விருதுநகர் மாவட்டத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ம் ஆண்டு ஜூன் 12, ஜூன்16 முதல் ஜூன் 19 வரை மற்றும் ஜூன் 23 முதல் ஜூன் 25 வரை ஆகிய நாட்களில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் பின்வரும் அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது.வட்டம் வாரியாக வருவாய்த் தீர்வாயம்(ஜமாபந்தி) நடத்த உள்ள அலுவலர்கள் மற்றும் நாட்கள் விவரம் பின்வருமாறு :-சாத்தூர் வட்டத்தில், ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட ஆட்சித்தலைவர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும், சிவகாசியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையிலும், திருவில்லிபுத்தூரில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 3 நாட்கள் உதவி ஆட்சியர், சிவகாசி அவர்கள் தலைமையிலும், விருதுநகரில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 7 நாட்கள் வருவாய் கோட்டாட்சியர், சாத்தூர் அவர்கள் தலைமையிலும்,காரியாபட்டியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 6 நாட்கள் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையிலும்,அருப்புக்கோட்டையில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 7 நாட்கள் உதவி ஆணையர் (கலால்), விருதுநகர் அவர்கள் தலைமையிலும், இராஜபாளையத்தில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும்,வெம்பக்கோட்டையில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி), விருதுநகர் அவர்கள் தலைமையிலும், திருச்சுழியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 8 நாட்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும்,வத்திராயிருப்பில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 3 நாட்கள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும், வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளன. வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறும் தினங்களில் தொடர்புடைய கிராம நில உடைமைதாரர்கள் நிலப்பதிவு சம்பந்தப்பட்ட மனுக்கள், பட்டா மாறுதல், நில ஒப்படை, நில நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் பொதுமக்கள் நேரில் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், 2025–2026 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களும் விடுபடாமல் 100% உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்யும் நோக்கில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள "மாவட்ட அளவிலான கல்வி உதவி மையக் கட்டுப்பாட்டு அறையினை" (Higher Education Guidance Control Room) மாவட்ட ஆட்சியர் அவர்கள் (03.06.2026) அன்று திறந்து வைத்தார்.மையத்தின் செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள்:இக்கட்டுப்பாட்டு அறை மூலம் உயர்கல்வி தொடர விரும்பும் தகுதியான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பின்வரும் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ பெற்றுக்கொள்ளலாம்:படிப்பு சார்ந்த விவரங்கள்:மத்திய மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகள், மருத்துவம், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகள் (Professional Courses) தொடர்பான சேர்க்கை விவரங்கள்கூடுதல் வசதிகள்:அரசு மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதி வசதிகள், வங்கிக் கல்விக் கடன்கள் (Education Loans), கல்லூரிச் சேர்க்கைக்கான இணையவழி (Online) விண்ணப்பத் தேதிகள் மற்றும் சேர்க்கை நடைமுறைகள் குறித்த துல்லியமான தகவல்கள்.துணை ஆட்சியர் தலைமையில் சிறப்புக் குழு:மாணவர்களுக்குத் தகுந்த உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனைகளைத் துல்லியமாக வழங்குவதற்காக, துணை ஆட்சியர் (Sub-Collector / Deputy Collector) மட்டத்திலான உயர் அதிகாரி ஒருவரின் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அமைத்துள்ளார். இக்குழுவில் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்:இக்கல்வி உதவி மையக் கட்டுப்பாட்டறையை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கீழே குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்கள் வாயிலாகத் தொடர்புகொண்டு, தங்களது சந்தேகங்களுக்கு உடனுக்குடன் விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம்:அலைபேசி எண்கள்:75985 10114, 96988 10699, 99769 03873விருதுநகர் மாவட்டத்தில் எந்தவொரு மாணவரும் பொருளாதாரச் சூழ்நிலை அல்லது வழிகாட்டுதல் இன்மை காரணமாக உயர்கல்வி பயிலும் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்ற உயரிய நோக்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இக்கட்டுப்பாட்டறை தொடர்ந்து செயல்படும் என மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் , விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம் ) மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் (ம) வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம/நகர்புறங்களில் ரூ.3,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம/நகர்புறங்களில் ரூ.8,00,000/-வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும். (திட்டம் 1-ன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்) திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000/- ம் திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/- கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை/ முதுநிலை தொழிற்கல்வி/ தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும் திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள்/கருவிகள்/இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது.இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்/மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட/மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.கடன் விண்ணப்பங்களுடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிய ஆவணங்கள்தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக் கடன், விராசத் (கைவனை கலைஞர் கடன் திட்டம்)1. சிறுபான்மையினர் மதச்சான்றிதழ்2. சாதி சான்றிதழ்3. வருமான சான்றிதழ்4. உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ்5. ஆதார் அட்டை6. திட்ட அறிக்கை7. வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள் கல்விக்கடன்1. சிறுபான்மையினர் மதச்சான்றிதழ்2. சாதிச்சான்றிதழ்/ வருமான சான்றிதழ் நகல்/ இருப்பிட சான்றிதழ் நகல்/குடும்ப அட்டை3. ஆதார் அட்டை4. பள்ளி மாற்று சான்றிதழ் நகல்5. உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) அசல்6. கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது அசல் (Original)7. மதிப்பெண் சான்றிதழ்கள்8. வங்கி கோரும் இதர ஆவணங்கள் எனவே சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் 2026–2027ஆம் நிதியாண்டின் புதிய கல்வியாண்டு தொடங்குவதை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா கல்வி உபகரணங்கள், சீருடைகள் மற்றும் பல்வேறு நலத்திட்டப் பொருட்கள் வழங்கும் பணிகள் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.அதன் தொடர்ச்சியாக, (04.06.2026) விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் நேரிடையாகத் துவக்கி வைத்து, மாணவ-மாணவியருக்கு வழங்கினார்.முதற்கட்டமாக, பெரியவள்ளிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள், அங்கு பயிலும் மாணவ, மாணவியரை இன்முகத்தோடு வரவேற்று, அவர்களுக்குத் தேவையான புதிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் இதர கல்வி உபகரணங்களை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, குல்லூர்சந்தை வீரப்பா வித்யா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கணிதப் பயிற்சி நோட்டுகள், வரைபட நோட்டுகள், ஓவியப் பயிற்சி புத்தகங்கள், இரு கோடு மற்றும் நான்கு கோடு எழுது புத்தகங்கள் மற்றும் புதிய சீருடைகள் உள்ளிட்ட அனைத்து கல்விப் பொருட்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கி, மாணவர்கள் இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.மேலும், பாலவநத்தம் தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர், பள்ளிக்கு முதன்முறையாக வருகை தந்த குழந்தைகளை இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தி வரவேற்றார். பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் கற்பித்தல் சூழல் குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, பாலவநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2025-2026 ஆம் கல்வியாண்டின் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களையும் அதிகாரிகளுக்கு வழங்கினார்.இந்நிகழ்வின் போது, ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002-2003ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிடவும் 2021-2022 முதல் சிறந்த பதினைந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.அவ்வாணையின்படி 2002-2003ஆம் ஆண்டு முதல் விருதுநகர் மாவட்டத்தில் 2023-2024ஆம் ஆண்டு வரையில் 135 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.கலை விருதுகள், கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் விருதுநகர் மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக, விருதுநகர் மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் பதினைந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட ஆட்;சித் தலைவர் அவர்கள் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட்டு இத்தேர்வுக்குழு வாயிலாக விருதுக்கு விண்ணப்பிக்கும் கலைஞர்களை நேர்முகமாக அழைக்கப்பட்டு கலைவல்லுநர்களை கொண்டு கலைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.ஆகவே, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், விருதுகள் கீழ்க்கண்ட நிலைகளில் வழங்கப்படவுள்ளன 18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு, கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச் சுடர்மணி விருதும், 51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி விருதும், 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்படவுள்ளன.வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பதினைந்து சிறந்த கலைஞர்களுக்கு பட்டயம், பொன்னாடை மற்றும் பொற்கிழி ஈடாக கீழ்வருமாறு தொகைக்கான காசோலை வழங்கி கௌரவிக்கப்படும்.கலை இளமணி விருதிற்கு, ரூ.4,000/- பரிசுத்தொகையும், கலை வளர்மணி விருதிற்கு, ரூ.6,000/- பரிசுத்தொகையும், கலை சுடர்மணி விருதிற்கு, ரூ.10,000/- பரிசுத்தொகையும், கலை நன்மணி விருதிற்கு, ரூ.15,000/- பரிசுத்தொகையும், கலை முதுமணி விருதிற்கு, ரூ.20,000/- பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளன.மேலும், விருதுநகர் மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது. மேலும், கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலைஞர்கள் தற்போது புதியதாக விண்ணப்பம் கண்டிப்பாக அனுப்பவேண்டும்;.இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, முகவரிச்சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் ‘ஆ’ குடியிருப்பு, (தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் அருகில்) திருநெல்வேலி – 7 தொலைபேசி எண்:0462-2901890 என்ற முகவரிக்கு செய்தி வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் 2026–2027ஆம் கல்வியாண்டு தொடங்குவதை முன்னிட்டு, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள், சீருடைகள் மற்றும் நலத்திட்டப் பொருட்கள் வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.அதனைத் தொடர்ந்து, நாளை (04.06.2026) மாவட்டம் முழுவதும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், 1,504 அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகள் மற்றும் முன்பருவக் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ள விலையில்லா சீருடைகள், மற்றும் முன்பருவக் கல்வி உபகரணங்களின் இருப்பு நிலையை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (03.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.1,504 அங்கன்வாடி மையங்களில் சீருடைகள் மற்றும் முன்பருவக் கல்வி உபகரணங்கள் விநியோகம்:விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் (ICDS) கீழ் 1,427 முதன்மை அங்கன்வாடி மையங்களும், 77 குறு அங்கன்வாடி மையங்களும் என மொத்தம் 1,504 அங்கன்வாடி மையங்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.விலையில்லா சீருடைகள்:மே-2026 கோடை விடுமுறை முடிந்து இம்மையங்களில் சேர்ந்து பயிலும் 2-3 வயது, 3-4 வயது மற்றும் 4-5 வயதுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு குழந்தைக்கு 2 செட் (2 Set) வீதம் புத்தம் புதிய சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.கல்வி உபகரணங்கள் மற்றும் கற்றல் கையேடுகள்:குழந்தைகள் அதிக அளவில் அங்கன்வாடிகளில் சேர்ந்து பயில்வதை ஊக்குவிக்கும் நோக்கில், அனைத்து 1,504 மையங்களுக்கும் (1,427 முதன்மை அங்கன்வாடி மையங்கள் மற்றும் 77 குறு அங்கன்வாடி மையங்கள்) முன்பருவக்கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளின் செயல்திறன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்காக, *வயது வாரியான செயல்பாட்டுப் புத்தகங்கள், விவரத்தொகுப்பு (Portfolio), ஆய்வு அட்டைகள் மற்றும் முன்பருவக்கல்வி நிறைவுச் சான்றிதழ்கள் ஆகியவையும் அனைத்து மையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.அங்கன்வாடி குழந்தைகளுக்குச் சூடான சத்துணவு மற்றும் தினசரி ஊட்டச்சத்து அட்டவணை:அங்கன்வாடி மையங்களில் பயிலும் முன்பருவக் குழந்தைகளுக்குக் காலை மற்றும் மதிய வேளைகளில் சத்துமிக்க உணவுகள் தடையின்றி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது:காலை உணவு:தினசரி காலை வேளையில் குழந்தைகளுக்கு 50 கிராம் அளவிலான கொழுக்கட்டை அல்லது இணை உணவு உருண்டை வழங்கப்படுகிறது.மதிய உணவு:திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மதியம் சூடான சமைத்த கலவை சாதம்/மதிய உணவு வழங்கப்படுகிறது.வாரம் முழுவதும் கூடுதல் ஊட்டச்சத்து:குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வாரத்தில் 3 நாட்கள் முட்டை, செவ்வாய்க்கிழமைகளில் பாசிப்பயறு, வெள்ளிக்கிழமைகளில் உருளைக்கிழங்கு மற்றும் 1 நாள் கொண்டைக்கடலை (சுண்டல்) ஆகியவை மதிய உணவுடன் சேர்த்துத் துல்லியமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் வட்டார கள அலுவலர்கள் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றனர்.எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சேர்த்துப் பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.ஒவ்வொரு குழந்தையும் அரசின் கல்வி மற்றும் ஊட்டச்சத்து நலத்திட்டங்களின் பயனை முழுமையாகப் பெறுவதோடு, புதிய கல்வியாண்டின் முதல் நாளிலிருந்தே எவ்விதக் குறையுமின்றி, சிறந்த கற்றல் சூழலைப் பெறுவதை உறுதி செய்ய விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.
ஒன்றிய அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், *"விளைநிலம் காப்போம் இயக்கம்" (கேத் பச்சாவோ அபியான் - Khet Bachao Abhiyan)* விழிப்புணர்வு முகாம் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளிலும் (Gram Panchayats) நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S, , அவர்கள் தெரிவித்துள்ளார்.இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு விபரங்கள்:இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ், வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் மூலம் விவசாயிகளுக்குப் பின்வரும் அத்தியாவசியத் தொழில்நுட்பத் தகவல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன:மண் ஆரோக்கியம் மற்றும் நுண்ணூட்ட மேலாண்மை:மண்வள அட்டை (Soil Health Card) பரிந்துரைப்படி, தேவைக்கேற்ப நேரடி உரங்கள், உயிர் உரங்கள், நானோ உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களைப் பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.சமச்சீர் உரப் பயன்பாடு:அதிகப்படியான இரசாயன உரப் பயன்பாட்டைத் தவிர்த்து, சமச்சீர் உரமிடுதல் மற்றும் பசுந்தாள் உரப்பயிர்களைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்.இயற்கை விவசாய நன்மைகள்:இயற்கை மற்றும் கரிம உரப் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில், களச் செயல்விளக்கங்கள் (Field Demonstrations) மற்றும் கிராம அளவிலான சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் விபரங்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்படும்.நிலையான வேளாண்மை:சாகுபடி செலவினைக் குறைத்தல், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனை அதிகரித்தல் மற்றும் நிலையான விவசாய முறைகளைக் கையாளுதல் போன்ற தொழில்நுட்பங்கள் கற்றுத்தரப்படும். ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம்:பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், சமையல் எண்ணெய் பயன்பாட்டினை 10% வரை குறைப்பது உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளும் இந்த "விளைநிலம் காப்போம் இயக்க" விழிப்புணர்வு முகாமில் பெருந்திரளாகப் பங்கேற்று, தங்களது விளைநிலத்தின் ஆரோக்கியத்தையும், தங்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் 2026–2027ஆம் கல்வியாண்டு தொடங்குவதை முன்னிட்டு, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள், சீருடைகள் மற்றும் நலத்திட்டப் பொருட்கள் வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.அதனைத் தொடர்ந்து, நாளை (04.06.2026) மாவட்டம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களின் இருப்பு மற்றும் விநியோகத் தயார்நிலைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (03.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.1,478 பள்ளிகளைச் சேர்ந்த 1.56 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 990 அரசுப் பள்ளிகள், 454 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 34 பகுதி உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 1,478 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 76 ஆயிரத்து 156 மாணவர்களும், 80 ஆயிரத்து 596 மாணவிகளும் என மொத்தமாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 752 மாணவ-மாணவிகள் அரசின் இந்த உன்னதமான கல்வி நலத்திட்டங்களால் முழுமையாகப் பயன்பெறவுள்ளனர்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா நலத்திட்டப் பொருட்கள்:அரசின் கல்வி நலத்திட்டங்களின் கீழ், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கணிதப் பயிற்சி நோட்டுகள், கணித வரைபட நோட்டுகள், ஓவியப் பயிற்சி நோட்டுகள், இரு கோடு மற்றும் நான்கு கோடு நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.அதேபோல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கிரையான்ஸ் (Crayons), வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டிகள் (Geometry Boxes), காலணிகள், சாக்ஸ்கள், பள்ளிப் பைகள், சீருடைகள், வரைபடப் புத்தகம் (Atlas) மற்றும் பிற கல்வி உதவிப் பொருட்கள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பொருட்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு உரிய காலத்தில் சென்றடையவும், பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்படவும் தேவையான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இல்லம் தேடிச் சென்று ஊக்கமளிக்கும் 72 மாவட்ட அலுவலர்கள்:விருதுநகர் மாவட்டத்தில் கல்வித் துறையை மேம்படுத்தும் மற்றொரு சிறப்பான நடவடிக்கையாக, அண்மையில் வெளியான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மாணவர்கள் மீண்டும் தேர்வினை எழுதி உடனடியாகத் தேர்ச்சி பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, மாவட்ட அளவில் சிறப்பு அலுவலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இக்குழுக்களில் இடம்பெற்றுள்ள 72 மாவட்ட நிலை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட மாணவர்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று, மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் நேரில் சந்தித்து வருகின்றனர். அவர்கள் கல்வியைத் தடையின்றித் தொடர வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதுடன், நடைபெற்று வரும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கவும் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றனர்.பள்ளி மற்றும் அங்கன்வாடி தொடக்க நாளில் நேரடிக் கண்காணிப்பு:புதிய கல்வியாண்டின் முதல் நாளான நாளை (04.06.2026), இந்த 72 மாவட்ட நிலை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நேரடியாகச் சென்று, மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் இதர கல்வி நலத்திட்டப் பொருட்கள் முறையாகவும், காலதாமதமின்றியும் விநியோகிக்கப்படுவதை நேரில் கண்காணித்து உறுதி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஒவ்வொரு குழந்தையும் அரசின் கல்வி மற்றும் ஊட்டச்சத்து நலத்திட்டங்களின் பயனை முழுமையாகப் பெறுவதோடு, புதிய கல்வியாண்டின் முதல் நாளிலிருந்தே எவ்விதக் குறையுமின்றி, சிறந்த கற்றல் சூழலைப் பெறுவதை உறுதி செய்ய விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குப் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, தற்போது தாட்கோ மற்றும் முன்னணி தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு *உணவு ஊட்டச்சத்தியல்* (Nutrition & Dietetics) மற்றும் *உடல் எடை சீரமைப்பு* (Slimming & Weight Loss Courses) ஆகிய பயிற்சிகளை இலவசமாக வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:இனம்: விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பில் (12-ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.குடும்ப வருமானம்: குடும்ப ஆண்டு வருமானம் *ரூ.3.00 லட்சத்திற்குள்* இருக்க வேண்டும்.பயிற்சியின் விவரங்கள்:கால அளவு: 50 நாட்கள்.பயிற்சி மையங்கள்: இப்பயிற்சிகள் *இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்* நடைபெற உள்ளன.தங்கும் வசதி: தேர்வு செய்யப்படும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டங்களில் தங்கிப் படிப்பதற்கான முழுச் செலவினத்தையும் தாட்கோ நிறுவனமே ஏற்கும். வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம்:இப்பயிற்சியில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாகவே வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் *ரூ.15,000/- முதல் ரூ.20,000/- வரை* வருவாய் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.விண்ணப்பிக்கும் முறை:இப்பயிற்சியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், தாட்கோ இணையதளம் (www.tahdco.com) வழியாகத் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், மாரியம்மன் கோவில் திடலில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், உலக புகையிலை ஒழிப்பு தினம்-2026-னை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். புகையிலை நுகர்வினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட அவர்களை ஊக்குவிக்கவும், ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இத்தினம், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்களது உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், புகையிலை பழக்கத்தை நிறுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிக்கவும், புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்பவும் வழிவகுக்கிறது. ஏற்கப்பட்ட விழிப்புணர்வு உறுதிமொழி: அதன் ஒரு பகுதியாக, "இன்றைய தினம் நான் ஒருபோதும் புகைபிடிக்கவோ அல்லது புகையிலைப்பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்ளவோ மாட்டேன் என்றும், அவ்வாறு புகைபிடிப்பதற்கு அல்லது புகையிலைப் பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்வதற்கு என்னுடைய உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ ஊக்குவிக்க மாட்டேன் என்றும் நான் என்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களைப் புகையிலை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க ஊக்குவிப்பேன் என்றும், மேலும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதினால் ஏற்படும் மாசிலிருந்து எனது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பங்களிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன்" என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாசிக்க, அனைவரும் அதனை ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. விழிப்புணர்வுப் பேரணி: இதனைத் தொடர்ந்து, மாரியம்மன் கோவில் திடலில் தொடங்கிப் பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைக்க, மருத்துவப் பணியாளர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வில், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) திரு.செந்தில் குமார், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. யசோதாமணி, மருத்துவத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.