25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 13, 2024

பள்ளி மேலாண்மைக்குழு புதிய உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் (12.09.2024) மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு புதிய உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளியில் மேம்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதி, கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் சேர்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், நிதி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை மேம்படுத்துதல் மூலம், பள்ளியின்  வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதே இந்த பள்ளி மேலாண்மைக்குழுவின் நோக்கமாகும்.ஒரு பள்ளி என்பது அங்கு வரக்கூடிய மாணவர்களுக்கு நல்ல கல்வியை, சிந்தனையை தருவது, நல்ல ஒழுக்கத்தை போதித்து, சிறப்பாக கற்பித்து அதன் மூலமாக நல்ல மதிப்பெண்களை வாங்கச் செய்து, ஒரு நல்ல வாழ்க்கையை அமைவதற்கான ஒரு சூழலை தருவது தான்.ஒரு பள்ளி என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வரக்கூடிய பள்ளியின் கட்டிடம், அங்கு இருக்கக்கூடிய வசதிகள் உள்ளிட்டவைகள் எல்லாம் ஒட்டுமொத்த பள்ளியின் உடைய செயல்பாட்டிற்கு 20 விழுக்காடு தான் பங்களிப்பைச் செய்யும். மீதமுள்ள 80 விழுக்காடு முழுமையடைவதற்கு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் இன்னும் சிறப்பாக ஒருங்கிணைந்த முயற்சி அவசியமாகிறது.மென் போதை பொருட்களை தடுப்பதற்கு நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். அதை விற்பவர்களின் மீது தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி ஒரு பள்ளியில் இது குறித்து விழிப்புணர்வும், கண்காணிப்பும், மாணவர்களை அறிவியல் பூர்வமாக அணுகுவதும் முக்கியமானது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 18 வயதிற்கு குறைவான வயதில் திருமணம் முடிந்து 19 வயதுக்குள் கருத்தரித்த தாய்மார்கள் எண்ணிக்கை சுமார் 400 லிருந்து 500 ஆக உள்ளது. இதில் பெரும்பாலும் குழந்தை பிறந்து ஓராண்டுக்குள், இறந்து போகின்ற இறப்பு விகிதத்தை எடுத்து, ஒவ்வொரு இறப்பையும் ஆய்வு செய்து பார்த்தால், அதில் பெரும்பாலான குழந்தைகள் பிறப்பிலேயே எடை குறைவாக பிறந்ததால் அவர்கள் உயிரிழப்பை சந்திக்கிறார்கள்.                  அதற்கு காரணம் அந்த குழந்தையினுடைய தாயாக இருக்கக்கூடிய எடை குறைவான 18 வயதுக்கு உட்பட்ட மாணவி அல்லது சிறுமி ஒரு குழந்தைக்கு தாயாகும் போது, அந்த குழந்தையும் எடை குறைவாக பிறக்கிறது.  இதை தடுப்பதற்கு பள்ளி மேலாண்மைக்குழு முயற்சி செய்ய வேண்டும். ஒரு ஊரில் ஒரு பெண் என்று மட்டும் நாம் நினைக்கக் கூடாது. நமது ஊரில் நாளை அந்த பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறக்கின்ற போது, அந்த குழந்தை உடல் வளர்ச்சியோ, மனவளர்ச்சியோ இல்லாமல் பிறந்தால், அது வாழ்நாள் முழுவதும் எவ்வளவு பெரிய துன்பத்தை சந்திக்க வேண்டும்.                அப்படி உடல் நலம் குறைவாக இருக்கக்கூடிய ஒரு குழந்தை அந்த குடும்பத்திற்கு எவ்வளவு பாரமாக, ஒரு சுமையாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற குழந்தை திருமணங்கள் குறித்து விழிப்புணர்வும், அதனை தடுப்பதற்கும் பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.அரசு திட்டங்கள் உயர் கல்விக்கு நிறைய இருக்கின்றது. புதுமைப் பெண் மற்றும் தமிப்புதல்வன் திட்டங்கள் மூலம் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும், பல்வேறு திட்டங்களின் மூலமாக மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.          முதலாம் ஆண்டு கல்லூரியில் மாணவர்கள் சேர்கின்ற போது புத்தகங்கள், சீருடைகள், கல்விக்கட்டணம் போன்ற உதவிகள் தேவைப்படும் மாணவர்களுக்கு விருதுநகர் மாவட்டத்தின் உடைய கல்வி அறக்கட்டளையிலிருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்படி பல்வேறு பொருளாதார திட்டங்கள் இருக்கின்ற போது இன்னும் விழிப்புணர்வு இல்லாமல் நமது ஊரில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேராமல் இருப்பது என்பது ஒரு அவல நிலையே ஆகும்.  பள்ளி மேலாண்மை குழுத் தலைவராக, உறுப்பினராக அந்த பள்ளியை நன்றாக செயல்படுத்த வேண்டும். நன்றாக செயல்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கடந்த காலங்களில் பல பள்ளி மேலாண்மைக்குழு மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. நிறைய பள்ளி மேலாண்மை தலைவர்கள் மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து கவனத்திற்கு கொண்டு வரலாம்.                  பள்ளிக்கு தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளோடு மாணவர்களின் கற்றல் அறிவு திறனை மேம்படுத்துவதிலும், பள்ளிகளில் ஆரோக்கியமான சூழலை உண்டாக்குவதற்கும் பள்ளி மேலாண்மை குழு செயல்பட வேண்டும். பள்ளிக்குத் தேவையான வசதிகளை முக்கியத்துவத்தின் அடிப்படையில் பட்டியலிட்டு ஒவ்வொன்றாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்மிடம் இருக்கின்ற வசதிகள் கொண்டு சிறப்பான பணியை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக்கான தேவைகள் நிறைய இருக்கும் போது ஒரு சில முக்கியமான மாற்றங்களை செய்து எந்த செலவும் இல்லாமல் ஒரு பள்ளியின் உடைய கற்றல் கற்பித்தல் தரத்தை உயர்த்த முடியும்.                 மேலும், மாணவர்களுக்கு முறையான கல்வி மற்றும் ஒழுக்கத்தை கற்று கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அறிவுரைகளை வழங்கி, போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் நல்ல சமுதாயத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் பள்ளி மேலாண்மைக்குழு சிறப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 11 வட்டாரங்களை சார்ந்த 190 அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.                 

Sep 13, 2024

சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை மூலம், சத்துணவுப் பணியாளர்களுக்கான ஊட்டசத்து சுவை மற்றும் உணவின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பான புத்தாக்க பயிற்சி

விருதுநகர் மாவட்டம், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில்(12.09.2024) சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை மூலம், சத்துணவுப் பணியாளர்களுக்கான ஊட்டசத்து சுவை மற்றும் உணவின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பான புத்தாக்க பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.சத்துணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவு என்பது, பள்ளிக் குழந்தைகளுக்கு பசியை போக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஊட்டசத்து மிக்க உணவை சுவையாக வழங்குவதே நோக்கமாகும்.அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், மதிய உணவுத்திட்டம் குறித்து பல்வேறு அரசு பள்ளிகளில் களஆய்வு மேற்கொண்டதில்,  பல பள்ளிகள் தரமான, சுவையான உணவுகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.சமைக்கக்கூடிய உணவை பொறுமையாக பக்குவத்துடன், நம் வீட்டில் எவ்வாறு உணவு சமைக்கின்றோமோ, அவ்வாறு சமைத்தாலே போதுமானது. சத்துணவுத்திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு, ருசியான தரமான உணவை கொடுத்தால் ஊட்டச்சத்து குறைபாட்டால் வரும் இரத்தசோகை குறைபாட்டிற்கு தீர்வு காண முடியும். பள்ளிகளில் நல்ல தரமான உணவை சமைத்தால் குழந்தைகள் உண்ணும் அளவை, அதிகப்படுத்தி கொள்வார்கள். அதனால் அவர்கள் ஊட்டசத்து பெற்று, குழந்தைகளின் உடல் வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் எனவே, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்பதை நினைவூட்டுவதற்காக தான் இந்த பயிற்சி முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம். குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டு எனவும், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) திரு.ஜெகதீசன், அரசு அலுவலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 13, 2024

அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக குவாலியரில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்றசெல்வன். பொன்அரசன் என்பவரை மாவட்ட ஆட்சித்தலைவர்  நேரில் அழைத்து வாழ்த்தினார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(10.09.2024) தேசிய அளவில் சிறப்பு ஒலிம்பிக் பாரத் கமிட்டியால் நடத்தப்படும் அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக குவாலியரில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் BOCCE பந்தயத்தில் இரட்டையர் பிரிவில் தங்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்ற சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ அறிவுசார் குறைவுடையோர்க்கான பள்ளியில் பயிலும் செல்வன். பொன்அரசன் என்பவரை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S ,. அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்தினார்.

Sep 13, 2024

உயர்கல்வி சேர்க்கை பெற்று, முதலாமாண்டு கல்விக்கட்டணம் செலுத்துவதற்கு உதவி வேண்டி விண்ணப்பித்த மாணவிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காசோலையினை வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (12.09.2024) 2024-25ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி சேர்க்கை பெற்று, முதலாமாண்டு கல்விக்கட்டணம் செலுத்துவதற்கு உதவி வேண்டி விண்ணப்பித்த மாணவிக்கு விருதுநகர் கல்வி அறக்கட்டளை மூலம் ரூ.10,000/- க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார்.

Sep 13, 2024

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திட்டங்கள் மூலம் விவசாயிகள், விவசாய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் தனிநபர் பட்டதாரிகள் தொழில்முனைவோராக மாற வாய்ப்பு

 விவசாயிகள், விவசாய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் தனிநபர் பட்டதாரிகள் ஆகியயோர்களுக்கு அரசின் திட்டங்களை பயன்படுத்தி தொழில்முனைவோராக வருமானத்தை அதிகரித்து வாழ்க்கை தரத்தினை உயர்த்திட பின்வரும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திட்டங்களை பயன்படுத்திட அறிவுறுத்தியுள்ளார்.வேளாண்மை என்பது தற்போது வாழ்வாதார அடிப்பையிலான நடைமுறைகளிலிருந்து வணிகம் சார்ந்த அணுகுமுறைக்கு மாறுவது காலத்தின் அவசியமாகின்றது. விவசாயிகள் உற்பத்தி செய்வதோடு நிறுத்திவிடாமல் மதிப்புக்கூட்டுதல், சந்தைபடுத்துதல் போன்ற தொழிலை மேற்கொண்டு அதிக லாபம் பெற்று ஒரு தொழில்முனைவோராகி தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு துணைபுரியும் வகையில் மத்திய மாநில அரசுகள் தனிநபர் விவசாய தொழில்முனைவோரை உருவாக்க தொழில்முனைவோருக்கான பல்வேறு மானிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இதில் முதல் திட்டமாக வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் அறுவடைக்குப்பின்னான வேளாண் உட்கட்டமைப்பு வசதிகளான, முதன்மை பதப்படுத்தும் மையங்கள், விளைபொருள் சேமிப்பு கிட்டங்கி, குளிர்பதன கிட்டங்கி,  டரோன், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், வாடகை இயந்திர மையங்கள், இயற்கை இடுபொருள் உற்பத்தி ஆகிய வசதிகளை ஏற்படுத்திட 3 சதவீத வட்டி தள்ளுபடியுடன், ரூ.2 கோடி வரை உத்தரவாதத்துடன் கூடிய வங்கி கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு துணைபுரியும் வகையில் வணிகத்திட்டம் தயாரித்தல், கருத்துரு தயாரித்தல், வங்கி கடன் பெற்று தருவது ஆகியவற்றிற்கு அரசு சார்பில் மாவட்ட ஆதார அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தனிநபர் விவசாயி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், தனிநபர் தொழில்முனைவோர்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கிகளில் 9 சதவிகித வட்டியில் கடன் பெற்று அதற்கு 3 சதவீத  வட்டித்தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்.சிறுதானிய பயிர் சாகுபடி மற்றும் மதிப்புக் கூட்டுதலை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் திட்டத்தின் கீழ் தனிநபர், விவசாயி மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆகியவர்களுக்கு மதிப்பு கூட்டு நிலையங்கள் அமைக்க தேவைப்படும் இயந்திரங்களான கல் தூசி நீக்குவது, தோல் நீக்கும் இயந்திரம், நிறத்தின் அடிப்படையில் தரம் பிரிக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் சிப்பம் கட்டும் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய  மானியமாக 75 சதவீதம் என அதிகபட்சமாக ரூ.18.75 லட்சம்;; வரை வழங்கப்படுகின்றது.மேலும் மற்றொரு திட்டமான தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் மதிப்பு கூட்டு இயந்திரங்கள் வாங்குவதற்கு புதிய வேளாண் தொழில்முனைவோருக்கு 40 சதவீகிதமாக ரூ.2 இலட்சம் வரையும், செயல்பாட்டிலுள்ள வேளாண் தொழில் நிறுவனத்தை விரிவுப்படுத்திட 50 சதவீகிதமாக ரூ.5 இலட்சம் வரையும் மானியம் வழங்கப்படுகின்றது. எனவே இத்தகைய திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 12, 2024

வடகரை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம செயலக கட்டிடத்தினை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், வடகரை ஊராட்சியில்  (11.09.2024) மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42.65 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம செயலக கட்டிடத்தினை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்  I A S, அவர்கள் திறந்து வைத்தார்.

Sep 12, 2024

இராஜபாளையம் ஸ்ரீரமண வித்யாலயா மாண்டிசோரி பதின்ம மேல்நிலைப்பள்ளியில்இலக்கிய மன்ற தொடக்க விழா

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஸ்ரீரமண வித்யாலயா மாண்டிசோரி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் (11.09.2024) இலக்கிய மன்ற தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S , அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பாடப்புத்தகங்களில் இல்லாததையும், உங்களுடைய கற்பனைகளின் இருக்கக்கூடியவற்றை மொழியாக மாற்றுவதற்கும் நீங்களும் முயல வேண்டும் என்பதற்குத்தான்   இலக்கிய மன்றம் துவங்கப்படுகிறது.இலக்கியம் போன்று பெரிய நூல்கள், இலக்கண விதிகளின் அடிப்படையில் எடுத்துக் கொண்ட பாடல்கள் மட்டுமல்ல ஒரு சாதாரண கதை அந்த கதை இந்த சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிகப்பெரிய இலக்கியமாக இருக்கும்.மிகச் சாதாரணமான கதையில் ஒரு சமூகத்தின் அவல நிலையை சொல்ல முடியும். எதை நீங்கள் கோபமாக பார்க்கிறீர்களோ அந்த கோபத்தை ஒரு கதையாக கொண்டு வர முடியும். நீங்க எந்த ஒன்றை மிக விசித்திரமாக நோக்குகிறீர்களோ அதை ஒரு கவிதை வடிவில் மாற்ற முடியும்.மனிதன் வாழக்கூடிய வாழ்க்கையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது தான் இலக்கியம். இந்த வாழ்க்கையை எளிமையாக, பிரச்சினை இல்லாமல் வாழ்வதற்கு தேவையான எல்லா வழிகாட்டுதலும் கிடைத்து விடுமா என்றால் இல்லை. அப்போது நம் முன்னோர்களும், இலக்கியமும் நமக்கு வழிகாட்டுகிறது. இலக்கியம் என்பது படைப்பு இலக்கியங்கள், கற்பனை இலக்கியங்கள் மட்டுமல்ல. எந்த ஒன்றையும் பதிவு செய்து வைத்திருந்தால் அதுவும் இலக்கியம். அப்படிப்பட்ட அந்த இலக்கிய மரபின் தொடர்ச்சியில் நாம் வாழக்கூடிய காலகட்டத்தில் நாம் எதிர் கொள்ளக்கூடிய சிக்கல்களை, சிக்கல் இல்லாமல் வாழ்வதற்கு வழி காட்டுவது இலக்கியம். ஒரு சிறிய கவிதை, ஒரு திருக்குறள் மனிதருடைய சிந்தனையையும், மனிதர்களுக்கு தேவையான வாழ்க்கையையும் அப்படியே மாற்றும்.ஒரு வாழ்க்கையில் எந்தெந்த விழுமியங்களை எல்லாம் நம் சார்பாக கடைபிடிக்க வேண்டும். அறிவியல் சிந்தனையோடு நாம் எப்படி செயல்பட வேண்டும். மற்றவர்களின் மாற்றுக் கருத்துக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும். இப்படி எல்லாவற்றையும் சொல்லித் தந்து மனிதனை மனிதனாக ஆக்குவது தான் இலக்கியம். இதை பாடப் புத்தகம் முழுமையாக செய்ய முடியாது. இலக்கியம் என்பது மிகப்பெரிய பாடநூலோ, புரியாத கவிதை நூல்களோ அல்ல. மிக எளிமையாக சொல்வதும் இலக்கியம்தான். எனவே இந்த இலக்கிய மன்றத்தின் உடைய நோக்கம் என்பது நீங்களும் அவ்வப்போது வாசிக்க வேண்டும். வாசிப்பதன் மூலமாக அதில் இருக்கக்கூடிய சிறிய சொற்கள் மூலம் நாமும் ஒரு நான்கு வரியில் ஏதாவது ஒன்றை குறித்து எழுத முடியுமா என்று முயற்சிப்பது தான்.இந்த சமூகப் பார்வை எப்படி இருக்கிறது. இந்த சமூகத்தில் நம்மை சுற்றி நடக்கக்கூடிய அவலங்களின் மீது நம்முடைய பார்வை என்ன. நாளை நீங்கள் இந்த சமூகத்தில் மிக முக்கியமான நபராக எந்த தொழிலை மேற்கொண்டாலும். ஒரு மருத்துவராக, விஞ்ஞானியாக, எழுத்தாளராக, ஒரு அறிவியல் நிபுணராக, அரசு அலுவலராக நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், அந்த சூழ்நிலையில் இந்த சமூகத்தை நீங்கள் பார்த்த அவலங்களை மாற்றுவதற்கு ஏதேனும் வாய்ப்பிருக்கிறீர்களா என்பது குறித்து, உங்களை இப்போது இருந்து யோசிக்க வைப்பதற்கு தான் இலக்கியம். அப்படிப்பட்ட இலக்கியத்தை நீங்கள் தொடர்ச்சியாக வாசிப்பதற்கு இந்த இலக்கிய மன்றம் பயன்படும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.பின்னர், இப்பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.மேலும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விளக்கமளித்தார்.இந்நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 12, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.09.2024 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் செப்டம்பர்-2024 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 20.09.2024 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 12, 2024

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (11.09.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தாயில்பட்டி கிராமத்தில்,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9 இலட்சம் மதிப்பில் சமுதாய நீர் சேகரிப்பு புதிய குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,மடத்துப்பட்டி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.2.68 இலட்சம் மதிப்பில் சாலை ஓரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும்,இ.டி.ரெட்டியபட்டி கிராமத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.10 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,காக்கிவாடன்பட்டி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.6.59 இலட்சம் மதிப்பில் புதிய குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,காக்கிவாடன்பட்டி, கான்சாபுரம் மற்றும் மம்சாபுரம் ஆகிய கிராமங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.68 இலட்சம் மதிப்பில் சாலை ஓரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும்,பூசாரிபட்டி கிராமத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.10 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,துரைசாமிபுரம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.98 இலட்சம் மதிப்பில் புதிய குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Sep 12, 2024

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மாரனேரி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மாரனேரி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் தலைமையில்  (11.09.2024) நடைபெற்றது.இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 19 பயனாளிகளுக்கு ரூ.2,15,250/- மதிப்பிலான  பல்வேறு உதவித் தொகைகளையும், 255 பயனாளிகளுக்கு ரூ.1,01,77,085/- மதிப்பில் இணைய வழி பட்டாக்களையும்,  15  பயனாளிகளுக்கு ரூ.9,30,000/- மதிப்பில், சாலை விபத்து நிவாரண தொகைகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில், 3 பயனாளிகளுக்கு ரூ.14,500/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில், 8 பயனாளிகளுக்கு ரூ.7,35,000/- மதிப்பிலான கல்தூண் பந்தல் அமைத்தல், சிப்பம் கட்டுதல் அறை, நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், மீன்வளத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2000/- மதிப்பிலான மீன் குஞ்சுகளையும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 322 பயனாளிகளுக்கு ரூ.1.21 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைசார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.ஏழை எளிய கிராமப்புற மக்கள் தமக்கான சந்தேகங்களை போக்கிக் கொண்டு, அறிவியல் பூர்வமாக தெரிந்து கொண்டு பயன்பெறுவதே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதின் நோக்கம். தமிழ்நாடு அரசு மூலம் ஒவ்வொரு துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் அதை சார்ந்த உபத்தொழில்கள் மற்றும் இந்திய அளவிலே அதிகமாக அச்சகத் தொழிலும்; மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மேலும், தமிழ்நாடு அரசானது, வேளாண்மைத்துறையின் மூலமாக இ-வாடகை என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதில் நமக்கு தேவையான விவசாய உபகரணங்களை அரசு வழங்கி வருகிறது.கால்நடைத்துறையின் சார்பில், ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் அந்த இடத்தில் தீவனப் பயிர்களை வளர்ப்பதற்கு உரிய கடன் வழங்கப்படுகிறது மற்றும் கால்நடைகளை பராமரிப்பதற்கு உரிய கடன்களும் வழங்கப்படுகிறது.  தற்போது, பொதுமக்களிடையே மாறி வரும் உணவு பழக்கவழக்கத்தின் காரணமாக நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவை மூலம், எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் வருவதற்கான காரணமாக அமைகின்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலமாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயாளிக்கு பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை,  இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை  ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகளை நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று  வழங்கப்பட்டு வருகிறது.குறிப்பாக புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் ஆகிய திட்டங்கள் மூலம் 6-லிருந்து 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவ/மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக நமது பகுதிகளில் கல்லூரி படிப்பை அதிகப்படுத்த வேண்டும்.இந்தியாவிலேயே அதிகப்படியான பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் ஒரு மாவட்டத்தில் இருக்கிறார்கள் என்றால் அது நமது மாவட்டம் தான் இந்தியாவில் இருக்கக்கூடிய மாவட்டங்களிலே முதல் மாவட்டமாக இருக்கிறது.ஒருவர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி விட்டார் என்றால் அதற்கென்று அறிவியல் பூர்வமான சிகிச்சை முறைகள் இருக்கிறது. அரசு மருத்துவமனையிலும் போதை மீட்பு மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ளது. இந்த மையங்களில் போதைக்கு அடிமையானவர்களை 15 நாட்களில் விஞ்ஞான பூர்வமாக மருந்து மாத்திரைகளை வழங்கி, முறையான ஆலோசனைகளை கூறி  சரி செய்துவிடலாம்.வேலைவாய்ப்புத் துறையின் மூலமாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள்  அரசு வேலைக்கு செல்வதற்காக அவர்களுக்கென்று பயிற்சி வழங்குவதற்காக நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு,  பயன்பெற வேண்டுமெனவும், மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிசந்திரன்.,I A S., மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, சிவகாசி வட்டாட்சியர் திரு.லட்சம், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 11 12 13 14 15 16 17 ... 69 70

AD's



More News