25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 31, 2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 6 புதிய அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தார்.

 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்களின் அறிவுறுத்தலின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில் விருதுநகர் நகராட்சி, அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் ரூ.1.07 கோடி மதிப்பில்  கட்டி முடிக்கப்பட்ட 6 புதிய அங்கன்வாடி மையங்களை  (30.07.2026) திறந்து வைத்தார்.தமிழ்நாடு அரசு கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.குழந்தைகளின் உடல், மன மற்றும் கல்வி வளர்ச்சிக்கு அங்கன்வாடி மையங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் ஆகியோருக்கு ஊட்டச்சத்து உணவு, முன்பள்ளிக் கல்வி, சுகாதார பராமரிப்பு, வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு சேவைகள் ஆகியவை அங்கன்வாடி மையங்கள் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பான கட்டட வசதியும், காற்றோட்டத்துடன் கூடிய இடங்களில் கல்வி கற்பிக்கும் வகையில் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி விருதுநகர் நகராட்சியில் ரூ.19 இலட்சம் மதிப்பீட்டில்  எஸ்.எம்.ஜி நகாராட்சி பள்ளி அருகில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம்,  ரூ.19 இலட்சம் மதிப்பீட்டில்  அ.ச.ப.சி.சி பள்ளி  அருகில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆமணக்குநத்தம்  அங்கன்வாடி மையம், திருச்சுழி ஊராட்சியில் தலா ரூ.16.45 இலட்சம் மதிப்பில் செங்குளம், புளியங்குளம், தொட்டியாங்குளம் கிராமங்களில் கட்டப்பட்டுள்ள  அங்கன்வாடி மையம் என மொத்தம் ரூ.1.07 கோடி  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 அங்கன்வாடி மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.இம்மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியான சூழலில் கலிவ கற்பதற்கான வசதிகள், சமையலறை, குடிநீர் வசதி, கழிப்பறை, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சியே நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. எனவே, அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளை அனைத்து தகுதியான பயனாளிகளும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் குழந்தைகளின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணித்து, தரமான முன்பள்ளிக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து சேவைகளை சிறப்பாக வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி ஷீலா, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Jul 31, 2026

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு. செல்வம் அவர்கள் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். 

 சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு. செல்வம் அவர்கள்  (30.07.2026) விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் குந்தலப்பட்டி ஊராட்சி நாராயணபுரத்தில் உள்ள பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் உள்ளார்.

Jul 31, 2026

குடியரசு தினம் – 2027 முன்னிட்டு பத்ம விருதுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

குடியரசு தினம் -2027 ஆம் ஆண்டு முன்னிட்டு, 'சிறப்புமிக்கப் பணிகளை' அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணிகள், வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்துத் துறைகளிலும் ,பிரிவுகளிலும் சிறந்த மற்றும் விதிவிலக்கான சாதனைகள் , சேவைக்காக பத்ம விருதுகள் – 2027 வழங்கப்படுகின்றன.இனம், தொழில், பதவி அல்லது பாலினம் என்ற வேறுபாடின்றி அனைவரும் இந்த விருதுகளுக்குத் தகுதியானவர்கள். இதனடிப்படையிலான விளையாட்டுத்துறை சார்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்ம விருது நாட்டின் இரண்டாவது உயரிய குடிமக்கள் விருது என்பதால், விண்ணப்பிக்கக்கூடிய நபர் தத்தமது துறையில் இதற்கு முன்னர் ஏதேனும் தேசிய விருதோ அல்லது மாநில விருதோ பெற்றிருத்தல் வேண்டும்.மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளைத் தவிர, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உட்பட மற்ற அரசு ஊழியர்கள் பத்ம விருதுக்குத் தகுதி பெறமாட்டார்கள்.பத்ம விருதுகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் ராஷ்ட்ரிய புரஸ்கார் இணையதளமான https://awards.gov.in வழியாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  பத்ம விருதுகளுக்கு இணையவழி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31.07.2026  என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா ,I A S ., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Jul 31, 2026

சிறுபான்மையின மக்களுக்கு தொழில் கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது ..

தமிழ்நாட்டில் வாழும் மதவழி சிறுபான்மையினர்களான கிறித்துவர், இசுலாமியர், பௌத்தர், சமணர், பார்சி மற்றும் சீக்கிய மதத்தைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலை விரிவுபடுத்தி தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ளவதற்கும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், விராசாத் - (கைவினை கலைஞர் கடன் திட்டம்), சுய உதவி குழுக்களுக்கான  சிறுகடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.இக்கடன் திட்டங்கள் தொடர்பான விவரங்களையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளவதற்காகவும், கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்காகவும் கடன் வழங்கும் முகாம் (லோன் மேளா) வட்டார அளவில் கீழ்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது. அதன்படி (04.08.2026) அன்று விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், (05.08.2026) அன்று அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், (06.08.2026) அன்று சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் மற்றும் (07.08.2026) அன்று சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.இம்முகாமில் கடன் தேவைப்படும் சிறுபான்மையின மக்கள் கடன் தொகை பெற கீழ்கண்ட ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.கடன் விண்ணப்பப் படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (தொ.எண்: 04562-2425709), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் /நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய அலுவலகங்களிலிருந்து விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.சிறுபான்மையினர் மதத்திற்கான சான்று /சாதிச் சான்றிதழ் /பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல்,இருப்பிட சான்றிதழ்/ குடும்ப அட்டை நகல், திட்ட தொழில் அறிக்கை, பாஸ்போர்ட் புகைப்படம்-2, கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை கொண்டு செல்லவும். கல்விக் கடன் கோருவோர்கள் மேற்கண்ட ஆவணங்களுடன் உண்மைச் சான்றிதழ் அசல் (Bonafide Certificate), கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் நகல் ஆகியவற்றை கொண்டு செல்லவும்.மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட அலுவலகங்களையும், வங்கிகளையும் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Jul 30, 2026

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு.செல்வம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு. செல்வம் அவர்கள்  (29.07.2026) விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி பெரிய கண்மாய், பிசிண்டி, விருதுநகர் கௌசிகா நதி, சாத்தூர் வைப்பாறு மற்றும் படந்தால் உள்ளிட்ட பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் W.P.(MD) Nos.16485 & 14699 of 2015 மற்றும் W.P. No.3075 of 2017 ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு ஆக்கிரமிப்பு தாவரங்கள் அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் கொள்கை (TNPIPER) ஆகியவற்றின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் "செழுமை கருவூலம் – சீமைக் கருவேலமில்லா விருதுநகர்" என்ற சிறப்பு முன்முயற்சியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் முதற்கட்டமாக, அரசு நிலங்கள், ஆறுகள், கண்மாய்கள், கால்வாய்கள், நீர்நிலைகள், அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் இதர பொதுநிலங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் முழுமையாக அகற்றி, அவற்றிற்குப் பதிலாக உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பூர்வீக மர இனங்களை நடவு செய்து பசுமை வளத்தை மீட்டெடுக்கும் பணிகள் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இப்பணிகளை மாவட்டம் முழுவதும் விரைவாகவும், தரமான முறையிலும் மேற்கொள்வதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வனத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுடனும் பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, துறைவாரியாக செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. மேலும், சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் காணப்படும் பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் அகற்றும் பணிகள் திட்டமிடப்பட்டன.அதன் ஒருபகுதியாக, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், விவசாய நிலங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த நிலங்கள் மற்றும் வளாகங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றி, அதற்குப் பதிலாக பூர்வீக மர இனங்களை நடவு செய்யும் பெருந்திரள் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் (Mass Eradication of Prosopis juliflora) இயக்கம் கடந்த 15.07.2026 அன்று மாவட்டம் முழுவதும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் நடவடிக்கையாக சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்பணிகளின் முன்னேற்றத்தை நேரில் ஆய்வு செய்த சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு. செல்வம் அவர்கள், சீமைக் கருவேல மரங்கள் மீண்டும் வளராத வகையில் வேருடன் முழுமையாக அகற்றப்பட வேண்டும். அகற்றப்பட்ட பகுதிகளில் உடனடியாக பூர்வீக மரக்கன்றுகள் நடவு செய்து அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும், நீர்நிலைகளின் இயற்கை நீரோட்டம் பாதிக்கப்படாத வகையில் அனைத்து ஆக்கிரமிப்பு தாவரங்களையும் முழுமையாக அகற்றி, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.இந்த கள ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்) அ.நாச்சியார் அம்மாள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.முருகன், உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Jul 30, 2026

சதுரகிரி ஆடி அமாவாசை மற்றும் திருவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேர்த்திருவிழா ஆகிய திருவிழாக்களில் தற்காலிக கடைகள் அமைப்போரும், அன்னதானம் வழங்க உள்ளோரும் உணவு பாதுகாப்பு உரிமம் அவசியம் பெற வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) கோவிலின் ஆடிப்பூரம் தேர்த்திருவிழா மற்றும் மதுரை மாவட்டத்தின் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலில் நடைபெறவுள்ள ஆடி அமாவாசை திருவிழா ஆகிய தினங்களில் விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, அழகாபுரி, தாணிப்பாறை ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள தற்காலிக உணவுக் கடைகள், அன்னதானங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், தத்தமது உணவு வணிகத்திற்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும் எனவும், தவறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ,அவர்கள் அறிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) கோவிலில் ஆடிப்பூரம் தேர்த்திருவிழா 14.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்றும் மதுரை மாவட்டத்தின் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலில் 12.08.2026 (புதன்கிழமை) அன்று  ஆடி அமாவாசை விழாவும் நடைபெறவுள்ளது. அத்தினங்களையொட்டி விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, தாணிப்பாறை ஆகிய இடங்களில் தற்காலிக உணவுக் கடைகள் அதிகம் அமைக்கப்படவும், அன்னதானங்கள் வழங்கப்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, அவ்வாறு அமைக்கப்படவுள்ள தற்காலிக உணவுக் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் அன்னதானங்களின் பொறுப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் மற்றும் பின்வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் முக்கிய நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும்.அன்னதானங்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது வணிகத்தினைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அன்னதானக் கூடங்களில் உணவு சமைத்தல் பணியில் ஈடுபடும் சமையல் குழுவினரும் (Caterer) மேற்கூறிய இணையதளத்தில் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழை பெறுவது அவசியமாகும்.அன்னதானம் வழங்குவோர், தாம் சமையலுக்குப் பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் நுகர்வோர்களுக்குக் குடிக்க வழங்கும் தண்ணீர் ஆகியவற்றை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அல்லது பொது சுகாதாரத் துறை பகுப்பாய்வுக் கூடங்களில் பகுப்பாய்வு செய்து பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும். மேலும், முன் அனுமதி இல்லாமல் தனியார் இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறு போன்ற நீராதாரங்களில் தண்ணீர் எடுத்து சமையலுக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தக்கூடாது. சாப்பாடு, வடை, பஜ்ஜி போன்ற உடனே உண்ணக்கூடிய உணவுப் பொருட்களை சமைத்து விற்பவர்கள் அல்லது உணவுப் பொருட்களை விற்பனை மட்டும் செய்பவர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, ஈக்கள் மற்றும் அசுத்தம் இல்லாத சுகாதரமான சூழலில் அவற்றை தயாரித்து, பாதுகாப்பாக விற்பனை செய்ய வேண்டும்.அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளை உணவுப் பொருட்களில் சேர்க்கக்கூடாது. சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திடல் வேண்டும். பயன்படுத்தி மீதமான ஆறிய நிலையில் உள்ள எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில் அதன் தயாரிப்பு நாள், காலாவதி நாள், உணவு பாதுகாப்பு உரிமம் எண் உள்ளிட்ட அனைத்து லேபிள் விபரங்களை அவசியம் அச்சிட்டிருக்க வேண்டும். உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் அனைத்துப் பணியாளர்களும் டைபாய்டு மற்றும் மஞ்சள்காமாலைக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொண்டு, “தொற்றுநோய்த் தாக்கமற்றவர்களாக” இருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் கையுறை, முடிக் கவசம் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டும். காலாவதியான பிஸ்கட், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட் எந்தவகை பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. மேலும், கெட்டுப்போன அல்லது பழைய உணவுகளை விற்பனை செய்யக்கூடாது. டைனிங் டேபிள் மற்றும் வளாகத்தினை சுத்தம் செய்யும் நபர்கள் சாப்பாடு பரிமாறக்கூடாது.திருவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேர்த்திருவிழாவினை முன்னிட்டும், சதுரகிரி திருவிழாவினையொட்டியும், உணவு வணிகத்தில் ஈடுபடும் வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்து பயிற்சி வழங்கவும், உணவைக் கையாளுபவர்களுக்கு டைஃபாய்டு தடுப்பூசி வழங்கி, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும் சிறப்பு முகாமானது 04.08.2026 அன்று காலை 11 மணியளவில் அழகாபுரியில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலரது தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, அன்றைய தினம் நடைபெறவுள்ள பயிற்சி முகாமில் வத்ராயிருப்பு, தாணிப்பாறை, அழகாபுரி மற்றும் திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த உணவு வணிகர்கள் மற்றும் அன்னதானம் வழங்கவுள்ளவர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது. மேலும், இம்முகாமில் உணவு வணிகர்களுக்கான பயிற்சி கட்டணம் துறையால் செலுத்தப்படும் என்றும், மருத்துவ முகாமும் துறையே நடத்தும் என்றும், டைஃபாய்டு தடுப்பூசிக்கான கட்டணத்தை மட்டும் உணவுக் கையாளுபவர்கள் அல்லது உணவு வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 29, 2026

புதிய மின்னணு குடும்ப அட்டைகளை முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள்  பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள்  மற்றும்   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I  A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்   3,428 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை (28.07.2026) வழங்கினார்கள்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசின் திட்டங்களை திட்டங்களாக மட்டும் இருந்து விடாமல், மக்களின் கைகளில் அதன் பயன்களை கொண்டு சேர்க்கும் வகையில் செயலாற்றி வருகிறார்கள்.தமிழக முதல்வர் அவர்கள் கடந்த 13.07.2026 அன்று பெரம்பூர் தொகுதியில் புதிய குடும்ப அட்டைகள்  வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் 73,000- க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 16.12.2025 முதல் 30.04.2026 வரை புதிய குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பம் செய்த நபர்களில் தகுதியான 3,991 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது.இது போன்று பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களின் பயன்களும் பொதுமக்களை சென்றடையும் வகையில் மாவட்டத்தில் மக்கள் பணியை தொடர்ந்து செயலாற்றுவோம் என தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள்  தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின்  அடிப்படை தேவைகளையும், கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில்  புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்து காத்திருந்த பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் மாவட்டம் முழுவதும் வழங்கிட 3,992 குடும்ப அட்டைகள் பெறப்பட்டுள்ளன.  முதற்கட்டமாக இராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 554 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 352 பயனாளிகளுக்கும், காரியாபட்டி வட்டாரத்தில் 360 பயனாளிகளுக்கும், சாத்தூர் வட்டாரத்தில் 289 பயனாளிகளுக்கும், சிவகாசி வட்டாரத்தில் 934 பயனாளிகளுக்கும்,, திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 360 பயனாளிகளுக்கும், திருச்சுழி வட்டாரத்தில் 187 பயனாளிகளுக்கும், வத்திராயிருப்பு வட்டாரத்தில் 324 பயனாளிகளுக்கும், வெம்பக்கோட்டை  வட்டாரத்தில் 291 பயனாளிகளுக்கும், விருதுநகர் வட்டாரத்தில் 340 பயனாளிகளுக்கும் என மொத்தம் 3,437  பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.குடும்ப அட்டை என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு, குடிமைப்பொருள் உள்ளிட்ட  அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு  அத்தியாவசியமான ஒன்றாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் வரும் காலங்களில் தொடர்ச்சியாக நிறைவேற்றித்தரும். மகளிர்களுக்கான ரூ.2,500/- உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மாவட்டத்திலுள்ள அமைச்சர்களாகிய நாங்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்டத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல ஒன்றிணைந்து செயலாற்றுவோம் என தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள்  மற்றும்   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி மாவட்ட  வழங்கல் அலுவலர் திரு. அமர்நாத்,  வட்டார வழங்கல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் , பொதுமக்கள் உட்பட பலர்கலந்துகொண்டனர்.

Jul 29, 2026

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் வெடி விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு காசோலைகளை வழங்கினார்கள்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டியில் கடந்த 26.07.2026 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக தலா ரூ.4.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.16 இலட்சத்திற்கான காசோலைகளை (28.07.2026) வழங்கினார்கள்.அதன்படி, இந்த வெடி விபத்தில் உயிரிழந்த சிவகாசி வட்டம் செங்கமலப்பட்டியைச் சேர்ந்த திரு.ராம்பிரகாஷ் என்பவரது வாரிசுதாரரான திருமதி பூமாரி என்பவருக்கும், திரு.இன்னாசிமுத்து என்பவரது வாரிசுதாரரான திருமதி ஜெயலட்சுமி என்பவருக்கும், திரு.ராமச்சந்திரன் என்பவரது வாரிசுதாரரான திருமதி லட்சுமி என்பவருக்கும், சிவகாசி வட்டம் நாரணாபுரத்தைச்  சேர்ந்த திரு.பாண்டித்துரை என்பவரது வாரிசுதாரரான திருமதி தமிழரசி என்பவருக்கும் என மொத்தம் 4 நபர்களுக்கு தலா ரூ.4 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.16 இலட்சம் மதிப்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ,ஆருதலையும் தெரிவித்தனர்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் திருமதி மோகனா, அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Jul 29, 2026

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கத்தினை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர்,திறந்து வைத்தார்கள்.

 தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் ரூ.49.70 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கத்தினை  (28.07.2026) திறந்து வைத்தார்கள்.தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இளைஞர்களை நல்வழிப்படுத்திடவும், ஆரோக்கியமான இளைய தலைமுறையை உருவாக்கிடும் வகையிலும்,  இளைஞர்களிடம் விளையாட்டு ஆர்வத்தினை ஊக்கப்படுத்திடும் வகையிலும், அரசின் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்திட அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இளைஞர்களுக்கு நீச்சல், டென்னிஸ், கூடைபந்து, கைபந்து, பேட்மிட்டன் உள்ளிட்ட   பல்வேறு வகையான விளையாட்டு பயிற்சிகள்  வழங்கப்பட்டு வருகிறது.  அதன் தொடர்ச்சியான புதியதாக அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கம் இன்றைய தினம் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு திறந்த வைக்கப்பட்டுள்ளது. இந்த பாக்ஸ் கிரிக்கெட் ஆடுகளம் காலை 7.00 மணி முதல் இரவு 9.00 வரை செயல்படவுள்ளது. இதற்கென வடிவமைக்கப்பட்ட  TURF TOWN MOBILE  APP.  என்ற இணையதளம் மூலம் விளையாட்டு வீரர்கள் தங்களுக்கான நேரத்தினை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு 1 மணி நேரத்திற்கு ஜி.எஸ்.டி யுடன் மொத்தம் ரூ.826 அரசு கட்டணம் நிர்யணம் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆடுகளத்தினை கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள  இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு சிறந்த வீரர்களாக உருவாகி நமது மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க  வேண்டும்.  சிறு வயது முதலே இளைஞர்கள் தனக்கென ஒரு விளையாட்டினை தேர்வு செய்து தொடர்ச்சியாக பயிற்சி பெறுவதன் மூலம் மன வலிமையுடன், உடல் ஆரோக்கியம் மேம்படும் என அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமாரமணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 28, 2026

சேதுராஜபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சேதுராஜபுரம் ஊராட்சியில் (27.07.2026) செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக வைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சிகளை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 144 145

AD's



More News