நெரிசல் இருப்பதை நான் பார்க்கிறோம். இந்த வழியாக செல்லக்கூடிய கனரக வாகனமாக இருந்தாலும்,  பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் காலை மாலை வேலைகளிலே  போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இன்றைக்கு இப்படி இருந்தால் வரக்கூடிய காலங்களில் எப்படி ஊர் விரிவடைந்து கொண்டே போகின்ற பொழுது  ஒரு  புறவழிச் சாலை தேவை என்று நாம் நம்முடைய முதலமைச்சர் அவர்களிடம் கேட்டபோது   அதற்கும் உடனடியாக ஆணைகளை வழங்கி, ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஏறத்தாழ ரூ.40 கோடி  செலவில் இன்றைக்கு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.எனவே  மல்லாங்கிணரை மையப்படுத்தி  சாலை வசதிக்காக மட்டும் ஏறத்தாழ ரூ.100 கோடி வழங்கப்பட்டிருக்கிறது என்பது மிகவும் முக்கியம்.நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி தொகுதி என்பது மாபெரும் வளர்ச்சியை கண்டு வருகிறது. குடிநீர் வழங்கும் பணிகளுக்கு ஏற்கனவே தாமிரபரணியில் இருக்கக்கூடிய தண்ணீரை தாண்டி ரூபாய் 75 கோடி  செலவில்  மல்லாங்கிணர்   பேரூராட்சியில் இருக்கக்கூடிய கிராமங்களுக்கும், காரியாபட்டி  பேரூராட்சியில் இருக்கக்கூடிய கிராமங்களுக்கும் புதிதாக குடிநீர்  திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.அந்த பணிகள் இப்பொழுது முழுமையாக முடிவடைந்து இருக்கிறது. வரக்கூடிய  சில நாட்களில் வைகையில் இருந்து வரக்கூடிய தண்ணீரும் நம்முடைய பகுதி மக்களை வந்து அடைவதற்குரிய திட்டத்தினை நாம் இன்றைக்கு முழுமையாக மக்களுக்கு ஒப்படைக்க காத்திருக்கிறோம்.குடிநீராக, சாலை, போக்குவரத்து அடிப்படை வசதிகளாக இருந்தாலும்   இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்திருக்கக் கூடிய ஒரு அரசாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய அரசு இருக்கிறது. இந்த திட்டங்களை எல்லாம் செய்வதற்கு அடிப்படை காரணம் ஒரே ஒருவர் நான் அவர் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருக்கக்கூடிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தான்.எனவே  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றும் ஆதரவோடு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, மல்லாங்கிணர் பேரூராட்சி தலைவர்  திரு.துளசிதாஸ், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 28, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (27.02.2026) இந்தியன் ஆயில் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிட் (IOCL) நிறுவனம், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் (ALIMCO) மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.60 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார்கள். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகு தண்டுவடம் பாதித்த 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.05 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.5.25 இலட்சம் மதிப்பில் மின்கல மூன்று சக்கர சிறப்பு நாற்காலிகளை(Neo motion) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ALIMCO மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் பொருட்டு, கடந்த 2026 ஜனவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 404 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தற்போது இந்தியன் ஆயில் கார்பரேஷன் (Indian Oil Corporation) சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் 110 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.39.60 இலட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, ஆக்சில்லா ஊன்றுகோல்கள், முழங்கை ஊன்றுகோல்கள், ரோலேட்டர், பிரெய்லி பிரம்பு, சுகம்யா பிரம்பு, CP சக்கர நாற்காலி, காதொளி கருவிகள், செயற்கை உறுப்பு, காலிபர்ஸ் உள்ளிட்ட உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.செந்தில்வேல், இந்தியன் ஆயில் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் மற்றும் அலிம்கோ நிறுவனத்தின் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 28, 2026

சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் திருச்சுழியில்  (27.02.2023) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான, தமிழக அரசின் சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இன்றைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.அந்த வகையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, இன்று காரியாபட்டி மற்றும் திருச்சுழியில் நடைபெறும் சமுதாய வளைகாப்பு விழாவில், 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.வளைகாப்பு என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நடத்தப்படும் ஒரு சம்பிரதாயம் ஆகும். அனைத்து சமூகங்களிலும் சாதி, மத, இன வேறுபாடின்றி கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது. கருவில் வளரும் குழந்தையை குடும்பத்தினர் அனைவரும் வரவேற்கும் விதமாகவும், கர்ப்பிணி பெண்ணை சந்தோஷமான மனநிலைக்கு உட்படுத்தி, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பதற்கு இவ்விழா நடத்தப்படுகிறது.இந்த விழாவின் சந்தோஷம் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், ஒரு கர்ப்பிணி கூட குடும்ப சூழ்நிலையினால் சந்தோஷமான உணர்வினை அனுபவிக்க முடியாமல் போய் விடக்கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டமாகும்.ஒரு பெண்ணின் கர்ப்பம் தரித்த நாள் முதல் குழந்தை பிறந்து 2 வயது வரை இடைப்பட்ட முதல் 1000 பொன்னான நாட்கள், ஆரோக்கியம் மற்றும் வளமிக்க எதிர்காலத்தை உருவாக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் வழித்தடமாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி உள்ளது.            பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பகால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணித் தாய்மார்களை சென்றடைய செய்து, அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துதல், மகப்பேறு உதவித் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,  மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் மற்றும் சிசு மரணத்தை குறைத்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உயர்த்துதல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், குழந்தைகளின் வளர்ச்சிப் படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள் இணை உணவின் அவசியம், குழந்தைகள் நோய் வாய்ப்படும் போது அளிக்கப்பட வேண்டிய கவனிப்பு போன்ற பல விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கமாகும்.இன்று  கர்ப்பிணி பெண்களுக்கு தமிழகஅரசு சார்பில் 5 வகையான கலவை சாதம், பூமாலை, வளையல், மஞ்சள், பழங்கள் மற்றும் சீர்தட்டுகள் வழங்கப்படுகிறது. எனவே, இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பணிதாய்மார்களும், இந்த கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்   மாவட்ட திட்ட அலுவலர்(ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) திருமதி செ.இராஜராஜேஸ்வரி, காரியாபட்டி பேரூராட்சி தலைவர் திரு.செந்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் திருமதி சு.சுகமதி(காரியாபட்டி), திருமதி பங்கஜம்(திருச்சுழி(பொ)), முன்னாள் திருச்சுழி ஊராட்சி ஒன்றிக்குழுத்தலைவர் திரு.பொன்னுதம்பி, முக்கிய பிரமுகர்  திரு.செல்லம், திரு.தங்க தமிழ்வாணன், திரு.சந்தனபாண்டியன், திரு.சிவசக்தி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 28, 2026

விருதுநகர் - பாலவநத்தம் - அருப்புக்கோட்டை சாலையினை இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகளுக்குஅமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை காந்தி நகரின் (27.02.2026) நெடுஞ்சாலைத்துறை(கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில்,   விருதுநகர் - பாலவநத்தம் - அருப்புக்கோட்டை சாலையினை இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மொத்தம் ரூ.115 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை இராமலிங்கம் மில் வரை செல்லும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், விபத்துக்களை தவிர்ப்பதற்கும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.அதன்படி, முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் திருவில்லிபுத்தூர் - பார்த்திபனூர் சாலையில் விருதுநகர் அல்லம்பட்டி முக்குரோடு முதல் பாலவநத்தம் வரை 5.60 கி.மீ. நீள சாலையை ரூ.43.00 கோடி மதிப்பீட்டிலும்,பாலவநத்தம் முதல் புளியம்பட்டி புதிய புறவழிச்சாலை ரவுண்டானா வரை மற்றும் அருப்புக்கோட்டை காந்தி நகர் முதல் இராமலிங்கா மில் சந்திப்பு வரை 12 கி.மீ நீள சாலையை ரூ.72.00 கோடி மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் ரூ.115 கோடி மதிப்பில் 17.60 கி.மீ இருவழிச் சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இச்சாலைகள் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசலும் பயண நேரமும் குறைவதோடு, விபத்துகள் தவிர்க்கப்படுவதுடன், சரக்கு போக்குவரத்து தடையின்றி நடைபெற வழிவகுக்கும் என தெரிவித்தார்.மேலும், ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்த நாட்டு மக்களின் பயண வேகத்தில் அடங்கியிருக்கிறது. அந்த வேகத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில், இன்று அருப்புக்கோட்டை காந்தி நகர் மண்ணில், நம் மாவட்டத்தின் போக்குவரத்து நரம்பு மண்டலங்களாக விளங்கும் சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் மாபெரும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாயப் பெருமக்களின் வணிகத்திற்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்திற்கும், பொதுமக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதற்கும்  ஒரு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.இந்தச் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம், தென்காசி, இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் பயணிகள், இனி மதுரை மாநகருக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த மாற்றுப் பாதையைப் பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசலின்றி, மிக எளிதாகவும் விரைவாகவும் இராமேஸ்வரம் சென்றடைய முடியும். இது பயண நேரத்தைக் குறைப்பதுடன், விபத்துகளைத் தவிர்க்கவும், சரக்கு போக்குவரத்து தடையின்றி நடைபெறவும் பெரும் உறுதுணையாக அமையும்," எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 27, 2026

இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் திறப்பு.

  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (26.02.2026) காணொலி காட்சி வாயிலாக, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மொத்தம் ரூ.17.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் புதிய பாலம் மற்றும் உட்கட்டமைப்பு கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பழமையான திருக்கோயில்களை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்தல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.மேலும், சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதன்படி, இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ரூ.10.50 கோடி மதிப்பில் திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், ரூ.2.04 கோடி மதிப்பில் நான்கு சுகாதார வளாகங்கள் மற்றும் குளியலறைகள், ரூ.1.40 கோடி மதிப்பில் உட்பிரகார மண்டபத்தில் கான்கிரீட் தூண்களில் அலங்கார சுதை வேலைப்பாடுகள், ரூ.1.58 கோடி மதிப்பில் கோவிலுக்கு வரும் வழியில் 3 இடங்களில் நுழைவுத் தோரண வாயில்கள் மற்றும் கலையரங்கம், ரூ.2.16 கோடி மதிப்பில் வெளிப்பிரகார மண்டபத்தில் கான்கிரீட் தூண்களில் அலங்கார சுதை வேலைப்பாடுகள் மற்றும் சாலைப் பணிகள் ஆகிய மொத்தம் 6 முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் ரூ.17.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Feb 27, 2026

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவ வசதி பிரிவுகளை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (26.02.2026) மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவச் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவ வசதி பிரிவுகளை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.அதன்படி, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி சிறப்புக் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் உணர்வுத் திறனை மேம்படுத்தும் வகையில் உணர்வு திறன் சார்புப் பூங்கா (Sensory Integration Park)  அமைக்கப்பட்டுள்ளது.  ஃபுளூரோஸ்கோபி (Fluoroscopy) 800 எம்.ஏ (800 mA) திறன் கொண்ட அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி அமைக்கப்பட்டுள்ளது. இது துல்லியமான நோய் கண்டறிதலுக்கு உதவும்.மேலும், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க உங்களுக்கு உதவலாமா?" (May I Help You?) உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவச் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த 3 புதிய மருத்துவ வசதி பிரிவுகளை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ஜெய்சிங், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன், மருத்துவத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 27, 2026

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்விருதுநகர் மினி டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (26.02.2026) காணொலி காட்சி வாயிலாக, விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மற்றும் டைடல் நிறுவனம் சார்பில் ரூ.38.73 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் மினி டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும்  சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள்ஆகியோர்முன்னிலையில்,வருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பரவலாக்கும் அரசின் கொள்கை முடிவின்படி, விருதுநகர் மாவட்டத்தில் புதிய TIDEL NEO ஐடி பூங்கா அமைப்பதற்கான பணிகளை  தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.விருதுநகர் வட்டம், கூரைக்குண்டு கிராமத்தில் உள்ள மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் (Master Plan Complex) சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஐடி பூங்கா அமையவுள்ளது. சுமார் ரூ.38.73 கோடி மதிப்பீட்டில், நவீன உள்கட்டமைப்புடன் கூடிய 61,000 சதுர அடி பரப்பளவிலான கட்டிடம் (தரைத்தளம் + 3 மாடிகள்) கட்டப்பட உள்ளது.இந்தத் தகவல் தொழில்நுட்பப் பூங்கா சர்வதேச தரத்திலான தடையற்ற மின்சாரம்(100% ஜெனரேட்டர் (DG) பேக்-அப் வசதி), கட்டிடம் முழுவதும் மத்திய குளிரூட்டப்பட்ட (Centralised AC) வசதி, 24/7 சிசிடிவி கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை அமைப்பு (IBMS), சிற்றுண்டிச்சாலை (Cafeteria), விசாலமான வாகன நிறுத்துமிடம் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு வசதிகளுடன் அமையவுள்ளது.இந்த TIDEL NEO பூங்கா செயல்பாட்டிற்கு வருவதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐடி பட்டதாரிகளுக்கு தங்கள் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இப்பகுதியில் தழைத்தோங்க வழிவகுக்கும். இந்த பூங்காவால் இப்பகுதியைச் சுற்றி போக்குவரத்து, உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் சிறு வணிகங்கள் பெருகி, உள்ளூர் மக்களின் வருமானம் அதிகரிக்கும். விருதுநகரில் அமையவுள்ள மெகா ஜவுளிப் பூங்கா மற்றும் இந்த மினி டைடல் பார்க் ஆகிய இரண்டும் இணைந்து மாவட்டத்தை ஒரு மிகப்பெரிய தொழில் மையமாக (Industrial Hub) மாற்றும். விருதுநகர் மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்படும்.இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளர்(டைடல் நியோ பார்க்) திரு.இரா.பாலாஜி, விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.         

Feb 27, 2026

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள விருதுநகர் அரசு அருங்காட்சியகம் புதிய கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (26.02.2026) காணொலி காட்சி வாயிலாக, விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மற்றும் அருங்காட்சியகங்கள் துறை சார்பில் ரூ.12.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விருதுநகர் அரசு அருங்காட்சியகம் புதிய கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள்,  சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும்  சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் அருங்காட்சியகத்தின் பயனைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், இதுவரை 23 மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் விருதுநகர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கக் கட்டடத்தில் வாடகையில் இயங்கி வந்த விருதுநகர் அருங்காட்சியகத்திற்கு, தற்போது ரூ.12.43 கோடி மதிப்பில் சொந்தக் கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த புதிய அருங்காட்சியகம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில், 13,159.30 சதுர அடி நிலப்பரப்பில் அமைந்துள்ளது.தரை தளத்தில் அறிமுகக் காட்சி கூடம், மாவட்ட முக்கிய தலைவர்கள் விவரங்கள், இயற்கை வரலாறு, தொல்லியல், வரலாறு மற்றும் சமூக பண்பாட்டு வரலாற்றுக் காட்சிக்கூடங்கள் உள்ளன.முதல் தளத்தில் அலுவலக அறைகள், காப்பாட்சியர் அறை, சிறப்பு கண்காட்சி அறை மற்றும் நவீன AV கூட்டரங்கமும், இரண்டாம் தளத்தில் அரிய பொருட்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான வைப்பு அறையுடன், வளாகத்தில் தனித்தனியான கழிவறை வசதிகள் மற்றும் சிற்றுண்டி உணவகமும் அமைக்கப்பட்டுள்ளன.இந்த அருங்காட்சியகம் மாவட்டத்தின் நிலவியல் முதல் மானுடவியல் வரை பல்வேறு பிரிவுகளில் அரிய பொருட்களைக் கொண்டுள்ளது.தொல்லியல் சான்றுகளான பூர்ணச்சந்திராபுரம் மற்றும் ஆலமரத்துப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட நுண்கற்காலக் கருவிகள், முத்தார்பட்டி மற்றும் ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட ஊர்களில் கிடைத்த முழுமையான முதுமக்கள் தாழிகள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகளான சாத்தூர் நென்மேனி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட, கி.பி. 823-ஆம் ஆண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்துக் கல்வெட்டு இங்குள்ள முக்கிய ஈர்ப்பாகும். இது பண்டைய நீர்ப்பாசன முறையின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.மேலும், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்கள், நடுகற்கள் மற்றும் சதிக்கல் சிற்பங்கள் கற்சிலைப் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.பாறை வகைகள், படிமங்கள், பதப்படுத்தப்பட்ட பறவைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள், ஓலைச்சுவடிகள், நாணயங்கள் மற்றும் பழியர் பழங்குடியினரின் புழங்கு பொருட்கள் எனப் பலதரப்பட்ட இயற்கை மற்றும் பண்பாடு சேகரிப்புகள் உள்ளன.பொதுமக்களும், மாணவர்களும் மாவட்டத்தின் வரலாற்றையும், இயற்கையையும் ஒரே இடத்தில் அறிந்துகொள்ளும் வகையில் சிறந்த கல்வி மையமாக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், அருங்காட்சியக காப்பாட்சியர் திரு.பால்துரை, விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.        

1 2 ... 31 32 33 34 35 36 37 ... 141 142

AD's



More News