விருதுநகர் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தீவிர விழிப்புணர்வு திருவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் '100% VOTE' வடிவில் அணிவகுப்பு.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, (02.04.2026) 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி மாணவ-மாணவியர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன.
வாக்களிப்பதன் அவசியத்தை இளைய தலைமுறையினரிடையே கொண்டு செல்லும் நோக்கில், மாணவர்களுக்கு இடையே பேச்சுப்போட்டி, விழிப்புணர்வு நடனம் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் தங்கள் கலைத்திறன் மூலம் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) செயல்பாடு குறித்து மாணவர்களுக்கு நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது. மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்கும் முறையை மாணவர்கள் ஆர்வமுடன் கையாண்டு பழகினர். இதன் மூலம் முதல்முறை வாக்களிக்க உள்ள மாணவர்களின் ஐயங்கள் நிவர்த்தி செய்யப்பட்டன.
"எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, பிரம்மாண்ட கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் திரளாகக் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். அதனைத் தொடர்ந்து, நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், கல்லூரி மைதானத்தில் மாணவ-மாணவியர் அனைவரும் ஒருங்கிணைந்து '100% VOTE' என்ற தேர்தல் முழக்க வடிவில் அணிவகுத்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த கண்கவர் அணிவகுப்பு பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது.
இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குநர் திரு.இலக்குவன், வட்டார வளர்ச்சி அலுவலர், தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்), வருவாய் ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் உட்பட பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply