விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S,அவர்கள் (03.06.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பந்தல்குடி ஊராட்சி, சூரநாயக்கன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாற்றாங்கால் பண்ணைகள் அமைப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, அருப்புக்கோட்டை முன்னாள் இராணுவத்தினர் முன்னேற்ற நலச்சங்க அலுவலகக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை சூரிய மின் சக்தி (Solar Energy) அமைப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.முன்னதாக, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் குந்தலம்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் அந்தந்த ஊராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.இரா.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்,உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அளவுக்கு அதிகமான சத்தம் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதில், விதிகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகளில் ஏற்படும் சத்தங்கள், அதிக ஒலி எழுப்பும் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் விழாக்காலங்களில் ஒலி பெருக்கிகள் மூலமாக ஒலி ஏழுப்புதல் ஆகியவைகள் ஒலி மாசு ஏற்பட முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. விருதுநகர் மாவட்டத்தில், இது போன்ற அளவுக்கு அதிகமான சத்தங்களால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதாக பத்திரிக்கைச் செய்திகள் மற்றும் புகார்கள் வந்துள்ளன.பொதுவாக, தொழிற்சாலைகள் ஒலி மாசினைக் குறைக்க ஒலி மாசு தடுப்பு சாதனங்களை நிறுவி ஒலி மாசினைக் குறைக்கின்றன. இது போன்று, வாகனப்போக்குவரத்தை நெறிபடுத்துவதன் மூலமும் ஒலி மாசினைக் குறைக்க இயலும். ஆனால் பொது சுகாதாரச் சட்டத்தில் உள்ள வழிமுறைகளை மீறி அரசியல் கட்சி நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் தனி நபரால் நடத்தப்படும் விழா மற்றும் கொண்டாட்டங்களில் முறையற்ற வகையில் ஒலி பெருக்கிகளை குறிப்பாக தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை உபயோகிப்பதனால் வெளி வரும் அதிக சத்தமான ஒலி மாசினால்,பொது மக்களுக்கும், முதியோர்களுக்கும், படிக்கும் மாணவர்களுக்கும் மற்றும் நோயாளிகளுக்கும் எண்ணற்ற இன்னல்கள் ஏற்படுகின்றன.எனவே, மேற்கூறிய நிகழ்வுகளுக்கு ஒலி பெருக்கியை நிறுவி பயன்படுத்தும் முன் காவல் துறையிடம் முறையாக முன்அனுமதி பெற்று, அனுமதிக்கப்பட்ட பகுதி மற்றும் நேரங்களில் மட்டுமே குறைந்த அளவு ஒலியுடன் ஒலி பெருக்கியினை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் எந்த நேர்வுகளிலும் இரவு நேரங்களில் (இரவு 10.00 மணி முதல் காலை 6.00மணி வரை) ஒலி பெருக்கினை பயன்படுத்தக்கூடாது என்றும், குறிப்பாக தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரிக்கப்படுகிறது. காவல்துறை அனுமதியின்றி ஒலி பெருக்கியினை நிறுவி பயன்படுத்துவோர்கள் மீதும், இரவு நேரங்களில் ஒலி பெருக்கியை பயன்படுத்துவோர் மீதும் மற்றும் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கியினை பயன்படுத்துவோர் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளும் மற்றும் ஒலி பெருக்கி சாதனங்களை பறிமுதல் செய்யவும் பொது சுகாதாரச் சட்டம், காற்று மாசுபாடு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் குறிப்பாக சவுண்ட் சிஸ்டம் வைத்திருக்கும் உரிமையாளர்கள் இதில் கவனமுடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸானது தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்டுள்ளதால், உணவு வணிகர்கள் அதனைத் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்றும், அந்த வகையான மையோனைஸை நுகர்வோர்களும் தவிர்த்து, கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது.“கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைஸிலும் சேர்ந்துவிடும் என்பதினால், அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்களின் பொது சுகாதார நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு, கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிப்பது, தயாரித்தவற்றை இருப்பு வைப்பது, போக்குவரத்து செய்வது, விநியோகம், விற்பனை செய்வது ஆகியவற்றை ஓராண்டிற்குத் தடை செய்து தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இத்தடையாணையானது 08.04.2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.எனவே, உணவு வணிகர்கள் எவரும் கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிக்கவோ, அவ்வாறு தயாரித்த மையோனைஸை இருப்பு வைக்கவோ, போக்குவரத்து செய்யவோ, விநியோகம் அல்லது விற்பனை செய்யவோ கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றார்கள். அரசு உத்திரவினை மீறி கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட வணிக நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், மேற்படி மையோனைஸானது பறிமுதல் செய்யப்பட்டு, உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வு செய்யப்பட்டு, பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.மேலும், உணவு பாதுகாப்புத் துறையினரின் தள ஆய்வின் போதே கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டால், உரிய விசாரணைக்குப் பின்னர், உணவு பாதுகாப்பு உரிமம் இடைநீக்கம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது. மேலும், உடல்நலனை பேணிகாக்க ஏதுவாக, நுகர்வோர்களும் தடைசெய்யப்பட்டுள்ள கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.எனினும், மையோனைஸ் பிரியர்களுக்கு மாற்றுத் தேர்வாக, கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் சந்தையில் தொடர்ந்து கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அவற்றை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ வணிகர்களுக்குத் தடையேதுமில்லை. கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் ஆகியவற்றை நுகர்வோர்கள் தத்தமது உடல்நிலைக்கு ஏற்றவாறு சரிவிகித உணவின் அளவிற்குள் சாப்பிடலாம். உணவு வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களின் வசதிக்காக கீழ்கண்டவாறு தெளிவுரைகள் வழங்கப்படுகின்றது.எது தடைசெய்யப்பட்ட மையோனைஸ்? உணவக உரிமையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸை தடைசெய்யப்பட்டதாகும். உணவக உரிமையாளர்கள், தமது உணவகங்களில் கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கக்கூடாது. உணவக உரிமையாளர்கள் தமது நுகர்வோர்களுக்காக, உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று, தயாரிக்கப்பட்டு, பொட்டலிமிடப்பட்டு, லேபிள் விபரங்களுடன் சந்தையில் கிடைக்கும் கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் பொட்டலங்களை மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்தலாம்.எது அனுமதிக்கப்பட்ட மையோனைஸ்? கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அனுமதிக்கப்பட்டதாகும்.முட்டை கலக்காத சைவ மையோனைஸ் அனுமதிக்கப்பட்டதாகும். இவை இரண்டும், பொட்டலமிடப்பட்டு, லேபிள் விபங்களுடன் விற்பனை செய்யப்பட வேண்டும்.அனுமதிக்கப்பட்ட மையோனைஸ் தயாரித்து விற்பனை செய்ய உணவு வணிகர்கள் என்ன செய்ய வேண்டும்? கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் “சொந்தத் தயாரிப்பு உணவுப் பொருளாக” (Proprietary Food) உள்ளதால், அதனைத் தயாரித்து விற்பனை செய்ய, மத்திய உணவு பாதுகாப்பு உரிமத்தினை https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, ரூ.7,500- கட்டணம் செலுத்தி பெற்றபின்னரே தயாரித்து, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட விதிகளுக்குட்பட்டு விற்பனை செய்ய வேண்டும். தவறினால், மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 63-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.நுகர்வோர் மையோனைஸ் குறித்து ஏதேனும் புகார் அளிக்க விரும்பினால், 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கோ அல்லது TNFSD App-ன் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியம் பாதுகாக்கப்படும். அதேவேளையில், உணவு வணிகர்கள் தடைசெய்யப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட மையோனைஸ் குறித்து மேலும் தகவல் அறிய விரும்பினால், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அலுவலகத்தை அணுகி, உரிய தகவல் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
2025 -ஆம் ஆண்டிற்கான வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்கான மத்திய அரசின் ‘ஜீவன் ரக்ஷா தொடர் விருது 2025” வழங்கப்பட உள்ளது. கீழ்காணும் விதிமுறைகளை பின்பற்றி தகுதியுடைய நபர்கள் 25.07.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.தகுதிகள் :ஜீவன் ரக்ஷா தொடர் விருது : இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளில் (01.10.2023 ஆம் தேதிக்கு பிறகு) ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்காணும் மூன்று பிரிவுகளில் இவ்விருது வழங்கப்படுகிறது. வயது வரம்பின்றி இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 1. சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.2. உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.3. ஜீவன் ரக்ஷா பதக்கம் - தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரை காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.மேலும் தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம். அலைபேசி எண்.04562-252701 என்ற முகவரியினை தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
2025 -ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின விழாவின் போது, தமிழக முதல்வர் அவர்களால், ஏதவாது ஒரு துறையில் துணிவு மற்றும் வீர தீர சாகசச் செயல்புரிந்த மகளிருக்கான ‘கல்பனா சாவ்லா விருது 2025” வழங்கப்பட உள்ளது. விருதுகளுடன் ரூ.5,00,000/- ரொக்கப்பரிசு (ம) சான்றிதழும் வழங்கப்படுகிறது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விதிமுறைகள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.ஏதவாது ஓரு துறையில் துணிவு மற்றும் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும். இவ்விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன் விவரக் குறிப்பு மற்றும் ஆவணங்களுடன் (https://awards.tn.gov.in) என்ற இணைதள முகவரியில் 16.06.2025 -ற்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேற்காணும் விண்ணப்ப விவரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 20.06.2025-க்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம். 04562-252701 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் வரும் 24.06.2025 அன்று விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. 1. திருநங்கைகள் நல வாரிய அட்டை வழங்குதல்2. ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளுதல்3. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்குதல்4. ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்குதல்5. வாக்காளர் அட்டை வழங்குதல்6. குடும்ப அட்டை வழங்குதல்7. சுயதொழில் தொடங்க மானியம் தொகை/ பயிற்சி வழங்குதல்8. இலவச தையல் இயந்திரம் வழங்குதல்9. கல்வி உதவித் தொகை வழங்குதல்10. 40-வயதிற்கு மேல் உள்ள திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்குதல்மேற்கண்ட நாளில் நடைபெறும் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் அனைத்து திருநங்கைகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (02.06.2025) பாலவநத்தம் ஸ்ரீ சாய்ராம் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் பயிலும் 30-ற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுடனான "Coffee With Collector” என்ற 197- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 197-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.கல்லூரி மாணவ மாணவர்கள் போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்., இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்(02.06.2025) விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கதாகூர் அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்.தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில முழுவதும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கு இருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாணவர்களை நேரில் சந்தித்து 2025-26 ஆம் கல்வியாண்டின் தொடக்க நாளான இன்று மாணவர்களை அன்போடு பள்ளிக்கு வரவேற்கக் கூடிய இனிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.வாழ்க்கையில் ஒரு மனிதர் சராசரியாக 75 ஆண்டுகள் வாழ்கிறார். இதில் உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள், சமூக தேவைகள் என்று நிறைய தேவைகள் இருக்கின்றன. அந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கு தங்களுக்கு தேவையான பொருளாதாரத்தை அவர் சம்பாதிக்க வேண்டும். அதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் நாம் ஏன் இந்த கல்வியை மட்டும் வலியுறுத்தி சொல்லுகின்றோம்.இது இன்றைக்கு நேற்று அல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது பகுதியை ஆட்சி செய்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற ஒரு பாண்டிய மன்னன்உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றேபிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,மூத்தோன் வருக என்னாது, அவருள்அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,என்று இந்தப் பாடலை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதியுள்ளார்.வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், நமக்கு தேவையான பொருளை ஈட்டுவதற்கும் எத்தனையோ வழிகள் இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய எளிய வழி என்றால் அது கல்வியும், கடுமையான உழைப்பும்தான். இது இரண்டும் தான் சுலபமான வழி.பதினோராம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர் ஒரு சாதாரண சூழலில் இருந்து வரக்கூடியவர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் செலவிட்டு முழு ஈடுபாட்டோடு படித்தால் ஒரு சராசரி மாணவர் கூட உயர்ந்த நிலையை அடையலாம்.அதிகமான பலன் ஒன்று கிடைக்கும் என்றால் நிச்சயமாக கல்வியால் மட்டும் தான் அது சாத்தியம். வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு வெற்றி பெறுவதற்கும் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த இலட்சியத்தை அடைவதற்கும் தொடர்ச்சியான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வாய்ப்புகளில் மிக எளிய வாய்ப்பும் குறைந்த உழைப்பில் அதிகமான பலனை தரக்கூடிய வாய்ப்பு ஒன்று இருக்குமானால் அது பள்ளிக்கல்வியில் நீங்கள் அடையக்கூடிய உயர்வு தான் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன், தலைமையாசிரியை உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (02.06.2025) தேசிய ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்ற திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியர் திருமதி மங்கையர்கரசியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்தினார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் (31.05.2025) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்ளும் கிராம அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கண்காணிப்புக்குழுக் கூட்டமானது கிராமப்புற பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அந்தந்த கிராமங்களில் நடக்க வேண்டும். ஒரு கிராமத்தில் எட்டு வகையான குழுக்கள் இருந்தது. அந்த குழுக்கள் எல்லாம் மாதந்தோறும் இணைந்து ஒன்றுகூடி விவாதிக்க வேண்டும்.அப்பொழுது தான் கிராமங்களில் அதிகமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதற்காக அதிகமான இடங்களில் இந்த குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நிறைய கிராமங்களில் இந்த குழுக்களின் மூலமாக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஒரு சில சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த குழுவில் முறையாக கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தாத பல கிராமங்களும் இருக்கின்றன.கடந்த மூன்று ஆண்டுகளாக இது குறித்த புள்ளி விவரங்கள் பெறப்பட்டு, அதில் சுமார் ஏறத்தாழ 40 விழுக்காடு கிராமங்களில் மட்டும் தான் இக்குழுக் கூட்டம் முறையாக நடத்தப்பட்டது. மேலும், இதனுடைய நோக்கம் என்பது உங்களது பணிகளில் இந்த கிராமம் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் எத்தகைய முக்கியத்துவத்தை பெற்றுருக்கிறது என்பதற்காக தான்.இந்த கண்காணிப்புக்குழு கூட்டம் நடத்துவதன் மூலமாக அதிகமான பிரச்சினைகள் தீர்க்க முடிகிறது. குழந்தை திருமணம், கல்வி இடைநிற்றல், போதை பொருட்கள் பயன்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு, நாம் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து செயல்படுகின்ற பொழுது, அரசினுடைய சட்டங்களை அமல்படுத்தக்கூடிய நிலையில் இருக்கக்கூடிய கிராம நிர்வாக அலுவலரோ அல்லது ஊராட்சி மன்ற செயலாளர்களோ உங்களுடைய பணியை சிறப்பாக செயல்படுத்துவதற்கு நீங்கள் எந்தெந்த சட்ட திருத்தங்களை எல்லாம் கிராமங்களில் அமல்படுத்தியவர்களோ அதனை அமல்படுத்ததற்கு உங்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கான ஒரு கூட்டு முயற்சி தான் இந்த குழு.குழந்தை திருமணம், பிளாஸ்டிக் தடைச் சட்டம், சட்டம் ஒழுங்கு மற்றும் கனிம வளங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் முடிந்தவரை வராமல், அதனை நாம் ஆரம்பத்திலே சரிசெய்து விட வேண்டும்.நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய எந்த ஒன்றையும் கிராம ஒருங்கிணைப்புக் குழுவின் மூலமாக அவற்றை விவாதித்து சரியான முறையில் செயல்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. எனவே அதனையெல்லாம் உங்களைப் போல இருக்கக்கூடிய கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் பல இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.எனவே, அரசு பணிக்கு வருவது என்பது மிகப்பெரிய வாய்ப்பு. அதனை எல்லோருக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் பயன்படுத்துவது என்பது முக்கியமான செயல்பாடு. உங்களுடைய பணிக்காலத்தில் இதுபோன்று மற்றவர்களுக்கும் பயன்பெறக்கூடிய வகையில் பல்வேறு அரசினுடைய திட்டங்கள் மற்றும் சட்டங்கள் அவற்றையெல்லாம் சிறப்பாக அமல்படுத்தி, கிராமத்தை அனைத்து வகையிலும் சிறந்த கிராமமாக மாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.