இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.அதன்படி, 1901 ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, தற்போது 98 வாக்குச்சாவடிகள் அதிகரித்து மொத்தம் 1999 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளது. அதில் 88 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்கனவே உள்ள அமைவிடத்திலும், 10 வாக்குச்சாவடிகள் புதிய அமைவிடங்களிலும் உள்ளன.எனவே, இந்த கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், தங்களுக்கான வாக்குச்சாவடி மையத்தை தெரிந்து கொள்ளவும் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் “Know Your Booth” என்ற தலைப்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (23.02.2026) இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், 01.01.2026 - ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்-2026- மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வெளியிட்டார்.இறுதி வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 14,97,417 உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,28,539, பெண் வாக்காளர்கள் 7,68,632, இதர வாக்காளர்கள் 246 ஆக மொத்தம் 14,97,417 வாக்காளர்கள் உள்ளனர்.19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்குப் பிறகு தற்பொழுது 70,030 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்த, இறந்த வாக்காளர்கள் மற்றும் இரட்டைப்பதிவுகள் ஆக மொத்தம் 9,134 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, மொத்தம் 60,896 வாக்காளர்கள்கடந்தவரைவுபட்டியலைவிடகூடுதலாகஇடம்பெற்றுள்ளனர்.அதன்படி, 202-இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 1,03,236 ஆண்களும், 1,08,951 பெண்களும், 33 இதர பிரிவினரும் என மொத்தம் 2,12,220 வாக்காளர்களும், 203-ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1,08,109 ஆண்களும், 1,14,218 பெண்களும், 40 இதர பிரிவினரும் என மொத்தம் 2,22,367 வாக்காளர்களும், 204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1,10,693 ஆண்களும், 1,17,207 பெண்களும், 63 இதர பிரிவினரும் என மொத்தம் 2,27,963 வாக்காளர்களும், 205-சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் 1,09,420 ஆண்களும், 1,16,013 பெண்களும், 28 இதர பிரிவினரும் என மொத்தம் 2,25,461 வாக்காளர்களும்,206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் 96,436 ஆண்களும், 1,02,141 பெண்களும், 39 இதர பிரிவினரும் என மொத்தம் 1,98,616 வாக்காளர்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,00,000 ஆண்களும், 1,06,468 பெண்களும், 29 இதர பிரிவினரும் என மொத்தம் 2,06,497 வாக்காளர்களும், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் 1,00,645 ஆண்களும், 1,036,34 பெண்களும், 14 இதர பிரிவினரும் என மொத்தம் 2,04,293 வாக்காளர்களும், என ஆக மொத்தம் விருதுநகர் மாவட்டத்தில் 7,28,539 ஆண்களும், 7,68,632 பெண்களும், 246 இதர பிரிவினரும் என ஆக மொத்தம் 14,97,417 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.மேலும், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், 2026-ன் போது வாய்ப்பினை தவறவிட்டோர் மற்றும் 01.01.2026 அன்று 18 வயதினை பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம், மற்றும் நீக்கம் செய்ய விழையும் அனைவரும் 24.02.2026 முதல் இணைய வழியிலும், உரிய படிவங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வட்ட, கோட்ட, நகராட்சி, மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வழங்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (23.02.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில், நாராணபுரம் கிராமத்தில், வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த 1 நபருக்கும், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவல் கிராமத்தில், வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த 5 நபர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ஆக மொத்தம் 6 நபர்களுக்கு ரூ.3 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். மேலும், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 6-நபர்களுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 16 நபர்களுக்கு புதிரை வண்ணார் நல வாரிய அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்டசின்னம்பட்டி கிராமத்தில், வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) செயல்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் செயல்முறை வாகனப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் (21.02.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனை (VVPAT) இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்டசின்னம்பட்டி கிராமத்தில் (21.02.2026) நடைபெற்ற நடமாடும் விழிப்புணர்வு வாகனப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழிப்புணர்வு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொதுமக்கள் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்தும், தாங்கள் அளித்த வாக்கு சரியான வேட்பாளருக்குப் பதிவாகியுள்ளதா என்பதை VVPAT இயந்திரத்தின் மூலம் எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.இந்த ஆய்வின் போது, அங்கிருந்த பொதுமக்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், தேர்தல் நடைமுறையில் எவ்வித அச்சமும் இன்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து முழு நம்பிக்கை கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினார். கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், குறிப்பாக முதியவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களுக்கு இந்த விழிப்புணர்வு சென்றடைவதை உறுதி செய்யுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் இத்தகைய நடமாடும் வாகனங்கள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.வாக்குப்பதிவின் முக்கியத்துவம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் புதிய வசதிகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.இந்த ஆய்வின் போது, சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் திரு.முகமது இர்பான், I A S., வட்டாட்சியர் திரு.இலட்சம், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம் கோட்டநத்தம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வீடுகள் கட்டி குடியிருப்பதற்கான உத்தரவுகள் பெற்ற, 36 பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (21.02.2026) நேரில் சென்று வழங்கினார்.சொந்தமாக வீடு இல்லாமல், ஆட்சேபனை இல்லாத அரசுப் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு நில உரிமை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் "இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம்" என்ற உன்னதமான திட்டத்தை செயல்பட்டு வருகிறது. இது ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் நிலையான தன்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான பட்டாக்களை வழங்கிய மாவட்டங்களில் ஒன்றாக நமது மாவட்டம் திகழ்கிறது.அந்த வகையில்கோட்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்கள், தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வேண்டி விடுத்த கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் துரிதமாகப் பரிசீலித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் இதற்கான இணையவழி பட்டாக்கள் (Online Patta) தயார் செய்யப்பட்டன.அதனடிப்படையில், கோட்டநத்தம் பகுதியில் குடியிருந்து வரும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து வருவாய்த்துறையின் மூலம், 36 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார். தங்கள் இடத்திற்கான முறையான அரசு அங்கீகாரம் (பட்டா) கிடைத்ததன் மூலம் தங்களின் நீண்ட காலக் கனவு நனவாகியுள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.இதற்காகத் தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அவர்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.இந்நிகழ்வின் போது, விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் திரு.ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்டசின்னம்பட்டி கிராமத்தில் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகளைப் பிரித்து, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் , மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (21.02.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் நோக்கில், அதிகப்படியான வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கட்டசின்னம்பட்டி கிராமத்தில் ஒரே வாக்குச்சாவடியில் 1,200-க்கும் அதிகமான வாக்காளர்கள் இருந்ததைக் கருத்தில் கொண்டு, அதனைப் பிரித்து புதிய வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இன்று நடைபெற்ற இந்த ஆய்வின் போது, புதிய வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, மின்சாரம், கழிப்பறை வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இருக்கின்றனவா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு செய்தார்.வாக்குச்சாவடி மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்குத் தயாராக இருக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆய்வின் போது, சிவகாசி வட்டாட்சியர் மற்றும் தேர்தல் பிரிவு அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(20.02.2026) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தனர்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது. 3137 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.43 கோடி 87 இலட்சம் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம்) அவர்களால் தெரிவிக்கப்பட்டது.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சுமார் ரூ.245 கோடி பயிர் கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், பயிர்கடன் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது என இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) அவர்களால் தெரிவிக்கப்பட்டது.தென்னை, மா மரங்களுக்கு பயிர் காப்பீடு மற்றும் நிவாரணத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்ய கோரிக்கை வைத்தனர்.விருதுநகர் மாவட்டத்தில் அதிக அளவு உலர்களங்கள் தேவைப்படுகிறது எனவும், சிறப்பு நிதி ஒதுக்கி உலர்களம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.மம்சாபுரம் கிராமத்திற்கு நிரந்தர நூலக கட்டிடம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.சம்பா வத்தல் மற்றும் பஞ்சவர்ண மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும், மக்காகச்சோள உற்பத்தி அதிகரித்துள்ளதால் விவசாயிகள் நல்ல விலை கிடைக்காமல் அதிக அளவு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.கண்மாயில் கொட்டப்படும் கழிவுகளையும் மற்றும் சீமைக்கருவேல மரங்களையும் அகற்றி விரைவில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை, செயற்பொறியாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்குமாறும், நீர் நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ.,) திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், இணைப்பதிவாளர்(கூட்டுறவு சங்கங்கள்) திரு.செந்தில்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி இந்திரா உட்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி- 21 ஐ முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (20.02.2026) உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.அதன்படி, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத் தாய்மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(20.02.2026) காரியாபட்டி வட்டம், சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST) சார்பில் ரூ.6 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்களிடம், ப்ரைஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் திருமதி சினேகலதா பொன்னையா அவர்கள் வழங்கினார்.அதன்படி, காரியாபட்டி வட்டம், சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST) சார்பில் மல்லாங்கிணர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களான காரியாபட்டி, கல்குறிச்சி, முடுக்கன்குளம், முஷ்டகுறிச்சி ஆகிய கிராமங்களில் செயல்படும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அதற்குட்பட்ட 20 துணை சுகாதார நிலையங்களின் பயன்பாட்டிற்கு IFT- Machine for Physiotherapy, Multi Para Monitor, Pulse Oximeter, Digital Thermometer, Digital Weight Machine Adult, Digital weight Machine Paediatric, Air conditioner for Labour room, Crash cart, Water Heater, Height Machine, Glugo Meter, Stretcher with side rails, Suction apparatus single channel, Ro machine, Patient sitting stool, Magna vision Lamp, Suction apparatus (single Channel), Nebulizer, Multipara monitor, Wheel chair, Fridge, Ambu Bag (Adult), Dressing Trolley, Examination couch உள்ளிட்ட மொத்தம் ரூ.6 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்நிகழ்வில் துணை இயக்குநர்;(சுகாதாரப்பணிகள்) திருமதி மரு.யசோதாமணி(விருதுநகர்), எஸ்.பி.எம் அறக்கட்டளை நிறுவனர் திரு.எம்.அழகர்சாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ிருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(20.02.2026) இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015, பிரிவு 4-ன்படி, இளைஞர் நீதிக்குழுமத்தில் முன்னிலைப்படுத்தப்படும் சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சட்டத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடும்போது அவர்கள் சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள் என கருதப்படுகின்றனர். இதுபோன்ற நிலையில் உள்ள குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, குடும்ப மற்றும் பொருளாதார நிலை, எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் தவறுகளை செய்து குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இளஞ்சிறார்கள் தங்களின் தவறுகளை திருத்திக் கொண்டு நல்வழியில் ஈடுபடவேண்டும்.பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்ப்பதற்கும், படிக்க வைப்பதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள். பெற்றோர்களின் கஷ்டங்களையும், தங்களின் எதிர்கால வாழ்வினையும் உணர்ந்து குழந்தைகள் அனைவரும் செயல்பட வேண்டும். அனைத்து குழந்தைகளும் நல்லமுறையில் உயர்கல்வி வரை பயில புதுமைப்பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன், அன்புக்கரங்கள் நிதி உதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.இத்திட்டங்களை தங்கள் வாழ்க்கைக்கான ஏணிப்படிகளாக பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்லவேண்டும். இளஞ்சிறார்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. தொழில் திறன் உள்ள இளஞ்சிறார்கள் சுயதொழில் செய்ய முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து கடனுதவி பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சார்பு நீதிபதி திரு.P.பாலமுருகன், விருதுநகர் இளைஞர் நீதிக்குழுமம் முதன்மை நடுவர் திருமதி P.S.A.நிஷாந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மரு.க.பிரதௌஸ் பாத்திமா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, நன்னடத்தை அலுவலர் திரு,பால் இக்னேசியஸ் சேவியர்ராஜ், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.