நடிகர் அர்ஜூன் தாஸ் முதன்முறையாக 'சூப்பர் ஹீரோ' திரைப்படத்தில் சூப்பர் ஹீரோ வேடத்தில் நடித்துள்ளார். தேஜூ அஸ்வினி கதாநாயகியாகவும், சாண்டி வில்லனாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் கூறுகையில், "இரு சகோதரர்களின் பாசமும், அவர்களைச் சுற்றி நடக்கும் உணர்வுப்பூர்வமான சம்பவங்களும்தான் படத்தின் மையக்கரு. தனது தம்பிக்காக அர்ஜூன் தாஸ் சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், செப்டம்பரில் படம் வெளியாகும்" என்றார்
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயணத்தை மையமாகக் கொண்டு 'ராஜாஸ் பிளேலிஸ்ட்' என்ற புதிய படம் உருவாகிறது. இதில், இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரனின் மகன் ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதையை வெங்கட் பிரபு எழுதியுள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'குடும்பஸ்தன்' படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் என். சுப்ரமணியம் இந்தப் படத்தை இயக்குகிறார்.
திரையரங்குகளுக்கு மக்கள் வருகை குறைந்து வருவது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்ன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் அதிக விலை ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ராம் சரண், "இந்தியாவில் சினிமா இன்னும் குறைந்த செலவில் மகிழ்ச்சியை வழங்கும் பொழுதுபோக்காகவே உள்ளது. குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பது தனி அனுபவம். ஆனால், பாப்கார்ன் மற்றும் தின்பண்டங்களின் விலை சற்று குறைந்தால் ரசிகர்களுக்கு மேலும் வசதியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
இன்று வெளியாகும் 'வெல்கம் டு தி ஜங்கிள்' படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்க உள்ள நடிகர் அக்ஷய் குமார், நகைச்சுவை நடிப்பின் சவால்கள் குறித்து மனம் திறந்துள்ளார்."ஒருவரை அழ வைப்பதை விட சிரிக்க வைப்பது மிகவும் கடினம். நம் நடிப்பால் ரசிகர்கள் தங்களின் கவலைகளை மறந்து சிரித்தால் அதைவிட பெரிய மகிழ்ச்சி இல்லை. இந்தப் படம் நகைச்சுவையை இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்," என்று அவர் கூறினார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற விழாவில் "Academy of Achievement" விருது வழங்கப்பட்டது. ஹாலிவுட் இயக்குநர் பீட்டர் ஜாக்சன் இந்த விருதை வழங்கினார். விருதைப் பெற்ற ரஹ்மான், "இந்த அங்கீகாரம் எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. என் நாடு, என்னுடன் பயணித்த கலைஞர்கள் மற்றும் பல ஆண்டுகளாக ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள் இல்லாமல் இந்த சாதனை சாத்தியமாகியிருக்காது," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி - நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 'வாரணாசி'. இதுகுறித்து ராஜமவுலி கூறுகையில், "ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகள், அண்டார்டிகாவின் பனிப்பரப்புகள், ராமாயண உலகம், இயற்கைப் பேரழிவுகள், பிரம்மாண்டமான பேண்டஸி அம்சங்கள் என சாகசம் நிறைந்த பயணமாக படம் இருக்கும். அதேநேரம் தந்தை-மகன் பாசத்தையும் உணர்வுபூர்வமாகச் சொல்லும்" என்றார்.
இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் தமிழில் சுமார் 120 படங்கள் வெளியான நிலையில், வெற்றி பெற்றவை மிகச் சில படங்களே. இந்நிலையில், ஜூலை 3-ம் தேதி 'கட்டாகுஸ்தி 2', 'இரு முனை', 'புத்தம் புது நேரம்' ஆகிய மூன்று படங்கள் திரைக்கு வருகின்றன. முதல் பாகம் வெற்றி பெற்றதால் 'கட்டாகுஸ்தி 2' படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
'வாரிசு' படத்தின் தயாரிப்பாளரான தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, திரைப்பட வசூல் விவரங்கள் குறித்து பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், "ஒரு படத்தின் உண்மையான வசூல் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும். ஆனால், படங்களுக்கிடையே ஒப்பீடு மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு காரணமாக, பல நேரங்களில் மிகைப்படுத்தப்பட்ட வசூல் விவரங்களை வெளியிட வேண்டிய சூழல் உருவாகிறது. நடிகர்களின் மதிப்பையும், ரசிகர்களின் மனநிறைவையும் தக்கவைக்கவே இவ்வாறு செய்யப்படுகிறது" என்றார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர், எழுத்தாளர் கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ், முந்தானை முடிச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், சின்ன வீடு, எங்க சின்ன ராசா, சுந்தரகாண்டம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை எழுதி, இயக்கி, நடித்தார்.யதார்த்தமான கதைகள், நகைச்சுவை கலந்த திரைக்கதைகளால் 'திரைக்கதை மன்னன்' என்ற பெருமையை பெற்ற அவர், பல நடிகர்களை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத பங்களிப்பை வழங்கியவர் என திரையுலகம் அஞ்சலி செலுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி திரைப்பட எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத், ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.40 ஆண்டுகளுக்கும் மேலாக 600-க்கும் அதிகமான படங்களில் பணியாற்றியுள்ள அவர், 17 மொழிகளில் பணியாற்றி 9 தேசிய விருதுகளை வென்றுள்ளார். "இந்திய சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக இணைந்திருப்பது பெருமை அளிக்கிறது," என்று ஸ்ரீகர் பிரசாத் தெரிவித்தார்.