25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 30, 2024

34-வது விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்புமனு பரிசீலனையின் முடிவில் மொத்தம் 27 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டிற்குட்பட்ட மக்களவைத் தொகுதியின் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.04.2024- அன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, விருதுநகர் மக்களவை தொகுதியில் கடந்த மார்ச் 20 முதல் மார்ச் 27-ம் தேதி வரையிலும், மொத்தம் 41 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், மேற்படி அனைத்து வேட்பு மனுக்களும் 34-வது விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரால் 28.03.2024-ம் தேதி காலை 11.00 மணி முதல் தொடர்புடைய வேட்பாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட தேர்தல் மேற்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா,I A S., அவர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டது.மேற்படி பரிசீலனையின் முடிவில் மொத்தம் 27 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என 34-வது விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 29, 2024

“தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா” என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு பேருந்து

விருதுநகர் மாவட்ட ஆட்சியரகம் அலுவலக வளாகத்தில் (28.03.2024) மக்களவைத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி “தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா” என்ற தலைப்பில் இந்திய ஜனநாயக திருநாட்டின் தேர்தலின் வரலாற்றை எடுத்துக்கூறும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு பேருந்துகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்து, புகைப்படங்களை பார்வையிட்டார். மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் வாக்களிப்பதை வலியுறுத்தியும் நாள்தோறும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரகம் அலுவலக வளாகத்தில் வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் வாக்களிப்பதை வலியுறுத்தியும், இந்திய திருநாட்டின் பாராளுமன்றத் தேர்தல்கள் குறித்த வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியுடன் கூடிய விழிப்புணர்வு வாகனத்தை  மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி  வைத்தார்.இந்த விழிப்புணர்வு வாகனத்தில் “தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா” என்ற தலைப்பில் முதல் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களித்தது, நாடு முழுவதும் பெண் வாக்காளர்களுக்கு வாக்குபதிவு மையங்கள் ஒதுக்கப்பட்டது, வாக்களிக்கும் வயது 21-லிருந்து 18 வயதாக குறைத்தது, புகைப்பட வாக்காளர் அட்டைகளை அறிமுகப்படுத்தியது, உலகின் மிக உயரமான வாக்குசாவடி மையம் உள்ள இமாச்சல பிரதேசம், தாசிகேங் பகுதிகளில் வாக்கு பதிவு நடைபெறுவது, இந்திய தேர்தல் ஆணையம் எந்த ஒரு வாக்காளரும் விடுபட கூடாது என்பதை கொள்கையாக கொண்டு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வாக்கு பதிவை நடத்தும் விதங்கள் உள்ளிட்ட இந்திய ஜனநாயக தேர்தலின் வரலாற்றை எடுத்துக்கூறும் விதமாக புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள், பேருந்து நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் அனைத்து பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.மேலும், மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது, வாக்காளர் சரிபார்பு தணிக்கை முறையில் (VVPAT) வாக்களித்ததை எவ்வாறு உறுதி செய்வது, வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யும் வழிமுறைகள், வாக்காளர் பட்டியில் பெயரை தேடுதலுக்கான  வழிமுறைகள், வாக்களிப்பதற்கான அடையாள ஆவணம் மற்றும் அடையாள அட்டைகள், தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு வாக்காளர் தொடர்பான தகவல்கள் அடங்கிய வாக்காளர் கையேட்டினை மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், நேர்மையான, நியாயமான, வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கேட்டுக்கொண்டார்.

Mar 29, 2024

100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல் தலைமுறை வாக்காளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், செந்திகுமார நாடார் கல்லூரியில்  (28.03.2024) மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு, 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல் தலைமுறை வாக்காளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களால் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.ஜனநாயக நாட்டில் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் ஜனநாயக வழியில் தான் ஏற்படுத்த முடியும். ஜனநாயக வழி என்பது 18 வயது நிரம்பிய அனைவருக்குமான வாக்குரிமை மூலம் உங்களுக்கு தேவையான தலைவர்களை தேர்வு செய்து தேர்ந்தெடுப்பதற்கான ஒரு வாய்ப்பு இந்த  ஜனநாயகம் தருகிறது.நமது நாட்டில் சராசரியாக 70 முதல் 75 விழுக்காடு தான் கடந்த சில தேர்தல்களில் வாக்குப்பதிவு நடைபெற்று இருக்கிறது. நான்கில் ஒரு நபர் வாக்கு அளிப்பதில்லை. நமக்கான ஒரே வாய்ப்பு ஜனநாயக பொறுப்பு என்பது வாக்கை செலுத்துவதுதான்.எந்த ஒரு காரணங்களாலும் நான் ஓட்டு போட மாட்டேன் என்று கூறுவது சரியானதாக இருக்க முடியாது. ஜனநாயகத்தின் உடைய மிக முக்கியமான வாய்ப்பு நமக்கு வாக்குரிமை தான். குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்கள், முதல் முறை வாக்காளர்கள் முழுமையாக தங்களது வாக்கு உரிமையை நிறைவேற்ற வேண்டும். ஜனநாயகத்தில் நாம் பங்களிப்பதற்கான உரிமையும், பொறுப்பும் அளிப்பது தேர்தல்.வேட்பாளர்களுடைய விவரங்களை அறிந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கலின் போது படிவம் 26 தாக்கல் செய்து விடுவார்கள். அவருடைய கல்வி தகுதி, சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை இணையதளம்; மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றோமோ அவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.வேட்பாளர்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு வேட்பாளர்களைப் பற்றி தெரிந்து கொண்டு நீங்கள் வாக்களிக்க வேண்டும். நம்மை சுற்றி இருக்கக்கூடிய அடிப்படையான அரசியலமைப்பு ஏற்படக்கூடிய அரசாங்கம்,நம்மை சுற்றி இருக்கக்கூடிய நமது அரசியலமைப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்படக்கூடிய அரசாங்கங்கள் எந்த விதமான கொள்கையை முன்னெடுக்கின்றது, அந்த கொள்கைகள் எப்படி திட்டங்களாக மாறுகிறது, அந்த திட்டங்கள் எப்படி களத்தில் செயல்படுத்தப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற ஜனநாயகத்தினுடைய தொடர்ச்சியான செயல்பாடுகள் நம் அன்றாட வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயணிக்கின்றன.இன்றைய சூழ்நிலையில், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நிறைய தகவல்கள் வருகின்றன. அந்த தகவல்களில் எது சரி என்பதை நாம் சற்று தேர்ந்த பார்வையோடு பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். நீங்கள் தெளிவான பார்வையுடன் சற்று முயற்சி செய்தால் தெளிவான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.மாணவர்கள் முதலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் யாருக்கு எதற்காக வாக்களிக்கிறோம் என்று நன்கு அறிந்து வாக்களிக்க வேண்டும். பணம், பொருள் எதுவும் பெறாமல் யார் தகுதியானவர்கள் என்று அறிந்து வாக்களிக்க வேண்டும்.வாக்களிப்பதன் அவசியத்தை தங்களது பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும்  இடங்களில் உள்ளவர்களிடம் எடுத்துக்கூறி, தகுதியான நேர்மையான நபர்களுக்கு வாக்களிக்க செய்து ஒரு வலுவான ஜனநாயகம் உருவாவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும்  அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 29, 2024

பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (28.03.2024) மக்களவை பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்டதேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Mar 29, 2024

தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் அவர்களிடம் தெரிவிக்கலாம்

19.04.2024 அன்று நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத் தேர்தல் பணிகள் எந்தவித சந்தேகங்களுக்கும் இடமின்றி நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக, இந்திய தேர்தல் ஆணையம் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக வெளி மாநிலங்களைச் சார்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் மற்றும் செலவின பார்வையாளராக இந்திய வருவாய் பணி அலுவலரை நியமனம் செய்து ஆணையிட்டுள்ளது.மேற்படி, விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக திரு.நீலம் நம்தேவ் எக்கா,இ.ஆ.ப., (தொடர்பு எண்: 9489985882) அவர்களும் மற்றும் செலவின பார்வையாளராக திரு.ரதோஷியாம் ஜஜீ, இ.வ.ப., (தொடர்பு எண்: 9489985880) அவர்களையும் நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.மேலும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு திரு.எஸ்.ஸ்ரீஜித், இ.கா.ப., (தொடர்பு எண்: 9489985881) அவர்களை ஒருங்கிணைந்த காவல்துறை பார்வையாளராக நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.ஆதலால் பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் பொது பார்வையாளர் அவர்களுக்கு  9489985882 என்ற கைபேசி எண்ணில் (அல்லது மின்னஞ்சல் முகவரி generalobs2024.dpi@gmail.com) தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் பொது பார்வையாளரது தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ராஜ்குமார், வட்டாட்சியர், கைபேசி எண்: 7010795006 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.  மேலும், தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து விருதுநகர் பொதுப்பணித்துறை பயணியர் மாளிகையில் தேர்தல் பொது பார்வையாளர் அவர்களிடம் காலை 11.00 மணி முதல் 12.00 வரை நேரில் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 28, 2024

“தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா” வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் (27.03.2024) மக்களவைத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி “தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா” என்ற தலைப்பில் அரசு அலுவலர்கள், தூய்மைக் காவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தொடங்கி  வைத்து, வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் வாக்களிப்பதை வலியுறுத்தியும் நாள்தோறும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி,  விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில்  வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் வாக்களிப்பதை வலியுறுத்தியும் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தொடங்கி  வைத்தார்.பின்னர், அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான துண்டுப்பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண் வாக்காளர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து,  வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கியும், விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகம் வரை சென்று  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், நேர்மையான, நியாயமான, வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்  என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கேட்டுக்கொண்டார்.

Mar 27, 2024

10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வு

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையத்தினை(26.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Mar 27, 2024

அரசு பொதுத்தேர்வு -2024 நடைபெறும் மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை ஆய்வு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பாலவநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் (26.03.2024) அரசு பொதுத்தேர்வு-2024 நடைபெற்று வரும் மையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள்; நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.2023-2024 ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு 26.03.2024 அன்று தொடங்கி 08.04.2024 வரை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 358 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 114 தேர்வு மையங்களில் 10,908 மாணவர்களும், 11,097 மாணவியர்களும் என மொத்தம் 22,005 பள்ளி மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.இதில் 277 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இம்மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரைத் தளத்தில்  தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதார், டிஸ்லெக்சியா மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கியும், சொல்வதை  எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.மேற்கண்ட 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து 27 வழித்தட அலுவலர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புடன் 27 வழித்தடங்கள் மூலமாக அனைத்து இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் (SSLC) பொதுத் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் வழங்கப்படுகிறது.இத்தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களில் 119 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 119 துறை அலுவலர்கள், 1809 அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுதுபவர்களாக 260 ஆசிரியர்களும், நியமனம் செய்யப்பட்டு தேர்வு பணி மேற்கொண்டு வருகின்றனர்.பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களைக் கொண்டு 6 சிறப்பு பறக்கும் படை குழுவில் 12 உறுப்பினர்கள் மற்றும் தேர்வு மையங்களில் 157 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆய்வு அலுவலர், ஊர்காவல் படைத்தலைவர் மற்றும் பிறத்துறை அலுவலர்களைக் கொண்டு  மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் திடீர் ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.2023-2024 ஆம் கல்வியாண்டில் இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் (SSLC) தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் முழுதேர்ச்சி பெற வேண்டும் எனவும், அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் எனவும் மாணவ செல்வங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Mar 27, 2024

“தவறாமல் 100 சதவீதம் வாக்களிப்போம் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பூங்கா

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாலவநத்தம் ஊராட்சியில்  (26.03.2024) மக்களவை பொது தேர்தல்-2024 நடைபெற்று வருவதை முன்னிட்டு, “தவறாமல் 100 சதவீதம் வாக்களிப்போம் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பூங்காவில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக முறை வாக்களித்த மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், மலைவாழ் மக்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலவநத்தம் ஊராட்சியில் “தவறாமல் 100 சதவீதம் வாக்களிப்போம் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தொடங்கி  வைத்தார்.இந்த விழிப்புணர்வு பூங்காவில் சுமார் 400-க்கும் மேற்பட்ட தேக்கு, மகாகனி, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள், மருத்துவச் செடிகள், பூச்செடிகள், தோட்டக்கலை பயிர்கள்  ஆகியவை நடப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகளை கம்பி வேலிகள்; அமைத்து பாதுகாக்கவும், போர்வெல் மூலம் மரக்கன்றுகளுக்கு தேவையான தண்ணீர் வசதியை பூர்த்தி செய்யவும், பூங்காவினை பராமரிக்கவும் ஊராட்சித்;துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.மேலும், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும், நேர்மையான, நியாயமான முறையில் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் வரையப்பட்டிருந்த விழிப்புணர்வு கோலங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திருமதி விசாலாட்சி, தோட்டக்கலைத்துறை  துணை இயக்குநர் திருமதி வாசுகி,  உட்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 27, 2024

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த தகுதியான மாணாக்கர்கள் இணையவழி மருத்துவமனை நிர்வாக பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறுதிறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ மூலமாக டி.சி.எஸ்அயன் ((TCS iON)  மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் (Apollo Med Skills)   நிறுவனம் இணைந்து இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் முடித்த மாணாக்கர்கள் மற்றும் நர்சிங்கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 6 வாரகாலம் இணையவழி மருத்துவமனை நிர்வாக பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.29,500 ஆகும். இப்பயிற்சியானது இரண்டு முறைகளில் நடைபெறும். முதல் 2 வாரங்களில் இணையவழி கற்றல் முறையிலும், அடுத்த 4 வாரங்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி, காரைக்குடி, வேலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.  பயிற்சி காலங்களில் மாணாக்கர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகையும், இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அப்பல்லோ மருத்துவமணைகளிலும் அதனுடன் தொடர்புடைய முன்னனி மருத்துவ மணைகளிலும் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.மாணாக்கர்களின் திறமைக்கேற்றவாறு வெளிநாடுகளில் உள்ள மருத்துவமணைகளிலும் சென்று பணிபுரிய வாய்ப்புகள் வழங்கப்படும்.இப்பயிற்சியினை பெற 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் முடித்த மாணாக்கர்கள்அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்துவரும் 20 முதல் 28 வயது வரையுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு முறையானது இணையதளம்’வழியாக நடைபெறும். இத்தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறும் மாணாக்கர்கள் FINE(Finishing Skills for Nursing Excellence)  எனப்படும் செவிலியர் பயிற்சியினை பெறுவார்கள். இப்பயிற்சியினை www.tahdco.com  என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணமும் வழங்கப்படும். எனவே உரிய பயனாளிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 2 ... 61 62 63 64 65 66 67 68 69 70

AD's



More News