விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (14.07.2025) “உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,I A S., அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் உரையாடினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, தீர்வு காணும் வகையில் அனைத்து கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்புத் திட்டத்தை 15.07.2025 அன்று தொடங்கி வைக்க உள்ளார்கள்.தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டமானது நாளை 15-ம் தேதி கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.அதனைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர் பெருமக்கள் அவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் துவக்கி வைக்கப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில், இம்முகாம்கள் 15.07.2025 முதல் 07.11.2025 வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளான 15.07.2025 அன்று ஊரகப்பகுதிகளில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆமணக்கு நத்தம், திருச்சூழி ஊராட்சி ஒன்றியம் ஆலடிப்பட்டி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் கீழ கெப்பு லிங்கம்பட்டி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் மறையூர் ஆகிய 4 இடங்களிலும்,நகரப்பகுதிகளான சிவகாசி மாநகராட்சி வார்டு 1 விஜய சுந்தர மஹால், திருவில்லிபுத்தூர் நகராட்சி வார்டு 1 பெருமாள்பட்டி நாடார் திருமண மண்டபம் ஆகிய 2 இடங்களிலும் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் துவங்கி வைக்கப்பட்டு தொடர்ந்து முகாம்கள் நடைபெறவுள்ளது.உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.இம்முகாமிற்கு முன்னோடியாக முகாம் நடைபெறும் பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் துண்டுப்பிரசுரம் (Pamphlets)மற்றும் விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான மற்றும் தேவைப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து முகாமில் கலந்து கொண்டு பயனடைய உரிய விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.இதுவரையில் 36,663 துண்டுப்பிரசுரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும், இம்முகாம்களின் சிறப்பு நிகழ்வாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இம்முகாமிற்கு சென்று விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட பலர் இருந்தனர்.
தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தாமல் இருக்கும் பெரிய வகை உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ.1 இலட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம் தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது என்றும், அதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.“உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழுவின் முதலாம் காலாண்டிற்கானக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அன்று (11.07.2025) மாலை மாவட்ட ஆட்சியரகத்தின் சிறுகூட்டரங்கில் நடைபெற்றது. உணவு பாதுகாப்புத் துறையின் செயல்திறனைக் கூராய்வு செய்த பின்னர் உரையாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் நெறிமுறைகளை உணவு வணிகர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கி உணவு பாதுகாப்புத் துறையின் அலுவலர்கள் அமுல்படுத்த வேண்டும் எனவும், உணவு வணிகர்களும் அச்சட்டத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றி நுகர்வோர்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.மேலும், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தாமல், மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களை மட்டும் உணவு விநியோகிக்கவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தும் மிகச்சிறந்த பெரிய வகை உணவகங்களுக்கு, அதாவது வருடாந்திர விற்றுக்கொள்முதல் ரூ.12 இலட்சத்திற்கும் மேற்பட்ட உணவு வணிகர்களுக்கு,தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ.1 இலட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரத்துடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது என்றும், அதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்றும், அவ்விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையிலான நியமன அலுவலர் உள்ளடக்கிய குழுவினர் பரிசீலனை செய்து, கூட்டாய்வுக்குழு சம்பந்தப்பட்ட உணவகத்தினை கள ஆய்வு செய்து, தமது பரிந்துரையை உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு சமர்ப்பிக்கும் என்றும்,அதன் பின்னர், மாநில அளவிலான பரிசீலனைக் குழு பரிசீலித்து, மாவட்டத்திற்கு தலா ஒரு பெரிய உணவகத்தையும், சிறு உணவகத்தையும் சிறந்த உணவகங்களாகத் தேர்ந்தெடுக்கும் என்றும் பேசினார்.சிறந்த உணவகங்களுக்கான விருதில் பங்கேற்க அவசிமானத் தகுதிகள்:1. விண்ணப்பதாரர் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம்/பதிவுச் சான்றிதழ் பெற்று, அது நடப்பில் இருக்க வேண்டும்.2. விண்ணப்பதாரரின் உணவகத்தில் குறைந்தபட்சம் ஒரு நபர் உணவு பாதுகாப்பில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.3. விண்ணப்பதாரரின் உணவகத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் தொற்றுநோய்த் தாக்கமற்றவர்கள் என்பதிற்கான மருத்துவச் சான்று அவசியம் இருக்க வேண்டும்.4. விண்ணப்பதாரரின் உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் சுகாதாரத் தணிக்கை மேற்கொண்டு, சுகாதார மதிப்பீட்டுச் சான்று (Hygiene Rating) பெற்றிருக்க வேண்டும்.5. விண்ணப்பதாரரின் உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அதிக ஆபத்துள்ள உணவு வணிக வகை;கான தணிக்கை (High Risk Audit by Third-Part Audit Agency) மேற்கொண்டு அறிக்கை வைத்திருக்க வேண்டும்.6. விண்ணப்பதாரர் தமது உணவகத்தை உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் வழங்கப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியல் மூலம் தாமே தணிக்கை மேற்கொண்டு, அதனை சமர்ப்பிக்க வேண்டும்.எனவே, அனைத்து உணவு வணிகர்களும் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் ஆகியவற்றைத் தவிர்த்து, மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களைப் பயன்படுத்தி, சுற்றுப்புற சூழலை மேம்படுத்த உதவுவதுடன், தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையின் விருதையும் வெல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும்,மேலும், விபரங்களுக்கு விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியரகத்தின் முதல் மாடியில் அறை எண்: 116 & 118-ல் உள்ள மாவட்ட உணவு பாதுகர்ப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தினை அணுகலாம் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 18.07.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BAVAN, TVS SUNDARAM BRAKE LININGS LIMITED, DEVENDRAN PLASTICS, ANAAMALAIS TOYOTA, BHARTI AIRTEL LIMITED போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு I.T.I., டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 18.07.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnrjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) கோவிலின் ஆடிப்பூரம் தேர்த்திருவிழா மற்றும் மதுரை மாவட்டத்தின் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலின் நடைபெறவுள்ள ஆடி அமாவாசை திருவிழா ஆகிய தினங்களில் விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, அழகாபுரி, தாணிப்பாறை ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள தற்காலிக உணவுக் கடைகள், அன்னதானங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், தத்தமது உணவு வணிகத்திற்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும் எனவும், தவறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் . “விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) கோவிலில் ஆடிப்பூரம் தேர்த்திருவிழா 28.07.2025 (திங்கள்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. மேலும், மதுரை மாவட்டத்தின் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலில் 24.07.2025 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. அத்தினங்களில் விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, தாணிப்பரறை ஆகிய இடங்களில் தற்காலிக உணவுக் கடைகள் அதிகம் அமைக்கப்படவும், அன்னதானங்கள் வழங்கப்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, அவ்வாறு அமைக்கப்படவுள்ள தற்காலிக உணவுக் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் அன்னதானங்களின் பொறுப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் மற்றும் பின்வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் முக்கிய நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.1. அன்னதானங்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது வணிகத்தினைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.2. அன்னதானம் வழங்குவோர், தாம் சமையலுக்குப் பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் நுகர்வோர்களுக்குக் குடிக்க வழங்கும் தண்ணீர் ஆகியவற்றை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அல்லது பொது சுகாதாரத் துறை பகுப்பாய்வுக் கூடங்களில் பகுப்பாய்வு செய்து பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும். மேலும், முன் அனுமதி இல்லாமல் தனியார் இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறு போன்ற நீராதாரங்களில் தண்ணீர் எடுத்து சமையலுக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தக்கூடாது.3. சாப்பாடு, வடை, பஜ்ஜி போன்ற உடனே உண்ணக்கூடிய உணவுப் பொருட்களை சமைத்து விற்பவர்கள் அல்லது உணவுப் பொருட்களை விற்பனை மட்டும் செய்பவர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, ஈக்கள் மற்றும் அசுத்தம் இல்லாத சுகாதரமான சூழலில் அவற்றை தயாரித்து, பாதுகாப்பாக விற்பனை செய்ய வேண்டும்.4. அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளை உணவுப் பொருட்களில் சேர்க்கக்கூடாது.5. சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திடல் வேண்டும். பயன்படுத்தி மீதமான ஆறிய நிலையில் உள்ள எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.6. பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில் அதன் தயாரிப்பு நாள், காலாவதி நாள், உணவு பாதுகாப்பு உரிமம் எண் உள்ளிட்ட அனைத்து லேபிள் விபரங்களை அவசியம் அச்சிட்டிருக்க வேண்டும்.7. உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் அனைத்துப் பணியாளர்களும் டைபாய்டு மற்றும் மஞ்சள்காமாலைக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொண்டு, “தொற்றுநோய்த் தாக்கமற்றவர்களாக” இருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் கையுறை, முடிக் கவசம் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டும்.8. காலாவதியான பிஸ்கட், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட் எந்தவகை பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. மேலும், கெட்டுப்போன அல்லது பழைய உணவுகளை விற்பனை செய்யக்கூடாது.9. டைனிங் டேபிள் மற்றும் வளாகத்தினை சுத்தம் செய்யும் நபர்கள் சாப்பாடு பரிமாறக்கூடாது. திருவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு, அப்பகுதி உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் 09.07.2025 அன்று திருவில்லிபுத்தூரில் நியமன அலுவலரது தலைமையில் நடைபெற்றது.அதுபோல், சதுரகிரி திருவிழாவினையொட்டி, வத்திராயிருப்பு பகுதியில் வரும் 17.07.2025 அன்று காலை 11 அணியளவில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. எனவே, அன்றைய தினம் நடைபெறவுள்ள பயிற்சி முகாமில் வத்ராயிருப்பு, தாணிப்பாறை, அழகாபுரி உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த உணவு வணிகர்கள் மற்றும் அன்னதானம் வழங்கவுள்ளவர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது” என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்காக தமிழக அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ. 10,000/-வீதம் 120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்புனித பயணம் புத்த மத தொடர்புடைய 1. பீகாரில் உள்ள புத்த கயா, 2. உத்திரபிரதேசத்தில் உள்ள குசிநகர், 3. வாரணாசியில்உள்ள சாரநாத் கோவில், 4. பீகாரில் உள்ள ராஜ்கிர், வைஷாலி, 5. நேபாளத்தில் உள்ள லும்பினிபோன்ற புனித தலங்களையும், சமண மத தொடர்புடைய 1. இராஜஸ்தானில்உள்ள தில்வாரா கோவில், ரணக்பூர் சமண கோவில், ஜெய்சால்மர் சமண கோவில், 2. ஜார்கண்டில் உள்ள சிக்கர்ஜி 3. குஜராத்தில் உள்ள பாலிடனா. 4. பீகாரில் உள்ள பவபுரி சமண கோவில் போன்ற இடங்கள். 5. கர்நாடகாவில் சரவணபெலகோலா போன்ற புனித தலங்களையும்மற்றும் சீக்கிய மத தொடர்புடைய 1. பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ், தக்ட் ஸ்ரீகேசகர்சாகிப், தக்ட் ஸ்ரீடாம்டமா சாகிப், 2 பீகாரில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப்(குரு கோவிந்த் சிங்), தக்ட் ஸ்ரீ ஹசூர் சாகிப் (மஹாராஷ்டிரா) போன்ற இடங்கள், 3. பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா ஸ்ரீ நான்காணா சாகிப், குருத்வாரா ஸ்ரீ சச்சா சௌதா, மண்டி சுகர்கானா, குருத்வாராஸ்ரீ பஞ்ச சாகிப், ஹசன் அப்தல், குருத்வாரா ஸ்ரீ தெஹ்ரா சாகிப் போன்ற புனித தலங்களையும்உள்ளடக்கியது.இத்திட்டத்தின் கீழ் 01.07.2025க்குபிறகு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்டஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம்.மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.11.2025க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரிஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம்,சென்னை-600 005 என்ற முகவரியினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
. 2025-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு/ தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற் பிரிவுகளில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) 31.07.2025 நடைபெறுகிறது.எனவே ஏற்கனவே விண்ணப்பித்து ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதாவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவ/மாணவிகள்,அரசு நிர்ணயித்துள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு கீழ்க்கண்ட அரசு சலுகைகள் வழங்கப்படுகிறது. 1. மாதாந்திர உதவித்தொகை ரூ.750/- வழங்கப்படும்.2. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கப்படும்.3. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும். 4. 2 செட் சீருடை தையற்கூலியுடன் வழங்கப்படும்.5. பாடநூல்கள் மற்றும் வரைபடக்கருவிகள் வழங்கப்படும்.6. விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும்.7. மூடு காலணி வழங்கப்படும்.8. கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும்.9. அடையாள அட்டை வழங்கப்படும்.10. தேர்வு கட்டண விலக்கு வழங்கப்படும் மேலும்,பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முடிவில், வளாக நேர்முகத்தேர்வு நடத்தி (கேம்பஸ் இன்டர்வியூ) மூலம் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். ஊதியம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை தொழிற்நிறுவனங்களின் தகுதிநிலைக்கேற்ப வழங்கப்படும். இந்த அரியவாய்ப்பினை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு செய்தித்துறையின் சார்பில், தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்துகின்ற வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினமான ஜுலை 15-ஆம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.அதன்படி, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்; அவர்கள் ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சிலைக்கும், நினைவு இல்லத்தில் உள்ள அன்னாரது சிலைக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், உதவி இயக்குநர்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (மு.கூ.பொ) திரு.ச.தங்கவேல், செயற்பொறியாளர் (கட்டடம்) திரு.செந்தூர், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், விருதுநகர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.யோகேஷ் குமார், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், விருதுநகர் வட்டாட்சியர் திரு.ராஜகுமார், உதவி செயற்பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (12.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள், கோப்புகள், ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மேலக் குருணைக்குளம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துக்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர், திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்டுள்ள மனுக்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, திருச்சுழி செந்நிலைக்குடி ஊராட்சியில் ரூ.6.20 கோடி மதிப்பில் புதிய 100 சமுதாய வீடுகள், சமுதாயக் கூடம், நூலகம், குழந்தை நல மையம், விளையாட்டு மைதானம், பூங்கா, சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்ட வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும், திருச்சுழியில் ஒட்டுமொத்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் கீழ் ரூ.5.60 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.தொடர்ந்து, நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சேகரிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, சிமெண்ட் மூட்டைகளின் இருப்பு குறித்தும் பயன்பெற்றவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருச்சுழி கல்லூரணி எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (12.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முன்னதாக, விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், கண்காணிப்பு அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு தேர்வு குறித்த உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப்-4-ல் பல்வேறு காலியிடங்களுக்கு போட்டித்தேர்வுகள் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் 176 தேர்வு மையங்களில் 42,231 விண்ணப்பதாரர்கள் தேர்;வு எழுதினர். தேர்வு நடைபெறும் மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 34 தேர்வு நடமாடும் குழுக்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 10 பறக்கும் படை அலுவலர்களும், 176 தேர்வு மையங்களுக்கு 184 வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.அதன்படி, விருதுநகர் வட்டத்தில் 27 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 7573 நபர்களில் 6,429 நபர்களும், அருப்புக்கோட்டை வட்டத்தில் 25 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 6,892 நபர்களில் 5,909 நபர்களும், காரியாபட்டி வட்டத்தில் 12 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 2,755 நபர்களில் 2,419 நபர்களும், இராஜபாளையம் வட்டத்தில் 28 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 8,903 நபர்களில் 7,535 நபர்களும், சாத்தூர் வட்டத்தில் 16 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 4,238 நபர்களில் 3,640 நபர்களும் தேர்வு எழுதினர்.சிவகாசி வட்டத்தில் 27 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 8,255 நபர்களில் 6,998 நபர்களும், திருவில்லிப்புத்தூர் வட்டத்தில் 20 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 5,830 நபர்களில் 5,021 நபர்களும், திருச்சுழி வட்டத்தில் 7 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 1,416 நபர்களில் 1,236 நபர்களும், வெம்பக்கோட்டை வட்டத்தில் 4 தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 1,016 நபர்களில் 847 நபர்களும், வத்திராயிருப்பு வட்டத்தில் 10 தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 2,576 நபர்களில் 2,197 நபர்களும்,என ஆக மொத்தம் மாவட்டத்தில் 176 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 49,454 நபர்களில் 42,231 நபர்கள் தேர்வு எழுதினர். 7,223 நபர்கள் தேர்வுக்கு வரவில்லை..
இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 2800-க்கும் மேற்பட்டுள்ள அரசியல் கட்சிகள் உள்ளன. அதில் 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலிலாவது போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்ற தவறியுள்ள மற்றும் இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகள் என்பதன் காரணமாக பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPs) முதற்கட்டமாக பட்டியல் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 2019-ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாததும் அவற்றின் அலுவலகங்கள் எந்த இடத்திலும் அடையாளம் காணப்படாததும் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 345 (RUPPs) இந்திய தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன.இதில் விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம் மீசலூர் கிராமம் வீரசெல்லையாபுரம் காலணி கதவு எண்.3/172 என்ற முகவரியில் இயங்குவதாக குறிப்பிடப்பட்ட தேச மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சி இப்பட்டியலில் உள்ளது. எந்த கட்சியும் தேவையில்லாமல் பட்டியலிருந்து நீக்கப்படக்கூடாது என்பதற்காக சம்மந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு அந்த கட்சிகளுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பின் தலைமை தேர்தல் அதிகாரியால் நடத்தப்பெறும் விசாரணை வாயிலாக அக்கட்சிகளுக்கு தங்களது விளக்கத்தை; அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.