மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்களது தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல் குழு கூட்டம் (04.08.2026) நடைபெற்றது.உணவு வணிகர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் மற்றும் அவர்கள் தொழிலை மேம்படுத்துவதற்கான சட்டப்பூர்வ வசதிகள் போன்றவை குறித்தும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தில் அவர்களுக்கு உள்ள சலுகைகளும் எடுத்துரைக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அபராத தொகையில் தெருவோர வியாபாரிகளுக்கு 50% சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள உணவகங்கள் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு தணிக்கை நிறுவனங்களால் தணிக்கை செய்யப்பட்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தின் தலைமை செயல் அலுவலரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட விதிகளின் படி சரியான உணவு வளாகம் (Eat Right Campus) என்ற சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.அனைத்து உணவு வணிகர்களும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் பதிவு/உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்மசாலா விற்பனை கூடாது. உணவுகளை பொட்டலமிட நெகிழி (Plastic) பயன்படுத்தக் கூடாது. காலாவதியான உணவுபொருட்களையோ, குளிர்பானங்களையோ விற்பனை செய்யக் கூடாது. தெருவோரக் கடைகள் மற்றும் தள்ளுவண்டி உணவகங்கள் உட்பட அனைவரும் சுத்தமான, சுகாதாரமான உணவுகளை விற்பனை செய்யவேண்டும் மற்றும் தரமான உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிக்கவேண்டும். உணவு எண்ணெயினை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை RUCO அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளர்களிடம் மட்டுமே ஒப்படைக்கவேண்டும். இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கெட்டுப்போன நாள்பட்ட இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனைசெய்யக் கூடாது.மேற்படி அறிவிப்பில் விதி மீறல்கள் இருக்கும் பட்சத்தில் அபராதத்துடன் கூடிய துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.எனவே, வணிகர்கள் பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு உணவு பாதுகாப்பு விதிமுறைகளின் படி உணவு தயாரித்து விற்பனை செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.கூட்டத்தினை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.ச.மாரியப்பன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார். அந்தக் கூட்டத்தில் உணவு வணிக சங்கப் பிரதிநிதிகள், நுகர்வோர் சங்கப் பிரதிநிதிகள், பல்வேறு அரசுத் துறையின் அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் திருச்சுழியில் 2026-ம் ஆண்டிற்கான ஓராண்டு, ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியாளர்களின் நேரடிச்சேர்க்கை 31.07.2026 முடிய நடைபெற்றது. இச்சேர்க்கையில் பூர்த்தி செய்யப்பட்ட இடங்கள் போக காலியாகவுள்ள தொழிற்பிரிவுகளில் இன ஒதுக்கீடு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் 14.08.2026 முடிய உரிய அசல் கல்விச்சான்றுகளை வழங்கி, நேரடிச்சேர்க்கையில் மாணவ, மாணவிகள் அதிகளவில் சேர்ந்து தொழிற்கல்வியினை பயின்று வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.மேலும் இப்பயிற்சியில் ஓராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.185/-ம் மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.195/-ம் நேரிடையாக செலுத்தப்பட வேண்டும். இந்நிலையத்தில் பயிற்சி பெறும் தகுதியுள்ள அனைத்து பயிற்சியாளர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை, மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப), சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) , மூடு காலணி 1 செட், பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை, இவற்றுடன் 6ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு முடிய அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பெறும் ஆண், பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை பெற்று வழங்கப்படும். இவ்வாய்ப்பினை 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுடைய 11, 12, பட்டய, பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, இடைநின்ற மாணவ, மாணவியர் தொழிற்கல்வியினை பயின்று நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பினை மத்திய/மாநில/ தனியார் அரசு தொழிற் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெற வளாகத் தேர்வு மூலம் தெரிவு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (03.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.28.69 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S ., அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், பல்வேறு விபத்துக்களில் தாய், தந்தை இருவரில் எவரேனும் ஒருவரை இழந்த 35 மாணவர்களுக்கு தலா ரூ.75,000/- வீதம் மொத்தம் ரூ.26.25 இலட்சம் மதிப்பிலான வைப்பு பத்திரங்களையும், சத்துணவு திட்டத்தில் பணிபுரிந்து பணியின் போது மரணம் அடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு 2 பயனாளிக்கு சத்துணவு அமைப்பாளர் பணி ஆணையினையும், 1 பயனாளிக்கு சமையாலளர் பணி ஆணையினையும், 2 பயளானிகளுக்கு சமையல் உதவியாளர் பணிக்கான ஆணை என மொத்தம் 5 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும் வழங்கினார். மேலும், இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.2.44 இலட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 462 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் வடுகபட்டி – தெற்குவெங்காநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலை - 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய நில உடைமைதாரர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கும் பொருட்டு நில உடைமைதாரர்களிடமிருந்து நில ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலங்களில் நடைபெற உள்ளது. அதனடிப்படையில், இராஜபாளையம் வட்டத்தில் 05.08.2026 புத்தூர் கிராமத்திலும், 06.08.2026 மேலூர்துரைசாமிபுரம் கிராமத்திலும், 07.08.2026 சமுசிகாபுரம் கிராமத்திலும், 10.08.2026 இளந்திரைகொண்டான் கிராமத்திலும், 18.08.2026 தெற்குவெங்காநல்லூர் கிராமத்திலும், 20.08.2026 மேலராஜகுலராமன் கிராமத்திலும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 04.08.2026 நத்தம்பட்டி கிராமத்திலும், 06.08.2026 அத்திகுளம் செங்குளம் கிராமத்திலும், 10.08.2026 அயன் நாச்சியார்கோவில்(தெய்வேந்திரி) கிராமத்திலும், 17.08.2026 பூவாணி, நல்லிங்கபேரி பாட்டக்குளம் சல்லிப்பட்டி கிராமத்திலும், 19.08.2026 களத்தூர், அம்மாபட்டி, மூவரை வென்றான் கிராமத்திலும், 21.08.2026 பிள்ளையார் குளம் கிராமத்திலும், 25.08.2026 குன்னூர் கிராமத்திலும், 27.08.2026 விழுப்பனூர் கிராமத்திலும், நடைபெற உள்ளது.ஆகவே, தேசிய நெடுஞ்சாலை – 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான உரிமை குறித்த ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்காத நிலஉடைமைதாரர்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு 23.04.2026 அன்று நடைபெற்று, மேற்படி தேர்தலில் பதிவான வாக்குகள் 04.05.2026 அன்று எண்ணிக்கை செய்யப்பட்டு, தேர்தல் முடிவுகள் அன்றைய தினமே அறிவிப்பு செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்தமுள்ள 269 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளின் அடிப்படையில், வாக்கு எண்ணிக்கையில் இரண்டாவது இடம் பிடித்த திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு.தங்கபாண்டியன் என்பவர், இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணிகளுக்காக உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்துள்ளார்.அதன்படி, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.தங்கபாண்டியன் அவர்களால் குறிப்பிடப்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியானது பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள் குழுவினரால், தொடர்புடைய வேட்பாளரால் நியமிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் 29.07.2026 (புதன்கிழமை) முதல் 03.08.2026 (திங்கள்கிழமை) வரை நடைபெற்றது. மேலும், சரிபார்ப்புப் பணிகளின் போது தொடர்புடைய வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை செய்யப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திர மாதிரி வாக்குப்பதிவு முடிவுகள், VVPAT இயந்திரத்தில் உள்ள சரிபார்ப்புச் சீட்டுகளுடன் (VVPAT Slip) ஒப்பிடப்பட்டு, இரண்டு முடிவுகளும் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமின்றி சரியாக உள்ளது என பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள் குழுவினரால் தொடர்புடைய வேட்பாளரால் நியமிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் உறுதி செய்யப்பட்டது. இச்சரிபார்ப்பு நடைமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து இயந்திரங்களும் (Checking and Verification passed) பெற்றன. EVM/VVPAT- burnt memory/microcontoller-ல் எந்தவிதமான மாற்றமோ அல்லது முறைகேடோ இல்லை என்று BEL பொறியாளர் சான்றளித்துள்ளார். மேலும், அதன் நகலானது மனுதாரரின் பிரதிநிதியிடம் வழங்கப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) மற்றும் EDII அகமதாபாத் இணைந்து "தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம்" என்ற சான்றிதழ் (Certificate Course on Entrepreneurship and Innovation) படிப்பைத் தொடங்கவுள்ளது. இதற்கான வகுப்புகள் வரும் 03.08.2026 அன்று தொடங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் https://editn.in/Web-One-Year-Registration என்ற இணைய தளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.இந்த பாடத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.80,000/- கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது(Scholarship upto 75 %). 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ -இல் தொழிற்பயிற்சி முடித்தவர்கள் இந்த பயிற்சியில் சேர தகுதியுடையவர்கள். இந்த பாடநெறி ஒரு தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்பாகும். மேலும், விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்திலும் மற்றும் 86681-01638 /86681-07552 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வடுகபட்டி – தெற்குவெங்காநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலை - 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய நில உடைமைதாரர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கும் பொருட்டு நில உடைமைதாரர்களிடமிருந்து நில ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலங்களில் நடைபெற உள்ளது.அதனடிப்படையில் , இராஜபாளையம் வட்டத்தில் 05.08.2026 புத்தூர் கிராமத்திலும், 06.08.2026 மேலூர்துரைசாமிபுரம் கிராமத்திலும், 07.08.2026 சமுசிகாபுரம் கிராமத்திலும், 10.08.2026 இளந்திரைகொண்டான் கிராமத்திலும், 18.08.2026 தெற்குவெங்காநல்லூர் கிராமத்திலும்,20.08.2026 மேலராஜகுலராமன் கிராமத்திலும்,திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 04.08.2026 நத்தம்பட்டி கிராமத்திலும், 06.08.2026 அத்திகுளம் செங்குளம் கிராமத்திலும்,10.08.2026 அயன் நாச்சியார்கோவில்(தெய்வேந்திரி) கிராமத்திலும்,17.08.2026 பூவாணி, நல்லிங்கபேரி பாட்டக்குளம் சல்லிப்பட்டி கிராமத்திலும்,19.08.2026 களத்தூர், அம்மாபட்டி, மூவரை வென்றான் கிராமத்திலும்,21.08.2026 பிள்ளையார் குளம் கிராமத்திலும்,25.08.2026 குன்னூர் கிராமத்திலும்,27.08.2026 விழுப்பனூர் கிராமத்திலும், நடைபெற உள்ளது. ஆகவே, தேசிய நெடுஞ்சாலை – 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான உரிமை குறித்த ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்காத நிலஉடைமைதாரர்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S. ,அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு மூலம் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்தத் திட்டம் 2026 மே 10 முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 200 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் சுமார் 4,47,087 நுகர்வோர் இனி மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மொத்தமாக 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் 6,75,024 நுகர்வோர் இந்த திட்டத்தின் பலனைப் பெற்று வருகின்றனர்.501 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு வழக்கம்போல 100 யூனிட் இலவச மின்சாரச் சலுகை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புள்ளிவிவரங்களின்படி 100 யூனிட் வரை பயன்படுத்தும் 2,50,608 நபர்களும், 101 முதல் 200 யூனிட் வரைபயன்படுத்தும் 1,96,479 நபர்களும் முழுமையாக மின் கட்டண விலக்கைப் பெறுகின்றனர். மேலும், 201 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தும் 1,97,185 நபர்களும், 401 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தும் 30,752 நபர்களும் 200 யூனிட் இலவச மின்சாரச் சலுகைகளை பெற்று பயனடைந்து வருகின்றனர்.இந்தத் திட்டத்தின் மூலம் குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் அதிக அளவில் பயனடைந்து, குடும்பங்களின் மின்கட்டணச் சுமை குறைந்து அத்தியாவசிய செலவுகளுக்கு கூடுதல் சேமிப்பை பயன்படுத்த இத்திட்டம் உறுதுணையாக உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS ., அவர்கள் தெரிவித்துள்ளார்.200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தால் தங்களது மின்சுமை குறைந்துள்ளதாகவும், சேமிக்கப்படும் தொகையை குடும்பத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடிவதாகவும் தெரிவித்து, மாவட்டத்தின் பல்வேறு தரப்பினர் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டாரங்களைச் சேர்ந்த 81 பயனாளிகளுக்கு கணினி திருத்த பட்டாக்களை (31.07.2026) வழங்கினார்.வருவாய்த்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நில உடைமை பதிவு ஆவணமான கிராமக்கணக்குகளுக்கும், தமிழ்நிலம் இணையதளத்திற்கும் உள்ள வேறுபாடுகளை களைந்து பட்டா வழங்கக் கோரி பொதுமக்களிடமிருந்து அதிக அளவில் கோரிக்கை மனுக்கள் வரப்பெறுவதால், சிறப்பு முகாம்கள் நடத்தி விரைந்து தீர்வு காணுமாறு வருவாய்க் கோட்டாட்சியர்கள் / வட்டாட்சியர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தியதன்பேரில், (31.07.2026) அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்ட அளவிலான சிறப்பு முகாம், அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில், அருப்புக்கோட்டை வட்டத்தில் 30 நபர்களுக்கும், காரியாபட்டி வட்டத்தில் 29 நபர்களுக்கும், திருச்சுழி வட்டத்தில் 22 நபர்களுக்கும், மொத்தம் 81 பயனாளிகளுக்கு தமிழ்நிலம் இணையவழி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உத்தரவு ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.மேலும், இது போன்று ஒவ்வொரு கோட்டத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தமிழ்நிலம் இணையவழி திருத்தங்கள்/விடுதல்கள் தொடர்பான கோரிக்கைகளை புதிய வடிவிலான படிவத்தில் தயார் செய்து உத்தரவுகள் பிறப்பிக்குமாறும், முன்பாக உரிய கள விசாரணை செய்து அறிக்கை செய்யப்பட வேண்டுமென சார்நிலை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுரைகளை வழங்கினார்.தமிழ்நிலம் இணையவழி திருத்தங்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு விருதுநகர் மாவட்டத்தில் விரைந்து தீர்வு காண முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளதால், பொது மக்கள் இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பம் செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று (30.07.2026) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் ரூ.29 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தினை திறந்து வைத்தார்.மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம், உலக வங்கி நிதி உதவியுடன் தமிழக அரசால் 38 மாவட்டங்களிலும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டு, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜூன்"2025 முதல் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் கடைக்கோடியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளில் ஒருவர் கூட விடுபடாமல் கணக்கெடுத்து, அவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டை(UDID) மற்றும் மறுவாழ்வு சேவை வழங்குவதற்காக உலக வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 32,696 மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளனர்.விருதுநகர் மாவட்டம் 13 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு 6 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, இராஜபாளையம், விருதுநகர் - கன்னிசேரிபுதூர், வெம்பக்கோட்டை - கல்லமநாயக்கன்பட்டி) கடந்த மார்ச் 2026 ஆம் மாதம் முதல் தொடங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 13 வட்டார ஓரிட சேவை மையங்களில் திருச்சுழி ஒருங்கிணைந்த சேவை மையம் ரூ.29 இலட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்டு இன்று (30.07.2026) சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தில் 1 உளவியல் ஆலோசகர்(Counceller cum case worker), 1 தசைப்பயிற்சியாளர் (Physiotherapist), 2 சிறப்பு கல்வி பயிற்றுனர் (Special Educator - ID & Special Educator - HI), 3 சமூக ஒருங்கிணைப்பாளர் (Community Facilitators). 7 சமூக மறுவாழ்வு பணியாளர் (Community Rehabilitation Workers) மற்றும் இம்மையத்தின் பணியாளர்களை கண்காணிப்பதற்கு 1 வட்டார ஒருங்கிணைப்பாளர் என மொத்தம் 15 முன்களப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.மேலும் மையத்தில் சிறப்பு கல்வி, பிசியோ தெரபி, உளவியல் ஆலோசனை, மறுவாழ்வு உதவிக்கான ஆலோசனை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளது.இம்மையத்தின் இதர சேவைகளாக வாழ்க்கை திறன், கல்வி, பெற்றோர் /பாதுகாவலர்களுக்கான பயிற்சி, UDID அட்டை விண்ணப்பிக்க, அரசு நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பித்தல், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல், உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பித்தல், புகார்கள் பரிசீலித்து தீர்வு காண வழிகாட்டுதல் போன்றவைகள் வழங்கப்பட உள்ளது.எனவே, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த சேவை மையத்தினை அனுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.செந்தில், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.