25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 17, 2025

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 21.03.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்  நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில்  ADYAR ANANDHA BAVAN, CEPHAS MEDICAL PRIVATE LIMITED, BALASANKA TVS,  BHARATHI AIRTEL  போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள்  கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, I.T.I.டிப்ளமோ மற்றும்  பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 21.03.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in   என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது  மேலும் இச்சேவையானது  முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.              இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.             மேலும், இம்முகாமில் பாரத பிரதமரின் தொழிற் பயிற்சி திட்டத்திற்கான பதிவு முகாமும் இணைந்து நடத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சேர்ந்து தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் 12 மாத தொழிலக பயிற்சியும், வருடம் ஒரு முறை மானியமாக ரூ.6000- மற்றும் மாத ஊக்கத் தொகையாக ரூ.5000- வழங்கப்படும். இத்திட்டத்தில், சேர விருப்பமுள்ள 21 முதல் 24 வரை வயதுடைய மற்றும் கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப்பொறியாளர், இளங்கலை கலை, அறிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு, வணிக நிர்வாகம் மற்றும் பார்மஸி பட்டம் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேரில் வருகைபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பான விபரங்களை https://pminternship.mca.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 17, 2025

அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு தேர்விற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

திருச்சி இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம், 2025-2026 ஆம் ஆண்டுக்கு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க்  / ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் மற்றும் டிரேட்ஸ்மென் ஆகிய பிரிவுகளில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.        அக்னி வீர் திட்டத்தில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் 12.03.2025  முதல் 10.04.2025 வரை பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.     மேலும் இது தொடர்பாக கல்வி தகுதி மற்றும் கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் திருவில்லிபுத்தூரிலுள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி விவரம் பெற்றிடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 17, 2025

பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு செயல் திட்டங்களில் ஒன்றான “குழந்தைகள் இலக்கியத்” திருவிழா விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு செயல் திட்டங்களில் ஒன்றான “குழந்தைகள் இலக்கியத்” திருவிழா- 2025, 20.03.2025 மற்றும் 21.03.2025 ஆகிய தினங்களில் கிருஷ்ணன் கோயில் லிங்கா குளோபல் பள்ளியில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 4- ஆம் வகுப்பு முதல் 7- ஆம் வகுப்பு வரை பயிலும் 300 -க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர்.டாக்டர் சங்கர சரவணன் அவர்கள் (இணை இயக்குநர்), பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் குழந்தைகளுக்கான வினாடி வினா நிகழ்ச்சியினை நடத்தவுள்ளார்.மேலும், “குழந்தைகள் இலக்கியத் திருவிழாவின் தொடக்க விழாவில் எழுத்தாளரும், நடிகர் மற்றும் கதைச்சொல்லி என பன்முக ஆளுமை கொண்ட திரு.பவா செல்லதுரை அவர்கள்  சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.மேலும், குழந்தைகள் இலக்கியத் திருவிழாவில் சிறுவர்களுக்கான கதைகள், பொம்மலாட்டம், மன நல பயற்சிகள், சிறுவர் திரைப்படங்கள், மேஜிக், போன்ற நிகழ்ச்சிகளும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழுவிவாதம், குழந்தைகளின் வாசிக்கும் பழக்கம், கலகல வகுப்பறை, மாணவர்களுக்கு இலக்கியம் கற்பித்தல் போன்ற பல்வேறு அமர்வுகளும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற உள்ளது. குழந்தைகள் இலக்கியத் திருவிழா நிறைவு விழாவில் எழுத்தாளர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மதுரை (சாகித்திய அகாடமி விருதாளர்) சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். எனவே, குழந்தைகள் இலக்கியத் திருவிழாவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  பள்ளி  குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 16, 2025

சிவகாசி மற்றும் திருவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (15.03.2025) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் ஊரகம், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், நலத்திட்டங்கள், சேவைகள் முறையாகவும், தரமானதாகவும் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுவதை உறுதிசெய்யும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அதன்படி, சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் 4 ஆவது வார்டு எம்.ஜி.ஆர் காலணியில் ரூ.15 இலட்சம் மதிப்பில் புதிதாக கலையரங்கம்  கட்டப்பட்டு வருவதையும்,மேலும், திருத்தங்கல் ரயில் நிலையம் செல்லும் பாதையில் 17 ஆவது வார்டில் ரூ.10 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், திருத்தங்கல் கண்ணகி காலனியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்; ரூ.25 இலட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டு வருவதையும்,தொடர்ந்து, சிவகாசி மாநகராட்சியில், வார்டு எண் 37-ல் ரூ.40 இலட்சம் மதிப்பில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருவதையும்,  வார்டு எண் 46-ல் மாரிமுத்து தெருவில் ரூ.23.50 இலட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருவதையும்,வெம்பக்கோட்டை முக்கு அருகில் ரூ.10.8 இலட்சம் மதிப்பில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, திருத்தங்கல் செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தினை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருந்துகளின் தரம், இருப்பு, விலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து கேட்டறிந்தார்.பின்னர், திருவில்லிபுத்தூரில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதையும், 15-வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் ரூ.123 கோடி மதிப்பில் (Bio-methanation Plant) காய்கறி கழிவு மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, அங்கு சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், திருவில்லிபுத்தூரில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மல்லி முதல் கிருஷ்ணண்கோவில் வரையில் ரூ.5.48 கோடி மதிப்பில் சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தப்படும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் திரு.கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 14, 2025

41 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க உரிய அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆடசித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள 41 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அதன்படி, விருதுநகர் வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட சண்முக சுந்தரபுரம் விலக்கு முதல் கோட்டூர் வரை, வாழ வந்தாள்புரம் முதல் கோட்டூர் வரை,  விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் ஒண்டிப்புலி நாயக்கனூர் வரை,  விருதுநகர் ஏ ஆர் கிரவுண்ட் முதல் மத்தியசேனை விலக்கு வரை, துலுக்கப்பட்டி ராம்கோ சிமெண்ட் பேக்டரி முதல் மேட்டமலை வரை,  ஸ்ரீராம்பூர் முதல் அழகாபுரி வரை,  விருதுநகர் சிட்கோ முதல் மெட்டுக்குண்டு காலனி வரை,  சண்முகசுந்தரபுரம் விலக்கு முதல் மலைப்பட்டி வரை,  ராமசாமிபுரம் விலக்கு முதல் கோட்டூர் வரை,  பாலவனத்தம் முதல் சென்னல்குடி வரை,  முக்குளம் முதல் கட்டன்குளம் விலக்கு வரை, மெட்டுக்குண்டு காலனி முதல் சண்முகசந்தரபுரம் விலக்கு வரை, துலுக்கப்பட்டி முதல் மேட்டமலை வரை, காரியாபட்டி பேருந்து நிலையம் முதல் நெடுங்குளம் வரை, காரியாபட்டி ஐயப்பன் கோவில் முதல் குறிஞ்சன்குளம் வரை, பகுதி அலுவலகம் அருப்புக்கோட்டை அலுவலக செம்பொன்நெருஞ்சி முதல் மினர்வா வரை, சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட வெற்றிலையூரணி  முதல் கூத்தனாட்சியாபுரம் வரை, வெற்றிலையூரணி முதல் சேதுராமலிங்கபுரம் வரை, திருவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட லட்சுமி நாராயண மஹால் முதல் பொட்டல்பட்டி வரை, மல்லி முதல் இனாம் கரிசல்குளம் வரை, ஸ்ரீவில்லிபுத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் பி மீனாட்சிபுரம் வரை, மல்லி முதல் அன்னை சத்யா நகர் வரை,  ஸ்ரீவில்லிபுத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் மல்லி வரை, அழகாபுரி முதல் சுந்தரபாண்டியம் வரை, ஷேசபுரம் முதல் கூமாப்பட்டி வரை, பட்டியகல் முதல் கீழக்கோட்டையூர் வரை, பட்டியக்கல் முதல் மகாராஜபுரம் வரை, முத்துவெங்கடராயபுரம் முதல் வங்கார்பட்டி வரை, சத்திரப்பட்டி முதல் கோபாலபுரம் வரை, சமுசிகாபுரம் முதல் தும்பக்குளம் வரை, இளந்திரைகொண்டான் முதல் சொக்கநாதன்புதூர்விலக்கு வரை, பகுதி அலுவலகம், ராஜபாளையம் அலுவலக எல்லைக்குட்பட்ட காட்டன் மார்க்கெட் முதல் நரிமேடு வரை, ஆர்டிஓ ஆபீஸ் முதல் தொட்டியபட்டி வரை, காந்தி சிலை முதல் அன்னத்தலை விநாயகர் கோவில் வரை, சாராபட்டி முதல் குறுக்கம்பட்டி வரை, தளவாய்புரம் பேருந்து நிலையம் முதல் முறம்பு வரை, ராஜபாளையம் ரயில்வே நிலையம் முதல் சமத்துவபுரம் வரை, ரெட்டியாபட்டி முதல் அப்பநாயக்கன்பட்டி வரை, சுந்தரராஜபுரம் முதல் பத்மா மருத்துவமனை வரை, ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முதல் ஹீத் டிரஸ்ட் வரை,  MKS  பெட்ரோல் பல்க் முதல் அட்டைமில் முக்கு ரோடு வரை.மேற்கண்ட 41 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தினை ஆன்லைன் மூலம் ரூ.1600- செலுத்தி பெற்று அதனை பூர்த்தி செய்து அதனை உரிய சான்று மற்றும் இணைப்புகளுடன்  20.03.2025-க்குள் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 14, 2025

"Coffee With Collector” என்ற 155-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (14.03.2025) கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வரும் 60 மாணவ, மாணவியர்களுடன் நடைபெற்ற "Coffee With Collector” என்ற 155- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, 155 -வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.தமிழ் ஆர்வத்தை வளர்த்தல், சிறுகதை படைத்தல், படைப்பிலங்கியங்கள், தமிழ் அறிஞர்கள் குறித்தும் கல்லூரி மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவியர்கள்; உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.   

Mar 14, 2025

மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்தும் வர்த்தக நிபுணர்கள் (வாங்குவோர் மற்றும் விற்போர்) சந்திப்பு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

விருதுநகர் சரஸ்வதி கிராண்ட் திருமண மண்டபத்தில்  (14.03.2025) தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்தும் வர்த்தக நிபுணர்கள் (வாங்குவோர் மற்றும் விற்போர்) சந்திப்பு நிகழச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், ஏறத்தாழ 1,20,000 பெண்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் 80,000 பெண்கள் ஏதாவது ஒரு வகையில் சிறு தொழிலோ அல்லது வருமானம் ஈட்டக்கூடிய ஒரு பணியிலே இருக்கக்கூடிய ஒரு சூழலை நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் சுமார் ரூ.9000 கோடி கடனாக பெற்று இருக்கிறார்கள்.  இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடனை பெற்று சிறு தொழில்களை செய்வதற்கும் அதிகமான தொழில் மையங்களை உருவாக்கி கொள்ளமுடியும். தினசரி பயன்பாட்டிற்காக ஒவ்வொரு நாட்களும் நாம் செலவழித்து வாங்ககூடிய பொருட்களையும், தரமான பொருட்களையும் மகளிர் சுய உதவிக்குழுக்களே உற்பத்தி செய்து வருகிறது. தரமான மற்றும் ஆரோக்கியமான உணவுகள், மசாலா பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு செய்யக்கூடிய பொருட்களை மிகவும் துரிதமாக செய்து விற்பனை செய்கின்றனர்.எனவே மகளிர் சுயஉதவிகுழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் உணவுகளை மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் அளவிற்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். உணவு சார்ந்த தொழில் நுட்பங்கள், பதப்படுத்தப்படும் உணவுகளை ஆரோக்கியமான வழிமுறைகளை நீங்கள் அனைவரும் கையாள வேண்டும்.மேலும், ஒவ்வொரு கிராமத்தில் இருக்கக்கூடிய அரசு கட்டடங்கள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் கட்டடங்கள், பயன்படுத்தப்படாத கட்டடங்களை தற்காலிகமாக சுயஉதவிக்குழுக்களுக்கு அதனுடைய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதன் மூலம் நமது மாவட்டத்தில் அனைத்து மகளிர் சுயஉதவி குழுவில் உள்ள  பெண்கள் தொழில் வாய்பபை உருவாக்கி கொள்ளவேண்டும்.நாம் ஒரு பொருட்களை உற்பத்தி செய்வது என்பது எளிது . ஆனால் அவற்றை முறையாக சந்தைப்படுத்துவது என்பது மிகவும் கடினமாகும். அதற்காக தான் சந்தைப்படுத்துதல் குறித்து தொடர்ச்சியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.         எனவே, நம்முடைய குறைந்தபட்ச இலக்கு என்பது ஒவ்வொரு பெண்ணும் சுய தொழில் செய்து மாதம் ரூ.20 ஆயிரம் பெறக்கூடிய அளவிற்கு  இலாபம் ஈட்டக்கூடிய அளவிற்கு வரவேண்டும். பெண்களுக்கான சுதந்திரம் என்பது அவர்களின் பொருளாதார வலிமைதான். தனது கையில் இருக்கும் பணத்தை தானே செலவு செய்வதற்கும், தனது குடும்பத்திற்கு செலவு செய்வதற்கும் மற்றும் தனக்கு விருப்பமானவற்றை வாங்குவதற்கும் அவர்களுக்கு அந்த பணத்தின் மீது செல்வாக்கு இருக்க வேண்டும்.அதற்கு  பெண்கள் அனைவரும் பொருளாhர வலிமை பெற்றவர்களாக உருவாக வேண்டும் எனவும், அதற்கு இருக்கக்கூடிய அரசினுடைய திட்டங்கள்,  பயிற்சிகளை நீங்கள் முறையாக பயன்படுத்திக்கொண்டு,  பாரதி கண்ட புதுமை பெண்ணாக,  அனைத்து தொழில் வாய்ப்புகளையும் பெற்று பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். அதற்கு தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது இதற்காக தான் மகளிர் மேமம்மபாட்டு துறையும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும், இந்நிகழ்ச்சியில், 68 சுய உதவிக்குழுக்கள் 150 -ற்கும் மேற்பட்ட தங்களின் உடைய தயாரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர். விவசாயம் சார்ந்த பொருட்களான மல்லி, வத்தல், மக்களாச்சோளம், பயறு வகைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் பெற்று ஆடு, கோழி, காடை மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய தொழிலில் ஈடுபட்டுள்ளதால் இந்நிகழ்வில் ஆடு, கோழி, காடை மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், கொள்முதலாளர்களுக்கும் முதற்கட்டமாக 28 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரகஃநகர்ப்புற வாழ்வாதார இயக்கம்)திரு.ஜே.ஜார்ஜ் மைக்கேல், உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட வள பயிற்றுநர்கள், வட்டார இயக்க மேலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 14, 2025

உலக தண்ணீர் தினமான 22.03.2025- அன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் 23.03.2025 - அன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான 22.03.2025 - அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது - மேற்படி ஓத்திவைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டமானது 23.03.2025 - அன்று  நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.1. உலக தண்ணீர் தினத்தின் சுருப்பொருளினைப் பற்றி விவாதித்தல்• வான்தரும் மழைநீரினை சேகரித்தல்.• சிக்கனமாக தண்ணீரைப் பயன்படுத்துதல்.• உடைந்த குழாய்களை சரி செய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல்.• மறுசுழற்சிக்கு உட்படுத்துதல்.• நிலத்தடி நீரை செறியூட்டுதல்.• நீரின் தூய்மையை பாதுகாத்தல் மற்றும் நீர் மாசுக்கட்டுப்பட்டைத் தடுத்தல்.• மரம் வளர்த்தலை ஊக்குவித்தல்,வீட்டுக்கொரு மரம் வளர்த்தல்.• நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல்.• நீhநிலைகளின் தண்ணீர் சேகரமாக உரிய கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல்.• நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுதல். 2. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.   (01.04.2024 முதல்28.02.2025 வரை) 3.  கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல். 4.  சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்.     சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல்,மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி,       தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி மாதம்  இருமுறை சுத்தம் செய்தல்         (பிரதி மாதம் 5 - ம்  தேதி மற்றும் 20 - ம் தேதி).• தினமும் தகுந்த அளவு குடிளோரின் கலந்து குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல்.• இதர பொருட்கள்  குறித்து விவாதித்தல்.எனவே, 23.03.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 14, 2025

நில உடமைகளை பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெறும் விவசாயிகள் மட்டுமே பிரதம மந்திரி விவசாயிகளின் கௌரவ நிதி உதவி தொகை பெறலாம்

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளின் நில உடமைகளை சரிபார்த்தல் மற்றும் விவசாயிகளுக்கு அடையாள எண்  உருவாக்குதல்   பணிகள்  நடைபெற்று வருகிறது.வேளாண்மை உழவர் நலத்துறை பணியாளர்கள் மூலம் விவசாயிகளின் நில உடமைகளை சரிபார்த்து விவசாயிகளுக்கு அடையாள எண் உருவாக்குதல்  பணிகள் நடைபெற்று வருகிறது.  இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், சமுதாய வளபயிற்றுனர்கள் (CRP)  ஆகியோரும் இணைந்து இப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 51,681 பயனாளிகள் பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ  நிதி தொகையினை பெற்று வருகின்றனர். ஆனால் 22,258 விவசாயிகள் மட்டுமே தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்துள்ளனர்.விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தங்களின் சொந்த கிராமங்களை விட்டு வேறு இடத்தில் வசித்தாலும் அருகில் உள்ள அனைத்து  இ-சேவை மையங்களில் தங்களின் நில உடமைகளை இலவசமாக பதிவு செய்து பயன்பெறலாம்.  தங்களுடைய பட்டா, ஆதார் அட்டை மற்றும் அலைபேசி எண் கொண்டு சென்று பதிவு செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்பட்டு அடையாள எண் பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே மத்திய, மாநில அரசுகளின் மானிய திட்டங்களை ஒற்றை சாளர முறையில் பயன்படுத்த முடியும்.மீதம் உள்ள 29,423 விவசாயிகள் வருகிற மார்ச்-31-ம் தேதிக்குள் தங்களின் நில உடமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 14, 2025

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் நான் முதல்வன் பினிஸிங் ஸ்கூல் திட்டத்தின் கீழ் தொழிலக பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 31.03.2025-அன்று வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ்; வேலைவாய்ப்பு பயிற்சி  (PM INTERNSHIP)  வழங்கும் திட்டத்தின்வாயிலான நடப்பாண்டில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 14889 நபர்களுக்கு முன்னனி தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் சேர்வதற்கு தேவையான கல்வி தகுதியுடைய 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப்பொறியாளர், இளங்கலை கலை, அறிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு, வணிக நிர்வாகம் மற்றும் பார்மஸி பட்டம் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக பயிற்சி அளிக்கும் பொருட்டு இணையதளத்தில் பதிவு செய்திடும் பணி நடைபெற்று வருகிறது.  இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற 21 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்காலத்தில்12மாதங்களுக்குஉதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.5000- வீதம் வழங்கப்படும்.மேலும், பயிற்சிக்காலத்தில் ஒருமுறை மட்டும் மானியமாக ரூ.6000 வழங்கப்படும். இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவர்கள் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசியுடன் வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஏற்கனவே தேசிய தொழிற்பழகுநர் திட்டத்தில் தொழிற் பழகுநர் பயிற்சி பெற்றிருக்க கூடாது. மேலும் முழுநேர பணிசெய்பவராகவோ, முழுநேரக் கல்வி கற்பவராக இருக்ககூடாது. இத்திட்டத்தில்  விண்ணப்பிக்க 31.03.2025 அன்று கடைசி நாளாகும்.விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொழில்நெறிவழிகாட்டுமையம் மற்றும் விருதுநகர், சூலக்கரை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் தற்போது இதற்காக இணையவழி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேற்கண்ட பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் அரசு வேலை நாட்களில் காலை10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மேற்க்கண்ட கல்விச்சான்றிதழ்களுடன் நேரில் வந்து பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு (04562 -294755) என்ற  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தில் நேரடியாக விண்ணப்பிக்க விரும்புவோர் https://pminternship.mcg.gov.in/ என்ற வலைதளத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.மேலும், நான் முதல்வன் பினிஸிங் ஸ்கூல் (NMFS) என்னும் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சித்திட்டத்தில் இணைந்து பயிற்சி பெற விரும்புவோர் 16 வயது முதல் 45 வரை உள்ளவர்கள் அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் https://candidate.tnskill.tn.gov.in இல் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட இருதிட்டங்களிலும் விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்காணும் வலைதளங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,, அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 108 109 110 111 112 113 114 ... 126 127

AD's



More News