25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 18, 2025

நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டத்தினை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.

விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் (17.06.2025) விருதுநகர் நகராட்சியில் நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் விருதுநகர் நகராட்சியில் ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொள்ளும் பணிகளை நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் திரு.ப.மதுசூதன்ரெட்டி,I A S., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்.பின்னர், நகர நிலவரித்திட்டத்;தின் கீழ் 100 பயனாளிகளுக்கு இணைய வழிப்பட்டாக்களை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு, ஒவ்வொரு துறையிலும் ஒரு புதிய முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு துறையை நவீன மயப்படுத்தவும், பொது மக்களுக்கு எளிதாக திட்டங்கள் மற்றும் சேவைகள் செல்லக்கூடிய பணிகளை தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.அதனுடைய ஒரு பகுதியாக தான் இந்த அளவீடு எடுப்பதற்கு, ட்ரோன் மூலமாக விருதுநகரை நில அளவு செய்து ஒவ்வொரு இடமும் எவ்வளவு இருக்கிறது என்பதை எல்லாம் துல்லியமாக கணக்கெடுத்து, வரைபடத்தோடு கொடுக்க வேண்டிய இந்த பணிகளை இன்றைக்கு நமது மாவட்டத்தில் தொடங்கி இருக்கிறோம்.ஒவ்வொரு வீடாக சென்று அதிகாரிகள் அளவீடு செய்து வரைபடத்தோடு இருக்கக்கூடிய திட்டத்தை செய்து முடிக்கவுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 10 நகரங்களில் இந்தப் பணியை முதலில் எடுத்திருக்கின்றோம்.இது பொதுவாக பார்த்தோம் என்று சொன்னால், கிராமம் மற்றும் நகரங்களில் நம்முடைய இடத்திற்கு ஒரு துல்லியமான அளவீடு செய்வதில் முரண்பாடுகள் ஏற்படுகிறது. அப்படி இல்லாமல் ஒவ்வொருவருடைய இடத்தையும் அரசாங்கம் சட்டபூர்வமாக அளந்து கொடுக்கின்ற நேரத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் வராத சூழ்நிலையை நாம் உருவாக்க இருக்கின்றோம்.அதே போல இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குகின்ற பணியை அரசு முனைப்போடு செய்கிறது. பட்டா வழங்குவது மட்டுமல்லாமல், நிலம் வாங்குதல், நிலத்தை மாறுதல், பாகப்பிரிவினை போன்ற பட்டா மாறுதல் செய்கின்ற பணிகளில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 1.67 கோடி நபர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.இப்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலமாக சராசரியாக இருக்கக்கூடிய மக்களுக்கு வேண்டிய பணிகளை செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டு இருக்கிறார்கள். அந்த ஆணையின்படி நாங்களும் செயல்படுகிறோம். அரசு அதிகாரிகள் முனைப்போடு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்துறை என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நில ஆவணங்களையும் பாதுகாத்து, நில உடமைதாரர்களுக்கு அந்த நிலம் தொடர்பான பட்டா, அ-பதிவேடு, வரைபடங்கள், கிராம வரைபடம், தாலுகா வரைபடம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள் வழங்கும் செயல்பாடுகளில் மிக முக்கியமானதாகும்.கடந்த காலங்களில் நிலம் தொடர்பான எந்த சேவையாக இருந்தாலும், தொடர்புடைய அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பம் அளித்து பெற வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதனை மாற்றி நில அளவை துறையின் மூலமாக செயல்படுத்தக்கூடிய அனைத்து திட்டங்களையும் இணைய வழியாக அவர்கள் இருப்பிடத்திலிருந்தே விண்ணப்பித்துக் கொண்டு அதன் மூலமாக இத்துறையின் சேவைகளை பெறுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கின்றது.ஒவ்வொரு மனுதாரரும் பட்டா மாற்றத்திற்கான விண்ணப்பம் கொடுத்த நாட்களில் இருந்தது 30 நாட்களுக்குள் 90 சதவீதம் விண்ணப்பங்களுக்கு உட்பிரிவு செய்து பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும் மாதந்தோறும் சராசரியாக 3 இலட்சம் பட்டா மற்றும் ஆணைகள் வருவாய்த்துறையின் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று பட்டாவுடன் புலப்படமும் பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகளை செய்யப்பட்டிருக்கின்றன.நில அளவையை மேம்படுத்தி தொழில்நுட்ப ரீதியாக துறையை மேம்படுத்துவதற்கான சில முக்கியமான முடிவுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள். அதில் மிக முக்கியமானது அனைத்து மாவட்டங்களிலும் டி.ஜி.பி.எஸ் என்ற நவீன நில அளவைக் கருவிகளைக் கொண்டு, நில உரிமையாளரின் நிலத்தின் எல்லைகளை அவர்கள் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் காண்பிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களுக்கு உண்டான அளவுகளை Latitude - Longitude    விபரங்களுடன் புலத்திலேயே துல்லியமாக அறிந்துகொள்ள முடிகிறது.இது போன்று நகரப் பகுதிகளில் நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டம் முதற்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம்(மறைமலை நகர்), காஞ்சிபுரம், திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டம்(காரைக்குடி), தூத்துக்குடி மாவட்டம்(கோவில்பட்டி), கோயம்புத்தூர் மாநகராட்சி(7 வார்டுகள்), விருதுநகர் ஆகிய 10 நகரங்களில் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அதில் விருதுநகர் நகரமும் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றைக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களால் இந்த திட்டம் துவக்கப்பட்டு இருக்கின்றது. ஒரு வார காலத்திற்குள் இந்த ட்ரோன் சர்வே முடிந்த பிறகு ஆறு மாதத்திற்குள் அளவு எடுத்து நில உரிமைக்கான சான்றுகள், வரைபடங்களின் தரவுகள் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இப்படி பல்வேறு புதிய முயற்சிகள் தொடர்ச்சியாக கொண்டுவரப்படுகின்றன. இவை அனைத்தையும் பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Jun 17, 2025

விருதுநகர் மாவட்டம் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தினை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  (16.06.2025) தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய விரிவான மினி பஸ் திட்டம் - 2024-ன் படி பேருந்து வசதி கிடைக்கப்பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய மினி பஸ் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில்  போக்குவரத்துத் துறை  சார்பில், புதிய விரிவான மினிபஸ்  திட்டத்தினை   மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்  (16.06.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்.தமிழ்நாட்டில் போக்குவரத்து வசதி அனைத்துப் பகுதிகளுக்கும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின்  வழியில் மினி பஸ்கள் எல்லா கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், கிராமப்புறங்களில் இருக்கும் பொதுமக்கள் கிராமங்களுக்கோ அல்லது நகர்புறங்களுக்கோ வேறு இடங்களுக்கோ சிரமமில்லாமல் செல்லும் வகையில் நமதுதமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  இன்று தமிழகம் எங்கும் மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டத்தின் கீழ் மினி பஸ்களை துவக்கி வைத்துள்ளார்.பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள்/குக்கிராமங்கள் / குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போதுமான பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை அரசு வழங்குவதற்காகவும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களின் மக்கள் தொகை மற்றும் போதுமான பேருந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் அல்லது அருகிலுள்ள நகரத்தை அடைய எந்த வழியும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் தமிழக அரசால் மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த 1997-ஆம் ஆண்டு பேருந்து வசதி பெறாத குக்கிராமங்களில் வாழும் மக்கள் பேருந்து வசதி பெறும் நோக்கில் மினிபஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மாவட்டத்திற்கு 250 மினிபஸ் அனுமதிச்சீட்டுகள் என்ற அடிப்படையில், பேருந்துகள் இயக்கப்படாத (Un-Served) வழித்தடத்தில் 16 கி.மீ. மற்றும் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில் (Served) 4 கி.மீ. என மொத்தம் 20 கி.மீ. என்ற அளவில் வழித்தடம் நீட்டிப்பு செய்து மினிபஸ் இயக்க அனுமதி பெற்றதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் 131 மினி பஸ்கள் அனுமதிச்சிட்டு வழங்கப்பட்டு தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது.மேலும், தற்போதைய புதிய திட்டமான New Comprehensive Mini Bus Scheme- 2024-ல் 35 சதவிகிதம் பேருந்து வசதி உள்ள பகுதியும், 65 சதவிகிதம் பேருந்து போக்குவரத்து அல்லாத கிராமங்களுக்கும் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் இயக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்டத்தில் சிற்றுந்து வசதி ஏற்படுத்த 38 வழிதடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 6 சிற்றுந்துகளுக்கு புதிய அனுமதி சீட்டு 15.06.2025 அன்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிற்றுந்து வழித்தடங்களில் அரசு வழிகாட்டுதலின்படி 11 சிற்றுந்துகள் வழிதடம் நீட்டிப்பு செய்து இயக்க (Migration) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.      

Jun 17, 2025

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் வாரியத்தில் விடுப்பட்டவர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு இரண்டாம் கட்டம் முகாம் 19.06.2025 அன்று நடைபெற உள்ளது

 கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதவரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களிடமிருந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை தேர்வு செய்து அவர்கள் சுயதொழில் செய்து சுயமரியாதையுடன் சமூதாயத்தில் வாழவும் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் எளிதாக பெறுவதற்கு இந்த கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட பயனாளிகள் இதில் பயன் பெறுவதற்கு tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் முதலில் உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டும். இதற்கான முதற்கட்ட முகாம்கள் கடந்த 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய தேதிகளில் 450 பஞ்சாயத்துகளில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.      இதன் தொடர்ச்சியாக ‘கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்வு கன்னிகள், மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களை கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற  மகளிர் வாரியத்தில்,  விடுப்பட்ட  பெண் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு  இரண்டாம் கட்டம் முகாம்”  ஆனது அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வருகிற 19.06.2025 -அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.30 வரை  உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும் இம்முகாமிற்கு வருகை தரும்பொழுது கீழ்கண்ட ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.1. விதவைசான்று/ஆதரவற்றவிதவை சான்று கணவரால் கைவிடப்பட்டவர் சான்று2. தொலைபேசி எண்3. குடும்ப அட்டை நகல்4. ஆதார் நகல்5. வருமான சான்று6. சாதி சான்றிதழ்இம்முகாமினை விடுப்பட்ட பயனாளிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jun 16, 2025

விருதுநகர் ஊராட்சி மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு கள ஆய்வு

விருதுநகர் ஊராட்சி மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர்     முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் நேரில் சென்று  (14.06.2025) சிறப்பு கள ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாணவர்கள் 100 சதவிகிதம் பள்ளி படிப்பை முடிப்பதற்கும், பள்ளி படிப்பு முடித்து உயர் கல்வி சேர்வதையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும்  இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.தற்போது  1495 மாணவர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வராமல் இடைநிற்றல் மாணவர்கள் மாவட்டம் முழுவதும் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை கண்டறிந்து மாணவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட அளவிலான உயர் அலுவலர்கள்  இன்று முதற்கட்டமாக கள ஆய்வு மேற்கொண்டனர்.அதன்படி  முதற்கட்டமாக அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 8 மாணவர்களும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 61 மாணவர்களும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 103 மாணவர்களும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10 மாணவர்களும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 47 மாணவர்களும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 22 மாணவர்களும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 97  மாணவர்களும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 105 மாணவர்களும்,  என மொத்தம் 453  இடைநிற்றல் மாணவர்களை மாவட்ட அளவிலான அலுவலர்கள்  நேரில் சந்தித்து நான் பள்ளிக்கு வராத காரணங்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.இந்த குழுவில் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), கூடுதல் காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர்கள், உதவி இயக்குநர் ஊராட்சிகள், துணை ஆட்சியர்கள், துணைக்காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட 80 அரசு அலுவலர்கள் ஒவ்வொரும் தனித்தனியாக இடைநின்ற மாணவர்களை நேரில் சென்று சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணங்கள், குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான கள ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, விருதுநகர் ஊராட்சி மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில்; இடைநிற்றல் ஆன 5 மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று சிறப்பு கள ஆய்வு மேற்கொண்டார்.  இந்த கள ஆய்வின் போது, 5 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பள்ளிக்கு செல்லாத காரணங்களை கேட்டறிந்தார். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சொல்கின்ற காரணங்களின் அடிப்படையில், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, பள்ளியில் சேர்வதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, நிதியுதவி, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு வகுப்புகள் எடுத்தல், ஆர்வமின்மையை போக்கி மீண்டும் பள்ளியில் சேர்த்தல், புலம்பெயர்ந்தவர்களை கண்டறிந்து உரிய வழிகாட்டுதல், கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 14, 2025

மெட்டுக்குண்டு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் மெட்டுக்குண்டு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  (13.06.2025) முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

Jun 14, 2025

திருநங்கைகள் அரசின் கல்வி தொடர்பான சலுகைகள் பெறுவதற்கு 24.06.2025 அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது

 விருதுநகர் மாவட்டத்தில் திருநங்கைகளின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக உயர்கல்வி பயிலும் திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி தொடர்பான கட்டணங்களையும்  ‘தமிழ்நாடு அரசே”  ஏற்கும்  என அறிவிப்பு வெளிவந்துள்ளது.                    திருநங்கைகள் எந்த வகையான பள்ளிகளில் படித்திருந்தாலும், உயர்கல்வி பயிலும் போது, அவர்களும் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் பயனடைய ஏதுவாக இத்திட்டங்களில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் திருநங்கை, திருநம்பி, இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கைகளும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை முற்றிலும் தளர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.               எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் திருநங்கை, திருநம்பி, இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களும் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையை சான்றாக சமர்ப்பித்து பயன்பெறலாம்.              விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் வருகிற 24.06.2025 அன்று பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் பங்கேற்று தங்களது விவரத்தை பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 11, 2025

வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 99 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில்  (11.06.2025) நடைபெற்றது.இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், 12 பயனாளிகளுக்கு நத்தம் இலவச வீட்டுமனைப்பட்டா ரூ.6,21,608/- மதிப்பிலும், 1 பயனாளிக்கு நத்தம் வீட்டு மனைப்பட்டா ரூ.13,500/- மதிப்பிலும்,  38 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்படும் இ-பட்டா ரூ.24,62,400/- மதிப்பிலும், உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில், 41 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், கால்நடைத் துறையின் சார்பில், 5 பயனாளிகளுக்கு தாது உப்புக் கலவையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில், 2 பயனாளிகளுக்கு விதைப்பைகளையும் என மொத்தம் 99 பயனாளிகளுக்கு ரூ.30.98 இலட்சம் மதிப்பிலானஅரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு அரசுத் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.விவசாயத்தில் இருக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் எல்லாம் பார்த்து விவசாயம் செய்தால் லாபகரமானதாக இருக்கும்.கால்நடைத்துறையில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மற்ற குழுக்களைச் சார்ந்த பெண்கள் 20  நபர்கள் இருக்கக்கூடிய குழுவிற்கு அதிகப்பட்சமாக 50சதவிகித மானியத்துடன் கால்நடைகள் வளர்ப்பதற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் தமிழ்நாட்டிலேயே கடந்த ஆண்டு அதிகமாக வழங்கக்கூடிய மாவட்டம் விருதுநகர் மாவட்டம் தான். கடந்த ஆண்டு ஏறத்தாழ சுமார் 40,000 த்திற்கும் அதிகமான வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கியுள்ளோம்.அரசினுடைய பல்வேறு திட்டங்களில் செயல்படக்கூடியனவற்றை எல்லாம் நீங்கள் பெற்று கொள்ள வேண்டும். இதன் மூலமாக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மேன்மையடைய வேண்டும். குறிப்பாக உங்களுடைய  பொருளாதார வாழ்க்கை மேன்மையடைய வேண்டும் என்பதற்காக தான் அரசு இத்தகைய திட்டங்களை எல்லாம் தீட்டி, நேரடியாக உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.மேலும், ஏழை எளிய நடுத்தர மக்கள் பல்வேறு சேவைகளை அரசு மூலமாக பெறுவதற்கும், தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதற்கும் புதிய தொழில்களை செய்வதற்கும், அரசினுடைய திட்டங்களை பெறுவதற்கும், இருக்கக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

Jun 11, 2025

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு கிராமத்தில் கால்நடைசிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கூரைக்குண்டு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S ., அவர்கள் (11.06.2025) தொடங்கி வைத்து, கால்நடைகளுக்கு நோய்தடுப்பு மருந்தினை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் 2025-2026 -ஆம் ஆண்டில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 12 முகாம்கள் வீதம் மொத்தம் 132 சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இம்முகாமில், நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல் குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை ஆய்வு, கருப்பை மருத்துவ சிகிச்சைகள் போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளன.அதன்படி, இன்று  விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கூரைக்குண்டு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்pனை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இம்முகாமில், 110  கால்நடைகளுக்கு சிகிச்சைகளும், 912 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளும், 11 கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கரூவூட்டலும் மற்றும் 7 கால்நடைகளுக்கு சினை பரிசோதனையும், 202 கால்நடைகளுக்கு தடுப்பூசிகளும் என மொத்தம் 1242 கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது.பின்னர், 3 பயனாளிகளுக்கு கிபேரி கன்றுகள், 4 பயனாளிகளுக்கு இலவச கோ -4 புல்கரணைகள், மற்றும் 3 பயனாளிகளுக்கு மேலாண்மை முறையில் சிறந்த கால்நடை வளர்ப்பு வழங்கப்பட்டது.பின்னர், சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றிய சிறந்த விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகளையும், சிறந்த கிடேரி கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகளையும், விவசாயிகளுக்கு கால்நடை தீவனபயிர்களையும், கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்பு கலவை மற்றும் சத்து பவுடர்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.எட்வின் ஜேம்ஸ் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 11, 2025

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்,834 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.86.96 கோடி மதிப்பிலான கடனுதவிகளைஅமைச்சர் அவர்கள் வழங்கினார்.

 தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் (11.06.2025) சென்னை கலைவாணர் அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், மாநில அளவிலான மணிமேகலை விருதுகளை வழங்கி, மகளிர் சுய உதவிக் குழு வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கி தொடங்கி வைத்தார்.அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், வட்டார அளவில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களில், அருப்புக்கோட்டை  வட்டாரத்தில், 48 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.375.87 இலட்சம் மதிப்பிலும், இராஜபாளையம்  வட்டாரத்தில், 52 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.454.30 இலட்சம் மதிப்பிலும், காரியாபட்டி வட்டாரத்தில், 44 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.422.17 இலட்சம் மதிப்பிலும், சாத்தூர் வட்டாரத்தில் 52 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.443.64 இலட்சம் மதிப்பிலும், சிவகாசி வட்டாரத்தில் 52  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.575.23 இலட்சம் மதிப்பிலும், திருச்சுழி வட்டாரத்தில் 61 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.528.77 இலட்சம் மதிப்பிலும், நரிக்குடி வட்டாரத்தில் 52 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.454.30 இலட்சம்  மதிப்பிலும், வத்ராயிருப்பு வட்டாரத்தில் 44 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.421.75 இலட்சம் மதிப்பிலும், விருதுநகர் வட்டாரத்தில் 61 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.639.89 இலட்சம் மதிப்பிலும், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் 63 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 512.14 இலட்சம் மதிப்பிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.625.50 இலட்சம் மதிப்பிலும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு 32 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 453 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 632 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 8027 மகளிர்களுக்கு ரூ. 60.28 கோடி மதிப்பிலும்,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், நகராட்சி மற்றும் பேரூராட்சி அளவில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களில், அருப்புக்கோட்டை  நகராட்சியை சேர்ந்த 16 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.111.17 இலட்சம் மதிப்பிலும், இராஜபாளையம்  நகராட்சியை சேர்ந்த 45 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.700.43 இலட்சம் மதிப்பிலும், சாத்தூர்  நகராட்சியை சேர்ந்த 11 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.78.45 இலட்சம் மதிப்பிலும், சிவகாசி  மற்றும் திருத்தங்கல் நகராட்சியை சேர்ந்த 17 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.110.77 இலட்சம் மதிப்பிலும், திருவில்லிபுத்தூர் நகராட்சியை சேர்ந்த 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.238.14 இலட்சம் மதிப்பிலும், விருதுநகர் நகராட்சியை சேர்ந்த  7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.117.94 இலட்சம் மதிப்பிலும்,செட்டியார்பட்டி, காரியாபட்டி, மல்லாங்கிணறு, மம்சாபுரம், கொடிக்குளம், சேத்தூர், சுந்தரபாண்டியம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பேரூராட்சிகளைச் சேர்ந்த 41 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.429.9 இலட்சம் மதிப்பிலும், நகர்ப்புற அளவிலான  கூட்டமைப்பிற்கு 50 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 881 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 202 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 2215 மகளிர்களுக்கு ரூ. 2667.79 கோடி மதிப்பிலும்,ஆக  மொத்தம் மாவட்டத்தில், ஊரகம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 834 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 10,242 மகளிர்களுக்கு ரூ.86.96 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.மேலும், ராஜபாளையத்தை சேர்ந்த பெண்மணி மணிமேகலை விருது பெற்றதை போல், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் இதுபோன்ற மேலும் பல விருதுகளை பெற வேண்டுமென மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.பெண்கள்  தங்களுக்கான அரசு திட்டங்களை தெரிந்துகொண்டு,  தொழில் வாய்ப்புகளுக்கான பயிற்சிகளை பெற்று, அரசு மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை முறையாக முதலீடு செய்து தங்களுடைய வருமானத்தை பெருக்கி, குடும்ப  பொருளாதாரத்தையும், சமூக பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள  வேண்டும்இதன் மூலமாக மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் வங்கி கடன் பெறுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நமது மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட சுமார் 100 கோடி அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் இந்த ஆண்டும் கூடுதலாக வங்கிக் கடன் வழங்க வேண்டும் என்று வங்கியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இந்த ஆண்டும் அதிகமான கடனுதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் புதிய தொழில்களை செய்வதற்கு பல்வேறு பயிற்சிகளை வழங்க வேண்டும் என்பதற்காகவும் வங்கி கடனோடு இருக்காமல், புதிய பயிற்சிகளை வழங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே, பெண்களுக்கு இதுபோன்ற எத்தனையோ வாய்ப்புகள், சுதந்திரங்கள், விடுதலைகள் இருந்தாலும், உண்மையான விடுதலை என்பது அவர்களிடம் இருக்கக்கூடிய பொருளாதார விடுதலைதான். அதன் அடிப்படையில் பல்வேறு புதிய திட்டங்கள் மூலம் வங்கி கடன் உதவிகள், புதிய பயிற்சிகள் எல்லாம் நீங்கள் பெற்று இன்னும் பொருளாதாரத்தில் வலிமை மிக்கவர்களாக மாற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Jun 11, 2025

ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனம் (RSETI) மூலம் இளைஞர்களுக்கு சுய தொழில் குறித்து பயிற்சி அளிப்பதுடன் உகந்த தொழில் வாய்ப்புகளை கண்டறிதல், தொழில் திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட தொழில் முனைவோர் குறித்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது

ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்தில், முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னை தவிர 37 மாவட்டங்களிலும் ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அரியலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் செயல்படும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் மட்டும் உண்டு உறையிட வசதியுடன் கூடிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.இப்பயிற்சி மையங்களில் வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்கிடும் பயிற்சிகளான, குறிப்பாக செல்போன் பழுது நீக்குதல், ஓட்டுனர் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல், கான்கிரீட் கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சு பயிற்சி, இருசக்கர வாகன பழுது நீக்குதல், ஒயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் 18-45 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.கல்வித் தகுதியாக குறைந்தது 8-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. 8ஆம் வகுப்பு முதல், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு வரை படித்தவர்களுக்கு தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.  குறைந்தது 10 நாட்கள் முதல் அதிகபட்சம் 45 நாட்கள் வரை உள்ள பயிற்சிக் காலத்தின் போது மதிய உணவும், காலை மற்றும் மாலை வேலைகளில் சிற்றுண்டி மற்றும் தேனீர் போன்றவை இலவசமாக வழங்கப்படுவதுடன், பயிற்சியாளர்களுக்கு சீருடை, பாடப் பொருட்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கு உரிய அடிப்படை தொழில் கருவிகள் ஆகியவையும் வழங்கப்படுகிறது.மேலும், குறிப்பிட்ட சுய தொழில் குறித்து பயிற்சி அளிப்பதுடன் உகந்த தொழில் வாய்ப்புகளை கண்டறிதல், தொழில் திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்துதல், தொழில் முனைவோருக்கான சிறந்த பண்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட தொழில் முனைவோர் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட பயிற்சிகளுக்கு விளக்கப்பட காட்சிகள், தொழில் உபகரணங்களை பயன்படுத்துதல், கணினி வகுப்பு, மென் திறன் பயிற்சி மற்றும் செயல்முறை வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் தொழிற்பயிற்சிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தொழிலில் சிறந்து விளங்கும் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.இது மட்டுமன்றி பயிற்சியின்போது முக்கிய தொழில் நிறுவனங்களுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் வெற்றி கதைகள் நேரடியாக எடுத்துக் கூறப்படுகிறது.இளைஞர்களை குழுவாக அழைத்துச் சென்று சந்தை ஆய்வுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியின் முடிவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த இளைஞர்கள் சுய தொழில் மேற்கொள்ள ஏதுவாக இரண்டு ஆண்டுகள் வரை பயிற்சி நிலைய அலுவலர்களால் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிற்சி முடித்து இளைஞர்கள் சுய  வேலைவாய்ப்பில் ஈடுபட கடன் உதவி தேவைப்படும் பட்சத்தில், வங்கிகள் மூலம் கடன் பெறவும் பயிற்சி நிலைய அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டு நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளுக்கான கால அட்டவணை ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கிராமப்புற இளைஞர்கள் தங்களுக்கு ஏற்ற தொழில் பயிற்சிகளில் சேர்ந்து பயன் பெற விரும்பினால், நமது மாவட்டத்தில் உள்ள ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,  103/ 1A மதுரை ரோடு, தீயணைப்பு நிலையம் எதிரில், விருதுநகர். தொலைபேசி  எண்: 98947-53297 திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர்   தொலைபேசி எண்: 94440 -94482  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாழ்வாதார உதவி அழைப்பு எண் 155330 மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 309 8039 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.                    மேலும், விபரம் அறிய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாழ்வாதார உதவி அழைப்பு எண் 155330 மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 309 8039 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 95 96 97 98 99 100 101 ... 138 139

AD's



More News