புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் நடித்துள்ள 'பெத்தி' திரைப்படம் தெலுங்கில் உருவாகி, பான் இந்தியா படமாக வெளியாகி ஜூன் 4ஆம் தேதி வெளியானது. தனது கிராமத்திற்கு அடையாளம் கிடைக்க போராடும் இளைஞனின் கதையாக, விளையாட்டை மையமாக வைத்து வெளியானது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ராம்சரண், "ஏ.ஆர். ரஹ்மான் தான் இந்தப் படத்தின் மையத்தூண்" என மனதாரப் பாராட்டினார். அதற்குப் பதில் அளித்துப் பேசிய ரஹ்மான், "சிரஞ்சீவி என்ற பெரிய ஆலமரத்தின் நிழலில் இருந்து வந்து, ராம்சரண் இன்று தனக்கெனத் தனி இடம் பிடித்து, இன்னொரு ஆலமரமாக வளர்ந்துள்ளார்" எனப் புகழ்ந்து தள்ளினார்.படத்திற்கு விமர்சனம் அப்படி, இப்படி இருந்தாலும் வசூல் நன்றாக உள்ளது. 5 நாட்களில் உலகளவில் ரூ.300.15 கோடி வசூலை கடந்துள்ளது.
'பிளாஸ்ட்' பட வெளியீட்டின் போது பேசிய நடிகர் அர்ஜூன், "பெண்கள் தைரியமாகச் சண்டை போட வேண்டும் என்ற படத்தின் திரைக்கதை அருமை. முதல்வர் விஜய் நல்லது செய்வார். சனாதனம் என்பது திருடக்கூடாது, தப்பு செய்யக்கூடாது மற்றும் வயதான காலத்தில் பெற்றோரை கடவுள் போல் பார்க்க வேண்டும் எனச் சொல்லும் ஒரு வாழ்க்கை முறை; அது மதமல்ல" என்று விளக்கமளித்துள்ளார்.சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான படம் 'பிளாஸ்ட்'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ. 25.26 கோடி வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தாண்டில் வெளியான வெற்றிப் படங்களின் பட்டியலில் இதுவும் இணைந்துள்ளது.
கென் கருணாஸ் இயக்கி, நடித்து, ஜி.வி. பிரகாஷ் இசையில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் 'யூத்'. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 80 கோடி வசூலித்து மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தில் இடம் பெற்ற ரசிகர்களின் ஃபேவரிட் பாடலான 'முட்ட கலக்கி', தற்போது யூடியூபில் 200 மில்லியன் (20 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. படம் வெளியான 4 மாதங்களிலேயே இந்த மைல்கல்லை எட்டியதோடு, இந்தாண்டில் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த முதல் பாடல் என்ற பெருமையையும் இப்பாடல் பெற்றுள்ளது.
பிரபல மலையாள நடிகர் சலீம் குமார், தமிழில் 'தென்காசிப் பட்டணம்', 'ராஜமாணிக்கம்', 'நெடுஞ்சாலை', 'மரியான்' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாகக் கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடல் நலக்குறைவால் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 56 வயதான சலீம் குமார், தனது 30 ஆண்டுக்காலத் திரை வாழ்க்கையில் 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்குத் திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இம்தியாஸ் அலி இயக்கத்தில் தில்ஜித் தோசாஞ்ச், நசீருத்தீன் ஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மெய்ன் வாபஸ் ஆவுங்கா'. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜூன் 12ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோஷனுக்காகவும், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர்களின் தியாகத்தைக் கௌரவிக்கும் விதமாகவும், 'ஜெய் ஹோ: ஏ டிரிபியூட் டு தி பிரேவ்ஹார்ட்ஸ்' என்ற தலைப்பில் அட்டாரி-வாகா எல்லையில் ரஹ்மான் தனது இசைக்குழுவினருடன் இணைந்து பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
இந்தாண்டு இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிவிட்டன. இந்நிலையில், கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த வாரம் ஜூன் 12ஆம் தேதி ஒரே நாளில் “ஆட்டி, சாருகேசி, டபுள் ஆக்குபன்சி, ஹபீபி, மூன்றாம் கண், நிழல், வள்ளுவன், வருகை பதிவேடு" ஆகிய 8 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய பட்ஜெட்டில் உருவான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களில் இருந்து கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜா (இயற்பெயர்: சின்னசாமி) நேற்று காலமானார். தேனி அல்லிநகரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், இளையராஜா, கங்கை அமரன் ஆகியோரின் நண்பராவார். ஆரம்பத்தில் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி, சினிமா ஆசையால் சென்னை வந்து பல போராட்டங்களுக்குப் பிறகு உதவி இயக்குனராக உயர்ந்தார்.1977-ல் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் இளையராஜா இசையில் இவர் இயக்கிய முதல் படமான '16 வயதினிலே' மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவின் திருப்புமுனையாக அமைந்தது. "என் இனிய தமிழ் மக்களே..." என்ற தனது கம்பீர குரலால் ரசிகர்களை ஈர்த்த இவர், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, 'முதல் மரியாதை', 'கருத்தம்மா' உள்ளிட்ட படங்களுக்காகப் பல தேசிய மற்றும் மாநில விருதுகளையும், கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.
2026ஆம் ஆண்டு மே மாதம் வரை வெளியான தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 96-ஐத் தொட்டுள்ளது. இந்த வாரம் ஜூன் 5ஆம் தேதி, 'பரிமளா அண்ட் கோ', 'இரட்டையர்', 'சம்ஹாரம்', 'சன்னிதானம் பி.ஓ' ஆகிய 4 படங்கள் ரிலீஸாகின்றன. இவற்றுடன் சேர்த்து நடப்பு ஆண்டின் மொத்தப் படங்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டுகிறது. கடந்தாண்டு மே மாதம் வரை 110 படங்கள் ரிலீஸாகியிருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு படங்களின் எண்ணிக்கை சற்று குறைவு தான்.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா நடித்துள்ள படம் 'நூறுசாமி'. விவசாயப் பின்னணியில், தாயை மகன் போற்றும் வகையிலான உணர்வுப்பூர்வமான கதைக் களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களிலேயே ரிலீஸாக வேண்டிய இப்படம், தேர்தல் பரபரப்பு காரணமாகத் தள்ளிப் போனது. தற்போது ஜூன் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது எனப் படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 'பென்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவர் விரைவில் அரசியலில் குதிக்க உள்ளதாகவும், திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சார்பில் போட்டியிட உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதுபற்றி லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், “என் தாயின் ஆசீர்வாதங்களுடன், என் வாழ்க்கை தொடர்பான முக்கிய முடிவு ஜூன் 11ஆம் தேதி, காலை 9:30 மணிக்கு அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வதந்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவிக்காததால், லாரன்ஸ் அரசியலுக்கு வருவது உறுதி தான் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.