விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தை (PHC) பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் நாய்க்கடி தடுப்பூசி (ARV) இருப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாரணாபுரம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 46 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.இதற்குரிய தடுப்பூசி உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் மார்ச் மாதத்தில் மட்டும் 1802 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.எனவே தெருநாய் தொல்லை உள்ள பகுதிகளிலும் தெருக்களில் நடந்து செல்லும் போதும், குழந்தைகள் தெருவில் விளையாடும் போதும் மிகுந்த எச்சரிக்கையோடும் கவனத்தோடும் இருக்க வேண்டியது அவசியம்.நாய்கடி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி தடுப்பு மருந்து இருப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.நாய்க்கடிக்கு எதிரான நடவடிக்கையை பலப்படுத்தும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் சுகாதாரத்துறையினர் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், விலங்குகளின் இனப்பெருக்க கட்டுப்பாட்டுத் திட்டம் ((ABC) ) மற்றும் சாலைகளில் உள்ள நாய்களுக்கும், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பள்ளி விடுமுறைகளில் குழந்தைகள் வெளியே அதிகமாக விளையாடுவதால், பெற்றோர்கள் எச்சரிக்கை உணர்வுடன் அதிக கவனம் செலுத்த வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ARV தடுப்பூசி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவத்துறையினர் தாமதமின்றி சிகிச்சை அளிக்க,தவறாமல் (SOP-I) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், மருத்துவத்துறை ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாய்கடிக்கு உடனடியாக சிகிச்சை பெறுவது மிக முக்கியம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே நாய் கடிக்கு ஆளானவர்கள் எந்த தயக்கமும் இன்றி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.மேலும், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் விரிவான கூட்டம் நடத்தப்பட்டு, சட்டத்திற்குட்பட்ட வழிமுறைகளின்படி நாய்களால் ஏற்படும் தொந்தரவுகளை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (25.04.2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில், வணிக நிறுவங்களுக்கு தமிழில் பெயர் சூட்டிய பைந்தமிழ் பற்றாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956 இன் கீழ் அரசு அமைப்புகள், வங்கிகள், தனியார் பள்ளிகள், கடைகள், உணவு நிறுவனங்கள் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதற்கு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் திட்டத்தின் கீழ் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள், கடைகள், உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகை தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகைகள் தமிழில் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து கடைகள் நிறுவனங்கள் உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 100 சதவிகிதம் மேற்கூறியவாறு அமைக்கப்படுவதை உறுதி செய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி துறை, நகர மற்றும் கிராம உள்ளாட்சி துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு வர்த்தகர் மற்றும் வேலை அளிப்போர் சங்க பிரதிநிதிகளை கொண்ட இக்குழுவின் வாயிலாக வரும் 15.05.2025 வரை தமிழில் பெயர் பலகை அமைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறித்து விழிப்புணர்வு கூட்டங்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று, விருதுநகர் மாவட்டத்தில் சட்டப்படி தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டதற்கு இணங்கிய உடனே தமிழில் பெயர் பலகை அமைத்த 100 வணிகர்களுக்கு அவர்களின் இந்த தமிழ் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக தமிழ் "பைந்தமிழ் பற்றாளர்கள்" என பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அமைப்புகள், வங்கிகள், தனியார் பள்ளிகள், கடைகள், உணவு நிறுவனங்கள் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மற்றும் வணிக நிறுவனங்கள் தமது நிறுவனங்களில் சட்டப்படி தமிழ் மொழியில் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதா என்று சுய பரிசோதனை செய்து, தாமாக முன்வந்து தமிழில் சட்டப்படி பெயர் பலகை அமைத்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். “ தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்ட விதிகள், விதி 15, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்ட விதி 42 B, மற்றும் தொழிற்சாலைகள் சட்ட விதிகள் 113 ஆகியவற்றில் அனைத்து கடைகள் நிறுவனங்கள் உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகைகள் தமிழ் மொழியில் முதன்மையாகவும், பிரதானமாகவும் அமைக்க வேண்டும். பிற மொழிகளிலும் எழுத வேண்டும் எனில் தமிழ் மொழிக்கு கீழ் ஆங்கிலத்தில் இரண்டாவது இடத்திலும், இதர மொழிகளில் மூன்றாவது இடத்தில் அதற்கு கீழேயும் எழுதப்பட வேண்டும் என வரையறை செய்யப்பட்டுள்ளது”.மேலும், 15.05.2025 ம் தேதிக்கு பின்னரும் தமிழில் பெயர் பலகை அமைக்காத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களிலும் 100% தமிழில் பெயர் பலகைகள் அமைக்க அனைத்து கடைகள் உணவு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து நிறுவன உரிமையாளர்களும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருமதி.சீ.மைவிழிச் செல்வி, விருதுநகர், இணை இயக்குனர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் விருதுநகர், உதவி இயக்குனர், தமிழ் வளர்ச்சி துறை திருமதி சுசிசலா, விருதுநகர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (25.04.2025) சி.பி.எஸ்.இ. பள்ளிகளை சேர்ந்த 35 ஆசிரியர்களுடனான "Coffee With Collector” என்ற 170- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, தொடக்க நிலையில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி, ஆளுமை திறன் வளர்ச்சி, எதிர்கால சிறந்த மாணவ செல்வங்களை உருவாக்குதல், அரசின் நலத்திட்டங்கள் குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, 170-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, இன்று நடைபெற்ற 170 -வது காபி வித் கலெக்டர் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சி.பி.எஸ்.இ. ஆசிரியர்களிடம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை கண்டறிந்து, உயர்கல்வி சார்ந்து, வழங்கப்பட உள்ள பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து, படிக்க வைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.உயர்கல்விக்கு செல்லாததற்கு மாணவர்களிடையே ஆர்வமின்மையும் ஒரு காரணமாக உள்ளது. இது குறித்து மாணவர்களிடையே எடுத்துக்கூறி அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.உயர்கல்வி சேர்க்கை விகிதாச்சாரத்தினை அதிகப்படுத்தியதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அதைபோல் உயர்கல்வி வழிகாட்டுதல் மூலம் மாணவர்கள் சரியான வாய்ப்புகளை அடைவதற்கும் ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
‘துளி நீரில் அதிக பயிர்” திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 1100 ஹெக்டர் பொருள் இலக்கும் ரூ.5.50 இலட்சம் நிதி இலக்கும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் நிறுவுவதற்கு சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் சிறு/குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2 ஹெக்டர் வரையும், இதர விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டர் வரையும் நுண்ணீர்ப்பாசனம் அமைத்து பயன்பெறலாம்.மேலும் ‘துளி நீரில் அதிக பயிர்” நுண்ணீர்ப்பாசன திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் துணை நீர் மேலாண்மைத் திட்டத்திலும் இணைந்து பயன்பெறலாம். துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட குறு வட்டங்களில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.25,000- மானியமாக வழங்கப்படும்.மேலும் நீர் சேமிப்பு அமைப்புகள் நிறுவுவதற்கு 1 கன மீட்டருக்கு ரூ.125- என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.75,000- மானியமாக வழங்கப்படும். புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு /திறந்த வெளி கிணறுகளில் மோட்டார் (மின் மோட்டார், டீசல் மோட்டார்) நிறுவுவதற்கு அதிகபட்சமாக ரூ.15,000- மானியம் வழங்கப்படும்.நீர் ஆதாரங்களில் இருந்து நிலத்திற்கு பாசன குழாய்கள் மூலம் பாசன நீர் கொண்டு செல்வதற்கு அதிகபட்சமாக ரூ.10,000- வரை மானியம் வழங்கப்படும். மேலும் சொட்டுநீர்ப் பாசனத்திற்கு தானியங்கி (Automation) பாசன அமைப்பு நிறுவுவதற்கு 1 ஹெக்டர் பரப்பிற்கு அதிகபட்சமாக ரூ.20,000- வரை மானியம் வழங்கப்படும்.மேற்காணும் திட்டங்களில் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார் அட்டை நகல், ரேசன் அட்டை நகல், பட்டா, பயிர் அடங்கல், சிறு/குறு விவசாயி சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் MIMIS என்ற இணையத்தின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் அல்லது விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை நேரில் அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறையின் 2024-2025ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில் ”தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்தநாளான சூன் திங்கள் 3 ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும்” என அறிவிக்கப்பெற்றுள்ளது.செம்மொழியின் சிறப்பையும் முத்தமிழறிஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தி 03.06.2025 ஆம் நாளன்று நடைபெறவுள்ள செம்மொழிநாள் விழாவில் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 11,12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 09.05.2025 அன்றும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 10.05.2025 அன்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட நூலக அலுவலகக் கூட்ட அரங்கில் நடத்தப்பெற உள்ளன. பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து அரசு/ தனியார் /அரசு உதவி பெறும்/ பதின்ம மேல்நிலைப் பள்ளி, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து அரசு/ தனியார் / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள் /பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/ சட்டம் / வேளாண்மை / பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு பள்ளி / கல்லூரியிலிருந்து மொத்தம் 2 மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர் ஒப்பத்துடனும் , கல்லூரி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் கல்லூரியின் முதல்வர் ஒப்பத்துடனும் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ, அஞ்சல் முலமாகவோ, மின்னஞ்சல் - (tamilvalar.vnr@tn.gov.in) முலமாகவோ 05.05.2025 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். 05.05.2025க்குள் பதிவு செய்பவர்கள் மட்டும் போட்டிக்கு அனுமதிக்கப்பெறுவர் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் ” செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமை” சார்ந்து இடம்பெறும். தலைப்புகள் முன்னதாகத் தெரிவிக்கப்படமாட்டா போட்டி தொடங்கப்படும் நேரத்திற்குச் சற்று முன்னர் தான் தலைப்பு தெரிவிக்கப்படும்.போட்டிகளின் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கவுள்ளார். பள்ளி/ கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000, இரண்டாம்பரிசு ரூ.7000-, மூன்றாம் பரிசு ரூ.5000- என்ற வீதத்தில் பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் 17.05.2025 அன்று சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளப் பரிந்துரை செய்யப்பெறுவர். மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.15,000-மும், இரண்டாம் பரிசாக ரூ.10,000- மும் , மூன்றாம் பரிசாக ரூ.7,000- மும் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் குருதி மையத்திற்கு தேசிய சுகாதார திட்டம் மூலம் ரூ. 13 இலட்சம் மதிப்பில் குருதி பகுப்பாய்வு செய்யும் உபகரணம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், ரூ.28 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ள குருதி பகுப்பாய்வு செய்ய பயன்படும் உபகரணங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, .அவர்கள் (23.04.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினார். .
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (23.04.2025) உலக புத்தகத்தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 65 ஆசிரியர்களுடனான "Coffee With Collector” என்ற 168- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, தொடக்க நிலையில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி, ஆளுமை திறன் வளர்ச்சி, எதிர்கால சிறந்த மாணவ செல்வங்களை உருவாக்குதல், அரசின் நலத்திட்டங்கள் குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ ஃ மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 168-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, நடைபெற்ற 168 -வது காபி வித் கலெக்டர் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை கண்டறிந்து, உயர்கல்வி சார்ந்து, வழங்கப்பட உள்ள பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து, படிக்க வைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.குறிப்பாக உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவிகளுக்கு தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்தும், அரசு பள்ளி பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்தும், அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகைகள் குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.உயர்கல்விக்கு செல்லாததற்கு மாணவர்களிடையே ஆர்வமின்மையும் ஒரு காரணமாக உள்ளது. இது குறித்து மாணவர்களிடையே எடுத்துக்கூறி அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.உயர்கல்வி சேர்க்கை விகிதாச்சாரத்தினை அதிகப்படுத்தியதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அதைபோல் உயர்கல்வி வழிகாட்டுதல் மூலம் மாணவர்கள் சரியான வாய்ப்புகளை அடைவதற்கும் ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 27.04.2025 அன்று நடைபெற இருந்த கல்லூரிக்கனவு விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம் 04.05.2025 அன்றைய தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் 100விழுக்காடு உயர்கல்விச் சேர்க்கையை வலியுறுத்தி நடைபெறும், இந்த நெடுந்தூர ஓட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம்.ஏற்கனவே பதிவு செய்த மாணவ, மாணவிகளோடு புதியதாக பதிவு செய்பவர்களும் கலந்து கொள்ளலாம். 04.05.2025 அன்று காலை 05.00 மணியளவில் நேரடியாகவும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் முதல் 1000 மாணவ, மாணவிகளுக்கு டி-சர்ட் பரிசாக வழங்கப்படும். மேலும் முதல் பரிசு ரூ.40,000, இரண்டாம் பரிசு ரூ.30,000, மூன்றாம் பரிசு ரூ.15,000, நான்காம் பரிசு - ரூ.10,000, ஐந்தாம் பரிசு - ரூ.5,000 வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு 96988-10699 என்ற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 22.04.2025) கட்;டுமான தொழிலாளர் நலவாரியம் சார்பில், பணியிடத்து விபத்தில் மரணமடைந்த 6 கட்டுமானத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.30 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் தமிழ்நாடு உடலுழைப்பு நலவாரியம் முதலான 20 நலவாரியங்கள் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் துறையின் கீழ் செயல்படுத்தி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 20 அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம் நிதி உதவி விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, கட்டுமானப் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் பதிவு பெற்ற ஃ பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளியின் வாரிசுதாரர்களுக்கு பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை ரூ.5,00,000- வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமானப் பணியிடங்களில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த திரு.விஜய் த/பெ.சேகர், திரு.கண்ணன் த/பெ.மாரியப்பன், திரு.நாகேந்திரன் த/பெ.சுப்புராஜ், திரு.சிங்கதுரை த/பெ.கந்தசாமி, திரு.கருப்பையா த/பெ.ஆறுமுகம் மற்றும் திரு.சரவணன் த/பெ.பெரியசாமி ஆகிய 6 கட்டுமானத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.30 இலட்சம் உதவித்தொகைக்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின் போது விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) திரு.ஜெ.காளிதாஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (22.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கங்கர்செவல் ஊராட்சி, கே.லட்சுமியாபுரம் கிராமத்தில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ரூ.2.40 இலட்சம் மானியத்தில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,குண்டாயிருப்பு ஊராட்சியில், பாறைபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.51.05 இலட்சம் மதிப்பில் புதிய கணினி அறை மற்றும் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.பின்னர், டி.கரிசல்குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.55 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.