25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 13, 2025

தம்மசக்கரபரிவர்தன திருவிழாவிற்கு புனிதபயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு ECS முறையில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .

தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26 - ஆம் ஆண்டில் நாக்பூர்தீசஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்மசக்கரபரிவர்தன திருவிழாவிற்கு புனிதபயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5000/- வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்கான விண்ணப்பபடிவத்தினை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in  என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 30.11.2025-க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி  -ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பராம்பரியகட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 13, 2025

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்தி குறிப்பு.

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடி செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த அறிவுரை வெளியிடப்படுகிறது.                  வெளிநாட்ட வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்கள், முதலில் இந்திய அரசின் eMigrate( https://emigrate.gov.in) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். எந்த நிறுவனத்தில்/ முதலாளியிடம் வேலை செய்ய இருக்கிறீர்கள் போன்ற தகவல்களையும் முன்னதாக உறுதிகொள்வது அவசியமாகும். வேலைக்கான ஒப்பந்தம், விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும். வேலைக்கான ஓப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதில் ஊதியம், வேலை விவரங்கள், உரிமைகள், பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம்பெறுகின்றன.வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாச்சாரங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். பல நாடுகளில் வேலைக்கு செல்லும் நபர் நாடு திரும்புவதற்கு வெளிச்செல் அனுமதி (Exit Permit) பெறுவது அவசியமாகும். ஒப்பந்த காலத்தில் வேலைக்கு சென்ற நிறுவனம்/முதலாளியிடமிருந்து வேறு நிறுவனத்திற்கோ, முதலாளிக்கோ மாற்றம் செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.அதே நேரத்தில், பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வேலைக்கு செல்லும் நோக்கத்தில் வெளிநாடு பயணிக்கக்கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது, அந்நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும், இது கைது, அபராதம் அல்லது சிறை தண்டனைக்கே இட்டுசெல்லும்.வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி மையத்தினை தொடர்பு கொள்ளவும்:இந்தியாவிலிருந்து அழைப்புக்கு: 1800 309 3793, வெளிநாடுகளிலிருந்து :080 6900 9900 (Missed Call); 0 80 6900 9901, மின்னஞ்சல்:nrtchennai@gmail.com/ nrtchennai@tn.gov.in, வலைத்தளம் : https;//nrtamils.tngov.in, என்ற முகவரியில்   வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடும் நபர்கள், குறுக்கு வழிகளை தவிர்த்து, அரசு அமைத்துள்ள சட்டபூர்வமான வழியில் செல்லும்போது தான் பாதுகாப்பான வாழ்க்கையை பெற முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 13, 2025

சுதந்திர தினமான 15.08.2025 அன்று ஒரு நாள் மட்டும் F.L-1, F.L-2, F.L-3/FL3AA மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் ,செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL1) மற்றும் FL2/FL3/FL3A/FL3AA  மற்றும் FL11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி,  சுதந்திர தினமான 15.08.2025 அன்று தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்   (FL1) மற்றும் FL2/FL3/FL3A/FL3AA மற்றும்  FL11 மதுபான உரிம ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது  The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 12, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (11.08.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.காளிமுத்து,மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.சோ.பாலாஜி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 12, 2025

வீடு வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை ஒரே நாளில் பரிசீலனை செய்து, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, பூமி பூஜையில் கலந்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சூலக்கரை ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீடு வேண்டி மனு அளித்ததன் பேரில், அவரின் கோரிக்கையை ஒரே நாளில் பரிசீலனை செய்து, மாற்றுத்திறனாளிக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (11.08.2025) நேரில் சென்று வழங்கி, வீடு கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார்.கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது மக்களுக்கு சொந்த வீடற்ற நிலை எனும் சூழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.தமிழ்நாடு அரசு  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  2030-க்குள் 8 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு திட்டங்களை வகுத்து வருகிறது.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024-2025 ஆம் ஆண்டில்  11 வட்டாரங்களில், 1011 வீடுகள் கட்டுவதற்கு  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 910 வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  மேலும், 2025-2026 - ஆம் ஆண்டில், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 357 வீடுகளும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 243 வீடுகளும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 276 வீடுகளும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 124 வீடுகளும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 321 வீடுகளும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 214 வீடுகளும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 189 வீடுகளும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 164 வீடுகளும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 47 வீடுகளும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 96 வீடுகளும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 200 வீடுகளும் என மொத்தம் 2231 வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கடந்த  09.08.2025 அன்று நடைபெற்ற பல்நோக்கு மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, முகாமிற்கு மருத்துவ பரிசோதனைக்காக வருகை தந்த அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சூலக்கரை ஊராட்சி சேர்ந்த நாகவிஜயா என்ற மாற்றுத்திறனாளி வீடு வேண்டி மனு அளித்ததன் பேரில், அவரின் கோரிக்கையை ஒரே நாளில் பரிசீலனை செய்து, அவருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று வழங்கி, வீடு கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார்.நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு சென்ற போது, மாற்றுத்திறனாளியின் குறைகளை கேட்டறிந்து, அவருக்காக கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினை பெற்று, அரசின் இரு வேறு திட்டங்கள் மூலம் பயன்பெற்ற மாற்றுத்திறனாளியும், அவரை பராமரித்து வரும் அவரது தந்தையும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும்  தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 12, 2025

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழியினை அமைச்சர் அவர்கள் தலைமையில் அனைத்து மாணவ, மாணவிகளும் ஏற்றுக்கொண்டனர்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை, நந்தனம், அரசுக் கல்லூரியில்  (11.08.2025) போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியானது காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் செந்திக் குமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இன்று  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் அனைத்து மாணவ, மாணவிகளும் ஏற்றுக்கொண்டனர்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற, தமிழகம் முழுவதும் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடையே போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.மது உள்ளிட்ட போதை பொருட்கள் உபயோகிப்பதனால், மன ரீதியான மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளும், வேலையின்மை மற்றும் வேலையிழப்பு, பொருளாதாரப் பிரச்சனைகள், சமுதாயத்தில் அவப்பெயர்களும் அதன் மூலம் மது அருந்துவோரின் குழந்தைகளின் முன்னேற்றத்தில் பாதிப்புகள், மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையிலும்  பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.போதைப்பொருள் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். அறியாத சிறு வயதினரிடையே ஏற்படும் இந்தப் பழக்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். போதைப் பழக்கத்தினால் ஒருவர் பாதிக்கப்படுவதனால், அவர் மட்டுமின்றி அவருடைய குடும்பம் மற்றும் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே, போதைப்பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவ, மாணவிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைதோறும் “போதை இல்லா தமிழ்நாடு“ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.அதன் ஒரு பகுதியாக இன்று, விருதுநகர் செந்திக் குமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இன்று  போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழியினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.அதன்படி, போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.போதைப் பொருள்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்ற  உறுதிமொழியினை அனைத்து மாணவ, மாணவிகளும் ஏற்றுக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் (கலால்) திரு.ரமேஷ், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புர வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி, துணை காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) திரு.சண்முகசுந்தரம், விருதுநகர் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.யோகேஷ்வரன், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன், சுமார் 1200-ற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 12, 2025

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  (11.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்  பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சூலக்கரையில் செவித்திறன் குறைபாடுயுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் விடுதியில் 32 மாணவர்கள் தங்கி பயில்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளியின் செயல்பாடுகள், மாணவர்களுக்கு கற்பிற்கப்படும் கல்விமுறை, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.அதனை தொடர்ந்து, அருப்புக்கோட்டை ஊராட்சி சூலக்கரையில் உள்ள  அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய், காப்பகத்தின் செயல்பாடுகள், மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், தங்கும் வசதிகள், அவர்களது கல்வி விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், சூலக்கரை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.25 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுத்தினார். மேலும், அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை,  குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களின் தரம் குறிந்து பணியாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 12, 2025

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பட்டம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் (11.08.2025)  பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில்  குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வயது முதல் 19 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு,  மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை இன்று வழங்கப்படுகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ள 5,78,289  சிறுவர், சிறுமியர்களுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 1,33,116 பெண்களுக்கும் குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.மனித உடல் இயங்க வேண்டும் என்றால் அதிகமான சத்துக்கள் வேண்டும். மனிதனுடைய உடல் கட்டமைப்பு புரதச்சத்துக்களில் தான் வருகிறது. நமது உடல் எடையை பொறுத்தமட்டில் ஒரு கிலோ எடைக்கு சுமார் 1 கிராம் புரத சத்து உள்ள உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும். நம்முடைய உடலுக்கு தேவையான புரதச்சத்தை விட குறைவாக நாம் பெறும் போது தான் உடல் வலிமை குறைகிறது.இந்நிலையில்  நம்முடைய வயிற்றில் உள்ள குடற்புழுக்கள் ஒட்டுண்ணியாக செயல்பட்டு, நாம் உட்கொள்ளும் உணவில்  இருந்து சத்துக்களை உறிஞ்சி  கொள்ளும்.சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண்மூலம் குடற்புழு ஒட்டுண்ணிகளால் குடற்புழு தொற்று பரவுவதால், குழந்தைகளின் வளர்ச்சியிலும் மற்றும் உடல்நலனிலும் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு இரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. எனவே, திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும் இரத்தசோகை வராமல் தடுக்க முடியும். எனவே, திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும் இரத்தசோகை வராமல் தடுக்க முடியும். இதனடிப்படையில், விருதுநகர், பட்டம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து அப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு உண்ட பின்னர்,  மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் குடற்புழு நீக்க மாத்திரைகளை  வழங்கினார்.மேலும், இம்மாத்திரைகளை தவறாமல் வாங்கி மென்று உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும்,மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வே.யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆரோக்கிய ரூபன்ராஜ், மருத்துவர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ / மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Aug 11, 2025

பழங்குடியின முகாம்களில் வாழும் 71 பழங்குடியினர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆதார் அட்டைகள் குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராஜீக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  (09.08.2025) மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை மற்றும் வருவாய்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பழங்குடி இன முகாம்களில் வாழும் 61 நபர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்களையும், 3 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், 7 நபர்களுக்கு ஆதார் அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில், வத்திராயிருப்பு வட்டத்தில் ராம் நகர், ஜெயந்தி நகர், அத்திக்கோவில் ஆகிய 3 முகாம்களிலும், இராஜபாளையத்தில் அய்யனார் கோவிலில் 1 முகாமிலும் என மொத்தம் 4 முகாமில் ஏறத்தாழ 200-ற்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.சமீபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொண்ட போது,ஆதார் அட்டைகள், குடும்ப அட்டைகள் வேண்டி கோரிக்கைகளை வைத்தனர்.அதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடர்புடைய கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு உடனடி தீர்வுக்கு உத்தரவிட்டிருந்தார்.அந்த வகையில், பெரும்பாலும் முன்பு மலைவாழ் மக்களின் பிறப்பு வீட்டிலேயே நடந்ததாலும், மருத்துவமனையில் ஏற்படும் குழந்தை பிறப்புகளுக்கு அவர்களின் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பிறப்புச்  சான்றிதழ்களை பெறாமல் இருந்ததையும், பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றை பெற   இருந்த நடைமுறை சிக்கல்களை கண்டறிந்து, அதனை சரி செய்து பழங்குடியின மக்களுக்கு வழங்கிட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.  அதன்பேரில், உரிய அரசு அலுவலர்கள் உடனடியாக பரிசீலனை செய்து, அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எல்லாம் களைந்து, அவர்களுக்கு 15 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இதுவரை பிறப்புச் சான்றிதழ்கள் கிடைக்கப்பெறாமல் இருந்த சுமார் 16 முதல்  70 வயதுள்ள முதியவர்களுக்கு கூட இதன் மூலம் பிறப்புச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளது.இதற்காக மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் தங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.இந்நிகழ்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.உதயசங்கர், சிவகாசி கோட்டாட்சியர் திரு.பாலாஜி,   வட்டாட்சியர்கள், பழங்குடியின மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 11, 2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்முதியவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம்,  சிவந்திபட்டி கிராமத்தில் வருவாய்த்துறையின் மூலம், இலவச வீட்டுமனைப் பட்டா ஆணை பெற்று, வீடுக்கட்டி குடியிருந்து வரும் 17 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான பட்டாக்களை வழங்கிய மாவட்டமாக நமது மாவட்டம் தான் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை சுமார்  40000 -த்திற்கும்  மேற்பட்ட பட்டாக்களை வழங்கி இருக்கிறது.மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ்  நடைபெற்று வரும் முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மனுவை உடனடியாக பரிசீலனை செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், இன்று திருவில்லிபுத்தூர் வட்டம்,  சிவந்திபட்டி கிராமத்தில்,   வருவாய்த்துறையின்   மூலம், இலவச வீட்டுமனைப் பட்டா ஆணை பெற்று, வீடுக்கட்டி குடியிருந்து வரும் 17 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.இந்நிகழ்வின் போது, சிவகாசி கோட்டாட்சியர் திரு.பாலாஜி, வட்டாட்சியர் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 84 85 86 87 88 89 90 ... 140 141

AD's



More News