25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 27, 2025

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில், அறிஞர் அண்ணா விளையாட்டுப் போட்டிகள் – 2025 நடைபெற உள்ளதை முன்னிட்டு, பங்குபெற விரும்பும் மாணவ/மாணவியர்கள் தங்களின் பெயரை மாவட்ட விளையாட்டரங்கில் பதிவு செய்யலாம்.

 தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகின்றன. பொது மக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தினை புகுத்திடும் வண்ணம் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் – 2025, விருதுநகர் மாவட்டத்தில் வரும் 27.09.2025 அன்று காலை 6.30 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 4 கி.மீ தொலைவில்  உள்ள மொட்டைப்பத்தான் கண்மாய் இறக்கம் என்ற இடத்தில் நடத்தப்படவுள்ளது. மேலும், 2025-ஆம் ஆண்டிற்கான அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் 13 வயதுக்குட்பட்டவர்களில் மாணவர்களுக்கு 15 கி.மீ மற்றும் மாணவியர்களுக்கு 10 கி.மீ என்ற பிரிவிலும், 15 வயதுக்குட்பட்டவர்களில் மாணவர்களுக்கு 20 கி.மீ மற்றும் மாணவியர்களுக்கு 15 கி.மீ என்ற பிரிவிலும், 17 வயதுக்குட்பட்டவர்களில் மாணவர்களுக்கு 20 கி.மீ மற்றும் மாணவியர்களுக்கு 15 கி.மீ என்ற பிரிவிலும் நடத்தப்படவுள்ளன. அதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களைப் பெறுவோர்க்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பின்வரும் விவரப்படி வழங்கப்படவுள்ளன. முதல் பரிசு பெறும் ஒரு நபருக்கு ரூ.5,000/, இரண்டாம் பரிசு பெறும் ஒரு நபருக்கு ரூ.3,000/-  மூன்றாம் பரிசு பெறும் ஒரு நபருக்கு ரூ.2,000/- மற்றும் 4 முதல் 10வது இடங்களை வருபவர்களில் ஒரு நபருக்கு ரூ.250/- என பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்க தகுதியுள்ள பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் கார்டு மற்றும் வயதுச் சான்றிதழில் தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று 27.09.2025 அன்று காலை 06.00 மணிக்கு சமர்ப்பித்திடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள். வெற்றி மாணவ, மாணவிகள் தங்களது வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் கார்டு நகலினை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகையானது வங்கிப் பரிவர்த்தனை வழியாக அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். எனவே, மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள்-2025 ல் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்களது பெயர்களை மாவட்ட விளையாட்டரங்கில் 26.09.2025 அன்று வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்குள் பதிவு செய்திடுமாறும், மேலும், தொடர்புக்கு 04562 225947 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 26, 2025

குல்லூர் சந்தை ஊராட்சியில்  தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக்  கண்காட்சி.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குல்லூர் சந்தை ஊராட்சியில்  (25.09.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக்  கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Sep 25, 2025

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

 விருதுநகர் மாவட்டம், விருதுநகர் எஸ்.எப்.எஸ்.மெட்ரிகுலேசன் பள்ளியில்  (24.09.2025) பசுமை இயக்க தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வனத்துறை சார்பில், விருதுநகர் சமூக வனக்கோட்டம் மூலம் மரக்கன்றுகள் நடும் பணிகளை துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ.வ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள்  மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் தற்பொழுதுள்ள காடுகள் மற்றும் மரங்களின் புவியியல் பரப்பை 23.8%   லிருந்து  33% -ஆக அதிகரிக்கும் பொருட்டு,  தமிழ்நாடு பசுமை இயக்கம் என்ற மாபெரும் திட்டத்தினை, 24.09.2022 அன்று தொடங்கி வைத்தார். அதனடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்-24 ஆம் தேதியினை பசுமை இயக்க தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.          பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல், வன உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடவு செய்தல், விவசாய  நிலங்களில் மரங்கள் வளர்ப்தை ஊக்குவித்தல், கல்வி நிறுவனங்கள், கோவில்கள், மைதானங்கள், புனித ஸ்தலங்கள், தொழிற்சாலை நிறுவனங்கள், கண்மாய் பகுதிகள் மற்றும் உள்ளுர் சமூகங்களை மேம்படுத்தும் பொருட்டு வேலை வாய்ப்புகள் வழங்குதல் போன்றவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் விவசாயிகளின் வருவாயினை அதிகரிக்கவும் வழிவகைகள் செய்து வருகிறது.          அதன்படி, 2025-ஆம் ஆண்டிற்கான பசுமை இயக்க தினத்தை முன்னிட்டு, இந்தாண்டிற்கான கருப்பொருளாக “நாவல் மரத்தை கொண்டாடுவோம்” என்ற தலைப்பின் கீழ்  நாவல் மரங்கள் (சிசிஜியம் குமினி) தேர்வு செய்யப்பட்டு சுமார் 50 நாவல் மரக்கன்றுகள் விருதுநகர் எஸ்.எப்.எஸ்.மெட்ரிகுலேசன் பள்ளியில் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும், மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில்  சுமார் 1000 வகையான மரக்கன்றுகள் இன்று நடப்பட்டுள்ளன.இந்தாண்டில் வேளாண்துறை, வனத்துறை,  தோட்டக்கலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட துறைகளின் சார்பில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 இலட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.          எனவே இந்த நிகழ்ச்சி என்பது ஒரு அடையாளமான நிகழ்ச்சி. இதுபோன்று நிறைய பெருமளவு மரக்கன்றுகள் நடுவற்கு அனைவரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.மேலும், பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு “நாவல் மரத்தை கொண்டாடுவோம்” என்ற தலைப்பின் கீழ் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி அ.அம்சவேணி, வட்டாட்சியர், விருதுநகர் சமூக வனக் கோட்ட அலுவலர்கள், ஆலமரம் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 25, 2025

வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் ஏற்படுத்தப்படவுள்ள உழவர் நல சேவை மையத்தில், வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

உழவர் நல சேவை மையங்கள் :    தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடப்பு 2025-2026 ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது  மாண்புமிகு வேளாண்மை துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 4000 வேளாண் பட்டதாரிகளும் 600க்கும் மேற்பட்ட வேளாண் பட்டையதாரர்களும் வேளாண் கல்வியை நிறைவு செய்கின்றனர். இவர்களின் படிப்பறிவும் தொழில்நுட்ப திறனும் உழவர்களுக்கு உதவியாக இருந்து வேளாண்மை செழிக்கும் வகையில் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவில் 1000  உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.  இதற்காக 30% மானியமாக 3 லட்சம்  முதல் 6 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் உழவர் நல சேவை மையங்களுக்காக ரூபாய் 42 கோடி மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உழவர் நல சேவை மையத்தின் பணிகள் : இத்திட்டத்தில் இணைய விரும்பும் பயனாளிகள் தங்கள் பகுதி விவசாயிகளின் தேவைக்கேற்ப உழவர் நல சேவைகளை வழங்கலாம்.இந்த சேவை மையங்கள் ரூ. 10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைத்திட வேண்டும். இத்திட்டத்தில் இணையும் பயனாளிகள் வேளாண்மை தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் மற்றும் வேளாண் விற்பனை குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதோடு வேளாண் இடுபொருட்கள் விற்பனை, வேளாண் சார்ந்த சேவை மையங்கள், பண்ணை இயந்திர வாடகை மையம் மற்றும் விளை பொருட்களை மதிப்புக்கூட்டுதல் போன்ற சேவைகள் வழங்கும் விதத்தில் அமைத்திட வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் ஒரு மையமும் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு மையமும் அமைத்திட  வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன் பெற விண்ணப்பிக்கலாம் :                        தமிழ்நாடு அரசு சார்பில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து உற்பத்தியை உயர்த்தும் வகையில் முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இணையும் பயனாளிகள் உழவர் நல சேவை மையங்களை சிறப்பாக நடத்தும் போது வேளாண்மை உழவர் நல துறையில் வழங்கப்படும் அனைத்து உரிமங்களும் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையப் பயனாளிகளுக்கும் வழங்கப்படும்.                        எனவே, இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதிற்கு உட்பட்ட வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்த நபர்கள் வங்கிகளில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம். வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெற்ற பின்பு மானிய உதவி பெற https://www.tnagrisnet.tn.gov.in/kaviaDP/register என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தங்களது பகுதிக்குட்பட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 25, 2025

இந்திய தேர்தல் ஆணையத்திடம் கணக்குகளைத் தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகளை பதிவு நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள அரசியல் கட்சிகள், கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை மீறியுள்ள நிலையில் அக்கட்சிகளின் பெயர்களை பதிவு நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிபந்தனையின்படி, ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியும் தனது வரவு செலவுக் கணக்குளைத் தணிக்கை செய்து பெற்று, ஒவ்வொரு நிதியாண்டிற்கான தணிக்கை அறிக்கையை அடுத்த நிதியாண்டின் நவம்பர் மாதத்திற்குள்ளாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சட்டமன்றத் தேர்தல் எனில் தேர்தல் முடிவடைந்த 75 நாட்களுக்குள்ளும், நாடாளுமன்றத் தேர்தல் எனில் தேர்தல் முடிவடைந்த 90 தினங்களுக்குள்ளாகவும் தங்கள் கட்சியின் தேர்தல் செலவின விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு கணக்குகளைத் தாக்கல் செய்யாத 39 அரசியல் கட்சிகளை பதிவு நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரச்செல்லையாபுரம் கிராமத்தில் இயங்குவதாகப் பதிவு செய்துள்ள ‘தேச மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற அரசியல் கட்சியானது, இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும், எனவே இக்கட்சியை ஏன் பதிவுநீக்கம் செய்யக் கூடாது என சென்னை, தலைமைத் தேர்தல் அலுவலர் விசாரணை அறிவிப்பு அனுப்பியுள்ளார். இக்கட்சியானது, தமது தரப்பிலான விளக்கத்தை அளிக்க 08.10.2025 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 25, 2025

ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று, இதுவரை இணைய வழிபட்டா கிடைக்கப்பெறாதவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இணையவழி பட்டாக்களை பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம் மூவரை வென்றான் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த  41 குடும்பங்கள் கடந்த 24 வருடங்களுக்கு முன் ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று, இதுவரை இணைய வழிபட்டா கிடைக்கப்பெறாதவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள்  இணையவழி பட்டாக்களை பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார்.தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக  இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம்  என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது.இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின்  கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்கப்படுகிறது.  மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.அதன் ஒரு பகுதியாக வத்திராயிருப்பு வட்டம் மூவரை வென்றான் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 41 குடும்பங்கள் கடந்த 24 வருடங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று, இதுவரை இந்த இடங்களுக்கான இணைய வழிபட்டா இல்லை என்பதால், அதற்கான பட்டாக்களை வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து   41 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் அவர்கள் நேரில் சென்று வழங்கினார்.எங்களுக்கு இந்த இடத்திற்கான ஒப்படை ஆணைகள் 24 வருடங்களுக்கு முன்பாக வழங்கப்பட்டிருந்தாலும், அரசு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். தற்போது எங்கள் அனைவருக்கும் இணைய வழியிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே எங்களைத் தேடி வந்து வழங்கியது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது எனவும், இலவச பட்டா வழங்கியதன் மூலம் எங்களுக்கு இந்த இடத்திற்கான அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளதால், நாங்கள் எந்த வித தயக்கமின்றி எங்களுக்கான இடங்களில் வீடுகள் கட்டி குடியேற முடியும். எங்களுடைய பலவருட பயத்தையும், பதட்டத்தையும் எங்களுக்கு இந்த பட்டாக்கள் வழங்கியதன் மூலம் தமிழ்நாடு அரசு மகிழ்ச்சியாக மாற்றியிருக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.பாலாஜி, வட்டாட்சியர் மற்றும்  அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 25, 2025

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் (24.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியார் அணையின் சீரமைப்பு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பூங்கா சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு,  மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து, வத்திராயிருப்பு வட்டம், தம்பிபட்டி மற்றும் பெரியகுளம் கண்மாய்கள் தூர்வாரும் பணிகள், கரைகளை பலப்படுத்தக்கூடிய பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், வத்திராயிருப்பு வட்டம், ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் அரசு மானியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று வழங்கினார். மேலும், இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Sep 25, 2025

தமிழ்வளர்ச்சித்துறை சார்பாக 31.10.2025 அன்று நடைபெறும் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறமைகொண்ட தகுதியான மாணவர்கள் திருக்குறள் முற்றோதல் செய்யும் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.

மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் சீரிய கருத்துகளை இளம் தலைமுறையினரின் மனதில் பதியச் செய்து அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து முழுமையாக ஒப்பிக்கும் திறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறையால் குறள் பரிசாக ரூ.15000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்படவுள்ளது.அந்தவகையில்   2025-26 ஆம் ஆண்டிற்கான குறள்பரிசு வழங்கும் பொருட்டு தகுதியான மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகையாக ரூ.15000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பெறும்.விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ / www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பெற்றுக் கொள்ளலாம்.மேலும், விண்ணப்பங்களை 31.10.2025 க்குள் “தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம்” என்ற முகவரிக்கு நேரிலோ /அஞ்சல் மூலமாகவோ/ tamilvalar.vnr@tn.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 24, 2025

தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 9 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (23.9.2025) விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் 25.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 124.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 837 பயனாளிகளுக்கு 10.84 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகள்        இந்த நிகழ்ச்சியில்  தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 5.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருவில்லிப்புத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், நீர்வளத்துறையின் சார்பில் திருச்சுழி வட்டம், கீழ்செம்பூர் கிராமத்தில் 9.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிருதுமால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு, ராஜபாளையம் நகராட்சியில் உரம் தயாரிக்கும் தளத்தின் மேற்கு, கிழக்குப்பகுதிகளில் தலா 85.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள், 40 இலட்சம்  ரூபாய் மதிப்பீட்டில்  ஸ்ரீரெங்கப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலை, 2.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிங்கராஜகோட்டை பெரிய தெரு-பழையபாளையம் குமரன் தெரு- ஐவஹர் மைதானம் –மலையடிப்பட்டி- ஆர்.ஆர்.நகர் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை, 58.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவனந்தபுரம் 6, 5வது தெருக்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை, 31.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்ரீரெங்கபாளையம் சாலை – சங்கரன் கோவில் 7வது குறுக்குத் தெரு ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை, 22.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாரதியார் நகரில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை, 3.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டி.பி.மில்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலைகள், 33.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் த்ரௌபதியம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியில் 71.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிடுமினஸ் சாலை – அசோக்நகர் தெரு – பள்ளிவாசல் தெரு – அசோக் நகர் முதன்மை சாலை – கல்லணை ஓடைத் தெரு ஆகியவற்றில் சீரமைக்கப்பட்ட சாலைகள், விருதுநகர் நகராட்சியில் 35.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தங்கமை பெரியசாமி நாடார் மகளிர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சீரமைக்கப்பட்ட கலையரங்கம், 32.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே பீடர் ரோடு – கே.ஆர். கார்டன் குறுக்குத் தெரு 1வது காலனி – மதுரா கோட்ஸ் காலனி – கணேஷ்நகர் 2 ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட தார்சாலைகள், 58.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கணேஷ் நகர் 4,5,7 – லட்சுமி காலனி குறுக்குத் தெரு 1- கே.ஆர்.கார்டன் குறுக்குத் தெரு 3 – லட்சுமி காலனி குறுக்குத் தெரு ஆகியவற்றில் அமைக்கப்பட்ட தார்சாலைகள், 50.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கே.ஆர் கார்டன் குறுக்குத் தெரு1 – கணேஷ்நகர் 3 – குட்செட்ஸ் சாலை – பட்டேல் சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்ட தார் சாலைகள், 12.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் A.S.P.C.C உயர்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் என மொத்தம் 25.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.அடிக்கல் நாட்டப்படவுள்ள பணிகள்        இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், ஜோகில்பட்டி ஊராட்சி,  இராஜபாளையம் வட்டம், மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சி, அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி ஊராட்சி ஆகிய 3 இடங்களில் தலா 3 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறுவிளையாட்டு அரங்கம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.           மேலும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விருதுநகர் மாவட்டம், செட்டிக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 74.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று வகுப்பறை கட்டடம் கட்டும் பணி, நாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 59.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் மற்றும் ஒரு கழிப்பறை கட்டடம் கட்டும் பணி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் படந்தால் கிராமத்தில் 35.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடம் கட்டும் பணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் அருப்புக்கோட்டை தலைமை மருத்துவமனையில் 38.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் யோகா இயற்கை முறை பிரிவு கட்டடம் கட்டும் பணிகளுக்கும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் விருதுநகர் கிருஷ்ணாபுரம் சாலையை 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 கி.மீ நீளத்திற்கு பாவு தளத்துடன் கூடிய இருவழித்தடமாக மாற்றி அமைக்கும் பணிக்கும், சிவகாசி மாநகராட்சியில் 58.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6.7 கி.மீ நீளத்திற்கு இரண்டாம் கட்டமாக சுற்றுவட்டச்சாலை அமைக்கும் பணிக்கும் என மொத்தம் 124.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.நலத்திட்ட உதவிகள்இந்நிகழ்ச்சியில்  தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 5.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 400 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 219 நபர்களுக்கு ஆதிதிராவிடர் நல இலவச வீட்டுமனை இ – பட்டாக்களையும், கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும்,தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதா தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு 31.50 இலட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 16 நபர்களுக்கு 3.13 கோடி ரூபாய்க்கான வங்கி கடன் இணைப்புகளையும், சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அட்டைகளை 50 நபர்களுக்கும்,  புதிய குடும்ப அட்டை 20 நபர்களுக்கும்,மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 நபர்களுக்கு ஆவின் பாலகம் அமைக்க தலா ரூ.50,000 மும், 9.45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9 நபர்களுக்கு மின்கலத்தால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளையும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் 4 நபர்களுக்கு 1.75 இலட்சம் ரூபாய்க்கான மானிய உதவிகளையும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கு 27.58 இலட்சம் ரூபாய் மானிய உதவிகளையும், வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 4 நபர்களுக்கு 4.48 இலட்சம் ரூபாய் மானிய உதவிகளையும், புதிய தொழில் முனைவோர்கள் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு 4.40 இலட்சம் ரூபாய் மானிய உதவியையும் உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 837 பயனாளிகளுக்கு 10.84 கோடி ரூபாய்க்கான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு, பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், திரு.எஸ்.தங்கபாண்டியன், திரு.ஜி.அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., சீர்மரபினர் நலவாரிய துணைத் துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி, காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர், திரு.இரா.ராஜேந்திரன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Sep 23, 2025

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற , கட்டுமானத் தொழிலாளர்களுக்கான  திறன் பயிற்சியினை  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சூலக்கரை, அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில்  (22.09.2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற, கட்டுமானத் தொழிலாளர்களுக்கான 7 நாட்கள் திறன் பயிற்சியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,  I A S., அவர்கள் தொடங்கி வைத்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களால் 09.04.2025 அன்று கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தொழில் சார்ந்த நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்து அவர்களின் திறனை மேம்படுத்த, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, கட்டுமான வேலை, கம்பி வளைப்பு வேலை, தச்சு வேலை, மின்பணியாளர் வேலை, பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல்,  ஏசி மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட 11 கட்டுமான தொழில் இனங்களில், 7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, நாள் ஒன்றுக்கு ரூ.800  ஊதியத்துடன், 50,000 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூபாய் 45 கோடியே 21 இலட்சம் செலவில் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.                        அதனைத் தொடர்ந்து, அரசாணை வெளியிடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மேற்குறிப்பிட்ட 11 தொழிற்பிரிவுகளின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.மேலும், மஸ்தூர் தொழிற்பிரிவில்  தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள்  நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள்  11 தொழிற்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பயிற்சி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில்  11 தொழிற்பிரிவுகளில் பதிவு செய்துள்ள 1100 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான திறன் பயிற்சி வழங்கிட சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக கொத்தனார் தொழிற்பிரிவில்  விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு 7 நாட்கள் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.அதனைத் தொடர்ந்து வரும் வாரங்களில் இதர தொழிற்பிரிவு இனங்களில் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு வேலை இழப்பீட்டுத் தொகை நாள் ஒன்றிற்கு ரூ.800/- வழங்கப்படும். 7 நாட்களுக்கான வேலை இழப்பீட்டுத் தொகை ரூ. 5600/- பயிற்சி நிறைவடைந்த மறுநாள் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவடைந்தவுடன் பயிற்சியில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.                        எனவே, விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் மேற்கண்ட 12 பிரிவுகளில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் திறன் பயிற்சிக்கான விண்ணப்பத்தினை பெற்று நலவாரிய அட்டை நகல், வங்கி கணக்கு முதல் பக்கம் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கடவுச்சீட்டு புகைப்படத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) திரு.ஜெ.காளிதாஸ், விருதுநகர், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு.ஆ.செல்லக்கனி மற்றும் உதவி இயக்குநர்,  (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை)  திரு.மகேஸ் சுப்பிரமணியம் மற்றும் அரசு அலுவலர்கள, பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 62 63 64 65 66 67 68 ... 138 139

AD's