25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 16, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் - 2025, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு செய்திட 20.08.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் - 2025 (Chief Minister’s Trophy Games - 2025) அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் வருகின்ற 22.8.2025 முதல் 12.9.2025 வரை நடத்தப்படவுள்ளன.  இப்போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும்  நடத்தப்படவுள்ளன.  தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம்  வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரம்  வழங்கப்படும். இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் சிறப்பு மதிப்பெண்கள் மற்றும் சலுகைகள் பெற இயலும்.தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய அரசு பணியாளர்கள் ஆகியோருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.எனவே முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான https://cmtrophy.sdat.in/https://sdat.tn.gov.in  வாயிலாக  16.8.2025  க்குள்  முன்பதிவு செய்து தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதுவரை முன்பதிவில் கிடைக்கப்பெற்ற வரவேற்பினை தொடர்ந்து, பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் அனைத்து தரப்பு மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் இணையதள முன்பதிவு செய்திட கால அவகாசம் 20.08.2025 இரவு 08.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.மாணாக்கர்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Aug 16, 2025

வேளாண்மைத்துறை சார்பில், உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு வருகிற 19.08.2025 அன்று நடைபெறவுள்ளது .

2025-2026 வேளாண் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் உயிர்ம வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது என தெரிவிதுள்ளார்.அந்த அறிவிப்பை தொடர்ந்து, உயிர்ம வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டாரம் தோணுகால் கிராமத்தில் அசேபாவளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 19.08.2025 அன்றுகாலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது .விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை குறித்த தொழில் நுட்பங்களை விளக்கவும், புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், வேளாண் மற்றும் வேளாண் துறை சார்ந்த துறைகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை கொண்டு கருத்துக்காட்சி அமைத்து காட்சிப்படுத்தப்பட உள்ளது.இதில் வேளாண் அறிவியல் நிலையம் விஞ்ஞானிகள் மற்றும் வேளாண்மைதுறை அலுவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டுவிவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள விவசாயிகள் மேற்கண்ட மாவட்ட அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Aug 14, 2025

சிவகாசி வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் அலுவலகப் பணிகள் குறித்து   மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் அலுவலகப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்   மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, , அவர்கள்  (13.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்தும், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் குறித்தும் கேட்டறிந்து பல்வேறு துறை சார்ந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய நாட்களுக்குள் தீர்வு காணுவதற்கு தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.அதனை தொடர்ந்து, சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை    மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்டுள்ள மனுக்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும்  பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.பின்னர், சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் சமூகநலத்துறை அலுவகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், நலத்திட்ட உதவிகள், திட்டங்கள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.மேலும், சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவலத்தை பார்வையிட்டு, கோப்புகள், அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள், பராமரிக்கப்படும் பதிவேடுகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, இலவச பயண அட்டை, இலவச சீருடைகள் உள்ளிட்டவை குறித்து  அலுவலர்களிடம் கேட்டறிந்து அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 13, 2025

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று(12.08.2025) இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், ரூ.2.92 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட 8 வகையான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (12.08.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.முன்னேற விளையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 52 அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் கிராமப்புற மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும் வகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், குருதி பகுப்பாய்வு, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் புரோப், இ.சி.ஜி, Crash cart, Radiant Warmar, Biochemistry analyser    உள்ளிட்ட 8 வகையான மருத்துவ உபகரணங்கள் ரூ.2.92 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.இந்த மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  (12.08.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் பொது மேலாளர்கள் திரு.ராமசுவாமி(புவி அறிவியல் ஆய்வகம், சென்னை), திருமதி மீடா பிரசாத்(மனிதவளம்), மரு.ஹிமான்சு குக்ரீதி உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Aug 13, 2025

பொது மருத்துவ மாதிரி சேகரிப்பு மற்றும் அறிக்கை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்(12.08.2025) மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும்  கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் மற்றும் ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளை இணைந்து அமைக்கப்பட்டுள்ள பொது மருத்துவ மாதிரி சேகரிப்பு மற்றும் அறிக்கை மையத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,I A S., அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இந்த மையம் மூலம் பொது மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்வதற்கான மாதிரிகள் இங்கு சேகரிக்கப்பட்டு, அதற்கான பரிசோதனை அறிக்கைகளும் இங்கே வழங்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வகையான நோயாளிகள் பரிசோதனை மாதிரிகள் வழங்குவதற்காக ஆய்வகத்திற்கு செல்வதை தவிர்த்து, இங்கு வழங்குவதன் மூலம் கூட்டம் நெரிசல் இல்லாமலும், நோய் தொற்று பரவும் அபாயம் இல்லாமலும் இருக்கும்.அதன்படி, இந்த பொது மருத்துவ மாதிரி சேகரிப்பு மற்றும் அறிக்கை மையத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Aug 13, 2025

முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தின் கீழ் அமைச்சர் அவர்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் சென்று குடிமைப் பொருட்களை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (12.08.2025) வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை சென்னையில் தொடங்கி  வைத்தார்.அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிக்குட்பட்ட சின்ன புளியம்பட்டி, காந்தி மைதானம் மற்றும் நேரு மைதானம் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் சென்று குடிமைப் பொருட்களை வழங்கினார்.மேலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ.முக்குளம் மற்றும் எழுவனி பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில்சென்றுகுடிமைப்பொருட்களைவழங்கினார்.தமிழ்நாட்டில் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றைடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் “தாயுமானவர் திட்டம்"  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களுக்கும் 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலே குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்கள் விபரம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடமிருந்து பெறப்பட்டு கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மின்னனு எடை தராசு, e-PoS  இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப்பொருட்கள் பாதுகாப்பாக தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விற்பனை செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் வாயிலாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1070 நியாய விலைக்டைகளில் கூட்டுறவுத் துறை மூலம் 46,808 குடும்ப அட்டைகளில் உள்ள பயனாளர்களுக்கும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 230 குடும்ப அட்டைகளில் உள்ள பயனாளர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 2,678 குடும்ப அட்டைகளில் உள்ள பயனாளர்களுக்கும் என மொத்தம் 49,716 குடும்ப அட்டைகளில் உள்ள 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 822 வாகனங்கள் மூலம் அவரவர் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்யப்படவுள்ளது.அதன்படி, அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிக்குட்பட்ட சின்ன புளியம்பட்டி, காந்தி மைதானம் மற்றும் நேரு மைதானம் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் பயன்பெறும் 227 குடும்ப அட்டைகளின் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடுதேடி குடிமைப்பொருட்களை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.மேலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ.முக்குளம் பகுதி நியாயவிலைக் கடையில் உள்ள 598 குடும்ப அட்டைகளில் 40 குடும்ப அட்டைகளுக்கும், எழுவனி பகுதி நியாயவிலைக் கடையில் உள்ள 246 குடும்ப அட்டைகளில் 14 குடும்ப அட்டைகளுக்கும் என மொத்தம் 54 குடும்ப அட்டைகளின் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடுதேடி குடிமைப்பொருட்களை  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.மேலும், மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தின் மூலம் அனைத்து வட்டங்களிலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே வீடுதேடி குடிமைப்பொருட்களை வழங்கினார்கள்.

Aug 13, 2025

வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி(எம்.ரெட்டியபட்டி) ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், மாநில திட்டக்குழுவின் சார்பில், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் பின்தங்கிய வட்டாரங்களான திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்(12.08.2025) நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய வட்டாரங்கள் வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு மாவட்டத்திலும், பின்தங்கிய வட்டாரங்கள் இனம் காணப்பட்டு அந்த வட்டாரங்களின் வளர்ச்சிக்காக வளர்ச்சி திட்;டத்தை உருவாக்கி, அதற்கான மூன்று ஆண்டுக்கான செயல் திட்டத்தை உருவாக்கப்பட்டு, அந்த செயல் திட்டத்தை மூன்று நிதி ஆண்டுக்கான அறிக்கையாக மாற்றி, அதன்பிறகு திட்டப்பணிகளுக்கான அடிப்படை கட்டமைப்புகளையும் உருவாக்கும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.உடல்நலம் மற்றும் ஊட்டசத்து, சமூக நலன், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு, வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த சேவைகள் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட 7 தலைப்புகளின் கீழ் 131 வளர்ச்சி குறியீடுகளை  (Key Developmental Indicators) (KDI’s)  அடிப்படையாக கொண்டு வட்டார அளவிலான திட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி,  வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில்,  2025 ஆம் ஆண்டிற்கான வட்டார ஆண்டுத்திட்டம் தயாரிக்கும் பொருட்டு பணிகள் தேர்வு செய்யப்பட்டது.இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் திரு.வீ.கேசவதாசன், மாவட்ட திட்ட அலுவலர் திரு.முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 13, 2025

பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள் / நிறுவனங்கள் தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் தவறினால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல மையங்கள் / நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை  மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்கு ஆளானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள்ஃ மையங்கள் ( Mental Health Establishments) செயல்பட்டு வருகின்றன. இத்தகைய மனநல நிறுவனங்கள் / அனைத்தும் மனநல பராமரிப்புச் சட்டம் 2017 - ன் படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் இவ்வாறு பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகத்தில் பதிவு செய்ய ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க வேண்டிய அலுவலக முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010. தொலைபேசி எண் : 044 - 2642 0965, Email : tnsmha@gmail.com  முகவரியில் விண்ணப்பிக்கலாம்.  மேலும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதள முகவரி https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php மனநல மையங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை மேற்காணும் இணையதள முகவரியிலோ தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு 044 - 2642 0965 - என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இதன்படி, பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள் / நிறுவனங்கள் ஒரு மாத காலத்திற்குள் மேற்காணும் தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறினால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உரிமம் பெறாமல் செயல்படும் இத்தகைய மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 13, 2025

தம்மசக்கரபரிவர்தன திருவிழாவிற்கு புனிதபயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு ECS முறையில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .

தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26 - ஆம் ஆண்டில் நாக்பூர்தீசஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்மசக்கரபரிவர்தன திருவிழாவிற்கு புனிதபயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5000/- வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்கான விண்ணப்பபடிவத்தினை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in  என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 30.11.2025-க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி  -ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பராம்பரியகட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 13, 2025

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்தி குறிப்பு.

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடி செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த அறிவுரை வெளியிடப்படுகிறது.                  வெளிநாட்ட வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்கள், முதலில் இந்திய அரசின் eMigrate( https://emigrate.gov.in) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். எந்த நிறுவனத்தில்/ முதலாளியிடம் வேலை செய்ய இருக்கிறீர்கள் போன்ற தகவல்களையும் முன்னதாக உறுதிகொள்வது அவசியமாகும். வேலைக்கான ஒப்பந்தம், விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும். வேலைக்கான ஓப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதில் ஊதியம், வேலை விவரங்கள், உரிமைகள், பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம்பெறுகின்றன.வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாச்சாரங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். பல நாடுகளில் வேலைக்கு செல்லும் நபர் நாடு திரும்புவதற்கு வெளிச்செல் அனுமதி (Exit Permit) பெறுவது அவசியமாகும். ஒப்பந்த காலத்தில் வேலைக்கு சென்ற நிறுவனம்/முதலாளியிடமிருந்து வேறு நிறுவனத்திற்கோ, முதலாளிக்கோ மாற்றம் செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.அதே நேரத்தில், பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வேலைக்கு செல்லும் நோக்கத்தில் வெளிநாடு பயணிக்கக்கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது, அந்நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும், இது கைது, அபராதம் அல்லது சிறை தண்டனைக்கே இட்டுசெல்லும்.வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி மையத்தினை தொடர்பு கொள்ளவும்:இந்தியாவிலிருந்து அழைப்புக்கு: 1800 309 3793, வெளிநாடுகளிலிருந்து :080 6900 9900 (Missed Call); 0 80 6900 9901, மின்னஞ்சல்:nrtchennai@gmail.com/ nrtchennai@tn.gov.in, வலைத்தளம் : https;//nrtamils.tngov.in, என்ற முகவரியில்   வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடும் நபர்கள், குறுக்கு வழிகளை தவிர்த்து, அரசு அமைத்துள்ள சட்டபூர்வமான வழியில் செல்லும்போது தான் பாதுகாப்பான வாழ்க்கையை பெற முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 83 84 85 86 87 88 89 ... 140 141

AD's



More News