இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கத்தில் பஹத் பாசில் நடித்துள்ள 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' திரைப்படம் குழந்தைகளை கவரும் வகையிலான ஃபேண்டசி-காமெடி கதையாக உருவாகியுள்ளது.இதில் மேஜிக் கலைஞராக வரும் பஹத் பாசில், ஒரு சிறுமியை தனது மாயாஜாலத்தால் மகிழ்விக்கும் போது எதிர்பாராத சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். அதன்பிறகு நடைபெறும் சம்பவங்களே படத்தின் மையக்கரு. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
எழுத்தாளர் ஆனந்த் இயக்கத்தில், அண்ணாமலை தயாரித்துள்ள புதிய திரைப்படம் 'காகங்கள்'. இதில் யோகி பாபு, கிஷோர், விதார்த், லிஜோ மோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனித உணர்வுகள் மற்றும் ஆன்மிக தேடலை மையமாகக் கொண்ட இப்படத்தில், காகங்களின் தனித்துவமான குணாதிசயங்களை கதையின் முக்கிய அம்சமாக எடுத்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா, அழகு குறித்த கேள்விக்கு மனதை கவரும் பதில் அளித்துள்ளார். "வெளிப்புற அழகை விட மனதின் தூய்மையே முக்கியம். நல்ல மனதுடன் வாழ்ந்தால் அதுவே உண்மையான அழகை வெளிப்படுத்தும். நல்ல செயல்களை செய்து வாழ்வதே சிறந்த அலங்காரம்" என்று அவர் கூறியுள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் நடித்து வரும் 'வாரணாசி' படத்தின் தலைப்பு தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் தலைப்பை முன்பே பதிவு செய்திருந்த தயாரிப்பாளர் சுப்பா ரெட்டி, பேச்சுவார்த்தைக்கு பிறகு ராஜமவுலி தரப்புக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார். பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் 2027 ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியாக உள்ளது.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கும் 'ராமாயணா' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது, ஜூலை 30-ஆம் தேதி வெளியாகும் 'ஸ்பைடர்மேன்'திரைப்படத்துடன் திரையரங்குகளில் டிரைலர் திரையிடப்படவுள்ளது. அதன்பின்னர் யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா இசையமைத்து, எழுதிய 'பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்' ஆல்பத்தை பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் பாடியுள்ளார். இதன் வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா, "1980-களில் திருவண்ணாமலையில் அடிக்கடி கிரிவலம் செல்வேன். அப்போது என்னைப் பார்த்து பலரும் கிரிவலம் செல்லத் தொடங்கியதாக கூறுவார்கள். திருவண்ணாமலையில் காலடி வைத்தவுடன் செருப்பு அணிய மாட்டேன். இந்தப் பாடல்களை இறைவனே எனக்கு அருளினார். இசை என்பது தெய்வீகமான கலை. ஆன்மிகம் என்பது வாழ்க்கையிலிருந்து தனியானது அல்ல; வாழ்க்கையே ஆன்மிகம்" என்று உருக்கமாகப் பேசினார்.
நடிகை சுகன்யா, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவுக்கு திரும்புகிறார். ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடிக்கும் 'வரவு'படத்தில் கன்னியாஸ்திரி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
90 வயதிலும் உற்சாகமாக இருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி, தனது ஆரோக்கிய ரகசியங்களை பகிர்ந்துள்ளார். "நான் எப்போதும் வீட்டில் சமைத்த சைவ உணவையே சாப்பிடுவேன். ஆடம்பர உணவுகளை விரும்புவதில்லை. உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாவிட்டாலும், இரவில் சீக்கிரம் உணவருந்துவேன். இதுவரை உடல்நலக் குறைவால் எந்த படப்பிடிப்பும் பாதிக்கப்படவில்லை. தற்போது குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக நடிப்பில் இருந்து விலகியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், சென்சார் நடைமுறைகள் மற்றும் இணைய கசிவு போன்ற சவால்களைத் தொடர்ந்து, ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஜூலை 19 முதல் முன்பதிவு தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், படத்தின் டைட்டில் கார்டில் 'முதல்வர் விஜய்' என்ற பெயர் இடம்பெற உள்ளது.'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், திரையரங்குகளுக்கு சில முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிக்கெட்டுகளை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலேயே விற்பனை செய்ய வேண்டும் என்றும், 'ஏ' சான்றிதழ் பெற்ற படம் என்பதால் 18 வயதுக்குட்பட்டவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் வெளியீட்டில் எந்தவித முறைகேடும் நடைபெறாமல் இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
'ராமாயணா' திரைப்படத்தில் சீதா தேவியாக நடித்துள்ள சாய் பல்லவி, இந்தக் கதாபாத்திரம் தனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான அனுபவம் என தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், "சீதா தேவி போன்ற தெய்வீகமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. அந்த வேடம் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது. இது என் வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவம்," என்றார்.