தெலுங்கில் சமந்தா தயாரித்து கதை யின் நாயகியாகவும் நடித்துள்ள படம் 'மா இண்டி பங்காரம்'. நந்தினி ரெட்டி இயக்கி உள்ளார். இந்த படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் ரிலீஸாகிறது. இது எம்ஜிஆர் நடித்த படத்தின் தலைப்பாகும். மாமியார் வீட்டை பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றும் ஆக்ஷன் மருமகளாக சமந்தா நடித்துள்ளார்.
‘சொல்லாமலே’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சசி, விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் ஜூன் 19ல் வெளியாக உள்ளது. இதுவரை அவர் இயக்கிய 8 படங்களில் 6 புதிய இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அவை: ‘சொல்லாமலே’ – பாபி, ‘டிஷ்யூம்’ – விஜய் ஆண்டனி, ‘பூ’ – எஸ்.எஸ். குமரன், ‘555’ – சைமன் கே. கிங், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ – சித்து குமார், மற்றும் தற்போது ‘நூறு சாமி’ – பாலாஜி ஸ்ரீராம்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.330 கோடி வசூலித்து மலையாள சினிமாவில் புதிய நம்பர் 1 சாதனையை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘லோகா’ ரூ.303 கோடி வசூலித்திருந்த நிலையில், அதனை ஓராண்டிற்குள் ‘திரிஷ்யம் 3’ முறியடித்துள்ளது
ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஆர்யா, ரெஜினா, நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'அனந்தன் காடு'. மலையாளம், தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் காடுகளின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து சில மாதங்கள் ஆகியும், வெளியீட்டில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு, வரும் ஜூன் 25ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு குறித்து நடிகை ராதிகா உருக்கமாக பதிவிட்டுள்ளார். “என்னை உருவாக்கியது என் தாயும், என் குருநாதர் பாரதிராஜாவும் தான். ஒரே ஆண்டில் அந்த இரு தூண்களையும் இழந்துவிட்டேன். இந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர்களின் நினைவுகளும் வாழ்க்கைப் பாடங்களும் என்றும் என்னுடன் இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் நடித்துள்ள 'பெத்தி' திரைப்படம் தெலுங்கில் உருவாகி, பான் இந்தியா படமாக வெளியாகி ஜூன் 4ஆம் தேதி வெளியானது. தனது கிராமத்திற்கு அடையாளம் கிடைக்க போராடும் இளைஞனின் கதையாக, விளையாட்டை மையமாக வைத்து வெளியானது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ராம்சரண், "ஏ.ஆர். ரஹ்மான் தான் இந்தப் படத்தின் மையத்தூண்" என மனதாரப் பாராட்டினார். அதற்குப் பதில் அளித்துப் பேசிய ரஹ்மான், "சிரஞ்சீவி என்ற பெரிய ஆலமரத்தின் நிழலில் இருந்து வந்து, ராம்சரண் இன்று தனக்கெனத் தனி இடம் பிடித்து, இன்னொரு ஆலமரமாக வளர்ந்துள்ளார்" எனப் புகழ்ந்து தள்ளினார்.படத்திற்கு விமர்சனம் அப்படி, இப்படி இருந்தாலும் வசூல் நன்றாக உள்ளது. 5 நாட்களில் உலகளவில் ரூ.300.15 கோடி வசூலை கடந்துள்ளது.
'பிளாஸ்ட்' பட வெளியீட்டின் போது பேசிய நடிகர் அர்ஜூன், "பெண்கள் தைரியமாகச் சண்டை போட வேண்டும் என்ற படத்தின் திரைக்கதை அருமை. முதல்வர் விஜய் நல்லது செய்வார். சனாதனம் என்பது திருடக்கூடாது, தப்பு செய்யக்கூடாது மற்றும் வயதான காலத்தில் பெற்றோரை கடவுள் போல் பார்க்க வேண்டும் எனச் சொல்லும் ஒரு வாழ்க்கை முறை; அது மதமல்ல" என்று விளக்கமளித்துள்ளார்.சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான படம் 'பிளாஸ்ட்'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ. 25.26 கோடி வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தாண்டில் வெளியான வெற்றிப் படங்களின் பட்டியலில் இதுவும் இணைந்துள்ளது.
கென் கருணாஸ் இயக்கி, நடித்து, ஜி.வி. பிரகாஷ் இசையில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் 'யூத்'. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 80 கோடி வசூலித்து மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தில் இடம் பெற்ற ரசிகர்களின் ஃபேவரிட் பாடலான 'முட்ட கலக்கி', தற்போது யூடியூபில் 200 மில்லியன் (20 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. படம் வெளியான 4 மாதங்களிலேயே இந்த மைல்கல்லை எட்டியதோடு, இந்தாண்டில் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த முதல் பாடல் என்ற பெருமையையும் இப்பாடல் பெற்றுள்ளது.
பிரபல மலையாள நடிகர் சலீம் குமார், தமிழில் 'தென்காசிப் பட்டணம்', 'ராஜமாணிக்கம்', 'நெடுஞ்சாலை', 'மரியான்' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாகக் கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடல் நலக்குறைவால் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 56 வயதான சலீம் குமார், தனது 30 ஆண்டுக்காலத் திரை வாழ்க்கையில் 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்குத் திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இம்தியாஸ் அலி இயக்கத்தில் தில்ஜித் தோசாஞ்ச், நசீருத்தீன் ஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மெய்ன் வாபஸ் ஆவுங்கா'. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜூன் 12ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோஷனுக்காகவும், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர்களின் தியாகத்தைக் கௌரவிக்கும் விதமாகவும், 'ஜெய் ஹோ: ஏ டிரிபியூட் டு தி பிரேவ்ஹார்ட்ஸ்' என்ற தலைப்பில் அட்டாரி-வாகா எல்லையில் ரஹ்மான் தனது இசைக்குழுவினருடன் இணைந்து பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினார்.