விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 09.09.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் அவர்களின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கோட்ட அளவிலான கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் மற்றும் தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக அளித்து வட்டார அளவிலான விவசாயம் மற்றும் விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணவும் நடவடிக்கை விபரத்தினை மனுதாரருக்கு தெரிவித்திடவும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT ,IIM, IIIT NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் (Central Universities) பட்டப்படிப்பு பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன வகுப்பை (BC,MBC,DNC) சார்ந்த மாணவ / மாணவியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணாக்கர் ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக கற்ப்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக மாணாக்கரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2025-26ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh and Renewal Applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணாக்கர்கள், கீழ்கண்ட முகவரியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை-5 /மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை-5 / மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மத்திய மற்றும் மாநில அரசின் இதர கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவர்கள், இக்கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் , இக்கல்வி உதவித்தொகை பெற தகுதியற்றவராகிறார். மேலும் 2025-26-ம் நிதியாண்டிற்கான புதியது (FRESH) மற்றும் புதுப்பித்தல் (RENEWAL) கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், தங்களது சான்றொப்பத்துடன் (with BONAFIDE Certificate ) தகுதியான விண்ணப்பத்தினை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு இனத்தவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பு இனத்தவருக்கு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்கும், பரிந்துரை செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 30.09.2025 மற்றும் புதியது (Fresh) விண்ணப்பங்களை 31.10.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.மேலும், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த மாணவ/ மாணவியர்கள், ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண்.044-29515942., மின்னஞ்சல் முகவரி. tngovtiitscholarship@gmail.com என்ற முகவரிக்கும்,மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள், ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2 வது தளம், சேப்பாக்கம், சென்னை -5, தொலைபேசி எண்.94454-77817, மின்னஞ்சல் முகவரி, mbcdnciitschloarship@gmail.com, என்ற முகவரிக்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PM NATIONAL APPRENTICESHIP MELA (PMNAM)) 08.09.2025 திங்கள் கிழமை அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட தொழிற்பழகுநர் சேர்க்கைமுகாமில் அரசு/ பிரபல முன்னணி தனியார் தொழிற்நிறுவனங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மேலும் ITI - இல் உள்ள தொழிற்பிரிவுகளான 1) Fitter 2) Machinist 3) MMV 4) R&AC5) Electrician 6) Turner 7) Welder 8) Wireman 9) Surveyor 10) COPA மற்றும் இதர பிற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று இதுநாள்வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள், மற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும் இத்தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொழிற்பழகுநர் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் தொழிற் நிறுவனங்களின் நிலைக்கு ஏற்ப மாதந்திர உதவித்தொகையாக ரூ.7700/- முதல் ரூ.13500/-வரை வழங்கப்படும். மேலும் தொழிற்பழகுநர் பயிற்சிக்குப்பின் மத்திய அரசின் தொழிற்பழகுநர் சான்றிதழ், (National Apprenticeship Certificates - NAC) மற்றும் முன்னணி நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பும் (Placement) வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL 1) மற்றும் FL 2 / FL 3 / FL 3A / FL 3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, நபிகள் நாயகம் பிறந்த நாளான (மிலாடி நபி) 05.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL 1) மற்றும் FL 2 / FL 3 / FL 3A / FL 3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் (02.09.2025) பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தலைமையாசிரியகளுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு (SLAS 2025) ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S., அவர்கள் முன்னிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடினார்.ஒரு மாணவனின் இயல்பான திறமையை வெளிக் கொணர்வதுதான் கல்வி, செயல்கள் அடிப்படையில் தான் கற்கின்ற கல்வியை மாணவன் எவ்வாறு பயன்படுத்திகிறான் என்ற கற்றல் அடைவை ஆய்வு செய்வதற்கே இந்தப் புதிய ஆய்வு உத்தி கையாளப்பட்டு வருகிறது.ஏற்கனவே எண்ணும் எழுத்தும் என்ற திட்டமும், திறன் வகுப்பறைகளும் நடைமுறையில் இருக்கின்றன. மாணவரின் கற்றல் அடைவு சோதிக்கப்படுகின்ற போதுதான் தான் கல்வியில் எந்த நிலையில் அவன் இருக்கிறான் என்பது தெளிவாகிறது. இதை அறிந்து கொண்டு மாணவன் கற்றல் குறைபாடு எத் திறனில் இருக்கிறது அதற்கேற்ப மாணவனுக்குச் சிறப்புப் பயிற்சி மற்றும் கவனம் கொடுக்கப்பட்டு, முழுத் திறமையுள்ள மாணவனாக மாற்றுவதுதான் இந்த ஆய்வுக் கூட்டத்தின் நோக்கம்.ஏறத்தாழ 2 முதல் 3 மாதங்களாக SLAS க்கான முழு அறிக்கை பெறப்பட்டவுடன் இதற்கான ஆய்வுக்கூட்டம் பேராசிரியர் அன்பழகன் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தை சார்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதனடிப்படையில் இந்த ஆய்வுக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் எத்தனை பள்ளிகள் உள்ளன. எங்கெல்லாம் உட்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றது. எங்கெல்லாம் அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேலும் இடைநிற்றல் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்க்கை விகிதம் மற்றும் ஒரு மாணவர் சேர்க்கை நடைபெறாத பள்ளிகள் குறித்து என பல்வேறு வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இடைநிற்றல் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்க்கை விகிதம் மற்றும் ஒரு மாணவர் சேர்க்கை நடைபெறாத பள்ளிகள் குறித்து என பல்வேறு வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மாநில அளவிலான அடைவுத் தேர்வு முடிவுகள் மூலம் நீங்களும் எப்படி பணியாற்றலாம் என்பது அறிந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கான கூட்டம் தான் இது. ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு மேற்கொண்டு இன்று 26 வது மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.பள்ளிக்கல்வித்துறை என்பது மிகவும் முக்கியமான துறை. தலைமையாசிரியர்களாக நீங்கள் முதலில் தங்களுக்கான பொறுப்புகளை புரிந்து அதனை எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு தங்களுக்கான நிறை, குறைகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு குழந்தைகள் தேர்ச்சி பெற்று விட்டார்கள் என்று நினைக்காமல், ஒன்றாம், இரண்டாம் வகுப்பு குழந்தைகள் முழுமையான அந்த வகுப்பிற்கான கற்றல் அடைவு பெற்று அந்த குழந்தைகள் அடுத்த வகுப்பிற்கு செல்வதை உறுதி செய்யவதே முக்கியம்.பள்ளி குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி என்பது மிகவும் முக்கியம். அதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு காலத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் உயர் கல்விக்கு சேர்ந்தால் போதும் என்ற நிலை மாறி தற்போது தலைசிறந்த கல்லூரிகளில் உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை பெரும் வகையில் நமது பள்ளி மாணவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். பாடம் நடத்தக்கூடிய ஆசிரியர்கள் பாடத்தோடு வாழ்க்கைக்கான அறத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். உங்களை கற்றல் அடைவு அடைந்திருக்கிறோமா என்று நீங்களே பரிசோதித்து கொள்ள வேண்டும்.எட்டாம் வகுப்பு வரை நீங்கள் கற்றல் கற்பித்தலை சிறப்பாக செய்தீர்கள் என்றால் அதற்குப் பின்பான கற்றல் கற்பித்தல் மாணவர்களுக்கு எழுதாகி விடுகிறது. ஆசிரியர்களை நம்பித்தான் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். படிப்பு என்பது ஒரு நாட்டினுடைய மிகப்பெரிய ஆயுதம். அந்த வகையில் நம் நாட்டை, சமூகத்தை காக்கக் கூடிய ராணுவ வீரர்கள் ஆசிரியர்களாகிய நீங்கள்தான்.தலைமை ஆசிரியர்கள் மாநில கல்வி கொள்கை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் ஆசிரியர்களான இரண்டாம் பெற்றோர்களை நம்பித்தான் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். தேர்ச்சி மட்டும் இல்லாமல் புரிதலோடு கற்றுக்கொள்ள அவருக்கு சொல்லி தர வேண்டும். அதற்கான பொறுப்பும், கடமையும் ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து இருக்க வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 1468 தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 981 அரசு பள்ளிகள், 453 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 29,353 இந்த SLAS தேர்வில் கலந்து கொண்டனர்.இதில் விருதுநகர் மாவட்டம் மூன்றாம் வகுப்பில் மாநில அளவில் 16 வது இடத்தினையும், ஐந்தாம் வகுப்பில் 11 வது இடத்தையும், எட்டாம் வகுப்பில் 20 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த தரப்பட்டியலில்; விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 58.5 சதவீதம் பெற்று 18 வது இடத்தை பெற்றுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட சவால்கள் உள்ளது. அந்த சவால்களை கடந்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஆசிரிய பெருமக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த ஆய்வுக்கூட்டமானது உங்களை ஊக்குவித்து, அடுத்த முறை இந்த மாவட்டத்திற்கு ஆய்வுக்கூட்டத்திற்கு வருகை தரும் பொழுது சிறப்பாக செயல்பட்டு உள்ளது என்று பாராட்டுகின்ற நிலைக்கு வருவதற்காக தான் நடத்தப்படுகிறது. சிறப்பாக செயல்பட்டிருக்கின்ற பள்ளிகளுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதேப்போல் அனைத்து பள்ளிகளும் முதல் இடத்தை பெறுவதற்கு தொடர்ந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தின் SLAS அறிக்கை பெறப்பட்டுள்ளது. உதாரணமாக 9 இலட்சத்து 80 ஆயிரத்து 340 குழந்தைகளின் அறிக்கையானது 3 ஆம் வகுப்பு. 5 ஆம் வகுப்பு மற்றும் 8 வகுப்பு என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலிருமிருந்து பெறப்பட்டுள்ளது.நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்கின்ற பொழுதுதான் நமது மாவட்டத்திற்கு பெருமை. மாநில அளவில் நமது மாவட்டம் 18 ஆவது இடத்தில் இருக்கின்றோம். அதனை உயர்த்துவதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த அறிக்கை என்பது ஒவ்வொரு பள்ளிகளுக்குமானது. எனவே அந்தந்த பாட ஆசிரியர்கள் அனைத்து சூழ்நிலையும் புரிந்து கொண்டு முன்னேறுவதற்கு செயல்பட வேண்டும்.SLAS அறிக்கை குறித்த கருத்து பற்றி நாம் அனைவரும் உள்வாங்கி கொள்ளவேண்டும். தலைமையாசிரியர் என்பவர்கள் கப்பலின் தலைவர் போன்று ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தலைமையாசிரியர்களும் பள்ளி வளாகத்திற்குள் சென்றவுடன் அங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என அனைவரும் உங்களின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். ஆகவே, SLAS அறிக்கையினை முன்னேற்றுவதற்கு அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்.இக்கூட்டத்தில் தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.நரேஷ், இணை இயக்குநர்(தொடக்கக் கல்வி) திரு.சுவாமிநாதன், இணை இயக்குநர்(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) திரு.வை.குமார், முதன்மை கல்வி அலுவலர் திரு.மதன்குமார், முதல்வர்(மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், பாலையம்பட்டி) திருமதி செல்வி, விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி சாந்தி மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் - 3644 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை 02/2025, நாள் 21.08.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், விருதுநகர் சார்பாக இலவசப் பயிற்சி வகுப்புகள் 03.09.2025 (புதன் கிழமை) அன்று தொடங்கப்படவுள்ளது. இவ்வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/dsWChcUm8coEtMZr8 என்ற கூகுள் பார்ம் மூலமாகவோ அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம்.மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது அலுவலகத்திற்கு வந்து நேரடியாகவோ தொடர்புகொள்ளலாம். எனவே, TNUSRB – PC EXAM 2025 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பிற்கிணங்க, 10.09.2025 அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டியும், 11.09.2025 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டியும் விருதுநகர் மாவட்ட நூலக அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும் கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும் நடத்தப்பெறவுள்ளன. அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு/ தனியார் / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள் / பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/ பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும் .பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப் போட்டிக்கு பள்ளி மாணவர்களுக்கு 1. வாய்மையே வெல்லும் ,2. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் , 3. காஞ்சித் தலைவன், 4. அண்ணாவின் தமிழ்வளம் ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1. எழுத்தாளராக அண்ணா, 2. தமிழும் அண்ணாவும், 3. பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், 4.அண்ணாவின் மேடைத்தமிழ் ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன.தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்கு பள்ளி மாணவர்களுக்கு 1. தந்தை பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள் , 2. பெரியாரும் பெண் விடுதலையும், 3. வைக்கம் வீரர், 4. சுயமரியாதை இயக்கம் ,ஆகிய தலைப்புகளிலும் கல்லூரி மாணவர்களுக்கு 1. தன்மானப் பேரொளி, 2.தெற்காசியாவின் சாக்ரடீஸ், 3.சமுதாய விஞ்ஞானி பெரியார், 4. தொண்டு செய்த பழுத்த பழம், ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன. பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- , இரண்டாம்பரிசு ரூ.3000/- , மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும், தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு ரூ.2000/- என்ற வீதத்திலும் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் "தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான 'தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும். மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.தமிழ்நாடு அரசின் 2025-2026 கல்வியாண்டில் வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் உள்ள எழு(7) இயல்களில் கடந்த ஆண்டில் மாணவர்கள் பயிலாத "இயல் 2-ல் உள்ள மேகம், பிரும்மம்: இயல் 6-ல் முத்தொள்ளாயிரம்: மற்றும் இயல் 7-ல் அக்கறை" ஆகிய 4 தலைப்புகளைத் தவிர ஏனைய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். இத்தேர்வு கொள்குறி வகையில் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.2025-2026-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் (மெட்ரிக் /CBSE / ICSE / உட்பட) மாணவர்கள், 11:10:2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2025 முதல் 04.09.2025 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் / முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய 04.09.2025 அன்றே கடைசி நாளாகும் எனஅரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர், சென்னை அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சேத்தூர் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட துணை மின் நிலையத்தில் (01.09.2025) தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் 2023-2024 ஆம் ஆண்டு இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.2.99 கோடி மதிப்பீட்டில் சேத்தூர் பேரூராட்சிக்கு தலைமை நீரேற்று நிலையங்களுக்கு 24 மணி நேர மும்முனை மின் இணைப்பினை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் மற்றும் சீர்மரபினர் நல வாரியத்துணை தலைவர் திரு.இராசா அருண்மொழி ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.சேத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள், 179 தெருக்கள் உள்ளது. இப்பேரூராட்சியில் மொத்தம் சுமார் 22,036 மக்கள் தொகை உள்ளது.சேத்தூர் பேரூராட்சி குடிநீர் ஆதாரங்களான வாழவந்தான் கண்மாய் அருகில் இரண்டு திறந்த வெளிக்கிணறு மற்றும் 12 போர்வெல்கள் அமைந்துள்ளது. பிராக்குடி ஆற்றுப்பாதையில் இரண்டு திறந்த வெளிக்கிணறு, அய்யனார்கோவில் பாதையில் உள்ள சேகரிப்புக்கிணறு ஆகியவற்றில் 12 போர்வெல்கள் அமைந்துள்ளது.மேற்படி குடிநீர் ஆதாரங்களில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கான 25 மின் இணைப்புகளுக்கு தற்பொழுது 110/11 கே.வி சேத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து வெளிச்செல்லும் 11 கே.வி சேத்தூர் ஊரக மின் பாதை மற்றும் 11 கே.வி தேவதானம் ஊரக மின்பாதை ஆகியவற்றில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.மிகுந்த வறட்சி காலங்களில் தண்ணீர் தேவை அதிகமாக இருப்பதால், தினசரி 12 முதல் 14 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கிடைப்பதாலும், இதர நேரங்களில் இருமுனை மின்சாரம் மட்டுமே கிடைப்பதாலும் போதிய நீராதாரங்கள் இருந்த போதிலும், சீரான குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை இருந்ததால் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்“ திட்டத்தின் கீழ் 110/11 கே.வி சேத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து தனி மின்பாதை அமைத்து 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கும் வகையில் மதிப்பீடு அனுமதி பெறப்பட்டு, சேத்தூர் பேரூராட்சி மூலம் ரூ.2.99 கோடி மதிப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டு, சேத்தூர் பகுதியில் 229 மின்கம்பங்கள், 30 கி.மீ மின்பாதை மற்றும் 13 மின்மாற்றிகள் அமைத்து தனி மின்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி மின்பாதைக்காக சேத்தூர் துணை மின் நிலையத்தில் 11 கே.வி வாட்டர் ஒர்க்ஸ் என்ற பெயரில் புதிய மின்னூட்டி நிறுவப்பட்டு, மின்பாதை அதில் இணைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சேத்தூர் பேரூராட்சிகளின் குடிநீர் ஆதாரங்களான 23 மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடக்கப்பெற்று சுமார் 22,036 பயனாளிகள் குடிநீர் பெற்று பயனடைவார்கள் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மேற்பார்வை பொறியாளர்(தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம்) திருமதி ப.லதா, சேத்தூர் பேரூராட்சி தலைவர் திரு.பாலசுப்பிரமணியன், முன்னாள் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தனுஷ் எம்.குமார், சேத்தூர் செயல் அலுவலர், சேத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் திருமதி காளீஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் (01.09.2025) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் ரூ.17 இலட்சம் மதிப்பிலான பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் வழங்கினார்.தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை பேரிடர் அவசர காலங்களில் உடனடி மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.அதன்படி, மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பேரிடர் கால பாதுகாப்பு உபகரணங்களான தலைக்கவசம், பாதுகாப்பு கண்ணாடிகள், கையுறைகள், தீயணைப்பான்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளின் போது, மீட்பு பணிகளின் பயன்பாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமாக பயன்படும் ட்ரோன்களும் (எண்ணம்-2) மற்றும் அலைபேசி சமிக்சை அல்லாத பகுதிகளில் பயன்படுத்தத் தக்க வாக்கி டாக்கிகளும் (எண்ணம்-6 ஜோடிகள்) என மொத்தம் ரூ.17 இலட்சம் மதிப்பில் 17 வகையான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, கொள்முதல் செய்யப்பட்டுள்ள பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒப்படைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் திரு.சந்திரகுமார், தனி வட்டாட்சியர்(பேரிடர் மேலாண்மை) திரு.லோகநாதன், உதவி தீயணைப்புத்துறை அலுவலர், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.