25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 18, 2026

e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 19.09.2026 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது .

 தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் e-KYC பதிவு மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை பயனாளிகளுக்கும் 19.09.2026 அன்று  அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விற்பனை முனைய இயந்திரம் மூலமாக விரல் ரேகை/ கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் e-KYC பதிவு மேற்கொள்ள தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 19.09.2026 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள e-KYC பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு 19.09.2026  அன்று நேரில் சென்று e-KYC பதிவு செய்யமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.   மேலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் e-KYC பதிவு செய்யாத எவரேனும் பணிநிமித்தமாக தமிழ்நாட்டின் வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர் எனில், அவர்களும் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு தமது குடும்ப அட்டை விபரத்துடன் சென்று e-KYC பதிவு செய்யலாம். எனவே, e-KYC பதிவு செய்யாமல் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அனைவரும் 19.09.2026 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் அவசியம் e-KYC பதிவு மேற்கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் e-KYC பதிவு செய்யும் பணி 100% நிறைவு பெற்றிடுவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 18, 2026

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.09.2026 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 22.09.2026 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதவி ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் அவர்களின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கோட்ட அளவிலான கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் மற்றும் தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக அளித்து தீர்வு காணவும், வட்டார அளவிலான விவசாயம் மற்றும் விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு, அந்த மனு மீதான நடவடிக்கை விபரத்தினை மனுதாரருக்கு தெரிவித்திடவும் அனைத்து துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

Sep 18, 2026

தனியார் பாட்டாசு தொழிற்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி ஊராட்சி, கீழத்திருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு தொழிற்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள்,  (17.09.2026)  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழில்களில் தமிழகத்தில் முன்னனி மாவட்டமாகவும், பட்டாசு தொழிலானது அதிகப்படியான நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க கூடிய தொழிலாகவும், அதிகமானோர் பட்டாசுத் தொழிலை சார்ந்துள்ள மாவட்டமாகவும் விருதுநகர் உள்ளது. இதில் பல்வேறு சூழ்நிலையில் எதிர்பாராத காரணங்களாலும், இயற்கை சூழ்நிலைகளின் மாறுபாட்டாலும் எதிர்பாராத நிலையில் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களை பாதுகாத்திடவும், விபத்தில்லாத தொழிலாக பட்டாசு உற்பத்தியினை உருவாக்கிடும் வகையில் தொழில்நுட்ப வல்லுநர் குழு மூலம் ஆராய்ந்து, தகுந்த வழிமுறைகளையும், விதிமுறைகளையும் உருவாக்கி இத்தொழிலை மேம்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில், கீழத்திருத்தங்கலில் இயங்கும் தனியார் தொழிற்சாலையில் பட்டாசு தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை கலக்கும் விதம், நிர்ணயிக்கப்பட்ட அளவு, பணியாளர்கள் பணியாற்றிட தேவையான இட அளவு, பாதுகாப்பான சூழ்நிலை குறித்தும், பட்டாசு தொழிற்சாலையில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

Sep 18, 2026

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக தலைமையாசிரியர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் உளவியல் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டினைத் தடுப்பது தொடர்பாக பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள்  (17.09.2026) தொடங்கி வைத்தார்.ஆசிரியர்களின் பணி மகத்துவத்தினை நன்கு அறிவேன். ஏனெனில் எனது பெற்றோரும் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது அனைவரது முக்கியப் பொறுப்பாகும். பள்ளி என்பது மாணவர்கள் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் கல்வி கற்கக்கூடிய சூழலை வழங்கும் இடமாக இருக்க வேண்டும். மாணவர்களின் கல்வி வளர்ச்சியுடன் அவர்களின் உடல், மன மற்றும் சமூக நலனிலும் தலைமையாசிரியர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்.பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய முறையில் கையாள்வதற்கான திறனை தலைமையாசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தயக்கமின்றி ஆசிரியர்களிடம் தெரிவிக்கும் வகையில் நம்பிக்கையான சூழலை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்.குழந்தைகள் உளவியல் தொடர்பாக, ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட மனநிலை, குடும்பச் சூழல், கல்வி சார்ந்த அழுத்தம் மற்றும் அவர்களின் நடத்தை மாற்றங்களை ஆசிரியர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும். மாணவர்களின் பிரச்சினைகளை வெறுமனே ஒழுக்கப் பிரச்சினையாகக் கருதாமல், அவர்களின் பின்னணியைப் புரிந்துகொண்டு அன்புடனும், பொறுமையுடனும் அணுக வேண்டும். தேவையான சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் மற்றும் உரிய நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றுத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதில் பள்ளிகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது. மாணவர்களுக்கு போதைப்பொருட்களின் உடல் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்தும், அதனால் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் தவறான பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்கான நேர்மறையான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் தொடர்ந்து நடத்த வேண்டும்.மாணவர்களின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றங்கள், பள்ளிக்கு வருகையில் குறைவு, கல்வியில் ஆர்வம் குறைதல் அல்லது வேறு கவலைக்குரிய அறிகுறிகள் தென்பட்டால், அவற்றை கவனமாக அணுகி, மாணவர்களை குற்றம் சாட்டாமல் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.அதன்படி, இன்று நடைபெறும் இத்திறன் வளர்ப்புப் பயிற்சியின் மூலம் தலைமையாசிரியர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் உளவியல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.எனவே, இந்த பயிற்சி வகுப்பினை தலைமையாசிரியர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, தங்களது பள்ளிகளில் பாதுகாப்பான, போதைப்பொருள் இல்லாத, மாணவர்களின் மனநலத்தை மதிக்கும் சூழலை உருவாக்குவதில் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 18, 2026

சமூக நீதி நாள்” உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தலைமையில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

விருதுநகர், கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், (17.09.2026)  தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ‘சமூக நீதி நாள்” உறுதிமொழியினைமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள், தலைமையில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர்.தமிழக அரசின் உத்தரவின்படி தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் -17 ம் தேதி ஆண்டுதோறும்  ‘சமூக நீதி நாளாக“ அனுசரிக்கப்படுகிறது.அதன்படி, இன்று ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும்-யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும்,எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைபிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்”. என்ற உறுதிமொழியினை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்  ஏற்றுக்கொண்டனர்.அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.இந்த நிகழ்வின் போது, முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் திரு.ஜான்சன் தேவசகாயம், உதவி ஆணையர் (கலால்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி மோகனா, மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 17, 2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்,தேர்தல் கல்வி அறிவுக் குழு(ELC) கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் கல்வி அறிவுக் குழு கலந்தாய்வுக் கூட்டம் (15.09.2026) நடைபெற்றது.தேர்தல் கல்வியறிவு குழு(ELC) என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரு சிறப்பு முயற்சியாகும். இது மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகள் மற்றும் பயிற்சிகள் மூலம் தேர்தல் உரிமைகளை அறிந்து கொள்ளவும் வாக்குப்பதிவு மற்றும் வாக்களிக்கும் முறைகளை எளிதாக புரிந்து கொள்ளவும் உதவுகிறது.நேர்மையான மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய வாக்களிப்பில் வாக்காளர்களை பங்கேற்க செய்தல், தேர்தல் உரிமைகள் மற்றும் வாக்காளர் பதிவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பே மாணவர்களைப் பொறுப்புள்ள வாக்காளர்களாக தயார்படுத்துதல், ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறைகளை தெளிவாக புரிந்து கொள்ளச் செய்தல் ஆகியவை தேர்தல் கல்வியறிவு குழுவின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.அதன்படி, இந்த குழுக்கள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவுகள், வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி.பேட் செயல் விளக்கங்கள், வாக்காளர் பதிவு குறித்த விழிப்புணர்வு விவாதங்கள், போட்டிகள், இளையோர் நாடாளுமன்றம் உள்ளிட்டவை  மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி தேர்தல் கல்வி அறிவுக் குழுவில் உறுப்பினர்களை சேர்த்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளம் வாக்காளர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் தேர்தல் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்கச் செய்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, கல்வி அறிவு குழு ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 17, 2026

இராஜபாளையம் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள்  (16.09.2026) கள ஆய்வு செய்தார்.மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டம் முகாமானது16.09.2026 காலை 09.00 மணி முதல் மறுநாள் 17.09.2026 அன்று காலை 09.00 மணி வரை நடைபெற்று வருகிறது.முதல் நாளான இன்று(16.09.2026) இராஜபாளையம் நகராட்சி பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகள், புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகள், இராஜபாளையம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி, வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கீழ் சேத்தூர் சேவுக பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு சார்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் (Sewage Treatment Plant - STP) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இராஜபாளையம் நகரின் 11.36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் 3 மண்டலங்களாக பிரித்து  அங்கிருந்து பெறப்படும் கழிவு நீரை சுத்திகரித்து, மறுசுழற்சி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இந்த சுத்திகரிப்பு நிலையம் தினமும் 21.85 MLD (2 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர்) கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. 2050-ம் ஆண்டு வரையிலான மக்கள் தொகையினை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் கழிவு நீரை சமாளிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள 42 வார்டுகளில் 47,497 வீடுகள் மற்றும் 5,876 வணிக வளாகங்களில் இருந்து நாள்தோறும் 26.84 மெட்ரிக் டன் மக்கும் குப்பை, 21.66  மெட்ரிக் டன் மக்காத குப்பை என மொத்தம் 48.5 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளை நுண் உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மக்காத குப்பைகளை தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படுகிறது.இராஜபாளையம் நகராட்சியில் ரூ.2.15 கோடி மதிப்பில் மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதுவோர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்  அறிவு சார் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.இராஜபாளையத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக 7400 மெ.டன் கொள்ளளவு கொண்ட 6 கிடங்குகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்கிட்டங்கியில் BR Grade A Rice - 1736 MTs, BR Grade C Rice -   694 MTs, Raw Paddy Grade A - 230 MTs, Raw Paddy Grade C - 1117 MTs உள்ளிட்ட பொருட்கள் தற்போது இருப்பில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து, இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6400/- மதிப்பிலான 3 காதொலிக்கருவிகளையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1400/- மதிப்பிலான மடக்குக்குச்சி என மொத்தம் ரூ.22,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்.பின்னர், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடி  அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்தவும் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) திரு.பால்பாண்டி, இராஜபாளையம் நகராட்சி ஆணையர் (பொ) திரு.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி அம்சவேணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , அனைத்துத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 16, 2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி .I A S., அவர்கள் திருவில்லிபுத்தூர் நகராட்சி தொடக்கப்பள்ளி, திருவில்லிபுத்தூர் நகராட்சி பேருந்து நிலைய வணிக வளாக கட்டடப் பணிகள், புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள், திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை, வன்னியம்பட்டி காளீஸ்வரி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, பருத்தி ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை  (15.09.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள், கல்வி, மருத்துவம், போக்குவரத்து, வேளாண்மை மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தின் கீழ் 1 முதல் 5 வகுப்பு வரை ஊரகப் பகுதிகளில் 1055 பள்ளிகளில் 46,852 மாணாக்கர்கள், நகர்ப்புற பகுதிகளில் 145 பள்ளிகளில் 22,850 மாணாக்கர்கள் என மொத்தம் 1200 பள்ளிகளில் 69,702 மாணாக்கர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதன்படி திருவில்லிபுத்தூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்ட செயல்பாடுகள், காலை உணவின் தரம், உணவு தயாரிக்கும் இடத்தின் தூய்மை மற்றும் சுகாதாரம், சமையல் நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், இந்த திட்டம் 6 முதல் 8 வரை பயிலும் மாணாக்கர்களுக்கும் விரிவு படுத்த முன்னேற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், வன்னியம்பட்டி காளீஸ்வரி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மேலும், திருவில்லிபுத்தூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.25 கோடி மதிப்பில் 29 கடைகள், உணவகம் மற்றும் சுகாதார வளாகத்திற்கான கட்டடங்களும், திருவில்லிபுத்தூர் அத்திக்குளம்-தெய்வேந்திரி ஊராட்சியில் ரூ.16.60 கோடி மதிப்பில் 67 கடைகள், 2 உணவகம், சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்யப்பட்டது.  இந்த பணிகளை பொதுமக்களின் நீண்டகால பயன்பாட்டை கருத்தில் கொண்டு, தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக அமைத்து, கட்டுமானப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுஅதுபோல், திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள், உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கான வசதிகள், மருந்துகளின் இருப்பு, மருத்துவ உபகரணங்கள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும், திருவில்லிபுத்தூர் நகராட்சி நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, விற்பனைப் பதிவேடுகள் உள்ளிட்டவை குறித்தும், திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி மையத்தில் பருத்தி சாகுபடி தொடர்பான ஆராய்ச்சிப் பணிகள், புதிய தொழில்நுட்பங்கள், விவசாயிகளுக்கான பயிற்சிகள், பருத்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தும் பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தரமான முறையில் செயல்படுத்தப்படுவதையும், திட்டங்களின் பயன்கள் முழுமையாக பொதுமக்களை சென்றடைவதையும் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.இலக்குவன், இணை இயக்குநர்(மருத்துவப் பணிகள்) மரு.செந்தில்குமார், வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், முதன்மை கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திரு.கணபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திருமதி அ.அம்சவேணி,  திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையர் திரு.குமார், உதவி பொறியாளர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 15, 2026

தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி ஷரண்யா அறி . I. A.S.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (14.09.2026) பொறுப்பேற்றுக்கொண்டார்.பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த பூமியான விருதுநகர் மாவட்டத்திற்கு 26-ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டமைக்காக பெருமை கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.விருதுநகர் மாவட்டம் தொழில் மற்றும் விவசாயம் என இரண்டிலும் சிறந்து விளங்குகிறது. நீரின்றி ஏதும் இல்லை என்பதால் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும், ஏற்கனவே உள்ள மழை நீர் சேகரிப்புக்கான கட்டமைப்புகளையும் புனரமைத்து மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுடைய பங்களிப்பு இல்லாமல் எதுவும் நீண்ட காலத்திற்கு நிலைத்து இருக்காது. ஆகையால் இதை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து சென்று அனைவருடைய பங்களிப்புடன் ஒருங்கிணைத்து இதை செயல்படுத்துவோம். விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் கிடைக்கக்கூடிய  நலத்திட்டங்கள் அனைத்தும் தகுதியான ஒரு விவசாயி கூட விடுபடாமல் அவர்களுக்கு சென்று சேர்வதற்கான முயற்சிகள் முழுமையாக எடுக்கப்படும்.இரண்டாவதாக மாவட்டத்தை பொறுத்த அளவில் தீப்பெட்டி, அச்சு, கைத்தறி, உலக அளவில் புகழ் பெற்ற சிவகாசி பட்டாசு உள்ளிட்டவைகளில் அங்கீகாரத்தை வைத்துள்ளோம். இதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்றால் அதற்கான சில வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. தீபாவளி திருநாள் அனைவருக்கும் கொண்டாட்டமாக இருப்பதைப் போல, இங்கு இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கும் ஒரு பாதுகாப்பான சூழலைக் கொடுக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும். அதை நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும்  அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துவோம்.மூன்றாவதாக கர்ப்பிணி பெண்கள், வளரிளம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, முதியோர்களின் மனநிலை மற்றும் உடல் நலம் கருதிய சிறப்பு திட்டங்கள் எடுக்கப்படும்.நான்காவதாக வேலை வாய்ப்பு பொறுத்த வரையில் தமிழக அரசின் மூலம் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. படித்த தகுதியான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.முக்கியமாக  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவான எப்பொழுதும் ஒரு நேர்மையான, மக்கள் எளிதாக அணுகக்கூடிய மாவட்ட ஆட்சித்தலைவராக வெளிப்படைத்தன்மையுடன் நான் செயல்படுவேன். பொதுமக்கள் எனது அலுவலக தொலைபேசி எண்ணான 94441-84000-இல் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்கும் போது அதற்கான தீர்வுகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, இடைநிற்றலை குறைத்து, தேர்ச்சி விகிதத்திலும், மதிப்பெண்ணிலும் முன்னணி மாவட்டமாக உருவாவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள், பத்திரிக்கைத்துறை நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு  ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் தெரிவித்தார்.  (14.09.2026) இராஜபாளையம் சுற்றுலா மாளிகையில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

Sep 15, 2026

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் அமைச்சர்  அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்களை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் 14.09.2026) இராஜபாளையம் சுற்றுலா மாளிகையில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 144 145

AD's



More News