25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முக்கிய அறிவிப்பு

Jan 05, 2024

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள், கருத்தரங்கங்கள் ஆகியன மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென  தமிழ்நாடு முதலமைச்சரால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான 'சட்டமன்ற நாயகர்-கலைஞர்' என்ற குழு  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள் தலைமையில்  சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்/நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகள்/கல்லூரிகளில் “நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பின்கீழ் கருத்தரங்கினை நடத்துவதென இக்குழு தீர்மானித்துள்ளது.அந்த அடிப்படையில், இதற்கென 4 துணைக் குழுக்களும்பேரவைத் தலைவர் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளன.சட்டமன்றப் பேரவையின் முன்னாள் தலைவர்  திரு.இரா.ஆவுடையப்பன் மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலாளர் திரு.மா.செல்வராஜ் ஆகியோர் உள்ளடங்கிய துணைக் குழுவானது, சட்டமன்றப் பேரவை உயர் அலுவலர்களுடன், விருதுநகர் மாவட்டத்தில் 2 பள்ளிகள் மற்றும் 1 கல்லூரியில் மேற்குறிப்பிட்ட தலைப்பில் கருத்தரங்கினை வருகிற 10-1-2024 (புதன்கிழமை) அன்று நடத்துவதென முடிவெடுத்துள்ளது.இக்கருத்தரங்கு 10-1-2024 (புதன்கிழமை) அன்று காலை 10-00 மணியளவில் விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நண்பகல் 12-00 மணியளவில், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் பிற்பகல் 3-00 மணியளவில் விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரியிலும் நடைபெறும்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்/நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி/கல்லூரி மாணவ, மாணவியர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Dec 22, 2023

விருதுநகர் - சிவகாசி மற்றும் சிவகாசி - திருத்தங்கல் ரெயில்வே இருப்பு பாதையில் நாளை 22.12.2023 அன்று அறிவிக்கப்பட்டிருந்த பராமரிப்பு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது - இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

விருதுநகர் - சிவகாசி ரெயில்வே இருப்பு பாதை மற்றும் சாத்தூர் - விருதுநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் எல்.சி எண்:407 Rly KM: 541/200-300 (விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சாத்தூர் லெவல் கிராஸிங் கேட் ) என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையிலும்,சிவகாசி - திருத்தங்கல் ரெயில்வே இருப்பு பாதை எல்.சி எண்:424 Rly KM: 559/700-800 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையிலும், 22.12.2023 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அந்த வழிதடங்களை மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.தற்போது மழையின் காரணமாக பராமரிப்பு வேலைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும், பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழிகளை  வழக்கம்போல் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Dec 21, 2023

விருதுநகர் - சிவகாசி மற்றும் சிவகாசி - திருத்தங்கல் ரெயில்வே இருப்பு பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், 22.12.2023 ஒரு நாள் மட்டும் வழித்தடம் மூடப்படுவதாக - இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

விருதுநகர் - சிவகாசி ரெயில்வே இருப்பு பாதை மற்றும் சாத்தூர் - விருதுநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் எல்.சி எண்:407 Rly KM: 541/200-300 (விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சாத்தூர் லெவல் கிராஸிங் கேட் ) என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையிலும்,சிவகாசி - திருத்தங்கல் ரெயில்வே இருப்பு பாதை எல்.சி எண்:424 Rly KM: 559/700-800 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையிலும், 22.12.2023 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து,  மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Nov 04, 2023

கோமாரிநோய் தடுப்பூசி முகாம்

விருதுநகர் மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் கோமாரிநோய் தடுப்பூசி முகாம் வருகிற 2023 நவம்பர்  06-ஆம் தேதி முதல் நவம்பர் 26 ஆம்  தேதி வரை நடைபெற உள்ளதால் கால்நடை வளர்ப்போர் இதனை பயன்படுத்திக்  கொள்ளலாம்.  கோமாரி நோய் ஒரு வைரஸ் கிருமியால் உண்டாக்கப்படும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாகும். இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு வாய் மற்றும் குழம்பு பகுதிகளில் புண்களும், காய்ச்சல் மற்றும் தீவனம் உண்ணாமை ஆகிய அறிகுறிகளோடு சினையுற்ற கால்நடைகளுக்கு கருச்சிதைவு ஏற்படுவதோடு, சினையின் தன்மை குறைந்து காணப்படும். இந்நோய் கொடிய தொற்று நோயாகும்.  காற்று மூலம் பரவுவதோடு ஒரு பண்ணையில் ஒரு மாட்டிற்கு காணப்பட்டால் அனைத்து கால்நடைகளுக்கும் உடனடியாக பரவ நேரிடும். இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு உடனடி இறப்பு ஏற்படாவிட்டாலும் உற்பத்தி திறன் அதிக பாதிப்பு ஏற்படும்.  கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.  இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு. எருதுகளின் வேலைத்திறன் குறைவு கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாகும்.மேலும், இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள்; சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களினால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது.  இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின்  சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து  கிராமம் மற்றும் குக்கிராமங்களில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 3-வது சுற்று தடுப்பூசி போடும் பணி  நிறைவு பெற்றுள்ளது.தற்போது 4-வது சுற்று தடுப்பூசி போடும் பணி வருகிற 2023 நவம்பர் 06-ஆம் தேதி முதல் நவம்பர் 26 ஆம்  தேதி வரை நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1.79 இலட்சம் பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு இந்த தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்கள் மற்றும் எருதுகள் எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் முன்அறிவிப்போடு நடைபெறும் கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் முகாமில் தடுப்பூசியை தங்களது கால்நடைகளுக்கு போட்டுக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Oct 28, 2023

தொடர்ந்து ஆறு மாதங்களாகப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது

தொடர்ந்து ஆறு மாதங்களாகப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.ரேஷன் கார்டுகளில் நடக்கும் மோசடிகளைத் தடுக்கவும், பயனாளிகளுக்கு சரியாக உதவிகள் கிடைக்கவும் கர்நாடக மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பயன்படுத்தாமல் இருக்கும் கார்டுகளை ரத்துசெய்யஉத்தரவிடப்பட்டுள்ளது.நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு தரப்பிலிருந்து இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.ரேஷன் கார்டை நிறையப் பேர் தவறாகப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற பயனாளிகளுக்கு உதவி கிடைக்காமல் போகிறது. அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதேபோல, ரேஷன் அரிசி திருட்டு போன்ற சம்வங்களும் அதிகமாக நடக்கின்றன.உண்மையில், ரேஷன் கார்டை நம்பியே நிறைய குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் அதன் மூலம் கிடைக்கும் அரிசி, பருப்பு போன்றவற்றை வைத்தே தங்களது பசியைப் போக்குகின்றனர். ஆனால், நிறையப் பேர் பெயரளவில் ரேஷன் கார்டை வைத்துக் கொண்டு அதை பயன்படுத்தாமலேயே விட்டுவிடுகின்றனர். நிறைய குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு என்பது வெறும் அடையாள அட்டை போலவே இருக்கிறது.ரேஷன் கார்டில் நடக்கும் மோசடிகளைத் தடுப்பதற்காக மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக, கேரளா, பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தகுதியில்லாதவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுடைய ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டு வருகின்றன.கர்நாடக மாநிலத்தில் பிபிஎல் கார்டுதாரர்களுக்கு மாநில அரசு ஒரு அதிர்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. கடந்த6 மாதங்களாக ரேஷன் கார்டைப் பயன்படுத்தாத குடும்பங்களின் ரேஷன் கார்டுகளை தற்காலிகமாக ரத்து செய்ய உணவுத் துறை முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த6 மாதங்களாக ரேஷன் கிடைக்காத பிபிஎல் கார்டை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மொத்தம்1.1 கோடி பிபிஎல் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால், கடந்த6 மாதங்களாக3.40 லட்சம் கார்டுதாரர்களுக்கு ரேஷன் வழங்கப்படவில்லை. அத்தகைய அட்டைகளை ரத்து செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது.ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு எந்த அறிவிப்பும் விடாமல் கார்டுகளை ரத்து செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், ரேஷன் கார்டுடன் அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளும் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இதனால், லட்சக்கணக்கான குடும்பங்கள் கவலையில் உள்ளனர். ஒருவேளை உண்மையாகவே ரேஷன் உதவி தேவைப்படும் குடும்பங்கள் கடந்த6 மாதங்களில் ரேஷன் கார்டைப் பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களுக்கும் சிக்கல் ஏற்படும்.ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதால் மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும். குறிப்பாக, இலவச ரேஷன் உட்பட எந்த வகையான அரசு வசதிகளும் கிடைக்காது. தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற முடியாது. ஓய்வூதிய வசதி கிடைக்காது. மத்திய அரசின் திட்டங்களை கூட பெறுவதில் சிரமம் ஏற்படும். இதுபோன்ற நிறைய பின்னடைவுகள் ஏற்படும்.

Oct 25, 2023

கரண்ட் பில் ரீடிங்கில் மின்சார வாரியம் அதிரடி

 வீடுகளில், கரண்ட்பில் ரீடிங் எடுப்பதில் நிறைய குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் இருக்கின்றன.. அதனால்தான், இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் "ஸ்மார்ட்' மீட்டர்" திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான டெண்டர்களையும் விடுத்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.அதேபோல, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) இன்னொரு அதிரடியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, முறைகேடாக காட்டும் மீட்டர்களுக்கு முடிவுகட்ட வீடுகளில், "புளூடூத் ஸ்மார்ட் மீட்டரை" இணைக்கும் திட்டம் உள்ளது.வீடுகளில் ப்ளூடூத் மீட்டரை பொருத்தி விட்டால், ஃபைபர் ஆப்டிக் போர்ட்கள் மூலம் அதனை கண்காணிக்கலாம். இதனால் கால நேரம் குறைவதுடன், துல்லியமான கரண்ட் பில் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம் மொபைல் ஆப்: அதேபோல, 2 மாதங்களுக்கு முன்பு, மின்துறை இன்னொரு அதிரடியை கொண்டுவரப்போவதாக தகவல் வெளியானது. அதாவது, மின் ஊழியர்கள் எடுக்கும் கணக்கெடுப்பு விபரங்களை, கணக்கெடுத்த உடனேயே, கட்டண விபரம் தெரிவிப்பதற்காக, புது "மொபைல் செயலி" அறிமுகம் செய்ய போகிறார்களாம்.முதல்கட்டமாக, உதவி பொறியாளர்களின் போனில் மொபைல் செயலி சேவையை பதிவேற்றம் செய்து தாழ்வழுத்த பிரிவு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் கணக்கெடுக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு பிறகே, வீடுகளுக்கு இந்த செயலியை செயல்படுத்த போவதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்த ஒரு அப்டேட்தான் தற்போது வெளியாகி உள்ளது. துல்லியமான கணக்கு: அதாவது, கடந்த ஆகஸ்ட் முதல், தாழ்வழுத்த பிரிவில் இடம் பெறும், 60,000 தொழில் மற்றும் வணிக இணைப்புகளில், மொபைல் செயலி வாயிலாக, மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் கணக்கெடுப்பு விபரம் துல்லியமாக பதிவாவதை, மின் வாரியம் தற்போது உறுதி செய்திருப்பதால், வீடுகளிலும் இந்த மின் பயன்பாட்டை கணக்கெடுக்கவும் விரிவுபடுத்தப்பட உள்ளது.இதற்காக, சோதனை முறையில், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய, 44 மின் பகிர்மான வட்டங்களிலும் தலா, 10 பிரிவு அலுவலகங்களில் வீடுகள், கடைகள் போன்றவற்றில், வருகிற 18ம் தேதி முதல் மொபைல் செயலியில் கணக்கெடுக்குமாறு மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டிருக்கிறதாம்.ரீடிங்: பொதுவாக, மின் ஊழியர்கள், வீடுகளில் வந்து ரீடிங் எடுத்துவிட்டால், அதற்கு பிறகு, தங்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்வது வழக்கம்.. பிறகு அடுத்த சில நாட்களில், மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு, SMS வாயிலாக அனுப்பப்படுகிறது.கணக்கெடுத்த உடனேயே, கட்டண விபரம் தெரிவிக்கவே, இந்த புது "மொபைல் செயலி" நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய மொபைல் செயலி அறிமுகத்தினால், உடனுக்குடன், உங்கள் கரண்ட்பில் குறித்த அப்டேட், அடுத்த நொடியே, உங்களுக்கு மெசேஜ் மூலமாக கிடைத்துவிடும் என்கிறார்கள் அதிகாரிகள். செயல்பாடுகள்: இந்த மொபைல் செயலி எப்படி செயல்படும் தெரியுமா? இந்த மொபைல் செயலி, ஊழியர்களின் செல்போனில் டவுன்லோடு செய்யப்படும். அதனுடன் ஒரு, "ஆப்டிகல் கேபிள்" வழங்கப்படும். கணக்கெடுக்கும்போது ஒயரை மீட்டரில் செருகி, போனுடன் இணைத்துவிட்டால் போதும்.. இப்போது செயலியை இயக்கியதும் மீட்டரிலுள்ள மின் பயன்பாடு, அதற்கான கட்டண விபரங்கள், செயலி மற்றும் மின் வாரிய சர்வரில் வந்துவிடும். அடுத்த செகண்டே நுகர்வோருக்கு அந்த SMS சென்றுவிடும்..!

Sep 26, 2023

மிலாடி நபி  மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  ;  F.L-1, F.L-2, F.L-3 மற்றும் F.L-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி,    மிலாடி நபி 28.09.2023 (வியாழன்)  மற்றும் காந்தி ஜெயந்தி 02.10.2023 (திங்கள்)  ஆகிய நாட்களில் தற்காலிகமாக  மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும்  F.L-1, F.L-2,F.L-3 மற்றும் FL-11 மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 15, 2023

 பசுமை விகடன் மாமல்லபுரம் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து `மரப்பயிரும் பணப்பயிரே!' என்ற ஒரு நாள் கருத்தரங்கு

மரப்பயிர் சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும். நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில், பசுமை விகடன் மாமல்லபுரம் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து `மரப்பயிரும் பணப்பயிரே!' என்ற ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சியை நடத்த உள்ளது.சூழலுக்கும் வணிகத்துக்கும் மரங்கள் மனிதனுக்கு தரும் பலன்கள் மிக அதிகம். பென்சில் தயாரிபில் இருந்து வீடு கட்ட, வேளாண் கருவி, பர்னிச்சர்கள் செய்ய, கப்பல் கட்டுவது வரை மரங்களின் அத்தியாவசிய தேவைகள் மிகவும் அதிகரித்து வருகிறது. வருங்காலத்தில் மரங்கள் தேவைக்கு டிமாண்ட் அதிகமாகவே இருக்கும். எனவே, மரங்களை வளர்ப்பது வணிக ரீதியாக நல்ல லாபத்தைக் கொடுக்கும். மரம் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, அதில் லாபம் பெறுவது எப்படி என்று வழிகாட்டுகிறது பசுமை விகடன்.உணவுப் பயிர் விளைவிப்பது மட்டுமே விவசாயத்தின் குறிக்கோள் என்பதைத் தாண்டி, விவசாயம் லாபம் கிடைக்கும் தொழிலாகவும் விளங்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறை ஆர்வத்துடன் விவசாயத்தில் ஈடுபடுவார்கள். எனவே, மரப்பயிர் சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும். நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில், பசுமை விகடன் மாமல்லபுரம் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து `மரப்பயிரும் பணப்பயிரே!' என்ற ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சியை நடத்த உள்ளது.இவ்விழாவுக்கு மாமல்லபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் Rtn PHF B. மகேஷ் குமார் தலைமை வகிக்கிறார். மாவட்ட ஆளுநர் Rtn P.பரணிதரன் முன்னிலை வகிக்கிறார். முன்னாள் மாவட்ட ஆளுநர் Rtn.pdg A. சம்பத்குமார் சிறப்புரை  ஆற்றுகிறார். மேலும்  ரோட்டரி மாவட்டம் 3231-ன் மிகச் சிறந்த ரோட்டரி ஆளுமைகளும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.TNPL வனத்தோட்ட துறை உதவி பொது மேலாளர் ரவி, ``தனியார், அரசுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான, சாகுபடி செய்யப்படாத தரிசு நிலங்களைக் கண்டறிந்து, அந்நிலங்களை மேம்படுத்திக் கூழ்மர சாகுபடி செய்ய ஊக்குவித்து வருகிறோம். இதன் மூலம் தரிசு நிலங்கள் பயனுள்ளதாக மாற்றப்படுவதுடன் மண் அரிப்பும் தடுக்கப்பட்டு மண் வளமும் மேம்படுத்தப்படுகிறது. பெரு, சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் தரிசு நிலங்களிலிருந்து நிலையான வருவாய் பெறும் பொருட்டு TNPL வனத்தோட்ட துறையானது இரண்டு வகையான வனத்தோட்ட திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது..." இதுகுறித்து இந்தக் கருத்தரங்கில் விரிவாக உரையாற்ற உள்ளார்..இன்று பூச்சிக்கொல்லி வாங்கித் தெளித்து பூச்சிகளுடன் சேர்த்து நம்மையும் அழித்துக்கொண்டிருக்கிறோம். புயல் வந்தால்தான் மழை வரும் என்று நினைக்கிறோம். இந்தத் தேதியில் மழை என்று சொன்னால், அன்று மழை பெய்யும். ஆனால் இன்று பருவநிலை மாற்றத்தால் பருவமழை தவறிப் பெய்கிறது. அதற்கேற்றாற்போல் விவசாயிகள் பருவமாற்றத்தை உணர்ந்து விவசாயம் செய்ய வேண்டும். இதில் மரப்பயிர்களின் பங்களிப்பு முக்கியமானது'' என்று கருத்துரை வழங்க உள்ளார். மேலும், மர சாகுபடியில் லாபம் பெற்ற விவசாயிகள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.உரை விருந்துக்குப் பிறகு மதிய உணவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். முன்பதிவு செய்வது முக்கியமானது.நாள்: 16.9.23, சனிக்கிழமை.நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை.இடம்: பகவான் பண்ணை, நடுவக்கரை கிராமம் பட்டரைக்கழனி அஞ்சல், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டம்.(திருக்கழுக்குன்றத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் பண்ணை உள்ளது. பேருந்து, ஷேர் ஆட்டோ வசதிகள் உண்டு.)உங்கள் பெயர், முகவரியை 99400 22128 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.மேலும் விவரங்களுக்கு...பசுமை விகடன், செல்போன்: 99400 22128.Rtn PHF B. மகேஷ் குமார், செல்போன்: 94426 14278.

Sep 13, 2023

ஆரோக்கியமான இந்தியா, திறமையான இந்தியா ஆயுஷ்மான பவ் பிரச்சாரம் துவக்கம் (காணொளி மூலம்) புதன்கிழமை 13 செப்டம்பர் 2023 மதியம் 12. மணி

ஆயுஷ்மான பவ திட்டம்: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, இந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி ‘ஆயுஷ்மான் பவ’ (‘Ayushman Bhava’)திட்டத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது. செய்தி நிறுவனமான ANI வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா (Union Health Minister Mansukh Mandaviya), 'இந்த ஆண்டு பிரதமர் மோடியின் (PM Narendra Modi) பிறந்தநாளில், நாங்கள் 'ஆயுஷ்மான் பவ' திட்டத்தை அறிமுகப்படுத்துவோம், இதன் மூலம் அரசு நடத்தும் அனைத்து சுகாதாரத் திட்டங்களும், அந்த திட்டத்தை பெற தகுதி உடையை அனைத்து  பயனாளியையும் சென்றடையும். இதன் மூலம் மக்கள் அதிக அளவில் பலன் அடைவதை உறுதி செய்ய முடியும்.ஆயுஷ்மான பவ் பிரச்சாரம் துவக்கம் மாண்புமிகு இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி.திரெளபதி முர்மு மூலமாக காணொளி மூலம்17 செப்டம்பர் 2023 முதல் :ஆயுஷ்மான் ஆப்கே துவார் 3.0 ன் கீழ் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா விரிவாக்கம்.ஆயுஷ்மான் மேளா : உடல் நலம் , ஆராக்கிய மையங்கள், சமூக  சுகாதார மையங்களில் வாராந்திர சுகாதார மேளாக்கள் அமைப்புஇரத்த தான முகாம்களின் அமைப்பு , தன்னார்வ இரத்த தானம் பற்றிய தகவல் பகிர்வு தன்னார்வ உறுப்பு தானத்திற்கான உறுதிமொழி.2 அக்டோபர் 2023 அன்று: ஆயுஷ்மான் சபாவின் அமைப்பு மற்றும் ஆயுஷ்மான் அட்டைகள், விநியோகம் ,ABHA ஐடி உருவாக்குதல். , சுகாதார திட்டங்கள் பற்றிய தகவல்கள். ஆயுஷ்மான் வரத்தால் மக்கள் நலம் பெறுகிறார்கள்..பேராசிரியர் எஸ்.பி.சிங். பாகேல் மாநில அமைச்சர் (உடல்நலம் மற்றும் குடும்ப நலம்)டாக்டர் மன்சுக் மாண்டவியா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் & ரசாயனங்கள் மற்றும் உரங்கள்டாக்டர் பாரதி பிரவின் பவார் மாநில அமைச்சர் (உடல்நலம் மற்றும் குடும்ப நலம்) மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களின்  மேலாணமுன்னிலையில் (காணொளி மூலம்) புதன்கிழமை 13 செப்டம்பர் 2023 மதியம் 12. மணி.

Sep 11, 2023

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் பயிற்சி பெற விண்ணப்பிக்க 16.09.2023 அன்று வரை கால நீட்டிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைசார்ந்தவர்களுக்கு பல்வேறுதிறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பன்னிரெண்டாம் வகுப்பு, ஏதேனும் ஒருபட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச்சார்ந்த மாணாக்கர்களுக்கு TCS iON  நிறுவனத்துடன் இணைந்து தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியான Data Analytics and Reporting, Applied Cloud Computing, Practical Approach to cyber security, Machine Learning for Real World Application, Intelligent Game Design and its Applications  மேலும் Animation சம்பந்தப்பட்ட பயிற்சியான Graphic Designing (Professional), Motion Graphics போன்ற பயிற்சிகளை இணைய தளம் வழியாக பயிற்றுவித்து முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவழிவகை செய்யப்படவுள்ளது.தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியினை பெற B.E/ B.Tech /BCA /B.Sc (CS&IT) MCA/ M.Sc (CS&IT) அல்லது ஏதேனும் ஒருபட்டப்படிப்பு முடித்த மாணாக்கர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்துவரும் 18 முதல் 28 வயது நிரம்பிய மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். அனிமேஷன் (Animation)  சம்பந்தப்பட்ட பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி பெற்ற 18 முதல் 28 வயது நிரம்பிய மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் TCS iON  நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் NQT (National Qualifier Test)  தேர்ச்சிபெற வேண்டும். இத்தேர்வு முறையானது ஆங்கில வழியில் TCS iON  நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வுமையங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும். இத்தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறும் பட்சத்தில் TCS iON நிறுவனத்தால் வழங்கப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அனிமேஷன் சம்பந்தப்பட்ட பயிற்சியில் ஏதேனும் ஒருபாடப் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.இப்பயிற்சிக்கான விண்ணப்ப கடைசி தேதி 31.08.2023 என்பதை 16.09.2023 என்று தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 19 20

AD's



More News