25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

May 28, 2025

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 1809 புதிய குளங்கள் அமைக்கும் பணிகளில், 1512 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மேற்கொண்ட ஆய்வுப் பயணத்தின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், புதிய சமுதாயக்குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் கிராமப்புறங்களில் குடிநீர் வசதி மற்றும் நீர்ப்பாசன வசதிக்கு உதவும் சமுதாயக்குளம் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இந்தத் திட்டம் மூலம் கிராமங்களில் குளங்கள், ஏரிகள் மற்றும் பிற நீர்த்தொழில் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் புதிய சமுதாயக்குளங்கள் அமைக்கும் பணிகளில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.19 கோடி மதிப்பிலான 154 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 143 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 11 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.19.58 கோடி மதிப்பிலான 193 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 168 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 25 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.22.33 கோடி மதிப்பிலான 127 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 114 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 13 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.11 கோடி மதிப்பிலான 129 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 104 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 25 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.12.12 கோடி மதிப்பிலான 175 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 146 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 29 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.15.49 கோடி மதிப்பிலான 167 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 116 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 51 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.10.95 கோடி மதிப்பிலான 125 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 102 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 23 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.11.55 கோடி மதிப்பிலான 191 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 161 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 30 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14.45 கோடி மதிப்பிலான 189 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 161 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 28 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.10.97 கோடி மதிப்பிலான 256 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 202 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 54 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.22.65 கோடி மதிப்பிலான 103 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 95 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 8 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.ஆக மொத்தம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் ரூ.176.21 கோடி மதிப்பில் 1809 புதிய குளங்கள் அமைக்கும் பணிகளில், 1512 பணிகள் முடிக்கப்பட்டு, 297 பணிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சின்ன ஓடைபட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.25 இலட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்குளம் அமைக்கப்பட்டு, குளம் தூர்வாரப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்து, அரசு அலுவலர்கள் மற்றும் திட்டப் பணியாளர்களிடம் கலந்துரையாடினார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

May 28, 2025

வத்திராயிருப்பு வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்து வருகின்றனர்.அதன்படி, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் முகாமானது இன்று 28.05.2025 காலை 09.00 மணி முதல் மறுநாள் 29.05.2025 அன்று காலை 09.00 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் முதல் நாளான இன்று, மாவட்ட ஆட்சித்தலைவர், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், கோட்டையூர் ஊராட்சியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தினை பார்வையிட்டு, அங்குள்ள பதிவேடுகள் மற்றும் கோப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.மேலும், மகாராஜபுரம் ஊராட்சி தானிப்பாறை லிங்கம் கோவில் அருகில் புதிதாக பாலம் கட்டப்படவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.பின்னர், இலவச வீட்டுமனை பட்டா 6 பயனாளிகளுக்கும், நத்தம் பட்டா மாறுதல் 31 பயனாளிகளுக்கும், சமூக பாதுகாப்பு திட்டம் உதவித்தொகை 9 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப மின்னணு அட்டை 40 பயனாளிகளுக்கும், பிறப்பு சான்று பதிவு 4 பயனாளிகளுக்கும் என மொத்தம் 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து,  வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

May 28, 2025

Coffee With Collector” என்ற 191 மற்றும் 191-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம் (28.05.2025) வத்திராயிருப்பு லயன்ஸ் மெட்ரிகுலேஷன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பில் பயிலும் 150 பள்ளி மாணவர்களுடனான இரண்டு குழுக்களாக நடைபெற்ற Coffee With Collector” என்ற 191 மற்றும் 192-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, பள்ளித் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 191 மற்றும் 192-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

May 28, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திக்குளம் ரெயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், 31.05.2025 அன்று காலை 8.00 மணி முதல் மாலை 06.00 வரை வழிதடம் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திக்குளம் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 441 Rly KM:579/900-580/000  என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.எனவே 31.05.2025 அன்று காலை 8.00 மணி முதல் மாலை 6.00 வரை பராமரிப்பு பணிகளுக்காக, அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து,  மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

May 28, 2025

பதிவு செய்யப்பட்ட அனைத்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காப்பீட்டை புதுப்பித்து பயன்பெறலாம் .

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விபத்து மற்றும் இறப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின் போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால், மேற்படி நபர்களை ஒன்றிய மற்றும் மாநில அரசின் காப்பீட்டு திட்டங்களில் இணைப்பது மிகவும் முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊரகம் மற்றும் நகர்ப்புற ஏழை எளிய குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர்களின் மரணத்தால் அல்லது ஏதாவது உடல் உறுப்பு இழப்பால் நிரந்தர வருவாய் இழப்பை சந்திக்க நேரிடுகிறது. இப்பேரிழப்பிலிருந்து காப்பீடு செய்தவர் அல்லது குடும்பத்தினர் மீளவும், தொடர்ந்து தொழில்கள் புரிந்திடவும் காப்பீடு உதவுகிறது.ஆதலால் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடையே காப்பீட்டு திட்டங்கள் மற்றும் சமுதாய பாதுகாப்பு பயன்கள் பற்றிய விவரங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு PMSBY, PMJJBY, CMCHIS, PMJAY  மற்றும் APY ஆகிய காப்பீட்டு திட்டங்களில் தகுதியுள்ள அனைத்து சுய உதவிக் குழு உறுப்பினர்களும் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.மேலும், பதிவு செய்யப்பட்ட அனைத்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மே 2025-ம் மாதத்திற்குள் காப்பீட்டை புதுப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 27, 2025

சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட  பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள்  (27.05.2025) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சத்திரப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.30 இலட்சம் மதிப்பில் நாற்றாங்கால் பண்ணைகள் அமைப்பட்டு மரக்கன்றுகள்  நடப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்; நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், சின்ன ஓடைபட்டி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.10 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, சின்ன ஓடைபட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.25 இலட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்குளம் அமைக்கப்பட்டு, குளம் தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.75 இலட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை புதிதாக கட்டப்பட்டு வருதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு  திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.    

May 27, 2025

விருதுநகர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் அலுவலகங்கள் மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர், மதுரை ரோட்டில் க.எண்: 6/415, 6/416 தபால் தந்தி காலனியில் செயல்பட்டு வந்த விருதுநகர், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் -1 மற்றும் 2 ஆகிய அலுவலகங்கள்  26.05.2025 திங்கள் கிழமை முதல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய வளாக கட்டிடத்தின் முதல் தளத்தில் அறை எண்கள்: 106,107,111,112,114 மற்றும் 115 ஆகியவற்றில் செயல்பட்டு வருகிறது என விருதுநகர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர் திரு.இரா.ரவிச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 27, 2025

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் அசல் சான்றிதழ்களை தர மறுக்கும் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீதுமாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறும் அனைத்து மாணவ மாணவிகளும் தகுதியான சிறப்பு வாய்ந்த அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நான் முதல்வன், கல்லூரி கனவு, தமிழ் புதல்வன் புதுமைப்பெண் திட்டம்  உட்பட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை அதிகளவு அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்த்து வருகிறது. மாணவர்களும் தனது மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு ஒன்றுக்கு மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் விண்ணப்பித்து சேர்ந்து வருகின்றனர்.இந்நிகழ்வில் சில கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவிகளை தங்கள் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அவர்களை அணுகி மாணவர்களின் உடைய மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று வைத்துக் கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட மாணவனோ மாணவியோ அரசு உயர் கல்வி நிறுவனங்களில் மற்றும் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்கும் பொழுது தனியார் கல்லூரிகள் மாணவனின் அசல் சான்றிதழ்களை வைத்துக்கொண்டு தர மறுப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் கல்வி உதவி மைய கட்டுப்பாட்டறைக்கு புகார்கள் வருகின்றன.எனவே அவ்வாறு மாணவனின் அசல் சான்றிதழ்களை தர மறுக்கும் கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் மீது  மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.மாணவ மாணவிகள் இப்புகார்கள் சார்ந்து தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கல்வி உதவி மைய கட்டுப்பாட்டு அறையை 8608204154 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I  A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 27, 2025

மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் 31.05.2025 அன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடத்தப்பட உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில்  சேர்வது தொடர்பான இரண்டாம் கட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் 31.05.2025(சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணியளவில் நடத்தப்பட உள்ளது.இந்நிகழ்வில், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் கல்லூரியில் சேர இயலாத மாணவர்கள் பங்கு பெறலாம். 2025-26 கல்வியாண்டு மட்டுமல்லாது அதற்கு முந்தைய  கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லூரியில் சேராத மாணவர்களும் இக்குறைத்தீர் கூட்டத்தில்  கலந்து கொள்ளலாம். இதன் மூலம் மாணவர்களுக்கு உடனடியாக  கல்லூரியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.எனவே உயர்கல்வியில் சேர்வதற்கான சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்த தகவல்களை இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 26, 2025

186 மற்றும் 187 ஆவது சிறப்பு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்(26.05.2025)  இராஜபாளையம், திருவில்லிபுத்தூர்  ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளிகள் அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுடன் இரண்டு குழுக்களாக நடைபெற்ற 186 மற்றும் 187 ஆவது சிறப்பு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் உயர்கல்வி வாய்ப்புகள், தலைசிறந்த கல்லூரிகள், உரிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். பள்ளிப்படிப்பை முடித்து சிறந்த கல்லூரிகளில் பயின்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கக்கூடியவர்களின் புள்ளி விவரங்களை சற்று ஆராய்ந்து பார்த்தால், அது அதிக மதிப்பெண்கள் பெற்றவரோ, சராசரியாக படித்தவரோ என எந்தவொரு பொதுப்பண்புகளும் இல்லை. தங்களுக்கான வாய்ப்புகள் குறித்து முன்கூட்டியே சரியான நேரத்தில் விழிப்புணர்வும், அதற்கான முயற்சியும் எடுப்பவரே வெற்றியடைகிறார்கள்.நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு இன்னும் அதிக விழிப்புணர்வு இருந்தால், அவர்கள் நல்ல முடிவு எடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும். மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும். ஒரு தெளிவான இலக்கை நிர்ணயிக்கும் போது, அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு நமக்கு எளிதாக இருக்கும். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள். இதிலிருந்து உங்களுக்கான இலக்கை அடைவதற்கு என்ன தேவை என திட்டத்தை வகுத்துக் கொள்வது மிக அவசியம். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கின்ற போதே, உயர்கல்விக்கான இலக்கை நிர்ணயித்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், மாணவர்கள் அனைவரும் தங்களுடைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு, நன்கு படித்து முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

1 2 ... 100 101 102 103 104 105 106 ... 138 139

AD's



More News