25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 09, 2025

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் - 2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (07.08.2025) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2025-ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான இணைய வழியில் விண்ணப்பிக்க QR குறியீட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வெளியிட்டார்.முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் - 2025 (Chief Minister’s Trophy Games - 2025) அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் வருகின்ற 22.8.2025 முதல் 12.9.2025 வரை நடத்தப்படவுள்ளன.  இப்போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும்  நடத்தப்படவுள்ளன.  தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம்  வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரம்  வழங்கப்படும். இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் சிறப்பு மதிப்பெண்கள் மற்றும் சலுகைகள் பெற இயலும்.தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய அரசு பணியாளர்கள் ஆகியோருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.எனவே முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான https://cmtrophy.sdat.in, https://sdat.tn.gov.in  வாயிலாக  16.8.2025  க்குள்  முன்பதிவு செய்து தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமாரமணிமாறன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Aug 09, 2025

விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர் வட்டாரப்பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  (08.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் நகராட்சி ஆத்துப்பாலம்  அருகில் நீர்வளத்துறை வைப்பாறு வடிநிலைக்கோட்டம், விருதுநகர் மூலம் கௌசிகா நதியை ரூ.20.44 கோடி மதிப்பில் புனரமைத்து, நவீனமயமாக்கல் பணி மற்றும் வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலை ஊராட்சியில் ஆவின் -க்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அந்த நிலத்தினை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று அலுவலர்களிடம் கலந்துரையாடி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.பின்னர், திருவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இரண்டு  பயனாளிகளுக்கு புஞ்சை நில பட்டா மாறுதலுக்கான ஆணையினையும், 3 பயனாளிகளுக்கு வீட்டு வரி ரசீது நகலினையும், ஒரு பயனாளிக்கு மின்சார வாரியத்தில் பெயர் மாற்றம் செய்த நகலினையும்       மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.இந்த ஆய்வின் போது, விருதுநகர் நகராட்சி ஆணையாளர், உதவி செயற்பொறியாளர்கள், வட்டாட்சியர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 09, 2025

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2025- ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது பெற தகுதியானவர்கள் 25.08.2025-க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்  வளர்ச்சிக்காகப் பணியாற்றி வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தமிழ்  ஆர்வலரைத்  தேர்வு செய்து தமிழ் செம்மல்  விருது வழங்கப்பெற்று வருகின்றது. 2025ஆம் ஆண்டிற்கான  தமிழ்ச் செம்மல்  விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விருதுநகர் மாவட்டத்தில் தமிழ் செம்மல் விருதுக்கான விண்ணப்பப் படிவத்தினை நேரிலோ  தமிழ்  வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in)  கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.தன்விவரக்குறிப்புகளுடன் வட்டாட்சியர் வழங்கும் குடியிருப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை (நகல்),  நூல்கள், கட்டுரைகள், பெற்ற விருதுகள், தமிழ்ச்சங்கங்களின் பொறுப்பு, தமிழறிஞர் / தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம்  மற்றும் 2 கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அளவு புகைப்படம், ஆற்றிய தமிழ்ப் பணிகளுக்கான சான்றுகள் ஆகியவற்றை  இணைத்து   விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 25.08.2025-க்குள் அளிக்க வேண்டுமெனவும் நேரடியாக சென்னை  தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில்அளிக்கப்பெறும்விண்ணப்பங்கள்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.                                                                         

Aug 09, 2025

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2025 - அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது

விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு15.08.2025 - அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.1. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.(01.04.2025 முதல் 31.07.2025 வரை),2. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை3. தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்4. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்5. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II6. ஜல் ஜீவன் திட்டம்7. இதர பொருட்கள்எனவே,15.08.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 09, 2025

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14.08.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது .

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 14.08.2025 அன்று  வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BAVAN, ANAAMALAIS TOYOTA, SENTOR SOFT TECHNOLOGIES, ALPHA TECH, V.V.V ANANDHAM  போன்ற 25-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள்  கலந்து கொண்டு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு I.T.I.டிப்ளமோ மற்றும்  பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 14.08.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து விட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.          இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள். விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnrjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 09, 2025

சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியாளர்களின் நேரடிச்சேர்க்கைக்கு 31.08.2025 அன்று வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியாளர்களின் நேரடிச் சேர்க்கை 31.07.2025 முடிய காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.இச்சேர்க்கையில் பூர்த்தி செய்யப்பட்ட இடங்கள் போக காலியாகவுள்ள தொழிற்பிரிவுகளில் இன ஒதுக்கீடு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் நேரடிச்சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் உரிய அசல் கல்விச்சான்றிதழ்களுடன் நேரில் வருகை புரிந்து இந்நேரடிச்சேர்க்கையில் மாணவ/மாணவிகள் அதிகளவில் சேர்ந்து தொழிற்கல்வியினை பயின்று வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம். இந்நிலையத்தில் தற்சமயம் சூரிய மின் சக்தி தொழில்நுட்பவியலாளர் (எலக்ட்ரிக்கல்) Solar Technician (Electrical), தீயணைப்பு தொழிற்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை (Fire Technology and Industrial Safety Management),அட்வான்ஸ்டு CNC மிஷினிங் டெக்னிசியன் (Advanced CNC Machining Technician), இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் ரூ டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னிசியன் (Industrial Robotics & Digital ManufacturingTechnician), மேனுபேக்சரிங் ப்ராசஸ்  கண்ட்ரோல் & ஆட்டோமேசன் (Manufacturing Process Control & Automation),ஓராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.185/- ம் மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.195/-ம் நேரிடையாக செலுத்தப்பட வேண்டும். இந்நிலையத்தில் பயிற்சி பெறும் தகுதியுள்ள அனைத்து பயிற்சியாளர்களுக்கும் விலையில்லா மிதிவண்டி /கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட்  / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை/ அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பெறும் ஆண் /பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்புதல்வன் / புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/-கூடுதல் உதவித்தொகை பெற்று வழங்கப்படும்.இந்நிலையத்தில்  மாணவர்களுக்கான 3 வேளையும் உணவுடன் கூடிய இலவச விடுதி வசதியும் உள்ளது.இவ்வாய்ப்பினை சாத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மற்றும் விருதுநகர் மாவட்ட அனைத்து பகுதிகளில் உள்ள 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுடைய+1/+2/ பட்டய/பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற/ தோல்வியடைந்த/ இடைநின்ற மாணவ /மாணவியர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி  தொழிற்கல்வியினை பயின்று தனியார்/மத்திய/ மாநில அரசு தொழிற் நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பினைவளாகத் தேர்வு மூலம்  பெற்று பயன்பெற தெரிவிக்கப்படுகிறது.மேலும், விபரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சாத்தூர்: 04562-290953,  94990-55823 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 08, 2025

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,  அவர்கள்  (07.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்  பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெம்பக்கோட்டை வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள், பதிவேடுகள், கோப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், வெம்பக்கோட்டை  ஊராட்சி ஒன்றியம், விஜயகரிசல் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல், கற்பித்தல், வாசிப்பு திறன் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.மேலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், விஜயரெங்கபுரம் ஊராட்சி மன்ற அலுவலக்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்தும், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் குறித்தும் கேட்டறிந்து பல்வேறு துறை சார்ந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய நாட்களுக்குள் தீர்வு காணுவதற்கு தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.மேலும், விஜயரெங்கபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று  பார்வையிட்டு, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு  கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.விஜயரெங்கபுரம் ஊராட்சி ஒன்றியம், மேலக்கோதைநாச்சியார்புரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வரும் அறிவியல் ஆராய்ச்சி கூடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலக்கோதைநாச்சியார்புரம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.தாயில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.41.35 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சேகரிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, சிமெண்ட் மூட்டைகளின் இருப்பு குறித்தும் பயன்பெற்றவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும்  ஆய்வு செய்தார்.வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டாரக் கல்வி அலுவலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள், பதிவேடுகள், கோப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, கோப்புகள், பதிவேடுகள், கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் மனுக்கள் குறித்து கேட்டறிந்தார். மின்னணு குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த ஐந்து பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், மரக்கன்று நட்டு வைத்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Aug 08, 2025

விருதுநகர் மாவட்டம் 11-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், (07.08.2025) கைத்தறித் துறை சார்பில், 11-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கப்பட்ட “சுதேசி இயக்கத்தினை” நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாகவும், இந்தியாவின் கைத்தறித் தொழிலை முன்னிலைப்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் கைத்தறித் தொழிலின் முக்கியத்துவம் மற்றும் தனித்தன்மை, நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் கைத்தறித் துறையின் பங்களிப்பு, கைத்தறி தொழிலினை ஊக்குவித்தல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி “11-வது தேசிய கைத்தறி தினத்தைக்” கொண்டாடும் விதமாக விருதுநகர் மாவட்டத்தில் 07.08.2025 இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.பின்னர், கைத்தறி துறை சார்பில் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.9 இலட்சம் மதிப்பிலான முதிர்வுத்தொகைக்கான காசோலைகளையும், நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவிகளையும், நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1200/- ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும் என மொத்தம் 35 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.14.18 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும் நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் சுந்தரபாண்டியத்தில் விருதுநகர் மாவட்ட சுகாதாரத் துறையுடன் இணைந்து, “வருமுன் காப்போம்” திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த மருத்துவ முகாமில் நெசவாளர்களுக்கு பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் நலம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் நவீன இ.சி.ஜி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் சுமார் 850 நெசவாளர்கள்  பயனடைந்தனர்.மேலும் கல்லூரி மாணவியர்களிடையே கைத்தறி இரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைத்தறி இரகங்களைப் பிரபலப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி விருதுநகர் வே.வ.வன்னியப் பெருமாள் மகளிர் கலைக் கல்லூரியில்”  நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர்(கைத்தறி) திரு.வெங்கடேசலு உட்பட அரசு விற்பனையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Aug 08, 2025

”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் 09.08.2025 அன்று அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லூர்சந்தை ஸ்ரீவீரப்பா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகம்  முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை கடந்த 02.08.2025 அன்று தொடங்கி வைத்தார்.அதன்படி, இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 02.08.2025 அன்று சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முதல் முகாமில் சுமார் 1200 நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.தற்போது, இரண்டாம் கட்டமாக 09.08.2025 அன்று அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லூர்சந்தை ஸ்ரீவீரப்பா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவு நோய் கண்டறிதல், மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவு நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட உள்ளன.    மேலும், இம்முகாமில் மேலே குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்றுதிறனாளிகளுக்கானஅரசுஅடையாளஅட்டைவழங்குதல்,அமைப்புசாராதொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சன்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு இச்சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 08, 2025

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காரீப் பருவத்தில் சோளம், பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, பருத்தி மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் (வாழை மற்றும் வெங்காயம் ) ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்து பயன்பெறலாம் .

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)   2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில்  இந்த ஆண்டு (2025-2026) முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.காரீப் பருவத்தில் பயிர் செய்யவுள்ள பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் (Common Service Centres (CSC)) மூலமாகவோ பயிர்களை காப்பீடு  செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு  மக்காச்சோளம்  பயிருக்கு ரூ. 425/- எனவும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 182/- எனவும், பாசிப்பயறு, உளுந்து பயிர்களுக்கு ரூ.336/- எனவும், பருத்தி பயிருக்கு ரூ.386/- எனவும் மற்றும் நிலக்கடலை பயிருக்கு ரூ.419/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள்  கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு வெங்காயம் பயிருக்கு ரூ.1573/- எனவும் மற்றும் வாழை பயிருக்கு ரூ.4426/- எனவும் தெரிவிக்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ம் ஆண்டின் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் நிலக்கடலை பயிருக்கு 30.08.2025 எனவும், உளுந்து, பாசிப்பயறு, சோளம் மற்றும் பருத்தி வகைகளுக்கு 16.09.2025 எனவும் மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு 30.09.2025 வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் வெங்காயம் பயிருக்கு 01.09.2025 எனவும், மற்றும் வாழை பயிர்களுக்கு 16.09.2025 எனவும் தெரிவிக்கப்படுகிறது.விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/ விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass book)  முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card)  நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை (Crop Insurance) அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ  உரிய காப்பீடு கட்டணம் (Premium) செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 85 86 87 88 89 90 91 ... 140 141

AD's



More News