விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்ட செம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் (அருப்புக்கோட்டை வட்டாரம்) மற்றும் இலுப்பையூர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ( நரிக்குடி வட்டாரம்) மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான கீழ்கண்ட பணியாளர்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. மருந்தாளுநர்களுக்கு 2 பணியிடங்களும், ஆய்வக நுட்புநர்நிலை-3 (Lab Technician Gr-III) பணியாளர்களுக்கு 8 பணியிடங்களும், செவிலியர்களுக்கு, (RCH,NCD,RBSK,MMU,NBSU) 60 பணியிடங்களும், பல்நோக்கு சுகாதாரபணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை- II (MPHW HI Gr-II) பணியாளர்களுக்கு பணியிடங்களும், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு (Multi Purpose Hospital Worker) பணியிடங்களும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்படிவம் ஆகியவை குறித்த விவரத்தினை இம்மாவட்டத்தின் http://virudhunagar.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 23.07.2025 அன்று முதல் 07.08.2025 அன்று மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் டால்மியா பாரத் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் (Home Health Aide) பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும், 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்புடன் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.15,000/- முதல் ரூ.17000/- வரை கிடைக்க வழி வகை செய்யப்படும். .குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி பெற தாட்கோ இணைய தளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு இரண்டு மாதம். மேலும் , சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி, உணவுக்கான செலவினம் நிறுவனம் மூலமாக வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 2025-26 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் ‘வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட பொது சேகரிப்பு மையங்களில் வேளாண் விளைபொருட்கள் வர்த்தகம்” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதன்படி, அறுவடை காலங்களில் அதிக வரத்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வரத்தினை ஒழுங்குபடுத்திடவும், வேளாண் விளைபொருட்களைளள எளிதில் சந்தைப்படுத்திட ஏதுவாகவும், ஒழுங்குமுறை விறபனைக்கூடத்தின் நீட்சியாக, வட்டாரம் தோறும் பொது சேகரிப்பு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு வர்த்தகம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் 7 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உள்ளன. இவற்றின் மூலம் அனைத்து வகையான வேளாண் விளைபொருட்கள் மறைமுக ஏலம் மற்றும் தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ-நாம்) மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.தற்போது 11 வட்டாரத்திற்கும் தலா ஒரு பொது சேகரிப்பு மையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை வட்டாரத்திற்கு வேலாயுதபுரம், விருதுநகர் வட்டாரத்திற்கு மீசலூர், காரியாபட்டி வட்டாரத்திற்கு அயன் அல்லிகுளம், திருச்சுழி வட்டாரத்திற்கு முத்துராமலிங்கபுரம், நரிக்குடி வட்டாரத்திற்கு உலக்குடி, இராஜபாளையம் வட்டாரத்திற்கு சேத்தூர், திருவில்லிபுத்தூர் வட்டாரத்திற்கு அச்சம்தவிழ்த்தான், வத்திராயிருப்பு வட்டாரத்திற்கு குன்னூர், சிவகாசி வட்டாரத்திற்கு புதுக்கோட்டை, வெம்பக்கோட்டை வட்டாரத்திற்கு எம்.துரைச்சாமிபுரம், சாத்தூர் வட்டாரத்திற்கு பெரிய கொல்லப்பட்டி ஆகிய கிராமங்களில் பொது சேகரிப்பு மையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.பொது சேகரிப்பு மையங்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் நீட்சியாக கருதி, வேளாண் பெருமக்களையும் வியாபாரிகளையும் இணைத்து வணிகம் மேற்கொள்ளும் மையமாக கருதப்படுகிறது.பொது சேகரிப்பு மையங்களில் வைத்து விவசாயிகள் விற்பனை செய்வதால் கால விரயம் மற்றும் போக்குவரத்து செலவு குறைகிறது.மேலும் மற்ற மாவட்டங்களிலிருந்து வணிகர்கள் விற்பனையில் பங்குபெறுவதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். பொது சேகரிப்பு மையங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விலை நிலவரங்களை கொண்டு விவசாயிகள் தங்களது விலைபொருட்களின் தரத்திற்கேற்ப விற்பனை விலையை அறிந்து கொள்ள முடிகிறது.வேளாண் விளைபொருட்களை பொது சேகரிப்பு மையம் மூலம் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அல்லது வட்டார அளவில் பணிபுரியும் உதவி வேளாண்மை அலுவலர்கள் (வேளாண் வணிகம்) ஆகியோரை தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறுவடைக்கு பிந்திய வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட நீண்ட கால கடன் வசதி திட்டமாக வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளில் (2020-2021 முதல் 2032 - 2033 வரை) வங்கிகள் மூலம் பிணையமற்ற குறைந்த வட்டியிலான கடன் வழங்கப்படுகிறது.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 2025-2026 நிதியாண்டுக்கு ரூ.26 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனாளிக்கு அதிக பட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கிறது 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3மூ வட்டிக்குறைப்பு (Interest Subvention) வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பயன்பெறலாம்.கடன் வசதி பெற தகுதியான இனங்கள்:இத்திட்டத்தின் கீழ், மின் சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்புக்கிடங்குகள், சேமிப்பு கலன்கள் (Silos), சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள், போக்குவரத்து வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள் மற்றும் பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள் போன்ற பல்வேறு அறுவடைக்குப்பின் வேளாண்மைக்கான உட்கட்டமைப்புகள், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன மற்றும் துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள், பகுதிக்கேற்ற பயிர் தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கு கடன் வசதி பெற முடியும்.கடன் வசதியை பெற தகுதியானவர்கள்மேற்காணும் உட்கட்டமைப்புகளை உருவாக்க முன்வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் கூட்டுப் பொறுப்பு குழு (JLG), பல்வகை கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், புதியதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்களுக்கும், மத்திய, மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகளுக்கும் கடன் வசதி செய்து தரப்படும்.அரசு அறிவித்துள்ள இந்த வேளாண் உட்கட்டமைப்புகளுக்கான கடன் வசதியின் மூலம் வேளாண் விளைபொருட்கள் வீணாகாமல், சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் வகையில் கிராமப்புறங்களில் பல்வேறு உட்கட்டமைப்புகளை உருவாக்க இயலும். இந்த கடன் வசதியை பெற விரும்பும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், தனியார் தொழில் முனைவோர்கள் தங்கள் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள், நபார்டு வங்கி மேலாளர்கள் அல்லது வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் https://agriinfra.dac.gov.in என்ற இணைய முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கிக்கிளைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (23.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், எல்லிங்க நாயக்கன்பட்டி ஊராட்சியில் பிரதான் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், ரூ.7.45 இலட்சம் மதிப்பில், குமரன்குளம் கண்மாயில் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து, செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மேலும், மகப்பேறு அடைந்த தாய்மார்களுக்கு தாய்சேய் நலப் பரிசு பெட்டகங்களை வழங்கினார். மேலும் அங்கு சிகிச்சை பெற வந்த புறநோயாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.மேலும், குந்தலபட்டி ஊராட்சி நாராயணபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.16 இலட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (23.07.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண்,சே.ச அவர்கள் தலைமையில், மாவட்ட சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் என்பது, ஒரு மாநிலத்தின் சிறுபான்மை சமூகங்களின் நலன்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்படும் ஒரு அரசு அமைப்பு. இந்த ஆணையம் சிறுபான்மையினரின் குறைகளை விசாரித்து, தீர்வுகள் காணவும், அரசுக்கு ஆலோசனைகளையும் வழங்கும். சிறுபான்மை சமூகங்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, சுகாதாரத் திட்டங்கள் போன்றவற்றுக்கான திட்டங்களை அரசுக்கு பரிந்துரைத்தல், சிறுபான்மை சமூகங்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தல், சிறுபான்மை சமூகங்களின் மீதான வன்முறை, பாகுபாடு போன்ற குற்றங்களை விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத்தருதல், சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல், சிறுபான்மை சமூகங்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை இந்த ஆணையத்தின் செயல்பாடாகும்.தமிழ்நாடு அளவில் உள்ள சிறுபான்மையினர் மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ள கிறித்துவர்களுக்கான கல்லறை தோட்டங்கள், முஸ்லிம்களுக்கான கபர்ஸ்தான் இல்லாத இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கல்லறைத் தோட்டம், கபர்ஸ்தான் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அனுமதி மற்றும் அங்கீகாரம் குறித்தும், தனி நபர் கோரிக்கையான நலத்திட்டம், வங்கி கடன் பெறுவதல் உள்ளிட்டவைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து இங்கு எழுப்பப்பட்ட 70 சதவீத பிரச்சனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆகியோர் அங்கேயே தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் கலந்துரையாடி, தெளிவாக பிரச்சினைகளை தீர்வு காண்பதற்கு வழிவகை செய்து கொடுத்தார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் சிறுபான்மையினர்களுடைய கோரிக்கைகளை கேட்டு அவர்களுக்கு தீர்வு காணும் செயல்பாட்டில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் முழுநிறைவு பெற்றுள்ளோம்.இந்த ஆணையம் கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள், சௌராஷ்டிரர்கள், சமணர்கள் இது மட்டுமல்லாது மொழிவாரியான சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பது இந்த ஆணையத்தின் பொறுப்பாகும். சிறுபான்மையினருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர்களிடையே கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது மற்றும் அரசு சார்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து பரிந்துரை மேற்கொள்ளுவது இந்த ஆணையமாகும். மேலும் 38 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர், இந்த ஆணையம் சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான பரிந்துரைகளை இந்த ஆணையம் வழங்கும். இந்த ஆணையத்தில் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், சிறுபான்மையினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம், மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம்,கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றம் புனரமைத்தல், கிறித்துவர்களின் பயனிபாட்டிற்காக கல்லறைத்தோட்டம் மற்றும் முஸ்லீம்களின் பயன்பாட்டிற்காக கபர்ஸ்தான் அமைத்தல், சிறுபான்மையின மாணவிகளுக்கான கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ), சிறுபான்மையினருக்கு மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், நலத்திட்டங்கள் குறித்தும் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினரின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, அரசு சார்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது..
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள் (2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள்), 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்பட்டு பரிசாக தலா ரூ.1.00 இலட்சம், ரூ.10,000/-மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவை ஒவ்வொரு ஆண்டிம் வழங்கப்பட்டு வருகிறது.இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) ஆகியோர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு ஆண்டிலும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10,000/-க்கு மிகாமல் ஒரு தங்கப் பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின்படி, 2024-2025 மற்றும் 2025-2026 ஆகிய ஆண்டுகளுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ்நாட்டிற்காக இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள். இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத் துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர். ஒரு நபருக்கு இரண்டாவது முறையாக இவ்விருது வழங்கப்பட மாட்டாது. ஒருவர் காலமாகும் பட்சத்திலும், இவ்விருது வழங்கப்படும்.2024 - 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதிற்கு சிறந்த விளையாட்டு வீரர்கள் சிறந்த பயிற்றுநர்கள், சிறந்த உடற்கல்வி இயக்குநர் /உடற்கல்வி ஆசிரியர் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு 01.04.2021 முதல் 31.03.2024 வரையிலான சாதனைகளும், ஆட்ட நடுவர்-நீதிபதி, நன்கொடையாளர், நிர்வாகி பிரிவுகளுக்கு 01.04.2022 to 31.03.2024 வரையிலான சாதனைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.2025 - 2026 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதிற்கு சிறந்த விளையாட்டு வீரர்கள், சிறந்த பயிற்றுநர்கள், சிறந்த உடற்கல்வி இயக்குநர் /உடற்கல்வி ஆசிரியர் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு 01.04.2022 முதல் 31.03.2025 வரையிலான சாதனைகளும், ஆட்ட நடுவர்-நீதிபதி, நன்கொடையாளர், நிர்வாகி பிரிவுகளுக்கு01.04.2023முதல்31.03.2025வரையிலானசாதனைகளும்கணக்கில்எடுத்துக்கொள்ளப்படும்.இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு கழகம் / மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் /முதன்மை கல்வி அலுவலர் / முதன்மை உடற்கல்வி ஆய்வர் (ஆடவர் /மகளிர் மூலமாகவும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர், நீதிபதி ஆகியோர்கள் உரிய வழிமுறையாகவும் விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர் அவர்களுக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்), ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் http://www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர் அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், ராஜா முத்தையா ரோடு பெரியமேடு சென்னை 03 என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தலைமை அலுவலகத்திற்கு 11.08.2025 மாலை 5.45 க்குள் அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயது மிகாமலும் இருத்தல் வேண்டும். தங்களது பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கினை துவக்கியிருத்தல் வேண்டும்.இத்திட்டத்தில் பயன் பெற தேவையான கல்வித் தகுதியினை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- மிகாமல் இருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு தோல்வியுற்றோருக்கு ரூ.200/-மும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.300/மும்-, பன்னிரெண்டாம் வகுப்பு / பட்டயப்படிப்பு முடித்தோருக்கு ரூ.400/மும்-, பட்டப்படிப்பு முடித்திருக்கு ரூ.600/ம் என ஒவ்வொரு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் . உதவித் தொகை விண்ணப்பத்தினை நேரில் இவ்வலுவலகத்தில் பெற்றோ அல்லது www.tnvelaivaaippu.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், ஆதார் அட்டை,குடும்ப அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் அலுவலக வேலைநாளில் விண்ணப்பத்தினை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.இந்த உதவித் தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.இத்திட்டத்தில் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் உதவித் தொகை பெற கல்வித் தகுதியினை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது.மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் பதிவு செய்தவர்களுக்கு ரூ.600/- மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு ரூ.750/-, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு ரூ.1000/- மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.வருமான உச்ச வரம்பு கிடையாது. வயது உச்சவரம்பின்றி 10 ஆண்டுகள் வரை மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறலாம்.வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பத்தினை அலுவலக வேலைநாளில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.இந்த உதவித் தொகை மாதம் தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேலும், உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயில்பவராக இருத்தல் கூடாது. சுய தொழில் செய்பவராகவோ இருத்தல் கூடாது. அரசிடமிருந்து வேறு எந்த வகையிலாவது உதவித்தொகை பெறுபவராகவோ, ஊதியம் பெறும் பணியிலோ இருத்தல் கூடாது. இதற்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.ஏற்கனவே இவ்வலுவலகத்தில் உதவித் தொகை விண்ணப்ப படிவம் பெற்று சென்றுள்ள பதிவுதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசு திட்டம் என்பதால், ஏற்கனவே முழுமையாக உதவித் தொகை பெற்றுள்ள பயனாளிகள்மீண்டும்விண்ணப்பிக்கதேவையில்லைஎனவும்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் தொடர்ச்சியாக உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏற்கனவே சுய உறுதிமொழி ஆவணம் அளித்திருப்பின் அலுவலகம் வர தேவையில்லை எனமாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் (22.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், குருமூர்த்தி நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், உணவு தயாரிப்பதற்கான முழுப் பொருட்களின் தரம் குறித்தும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் குருமூர்த்தி நாயக்கன்பட்டியை சேர்ந்த மூதாட்டி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி மனு அளித்ததன்பேரில், அவரது மனுவை உடனடியாக பரிசீலனை செய்து அவரது வீட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை வழங்கினார். இந்த ஆய்வின் போது, சிவகாசி வட்டாட்சியர் திரு.லட்சம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (22.07.2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலையில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் பெற்றோரை இழந்த தொழிலாளர்களின் 38 குழந்தைகளுக்கு மாந்தோறும் ரூ.2000 வீதம் மொத்தம் ரூ.5.20 இலட்சம் மதிப்பிலான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான ஆணைகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10.11.2024 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, பட்டாசுத் தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும், இந்த உதவிகளை மாவட்ட அளவிலேயே முடிவு செய்து வழங்கக்கூடிய வகையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் கீழ், இதற்கான ஒரு தனி நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் இதற்கான முதற்கட்ட உதவியாக ரூ.5 கோடி ரூபாயை அரசு வழங்கும் எனவும் அறிவித்தார்.அதனடிப்படையில், பட்டாசுத் தொழிற்சாலை விபத்துக்களில் தாய், தந்தை இருவரில் எவரேனும் ஒருவர் மரணமடைந்த நிகழ்வில் பராமரிப்பு உதவித்தொகையாக (18 வயது பூர்த்தியாகும் வரை) மாதந்தோறும் ரூ.2000/-மும் மற்றும் தாய், தந்தை இருவரும் மரணமடைந்த நிகழ்வில் பராமரிப்பு உதவித்தொகையாக (18 வயது பூர்த்தியாகும் வரை) ரூ.4000/- மும் வழங்கப்படும்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், கடந்த பட்டாசு விபத்துக்களில் பெற்றோரை இழந்த தொழிலாளர்களின் 38 குழந்தைகளுக்கு நவம்பர் 2024 முதல் மே-2025 வரையிலான 7 மாதங்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.5.20 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.மேலும், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.இதுபோன்று பட்டாசு தொழிற்சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான கல்வி செலவுகளுக்கு தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர்கள் திரு.ஆர்.ரவிச்சந்திரன், திரு.பி.ராஜ்குமார், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், பட்டாசு தொழிலாளர்களுடைய குழந்தைகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.