“பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீர தீர செயல் புரிந்த, 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தகுதிகளின் அடிப்படையில், தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி, 24) பாராட்டு பத்திரமும், ரூ.1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.அதன்படி இவ்விருதிற்கு 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட (31 டிசம்பர்-ன் படி) தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் உள்ளிட்ட தகுதிகளை உடைய குழந்தைகளிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை (http://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் 30.11.2025 -ற்குள் பதிவேற்றம் செய்திலாம்.மேலும் அசல் கருத்துருவினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (22.08.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.மேலும், கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.விவசாயிகள் மனுக்களை தொடர்ச்சியாக அளிக்காமல் நடவடிக்கை விபரங்களை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டறிய அறிவுறுத்தப்பட்டது.கோட்டாட்சியர் தலைமையில் மாதாந்தோறும் கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் தவறாது கலந்து கொண்டு விவசாயிகளின் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.வனவிலங்குகளால் பயிர் சேதம் அதிகஅளவில் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், நிவாரணத்திற்கு நடவடிக்கை எடுத்து பயிர் இழப்பீடு உடனடியாக வழங்கவும் துணை இயக்குநர், மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர் அவர்களை மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.வனவிலங்குகளை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் மற்றும் கிராம அளவில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,சிப்காட் தொழிற் பூங்காவிற்கு கோவிலாங்குளம், வேளாண் அறிவியல் நிலையம் நிலம் கையகப்படுத்துவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொிவித்தார்.மேலும், பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பருத்தி காட்டன் கார்ப்பரேசன் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தில் கொள்முதல் செய்தவற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை) அவர்களுக்கு அறிவுத்தப்பட்டது.மேலும், தென்னை பயிருக்கு காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு தோட்டக்கலை துணை இயக்குநர் அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுத்தினார்.விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் அவர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. சேதம் அடைந்துள்ள உலர்களங்களை CSR FUND நிதியில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தெரிவிக்குமாறு தலைமை அலுவலர்களுக்கு அறிவுத்தப்பட்டது.மானியத்தில் சோலார் மின்வேலி வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுத்தினார்.சேத்தூரில் நிரந்தர கொள்முதல் நிலையம் அமைய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியர், சிவகாசி அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை, செயற்பொறியாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.பல்வேறு நகராட்சிகள்,மாநகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்தவும், நீர் நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர்) திரு.முருகன்,இ.வ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,)திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ)திருமதி சுமதி, தோட்டக்கலை துணை இயக்குநர், இணை பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், வருவாய் கோட்டாட்சியரகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில் நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test& Flying), எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி (Embedded Sensor Testing Program), பிரிண்டெட் சர்க்யூட்போர்டு வடிவமைப்பு பயிற்சி (PCB Designing Program), பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program) அளிக்கப்படவுள்ளது . தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test& Flying), எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி (Embedded Sensor Testing Program), பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம்(PCB Designing Program), பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program ) போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு ,சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்பபயிற்சி (Drone Manufacturing Assembly Test& Flying ) சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு ஏதெனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராகவும், 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி(Embedded Sensor Testing Program), பிரிண்டெட் சர்க்யூட்போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம்(PCB Designing Program) மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம்(Core Tech Placement program) போன்ற பயிற்சிகளுக்கு 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும், ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பட்டயப்படிப்பில் (Diploma)தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.மேற் கூறிய பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களின் குடும்ப ஆண்டு வருமானம்ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்கவேண்டும். தகுதியுள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.comபதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவுசெய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் .மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தி. கடந்த சில தினங்களாக நமது மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி ஆட்சியர் பெயரில் போலியான முகநூல் பக்கம் உருவாக்கி, அதன் மூலம் பணம் கேட்பதாக எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.இது முற்றிலும் இணையவழி திருடர்களின் வேலையாகும். ஏற்கனவே இதுபோன்ற பல மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பெயரில் போலியான முகநூல் பக்கம் உருவாக்கி அதன்மூலம் பலரிடமும் பணம் பெற்று ஏமாற்றியுள்ளனர்.இதுபோன்ற போலியான முகநூல் பக்கத்திலிருந்து யாராவது பணம் கேட்டால் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் இணைய வழியாக யாரேனும் கடன் தருவதாகவோ, பரிசு விழுந்துள்ளதாகவும் அதற்கு முன்பணம் கட்டவேண்டும் என்றோ, வெளிநாட்டிலிருந்து பரிசு வந்துள்ளது.அதனை விமான நிலையத்தில் சுங்ககட்டணம் கட்டி வாங்கிக்கொள்ள பணம் அனுப்புமாரோ யாரேனும் தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டால் அதனை நம்பவேண்டாம். இவை அனைத்தும் இணையவழி திருடர்களின் வேலையாகும்.எனவே விருதுநகர் மாவட்ட மக்கள் இதுபோன்ற போலியான முகநூல் அல்லது இணையவழியாக யாரேனும் பணம் கேட்டால் யாரும் நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும், மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாநில அரசின் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை அலுவலர்களால் 80வது தேசிய மாதிரி ஆய்வு ஜூலை 2025 முதல் ஜீன் 2026 முடிய உள்ள காலத்தில் முழுமையான உள்நாட்டுச் சுற்றுலா செலவு கணக்கெடுப்பு (Domestic Tourism Expenditure Survey), பற்றிய விவரங்கள் குறித்து 20 நகர்புறபகுதிகளிலும் மற்றும் 17 கிராமப்புறபகுதிகளிலும், ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025 முடிய உள்ள காலத்தில் இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises) பற்றிய விவரங்கள் குறித்து 08 நகர்புற பகுதிகளிலும் மற்றும் 08 கிராமப்புறபகுதிகளிலும் மற்றும் ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025 முடிய உள்ள காலத்தில் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey) பற்றிய விவரங்கள் குறித்து 12 நகர்புற பகுதிகளிலும் மற்றும் 07 கிராமப்புற பகுதிகளிலும் ஆகிய மூன்று தலைப்புகளில் சமூக பொருளாதார ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.தேசிய பொருளாதாரத்தில் சுற்றுலாவின் முக்கியத்துவம் பன்மடங்கு ஆகும். போக்குவரத்து சேவைகள் மற்றும் இரவு நேர உள்நாட்டுப் பயணம் தொடர்பான விவரங்கள் உள்ளடக்கிய உள்நாட்டு சுற்றுலா செலவினங்கள் குறித்த தரவுகளை சேகரிப்பதற்கும்,கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை கணக்கிடுவதற்கும், இணைக்கப்படாத துறை நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் கட்டுமான நடவடிக்கைகள் குறித்த ஒரு முன்னோடி ஆய்வும் மற்றும் தனியுரிமை, கூட்டாண்மை மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்ற இணைக்கப்படாத நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய மொத்த மதிப்பு வெளியீடு (Gross Value Output) மற்றும் மொத்த மதிப்பு கூட்டல் (Gross Value Added) ஆகியவற்றை மதிப்பிடுவதற்கான அத்தியாவசிய தரவுகளை இந்த ஆய்வு சேகரிக்கும்.விருதுநகர் மாவட்டத்திற்கு உள்நாட்டுச் சுற்றுலா செலவு கணக்கெடுப்பிற்கு குறையறவாசித்தான்,தம்பிபட்டி,பிள்ளையார்நத்தம், பந்தல்குடி, சாணான்குளம், பேர்நாயக்கன்பட்டி, வெங்கடேஸ்வரபுரம், மேலராஜகுலராமன்(பகுதி), பி.ஆண்டிப்பட்டி, கல்லூரணி, கீழத்திருத்தங்கல், புதுப்பாளையம், ஊமத்தம்பட்டி, வரலொட்டி, தம்மநாயகன்பட்டி, மங்கலம் மற்றும் கலங்காபேரி ஆகிய 17 கிராமப்புற மாதிரிகளிலும், விருதுநகர், செங்கமலநாச்சியார்புரம், பாலையம்பட்டி, படிக்காசுவைத்தான்பட்டி, பள்ளப்பட்டி(2மாதிரிகள்), வத்திராயிருப்பு, இராஜபாளையம்(4மாதிரிகள்), ஆத்திபட்டி(2மாதிரிகள்), ஆமத்தூர்(2மாதிரிகள்), சிவஞானபுரம், சிவகாசி, சித்துராஜபுரம், விஸ்வநத்தம் மற்றும் ரோசல்பட்டி ஆகிய 20 நகர்ப்புற மாதிரிகளிலும்,இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பிற்கு கோவிலாங்குளம், நெய்விளக்குநெடுங்குளம், முள்ளிசெவல் (எ) சொக்கலிங்கபுரம், முஸ்டக்குறிச்சி, கம்பிக்குடி, மேலக்கண்டமங்கலம், நதிக்குடி மற்றும் மல்லி ஆகிய 8 கிராமப்புற மாதிரிகளிலும், இராஜபாளையம் (2மாதிரிகள்), விருதுநகர், மம்சாபுரம், சேத்தூர், ரோசல்பட்டி, விஸ்வநத்தம் மற்றும் பாலையம்பட்டி ஆகிய 8 நகர்புற மாதிரிகளிலும்,காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பிற்கு வச்சக்காரப்பட்டி, தெற்கு தேவதானம், ஆனையூர்(பகுதி), ரெகுநாதபுரம், வேப்பிலைச்சேரி, வலையபட்டி மற்றும் முள்ளிசெவல்(எ) சொக்கலிங்கபுரம் ஆகிய 7 கிராமப்புற மாதிரிகளிலும், வெங்கடாசலபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருத்தங்கல்(2மாதிரிகள்), விருதுநகர், சாத்தூர்(2மாதிரிகள்), செட்டியார்பட்டி, விஸ்வநத்தம், நாரணாபுரம், பாலையம்பட்டி மற்றும் சேத்தூர் 12 நகர்புற மாதிரிகளிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளதால்,மேற்படி ஆய்வுக்காக துறை சார்ந்த அலுவலர்கள் நேரடியாக ஒவ்வொரு வீட்டிற்கும் விவரங்களை சேகரிப்பதற்காக வரும் பொழுது பொதுமக்கள் உண்மையான புள்ளி விவரங்களை அளித்து, நாட்டின் வளர்ச்சிக்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. மக்களால் கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்படும் என்ற உறுதி மொழியும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் குடும்ப வருமானம் அல்லது குடும்ப செலவினம் தொடர்பான விவரங்கள் கேட்கப்படும் போது பொது மக்கள் உண்மையான விவரங்கள் வழங்கவேண்டும் எனவும், திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்த ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் தகவல் தொழில்நுட்ப உதவியாளர்(PMMVY ) பணியிடத்திற்கு 11 மாதத்திற்கான ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவியின் பெயர்- தகவல் தொழில் நுட்பஉதவியாளர் (IT Assistant for PMMVY Scheme), கல்வித்தகுதி கணினி, தகவல் தொழில் நுட்பபிரிவில் இளங்கலைபட்டம் பெற்றிருக்கவேண்டும், (Educational Qualification- Graduation in Computer/IT). மேலும், முன் அனுபவம், அரசு சாரா தகவல் தொழில்நுட்ப சார்ந்த மாநில அல்லது மாவட்ட அளவில் தரவு மேலாண்மை,செயல்முறை ஆவணங்கள் அடிப்படையிலான அறிக்கையிடல் வடிவங்களில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும், (Experience Working Knowledge in computers/IT etc with a minumym of 3 years experience in data management, process documentation and web-based reporting formats, at state or district level with government or non-governmental/ IT bsed organizations). வயது வரம்பு( Age Limit Upto 35 Years ) 35 வயதிற்குள் இருக்கவேண்டும். தொகுப்பூதியமாக மாதந் தோறும் ரூ.20000- வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய நாள் 25.08.2025 அன்றே கடைசி நாளாகும். மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம். என்ற முகவரிக்கு சமர்பிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என.ஓ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் தொிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (21.08.2025) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நல வாரியம் மூலம் தூய்மைப் பணியாளர்கள் நலன் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைமை நிலை செயலாளர் திரு.கோவிந்தராஜ், I A S.,(ஓய்வு) அவர்கள், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் திரு.விஜயசங்கர் அவர்கள் மற்றும் திரு.மகாலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப்பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பட்டு கழகம் (தாட்கோ) சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5000/- திருமண உதவித்தொகை, 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- இயற்கை மரண உதவித்தொகை, 31 பயனாளிகளுக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய அட்டைகள் என மொத்தம் 34 பயனாளிகளுக்கு ரூ.55,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள் வழங்கினார்.கொரோனா நோய் தொற்று பரவி இருந்த காலகட்டத்தில் எங்களுக்காக உங்களுடைய உயிரைப் பற்றி கவலைப்படாமல், எங்களது உயிரை காப்பாற்றி எங்களை சுத்தப்படுத்தி இருக்கிற ஒரே ஒரு மனிதனும் தூய்மை பணியாளர்கள் தான். அதனால் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தூய்மைப்பணி என்பது சாதாரண பணியல்ல. நான் துப்புகின்ற எச்சியை நானே திரும்பி பார்க்க மாட்டேன். நான் செய்யக்கூடாத அத்தனையும் உங்கள் கையால் தொட்டு எங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற நீங்கள் தான் எங்களுக்கு மிகப்பெரிய மனித கரங்களாக தெரிகின்றீர்கள்.அதன் அடிப்படையில் தான் உங்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்று இந்த மாவட்டத்திற்கு வருகை தந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கின்றோம். தமிழகம் முழுவதும் இதுவரை 32 ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தற்போது 33 ஆவது ஆய்வுக் கூட்டம் விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.இந்த வாரியத்திற்கு 20 கோடி ஒதுக்கினார்கள் என்று சொன்னால் பொதுமக்களுக்காக பாடுபட்டு, நமது உயிரை காப்பதற்காக பாடுபடுகின்ற இந்த மக்கள் நல்ல படியாக இருக்க வேண்டும் என்பதற்காக தான். தூய்மைப்பணியாளர்கள் பணியின் போது மரணமடைந்தால் ரூ.5 இலட்சம் என்ற தொகை, ரூ.10 இலட்சம் என உயர்த்தப்பட்டுள்ளது. தூய்மைப்பணியாளர் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை, கலைஞர் கனவு இல்லத்தில் சிறப்பு முன்னுரிமை, தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவத்திட்டம் என்று ஒவ்வொரு திட்டமாக தேடிப் பிடித்து உங்களை வாழ வைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு பணியாற்றிக் கொண்டிருக்கின்ற நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடனுடன் இருக்க வேண்டும்.தூய்மைப் பணியாளர்களுக்கு மாதத்தில் ரூ.5000/- ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு தினந்தோறும் ரூ.250/- வீதம் மாதத்திற்கு ரூ.7500/- ஊதியம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கவுள்ளேன். உங்களுடைய குழந்தையை படிக்க வையுங்கள், கையுறை, முக கவசத்தை பயன்படுத்தி நோய் நொடி இல்லாமல் பாதுகாப்பாக இருங்கள். மேலும் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலமாக பல்வேறு முகாம்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதை பயன்படுத்திக்கொண்டு உங்களது உடல் நலத்தை பேணி பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான வாழ்வாதாரத்தை கொடுப்பதற்கு என்றைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைவர் அவர்கள் தெரிவித்தார்.விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 11 வட்டாரங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் 5260 தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் மூலம் விபத்து மற்றும் இயற்கை மரண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடி உதவி, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மூலம் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.இம்மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு மேற்கண்டவாறு பலன்கள் வழங்க ஏதுவாக தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தின் application.tncwwb.com என்ற இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றம் செய்திடவும் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் இன்றைய நாளில் 32 தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான அடையாள அட்டைகள், சிவகாசி மாநகராட்சி மற்றும் விருதுநகர் நகராட்சியில் பணிபுரியும் 27 தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ரூ.55,000/- மதிப்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும் நமது மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் பல்நோக்கு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. உங்களுடைய கிராம பஞ்சாயத்தில் நடைபெறுகின்ற முகாமில் கலந்து கொண்டு, உங்களுடைய உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.இந்த முகாம்களில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ போன்ற எல்லா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். அதனை தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் தூய்மைப் பணியாளர்களுக்கென்று தனியாக சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொண்டு, நல வாரிய அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை போன்றவைகளை பெற்று பயனடையலாம்.தமிழ்நாடு அரசின் மூலம் தூய்மைப்பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் அவர்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேராத மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான முகாம்கள் நடத்துவதற்கு தமிழக அரசு ‘நான் முதல்வன், உயர்வுக்கு படி” என்ற திட்டத்தினை உருவாக்கியுள்ளது.இத்திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.முதற்கட்டமாக அருப்புக்கோட்டை சரகத்திற்கு காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் 25.08.2025 அன்றும், சிவகாசி சரகத்திற்கு காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 29.08.2025 அன்றும், சாத்தூர் சரகத்திற்கு எஸ்.ஆர்.என்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 02.09.2025 அன்றும் நடைபெறுகிறது.இம்முகாம்களில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேர இயலாத மாணவர்கள், தோல்வியுற்ற மாணவ/ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். 2025-26 கல்வியாண்டு மட்டுமல்லாது அதற்கு முந்தைய கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லூரியில் சேராத மாணவர்களும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். பல்வேறு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், கலந்து கொண்டு மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை வழங்கவுள்ளனர்.இதன் மூலம் மாணவர்களுக்கு உடனடியாக கல்லூரியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.எனவே உயர்கல்வியில் சேர்வதற்கான சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து முகாமில் கலந்துகொண்டு தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீ எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில், (11.09.2023) தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் பாவலர் அறிவுமதி அவர்கள் காலந்தோறும் தமிழின் மாண்புகளையயும் மாற்றங்களையும் மாற்றத்தின் சிறப்புகளையும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் "காலந்தோறும் தமிழ்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் உயர்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து "மாபெரும் தமிழ்க்கனவு" என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு, 2022- 2023 மற்றும் 2023 - 2024 கல்வியாண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 2000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2 இலட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 200 இடங்கில் சிறப்பாக நடத்தப்பட்டன.இதன் 100-வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது. எனவே, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, அடுத்த கட்ட நிகழ்ச்சியானது தற்போது தொடங்கியுள்ளது. நமது தமிழ் மரபின் வளமையும் பண்பாட்டின் செழுமையும், சமூகச் சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்தப் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலகம் மூலம் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை, கல்லூரி மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் உயர்கல்;வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் கல்விக்கடன், வங்கிக்கடன், மாவட்ட தொழில் மையம் சார்பில் மத்திய மாநில அரசுகளின் தொழில் முனைவோர் திட்டங்கள், மான்யத்துடன் கூடிய கடன்உதவிகள், தாட்கோ மூலம் தொழில்முனைவோர்களுக்கான அரசுத் திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வாய்ப்புகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழு பொருட்களின் கண்;காட்சி மற்றும் விற்பனை உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் தமிழ் பெருமிதம் குறித்து சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பெருமித செல்வன் மற்றும் பெருமித செல்வி விருதுகள் வழங்கப்பட்டன. சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பின் சிறந்த கேள்விகள் எழுப்பிய கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன் மற்றும் கேள்வியின் நாயகி விருதுகளும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், கல்லூரி முதல்வர் முனைவர் கிருஷ்ணவேணி, பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் அரசு சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (20.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சமூக நலத் துறையின் மூலம், வன்முறையிலிருந்து பெண்களை காப்பதற்கான செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (One Stop Centre) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சின்ன மருளுத்து கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும், மருளுத்து கிராமத்தில், இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை வழங்கும் “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் பயனடைந்து வரும் மாணவர்கள் மற்றும் குழந்தையின் பாதுகாவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சந்தித்து கலந்துரையாடி, இத்திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், நடுவப்பட்டி ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் தமிழ்நாடு உரிமைகள் என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் வீடு தோறும் சென்று மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், நடுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும், மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.மேலும், நடுவப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்களின் பெயர்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மன்னார் கோட்டை கிராமத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வனத்துறையின் சார்பாக காட்டுப் பன்றிகளை பிடிப்பதற்காக வனத்துறை மூலம் பொருத்தப்பட்ட கூண்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், படந்தால் ஊராட்சியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களின் தரம் குறிந்து பணியாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.