25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 02, 2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்  (01.09.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  இக்கூட்டத்தில், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், வடக்குநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்த (லேட்) திருமதி எம்.சுகுமாரி என்பவர் பணிக்காலத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து, அவரின் வாரிசுதாரரான மகள் திருமதி மு.தமிழரசி என்பவருக்கு திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள கீழப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும்,பின்னர், இராஜபாளையம் வட்டம், சுந்தரராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த  (லேட்) திரு.ஆனந்தகுமார் என்பவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் அவரது வாரிசுதாரரான தாயார் திருமதி சமுத்திரம் என்பவருக்கு ஓய்வூதியத்திற்கான ஆணையினையும்,இராஜபாளையம் வட்டம், மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த (லேட்) திரு.கருப்பசாமி என்பவர்  வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் அவரது வாரிசுதாரரான திருமதி குருவம்மாள் என்பவருக்கு ஓய்வூதியத்திற்கான ஆணை மற்றும் இலவச வீட்டுமனை பட்டாவினையும்,காரியாபட்டி வட்டம், கீழத்துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த (லேட்)திரு.ராஜேந்திரன் என்பவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் அவரது வாரிசுதாரரான திருமதி உடையக்காள் என்பவருக்கு ஓய்வூதியமும் மற்றொரு வாரிசுதாரரான திரு. துரைசாமி என்பவருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.பாலாஜி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 02, 2025

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது

தமிழ் வளர்ச்சித் துறையின்  2021-2022ஆம் ஆண்டிற்கான  மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வறிவிப்பிற்கிணங்க, 10.09.2025 அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டியும், 11.09.2025 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டியும் விருதுநகர் மாவட்ட நூலக அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும் கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும்   நடத்தப்பெறவுள்ளன.  அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு/ தனியார் / அரசு உதவி பெறும்  கலைக் கல்லூரிகள் / பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/  பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில்  பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக்   கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும்  அனுப்பப்படும் .பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப் போட்டிக்கு பள்ளி மாணவர்களுக்கு 1. வாய்மையே வெல்லும்    2. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்  3. காஞ்சித் தலைவன்  4. அண்ணாவின் தமிழ்வளம் ,ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1. எழுத்தாளராக அண்ணா 2. தமிழும் அண்ணாவும் 3. பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும்  4.அண்ணாவின் மேடைத்தமிழ் ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள்  நடத்தப்பெறவுள்ளன.தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்கு   பள்ளி மாணவர்களுக்கு  1. தந்தை பெரியாரின் சமூக  நீதிச்  சிந்தனைகள்   2.   பெரியாரும்  பெண்  விடுதலையும்   3.  வைக்கம் வீரர்   4.  சுயமரியாதை இயக்கம் ஆகிய தலைப்புகளிலும்                  கல்லூரி மாணவர்களுக்கு   1. தன்மானப் பேரொளி 2.தெற்காசியாவின் சாக்ரடீஸ் 3.சமுதாய விஞ்ஞானி பெரியார் 4. தொண்டு செய்த பழுத்த பழம் ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள்  நடத்தப்பெறவுள்ளன. பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- ,  இரண்டாம்பரிசு ரூ.3000/- ,  மூன்றாம் பரிசு ரூ.2000/-  என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும்,  தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு  பேர் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு  ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு   ரூ.2000/-  என்ற வீதத்திலும்  வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 02, 2025

தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் "தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025-அன்று நடைபெறவுள்ளது.

பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் "தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான 'தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது.இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும். மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.தமிழ்நாடு அரசின் 2025-2026 கல்வியாண்டில் வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் உள்ள எழு(7) இயல்களில் கடந்த ஆண்டில் மாணவர்கள் பயிலாத "இயல் 2-ல் உள்ள மேகம், பிரும்மம்: இயல் 6-ல் முத்தொள்ளாயிரம்: மற்றும் இயல் 7-ல் அக்கறை" ஆகிய 4 தலைப்புகளைத் தவிர ஏனைய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். இத்தேர்வு கொள்குறி வகையில் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.2025-2026-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் (மெட்ரிக் /CBSE / ICSE / உட்பட) மாணவர்கள், 11:10:2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2025 முதல் 04.09.2025 வரை  பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் / முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய 04.09.2025 அன்றே கடைசி நாளாகும் என அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர், சென்னை அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 01, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம்,  சிவகாசி வட்டம் திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப்பள்ளியில்  (30.08.2025) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நலம் காக்கும் ஸ்டாலின் முகாமானது  02.08.2025 அன்று  அமைச்சர் பெருமக்கள் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தமிழகம்  முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ் 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம்,     நீரழிவுநோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.    மேலும், இம்முகாமில்  குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று சிவகாசி வட்டம், திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப் பள்ளியில்  நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 01, 2025

சுமார் 35 ஆண்டுகளாக குடியிருந்து வரும் 31 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், கீழூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வீடுகள் கட்டி குடியிருப்பதற்கான உத்தரவுகள் பெற்று, சுமார் 35 ஆண்டுகளாக  குடியிருந்து வரும் 31  பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக  இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம்  என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது.இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின்  கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்கப்படுகிறது.  மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான பட்டாக்களை வழங்கிய மாவட்டமாக நமது மாவட்டம் தான் முதலிடத்தில் இருக்கிறது.  இதுவரை சுமார்  40000 -த்திற்கும்  மேற்பட்ட பட்டாக்களை வழங்கி இருக்கிறது.அந்த வகையில் திருவில்லிபுத்தூர் வட்டம் கீழூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 31 குடும்பங்கள் கடந்த 3வருடங்களுக்கு முன்பு அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பதற்கான உத்தரவுகளை பெற்று குடியிருந்து வருவதாகவும், இதுவரை இந்த இடங்களுக்கான பட்டா இல்லை என்பதால், அதற்கான பட்டார்கள் வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில், சுமார் 35 ஆண்டுகளாக குடியிருந்து வரும் அப்பகுதி மக்களின்  கோரிக்கைகளை பரிசீலனை செய்து   வருவாய்த்துறையின்   மூலம்,  31 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார். இந்த இடங்களில் நாங்கள் 35 ஆண்டுகளாக குடியிருந்து வந்தாலும், அரசு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். தற்போது எங்கள் அனைவருக்கும் இலவச பட்டாக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே வீடு தேடி வந்து வழங்கியது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது எனவும், இலவச பட்டா வழங்கியதன் மூலம் நாங்கள் குடியிருந்து வரும் இந்த வீட்டுக்கான அரசு அங்கீகாரம் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Sep 01, 2025

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான குறைதீர் கூட்டம் 18.09.2025 அன்று நடைபெறவுள்ளது.

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவினத் தொகையை திரும்பக் கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் பொருட்டும், மனுக்கள் மற்றும் அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான குறைதீர்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும்  கூட்ட அரங்கில் 18.09.2025 அன்று முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.  அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்கள் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது விருதுநகர், இணை இயக்குநர், மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலம்; மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் மேற்படி கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 30, 2025

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் 2025-2026 .

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,  (29.08.2025) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் செயலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S. , அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்  திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுத்தலைவர் / விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்டஅளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் (District Development Coordination and Monitoring Committee) பணியாகும். மத்திய அரசின் திட்டப்பணிகளை செயல்படுத்தும் போது ஏற்படும் இடர்களை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வுகளை கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.விருதுநகர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்டவளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (District Development Coordination and Monitoring Committee) கூட்டம் காலாண்டிற்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் கடந்த காலாண்டிற்கான கூட்டத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம்; திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத் திட்டம், நில ஆவணங்கள் கணினி மயமாக்குதல், தேசிய நெடுஞ்சாலை - மத்திய சாலை திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், மதிய உணவு திட்டம், பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, டிஜிட்டல் இந்தியா - பொது தகவல் மையம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம்,  தூய்மை பாரத இயக்கம் (கி), ஜல் ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், தீன்தயாள் அந்த்தோயா யோஜனா, தீன்தயாள் உபாத்தயாகிராமின் கௌசல்யா யோஜனா, தூய்மை பாரத இயக்கம்  - மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம், அனைவருக்கும் வீட்டுவசதி திட்டம், இராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா, பரம்பரக்கத் கிருஷி விகாஸ் யோஜனா, பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம், தேசியநலக் குழுமம், பிரதம மந்திரி கனிஜ் சேஷ்த்ரா கல்யாண் யோஜனா, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தேசிய செயற்கை முறை கரூவூட்டல் திட்டம், தேசிய கால்நடை இயக்கம் - கால்நடை காப்பீடு திட்டம், தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டம்- கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துதல், பொதுப்பணித் துறை - தேசிய சுகாதார இயக்கம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டம், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் (கதர் கிராமத் தொழில்கள்) உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு  மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுத்தலைவர் / விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். பின்னர், அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் வேலை உத்தரவு பெற்றவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை தரமாக முடிக்க வேண்டும் எனவும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும், மேற்கண்ட திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதிவராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நமது மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல  அனைவரின் ஒத்துழைப்பை நல்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.

Aug 30, 2025

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்க்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 03.09.2025 அன்று முதல் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்- 3644 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை 02/2025,  நாள் 21.08.2025 அன்று  வெளியிடப்பட்டுள்ளது.இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், விருதுநகர் சார்பாக  இலவசப் பயிற்சி வகுப்புகள் 03.09.2025 (புதன் கிழமை) அன்று தொடங்கப்படவுள்ளது.இவ்வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். இப்பயிற்சி  வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/dsWChcUm8coEtMZr8  என்ற கூகுள் பார்ம் மூலமாகவோ அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம்.மேலும், விவரங்களுக்கு  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாவோ அல்லது அலுவலகத்திற்கு வந்து நேரடியாகவோ தொடர்புகொள்ளலாம்.   எனவே, TNUSRB – PC EXAM 2025  தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S..,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 29, 2025

சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில், (28.08.2025) தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் “நூற்றாண்டு கண்ட கல்விப் புரட்சி” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் உயர்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து "மாபெரும் தமிழ்க்கனவு" என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு, 2022- 2023 மற்றும் 2023 - 2024 கல்வியாண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 2000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2 இலட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 200 இடங்கில் சிறப்பாக நடத்தப்பட்டன.இதன் 100-வது நிகழ்ச்சியில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது. எனவே, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, அடுத்த கட்ட நிகழ்ச்சியானது தற்போது தொடங்கியுள்ளது. நமது தமிழ் மரபின் வளமையும் பண்பாட்டின் செழுமையும், சமூகச் சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்தப் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலகம் மூலம் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை, கல்லூரி மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை  மூலம் உயர்கல்;வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் கல்விக்கடன், வங்கிக்கடன், மாவட்ட தொழில் மையம் சார்பில் மத்திய மாநில அரசுகளின் தொழில் முனைவோர் திட்டங்கள், மான்யத்துடன் கூடிய கடன்உதவிகள், தாட்கோ மூலம் தொழில்முனைவோர்களுக்கான அரசுத் திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வாய்ப்புகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழு பொருட்களின் கண்;காட்சி மற்றும் விற்பனை உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் தமிழ் பெருமிதம் குறித்து சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பெருமித செல்வன் மற்றும் பெருமித செல்வி விருதுகள் வழங்கப்பட்டன. சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பின் சிறந்த கேள்விகள் எழுப்பிய கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன் மற்றும் கேள்வியின் நாயகி விருதுகளும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 29, 2025

விஸ்வநத்தம் ஊராட்சி சிவகாமிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், விஸ்வநத்தம் ஊராட்சி சிவகாமிபுரத்தில் (28.08.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.அந்த வகையில் (28.08.2025) அருப்புக்கோட்டை நகராட்சி நெசவாளர் தெரு, சிவகாசி ஊராட்சி ஒன்றியம் விஸ்வநத்தம் ஊராட்சி சிவகாமிபுரம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் படிக்காசுவைத்தான்பட்டி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் மேலராஜகுலராமன், வத்திராயிருப்பு பேரூராட்சி தெற்கு தெரு, விருதுநகர் நகராட்சி எஸ்.எஸ்.டி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற்றன.அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், விஸ்வநத்தம் ஊராட்சி சிவகாமிபுரத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து, இம்முகாமில் பட்டா வேண்டி மனு அளித்து, தீர்வு பெற்றவர்களுக்கு பட்டா உத்தரவுகளையும், மின் இணைப்பில் பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்த நகலினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள  முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து  தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

1 2 ... 70 71 72 73 74 75 76 ... 138 139

AD's



More News