25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Nov 26, 2025

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாரட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டு.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில்,  24.11.2025 அன்று  நடைபெற்ற புத்தகத்திருவிழா – 2025 ன் இறுதி நாளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பாரட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் வழங்கி பாராட்டினார்.  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, நவம்பர் 4ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், விருதுநகர் மாவட்ட வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்வதில் எழும் சந்தேகங்களுக்கு (சட்டமன்றத் தொகுதி, வரிசை எண், பாகம் எண்) அதனை உடனடியாக நிவர்த்தி செய்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்ப பெற்று, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றும் பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடிமையங்களில் 19-11-2025 புதன் கிழமை மற்றும் 20.11.2025 வியாழக் கிழமை ஆகிய 2 தினங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, வாக்காளர்கள் பெருமளவில் இம்முகாம்களில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த படிவங்களைப் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கினர். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய இயலாத முதியோர் இல்லங்களில் வசிக்கும் வாக்காளர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கான சிறப்பு உதவிமையங்கள் 23.11.2025 அன்று ஏற்படுத்தப்பட்டு வாக்காளர் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டன. இதுவரை, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 7-சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 16,26,485 வாக்காளர்களில் 15,95,165 (98.07%)    வாக்காளர்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, இவ்வாக்காளர் படிவங்களில் 8,70,829 (53.54%)  கணக்கெடுப்புப் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.மேலும், விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 1,901 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கியும்,பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.எனவே, வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கியும், வாக்காளர்களுக்கு எழும் சந்தேகங்களை உடனடியாக நிவர்த்தி செய்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்ப பெற்று, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றும் பணிகளில் ஈடுபட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பாரட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், இ.ஆ.ப., துணை இயக்குநர்( திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ. வ.ப., சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்(நில எடுப்பு) திருமதி சசிகலா உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Nov 26, 2025

மாவட்ட காசநோய் மையத்தில், 11 மாதத்திற்கான ஒப்பந்த அடிப்படையிலான (இன சுழற்சி முறையில்) தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம், மாவட்ட காசநோய் மையத்தின் கீழ் செயல்படும் கீழ்க்கண்ட தற்காலிக பணியிடங்களுக்கு 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான (இன சுழற்சி முறையில்) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.காசநோய் சுகாதாரப் பார்வையாளர் (TB Health Visitor)-01, காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அடிப்படைத் தகுதிகளாக பட்டப்படிப்பு (அல்லது) மேல்நிலைக் கல்வி தேர்ச்சி மற்றும் பல்நோக்கு சுகாதாரம், (MPW) / மகளிர் சுகாதாரப் பார்வையாளர் (LHV / மகப்பேறு துணை செவிலியராக (ANM) பணியாற்றிய அனுபவம் /சுகாதார பணியில் பணியாற்றிய அனுபவம் / சுகாதார கல்வி / ஆலோசகர் படிப்பு (அல்லது) காசநோய் சுகாதாரப் பார்வையாளர், பயிற்சியில் தேர்ச்சி மற்றும்  கணிணி படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதனைத் தவிர, பல்நோக்கு சுகாதார பணியாளர் (MPHW)  .அங்கீகரிக்கப்பட்ட துப்புரவு ஆய்வாளர் பயிற்சி (SI) என கூடுதல் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். மேலும், இப்பதவிக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் பொது பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.  காசநோய் ஆய்வக நுட்புனர் / நுண்ணோக்கி சளி பரிசோதகர் (TB Laboratary Technician) -01, காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அடிப்படைத் தகுதிகளாக மேல்நிலைக் கல்வி தேர்ச்சி மற்றும்  மருத்துவ ஆய்வக நுட்புனர்க்கான சான்றிதழ் அல்லது பட்டயப்படிப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பு பெற்றிருக்க வேண்டும். மேலும், இதனைத் தவிர, திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம் / சளிபரிசோதனை கூடத்தில் ஒரு வருடம்  பணியாற்றிய அனுபவம் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், இப்பதவிக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.விண்ணப்பத்தாரர்கள், தங்கள் தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் இருசக்கரவாகன ஒட்டுநருக்கான நிரந்தர உரிமம் ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகல் (Attested Xeox Copy) மற்றும் ரூ.5-க்கானஅஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையுடன் இணைத்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  விண்ணப்பங்கள் அனுப்பப்படும் உறையின் மேல் பதவியின் பெயரைக் குறிப்பிட்டு“ ஒப்பந்த அடிப்படை பணியிடத்திற்கான விண்ணப்பம்” என்று குறிப்பிடப்பட வேண்டும்.மேலும், மாநில சுகாதாரச் சங்கம் – NTEP  ன் வழிகாட்டுதல்படி தொகுப்பூதியம் வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் தேர்வு / நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.விண்ணப்பங்களை 10.12.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் தேர்வுக் குழு, துணை இயக்குநர் மருத்துவபணிகள் (காசநோய்) சமுதாயகூடம், F.F.ரோடு, மணி நகரம், மாவட்ட காசநோய் மையம், விருதுநகர்  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு  மாவட்ட ஆட்சித்தவைர் மரு.என்.ஓ.சுகபுத்ராI A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 25, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,IAS,., அவர்கள் தலைமையில் (24.11.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்,  மாற்றுத்திறனாளி அட்டை வேண்டி விண்ணப்பித்தவருக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையினையும், பின்பு, மாவட்ட வழங்கல் துறையின் சார்பில், மாவட்டத்தில் உள்ள 180 பகுதி நேர நியாய விலைக்கடைகளுக்கு உணவுப் பொருள் வழங்கல் துறையின் மூலம் நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு, இரண்டாம் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு விற்பனை முனைய கருவியில் கைரேகைப் பதிவு மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட்ட புதிய மின்னணு விற்பனை முனைய கருவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்  பின்னர், வெண்மை புரட்சியின் தந்தை என போற்றப்படும் மருத்துவர் வர்கீஸ் குரியன் அவர்களது பிறந்த தினமான நவம்பர்-26 னை தேசிய பால் தினமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பாக துணைப்பதிவாளர் (பால்வளம்) கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வி.ஆர்.டி.1000 விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு அதிக பால் உற்பத்தி வழங்கிய மூன்று நபர்களுக்கும், சிறந்த மாடு பராமரிப்பிற்காக மூன்று நபர்களுக்கும், தரமான பால் உற்பத்தியை வழங்கியமைக்காக மூன்று நபர்களுக்கும்,  பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில்,  சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) திருமதி க.சசிகலா, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.செந்தில்வேல், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 24, 2025

விருதுநகர் முதலீட்டாளர்கள் சந்திப்பு - 2025 (Virudhunagar Investor Meet 2025)"

  விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் விருதுநகர் 4 ஆவது புத்தகத்திருவிழாவில் புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை வலுப்படுத்தும் நோக்கத்தோடு, விருதுநகர் மாவட்டத்தின் முன்னணி தொழில்முனைவோர்கள் மூலம் புதிய தொழில்முனைவோருக்கு வழிகாட்டி முதலீடு செய்யும் சூழலை மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட "விருதுநகர் முதலீட்டாளர்கள் சந்திப்பு - 2025 (Virudhunagar Investor Meet 2025)"   சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்(General Partner, July Ventures) திரு.எம்.வி.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் (21.11.2025) தொடங்கி வைத்தார்.  தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ((StartupTN) என்பது அனைத்து புத்தாக்க தொழில் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை மேம்படுத்துவதற்கு, உலக சந்தைக்கு தேவையான புதிய தொழில் முயற்சிகளுக்கு தகுந்த வழிகாட்டுதல் வழங்குதல், நிதி திரட்டுவதற்கான வழிமுறையை உருவாக்கி கொடுத்தல், தொழில் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல்,  தொடக்க நிலையில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு தொழில் முனைவுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மேற்கொள்ளும் வகையில் தொடங்கப்பட்டு, இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  விருதுநகர் மாவட்டத்தில் ஸ்டார்ட் அப்பின் முயற்சியை எடுக்கவும், நகர்ப்புறங்களில் மட்டும் இல்லாமல் அனைத்து சிறிய கிராமங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது மூலம் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையிலும், தற்போது செய்யக் கூடிய தொழில்களுடன் புதிய தொழில்களும் வரவேண்டும் என்ற நோக்கிலும் இந்த முதலீட்டாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்டத்தின் தொழில்வளர்ச்சிக்கான கலந்துரையாடல், விருதுநகரின் Startup நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல், புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வது எப்படி, அதன் மூலம் கிடைக்கப்பெறும் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி, இளம் தொழில்முனைவோர்க்கு வழிகாட்டுதல் என விருதுநகரின் தொழில்முனைவு சூழலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது பற்றி அனைத்து தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. மேலும், புதிதாக தொழிலை தொடங்கக் கூடியவர்கள், ஏற்கனவே இருக்கக்கூடிய தொழிலை விரிவு செய்யக்கூடியவர்களுக்கு தொழில் சார்ந்த அரசின் மானியங்கள், விரைவான ஒற்றைச்சாளர அனுமதிகள் மற்றும் சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டை மனைகள் உள்ளிட்டவை குறைத்து எடுத்துரைக்கப்பட்டன.இந்த நிகழ்வில் சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் உள்ள முதலீடு சார்ந்த முன்னணி முதலீட்டாளர்களும் கலந்து கொண்டு, அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இந்நிகழ்வில் 80 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், 60 க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள், 40 புத்தாக்க சிந்தனையாளர்கள் கலந்து கொண்டு தங்களது புத்தாக்க தொழில்நுட்பங்களை முதலீட்டாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு காட்சிப்படுத்தினர். இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன்,சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், இ.ஆ.ப., அவர்கள், விருதுநகர் மாவட்டம் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Nov 24, 2025

“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், நடைபெற்ற 15-ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பந்தல்குடி ஊராட்சி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  (22.11.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில், “நலம் காக்கும் ஸ்டாலின்”  திட்டத்தின் கீழ்,  நடைபெற்ற 15-ஆவது  பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,.  அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு அரசு சாமானிய மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் போன்ற பல்வேறு  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்த வரிசையில் தமிழ்நாடு அரசு மற்றொரு மருத்துவ சேவை சார்ந்த திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.மாநிலம் முழுவதும் 1,256 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்களை நடத்தி, அனைத்து வயதினருக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும் அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மூலம் நோய்களை கண்டறிந்து, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடியாக இலவச சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கியத்தையும், உயிரையும் காப்பாற்றுவதே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.பொதுவாகதனியார்மருத்துவமனையில்முழுஉடல்பரிசோதனைகள்செய்யரூ.15,000வரைசெலவாகிறது.ஆனால், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் மக்களை தேடிச் சென்று அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நோய் கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகளும், மருந்துகளும் கூட இலவசமாகவே வழங்கப்படுகின்றது.இதனால், கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்க்க வசதி இல்லாத ஏழை, எளிய மக்கள் பெரியளவில் பயனடைந்து வருகின்றனர். போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு முகாமின் போது பொதுமக்கள் எளிதாக புரிந்துக் கொள்ளும் வகையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவு நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், இம்முகாமில்  குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 14 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 15 ஆவது முறையாக அருப்புக்கோட்டை வட்டம், பந்தல்குடி ஊராட்சியில் நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள்  துவக்கி வைத்து பார்வையிட்டார்.மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டைகள் மற்றும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டைகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டைகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் உள்ளிடவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 22, 2025

விருதுநகர் மண்டலத்தில் 10 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 10 நகர்  பேருந்துகளின் சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்  (21.11.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு பேருந்துகளின் பராமரிப்பினை மேம்படுத்திடவும், பேருந்து வழித்தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதியினை மேம்படுத்திடவும், போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பேருந்துகளை ஒதுக்கீடு செய்யவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகின்றது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் பேருந்து வழித்தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக தற்போது 9 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக தற்போது 10 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் - ஒண்டிப்புலி வழித்தடம், விருதுநகர் – பேரையூர் வழித்தடம், சாத்தூர் - நாருகாபுரம் வழித்தடம், சாத்தூர் - திருத்தங்கல் வழித்தடம், அருப்புக்கோட்டை - உடையநாதபுரம் வழித்தடம், அருப்புக்கோட்டை – பி.தொட்டியான்குளம்  வழித்தடம், திருவில்லிபுத்தூர் – இராஜபாளையம் - திருவில்லிபுத்தூர் - சிவகாசி வழித்தடம், இராஜபாளையம் – திருவில்லிபுத்தூர் – கான்சாபுரம்  வழித்தடம், இராஜபாளையம் – திருவேங்கடம் - இராஜபாளையம் – மாங்குடி வழித்தடம், காரியாபட்டி – திருவளநல்லூர் – காரியாபட்டி - அருப்புக்கோட்டை வழித்தடம் ஆகிய 10 வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளின் சேவைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.  இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மண்டல பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்) திரு.கோபாலகிருஷ்ணன், துணை இயக்குநர்(போக்குவரத்து கழகம்) திரு.தங்கவேலு, விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், உதவி மேலாளர்(வணிகம்) திரு.நாகராஜ், உதவி பொறியாளர் திரு.தமிழ்செல்வன், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துக்கழக அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 22, 2025

உலக நவீன வாசக்டமி இரு வார விழிப்புணர்வு முகாம் – 2025 விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (21.11.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, விருதுநகர் மாவட்ட குடும்பநல செயலகத்தின் சார்பாக உலக வாசக்டமி இருவார விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.தமிழ்நாட்டில் குடும்பநலத் திட்டம் 1956 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தாய் சேய் நல விகிதத்தை மேம்படுத்துவதும், பிறப்பு விகிதத்தை குறைப்பதும் முக்கிய குறிக்கோள் ஆகும்.குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு  முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.  குடும்பநலத் திட்டம் மக்கள் திட்டமாக செயல்படுவதால்  சமுதாயத்தின் ஒத்துழைப்புடன் மக்கள் தாமே விரும்பி ஏற்றுக்கொள்ளும் திட்டமாக  விளங்குகிறது.                      தமிழ்நாட்டில் பொதுவாக பெண்களே குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது. ஆண்களும் எளிய பாதுகாப்பான முறையில்  கருத்தடை செய்து கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஆண்களுக்கு ஏற்படும் பொருட்டு வருடந்தோறும் நவம்பர் 21முதல்27வரைவிழிப்புணர்வுவாரமாகவும்நவம்பர்28முதல்டிசம்பர்04வரைசேவைவழங்கும்வாரமாகவும்கடைபிடிக்கப்படுகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் ஆண்களுக்கான தழும்பில்லா நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை இருவார விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.  இதன் பொருட்டு விருதுநகர் மாவட்ட குடும்பநல செயலகத்தின் சார்பாக உலக வாசக்டமி இருவார விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த வாகனம் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று ஆண்களுக்கான தழும்பில்லா நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.ஆண்களுக்கான நவீன தழும்பில்லா குடும்பநல கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக் கொள்ளும் பயனாளிகளுக்கு அரசு உதவித்தொகை ரூ.1100/- மற்றும் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3900/- சேர்த்து மொத்த ஊக்கத்தொகை ரூ.5000/- வழங்கப்படும்.ஆண்களுக்கான தழும்பில்லா நிரந்தர கருத்தடை சிகிச்சை முறை சேவையை தகுதி வாய்ந்த ஆண்கள் எளிதில் பெறும் வகையில் வருகின்ற 27.11.2025 வியாழக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில்  சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை மிக மிக எளிமையானது. மிகவும் பாதுகாப்பானது. பயப்பட தேவையில்லை. மயக்க மருந்து கொடுப்பதில்லை.  5 நிமிடங்களில் செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை கிடையாது. தையல் போடுவது கிடையாது. மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை. சிகிச்சை முடிந்த உடன் வீடு திரும்பலாம். குழந்தை பிறப்பிற்கு மட்டுமே தடை. இல்லற இன்பத்திற்கு எவ்வித தடையும் கிடையாது. எப்போதும் போல் இல்லற உறவு கொள்ளலாம்.           எனவே, அலுவலர்கள், பணியாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள், விவசாய வேலை செய்வோர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வெடி மருந்து கம்பெனி மற்றும் பிரிண்டிங் பிரஸ் போன்ற கடினமான வேலை செய்வோர்கள் கூட கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளலாம். கருத்தடை சிகிச்சைக்கு பின்னரும் முன்னர் செய்த அதே வேலையினை எவ்வித களைப்பும் இன்றி எப்போதும் போல இயல்பாக செய்ய முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்  துணை இயக்குநர்(குடும்பநலம்) (பொ) மரு.இராஜன், மாவட்ட குடும்ப நல அலுவலர்கள், மருத்துவப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 22, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம் வெள்ளுர் அரசு உயர்நிலைப்பள்ளியில் (21.11.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள்(SIR) தொடர்பாக, வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவிசெய்வதற்காகவும்,படிவங்களைநிரப்புவதற்கும்,நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடிமையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என் ஓ.சுகபுத்ரா , I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Nov 22, 2025

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் வெற்றிபெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல்.

விருதுநகர் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தினால்  உதவியாளர் பதவிகளுக்கான நேரடித் தேர்வு அறிவிக்கை 06.08.2025-இல் வெளியிடப்பட்டது.  இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 11.10.2025  அன்று நடைபெற்றது.இத்தேர்விற்கான நேர்முகத்தேர்வு 26.11.2025 முதல் நடைபெற இருக்கிறது.  இத்தேர்வில்  வெற்றிபெற்றோர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.  இம்மாதிரி நேர்காணலில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு நேர்காணல் குறித்த விழிப்புணர்வு மற்றும் தேர்ச்சி பெறுவதற்கான நுணுக்கங்கள் குறித்த ஆலோசனைகள் துறை வல்லுநர்களை கொண்டு 24.11.2025 திங்கள் அன்று காலை 10.30 மணியளவில் வழங்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறும் இம்மாதிரி இலவச நேர்காணலினை பயன்படுத்தி கொள்ளலாம்.   இதில் பங்கேற்க விரும்புவோர் studycirclevnr@gmail.com    என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 93601-71161 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக வருகைபுரிந்து பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ர,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 21, 2025

மாவட்டத்தில் 15,82,225 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் தொடர்பாக இதுவரை கணக்கெடுப்புப் படிவங்களைப் பெறாத வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (20.11.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 01.01.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கியும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெற்றும் வருகின்றனர். இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 15,82,225 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் 19.11.2025 மற்றும் 20.11.2025 ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, விருதுநகர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாக்குச்சாவடி மையங்களான மீசலூர் த.அ.சீனிவாசா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் செவல்பட்டி தாமு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.        

1 2 ... 59 60 61 62 63 64 65 ... 140 141

AD's



More News