மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயது மிகாமலும் இருத்தல் வேண்டும். தங்களது பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கினை துவக்கியிருத்தல் வேண்டும்.கல்வித் தகுதியினை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- மிகாமல் இருத்தல் வேண்டும்.மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்வியுற்றோர் : ரூ.200/- பத்தாம் வகுப்பு தேர்ச்சி : ரூ.300/- பன்னிரெண்டாம் வகுப்பு/பட்டயப்படிப்பு : ரூ.400/-பட்டப்படிப்பு : ரூ.600/-உதவித் தொகை விண்ணப்பத்தினை நேரில் இவ்வலுவலகத்தில் பெற்றோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், ஆதார் அட்டை,குடும்ப அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் அலுவலக வேலைநாளில் விண்ணப்பத்தினை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.மேற்கண்ட உதவித் தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை: கல்வித் தகுதியினை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.600ஃ- மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750ஃ- பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும்ரூ.1000ஃ- வருமான உச்ச வரம்பு கிடையாது. வயது உச்சவரம்பின்றி 10 ஆண்டுகள் வரை மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறலாம்.வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை,ஸ்மார்ட் காhடு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பத்தினை அலுவலக வேலைநாளில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துக்கொள்கிறார்.மேற்கண்ட உதவித் தொகை மாதம் தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேலும், உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயில்பவராக இருத்தல் கூடாது.சுய தொழில் செய்பவராகவோ இருத்தல் கூடாது. அரசிடமிருந்து வேறு எந்த வகையிலாவது உதவித்தொகை பெறுபவராகவோ, ஊதியம் பெறும் பணியிலோ இருத்தல் கூடாது. இதற்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.சுய உறுதிமொழி ஆவணம்-ஏற்கனவே இவ்வலுவலகத்தில் உதவித் தொகை விண்ணப்ப படிவம் பெற்று சென்றுள்ள பதிவுதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசு திட்டம் என்பதால், ஏற்கனவே முழுமையாக உதவித் தொகை பெற்றுள்ள பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் தொடர்ச்சியாக உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏற்கனவே சுய உறுதிமொழி ஆவணம் அளித்திருப்பின் அலுவலகம் வர தேவையில்லை.
விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் (28.01.2025) போக்குவரத்துத்துறை சார்பில், 36-வது சாலை பாதுகாப்பு மாதம் -2025 (01.01.2025 முதல் 31.01.2025 வரை) முன்னிட்டு, இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், எடுத்துரைக்கும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மேலும், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைக்கவசம் வழங்கி, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இப்பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் காவலர்கள், போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணி மூலம் தலைக்கவசம் அணிவதன் பயன்கள், வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசக்கூடாது, அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனங்களில் பயணிக்க கூடாது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது, இரண்டு பேரை தவிர அதிகமான நபர்களை இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லக்கூடாது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி விருதுநகர் பழைய பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.இளங்கோ உட்பட மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் (28.01.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், தொட்டிலோவன்பட்டி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.54 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.பின்னர், கஞ்சம்பட்டி ஊராட்சியில், பிரதம மந்திரி குடியிருப்பு வீடு திட்டத்தின் கீழ், புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், குமாரபுரம் ஊராட்சியில், கனிம வள நிதியின் கீழ், ரூ.16.75 இலட்சம் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதையும் மற்றும் குமாரபுரம் ஊராட்சியில், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மதிப்பில், சமுதாய சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்ட பணியினையும்,பின்னர், சங்கரநத்தம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.20 இலட்சம் மதிப்பில் குளம் தூர்வாரப்பட்டு கரை உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (28.01.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்ட 150 பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட சிறப்பு Coffee with Collector- 150- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண் திருமதி முத்தமிழ்ச்செல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி 07.01.2022 அன்று தொடங்கப்பட்டு, மொத்தம் 149 கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.மேலும் இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, தங்களின் துறை மற்றும் பணிகள் சார்ந்த வாய்ப்புகள், படிப்புகள் மற்றும் அதற்கான திறமைகள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி ஊக்கப்படுத்தி, அவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகின்றனர்.அதன்படி, இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ; எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண் திருமதி முத்தமிழ்ச்செல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தான் சிறுவயது முதல் தற்போது இந்த நிலைமைக்கு வந்த அனுபவங்கள், வாழ்க்கை கண்ட தோல்விகள், அதை ஒரு சவாலாக ஏற்று கொண்டு அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் குறித்தும், தனக்கு மலையேற்றத்தில் ஆர்வம் வந்தது, அதில் தொடர்ச்சியாக பயிற்சி மேற்கொண்டு பல சாதனைகள் புரிந்து வருவது குறித்தும் உரையாடி, மாணவ, மாணவிகளின் எண்ணற்ற கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.இந்தத் துறை மட்டுமல்லாமல் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த எந்த துறையிலும் சாதிக்க முடியும். அதற்காக தங்களது இலக்கை நீங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். அதனையே குறிக்கோளாக கொண்டு, இலக்கை அடைவதற்கான வழிகளை அறிந்து கொண்டு தொடர் முயற்சி மூலமும், தோல்விகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டும், தொடர் தோல்விகளினால் தொய்வு அடையாமல் ஒழுக்கத்துடன் தங்களது பணியை மேற்கொள்ளும் போது அந்த துறையில் நாம் சாதிக்க முடியும். இது ஒவ்வொருவராலும் முடியும் என தெரிவித்தார்இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களும் தெளிவான விடை கொடுத்ததாகவும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., உட்பட மாணவர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மண்டல அளவிலான, Trade Apprenticeship Engagement Fair (TAEF) 28.01.2025 செவ்வாய்கிழமை அன்று அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், திருநெல்வேலி, பேட்டையில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது.1. மத்திய அரசு தொழிற்நிறுவனங்கள்2. மாநில அரசு தொழிற்நிறுவனங்கள்3. முன்னணி தனியார் தொழிற் நிறுவனங்கள்மேற்கண்ட தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மேலும் அரசுஃதனியார் தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பிரிவுகளான 1.Fitter 2) Machinist 3) MMV 4) Refrigeration Air Condition Technician 5)Electrician 6)Turner 7)Welder 8)Wireman 9)Surveyor 10) ஊழிய மற்றும் இதர பிரிவு தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று இந்நாள்வரை தொழிற்பழகுநர் பயிற்சியில் பயிற்சி பெறாதவர்கள் இத்தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இத்தொழிற்பழகுநர் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.8000/-முதல் ரூ.15000/- வரை தொழிற்நிறுவன தகுதிக்கேற்ப வழங்கப்படுகிறது.மேலும் தொழிற்பழகுநர் பயிற்சிக்குப்பின் மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate –NAC) மற்றும் முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பும் (Placement) வழங்கப்படுகிறது. எனவே இந்த அரிய வாய்ப்பினை பயிற்சியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S., அவர்கள் (27.01.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது. ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.ஒரு இலக்கை அடைவதற்கு வாழ்க்கையில் மிக அடிப்படை என்பது நமக்கு நாமே துன்பத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழ்வது, நாம் மற்றவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தாமல் வாழ்வது இது இரண்டு தத்துவங்களை எல்லா இலக்கியத்திலும் பார்க்க இயலும். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது சங்க இலக்கியத்தில் உள்ள புறநானூற்று வரிகள் மற்றும் மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்ற திருக்குறள் வரிகள் இந்த இரண்டும்; தான் இளையோருக்கான அறிவுரையை மையப்படுத்தி இருக்கிறது.ஏனென்றால் நமக்கு வரக்கூடிய நன்மைக்கும் தீமைக்கும் ஒருபோதும் பிறர் காரணமாக இருக்கவே முடிவதில்லை. அடுத்தவர்களுக்கு துன்பம் தராமல் நியாயமாக சரியாக நடக்க வேண்டும் என்று ஒருவர் தீர்மானிப்பது தான் உலகில் மிகப்பெரிய அறம்.முதலாவதாக மாணவர்களில் பலர் முழுமையாக முயற்சி செய்வதில்லை. வாழ்க்கையின் போட்டிகளில் அறைகுறை முயற்சிகளுக்கு இடமே இருப்பதில்லை. என்னால் முடிந்தவரை முயற்சிப்பது என்பது ஒன்று. எவ்வளவு தேவையோ அவ்வளவு முயற்சிப்பது என்பது தான் வெற்றிக்கானது.இரண்டாவதாக கவனச்சிதறல். நீங்கள் வரலாற்றை படித்துப் பார்த்தால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கவனச்சிதறல் என்பது காலங்காலமாக இருக்கிறது. நாம் ஒன்றே செய்ய முடியாமல் இருப்பதற்கு 100 சரியான காரணங்களை சொல்ல முடியும். ஆனால், ஒன்றை செய்து முடிப்பதற்கு நம்முடைய ஆர்வம் ஒன்று மட்டுமே முக்கியம். கவன சிதறல்கள் தவிர்க்க முடியாதது. நம்முடைய கவன சிதறல்களை வேறு ஒரு கவன திருப்புதலால் தான் மாற்ற முடியும்.மூன்றாவது நாம் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் இந்த பூமியில் இன்னும் 50 ஆண்டுகாலம் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட வேண்டும். கல்லூரியில் படிக்கக்கூடிய மூன்று ஆண்டுகளில் உங்களுடைய பாடத்திட்டத்தை படித்து, செயல்முறை தேர்வுகள் எழுதி மதிப்பெண்களை பெற்று பட்டம் பெறக்கூடிய இந்து கல்வி என்பது 10 விழுக்காடு மட்டுமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி செய்கிறது. மற்ற 90 விழுக்காடு உங்கள் அன்றாட நிகழ்வுகளை நீங்கள் பழகக்கூடிய மனிதர்களை, நீ எதிர்கொள்ளக்கூடிய சமுதாயத்தை நீங்கள் எவ்வாறெல்லாம் கற்றுக்கொண்டு செயல்படுகிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது.நீங்கள் அனைவரும் எல்லாவற்றிலும் கவனத்தோடு இருக்க வேண்டும் ஒவ்வொரு தவறுகளில் இருந்தும் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும். தவறை தைரியமாக ஒத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டு வர வேண்டும். நான் தவறு செய்து விட்டேன் என்பது ஒத்துக் கொள்வதற்கு மிகப்பெரிய தைரியமும், அறிவும் வேண்டும்.பெண் குழந்தைகளுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகள் இன்று உலகில் அதிகமாக கிடைக்கிறது. உங்களுடைய கல்வி வாய்ப்புகளாக இருக்கட்டும், வேலை வாய்ப்புகளாக இருக்கட்டும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்கென்று அதிகமான சட்ட வாய்ப்புகள் இருக்கிறது.தங்களுக்கான விழிப்புணர்வை அடுத்தவர்களின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள கூடியவர்களே மிகப்பெரிய துன்பம் இல்லாத வெற்றியை அடையலாம். அடுத்தவர்களின் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொண்டு அதற்கான வாழ்க்கை பாடத்தை பெற்று முன்னேறக்கூடியது துன்பம் இல்லாமல் முன்னேறுவதற்கான வழி.பெரும்பாலான குடும்பங்கள் அறியாமையில் இருந்து வருகிறது. அந்த அறியாமையை போக்குவதற்குரியது தான். நீங்கள் படித்து பட்டம் பெற்று, சிறந்த மதிப்பெண்களை பெற்று பெறக்கூடிய பட்டம் என்பது ஒருவருடைய வாழ்க்கைக்கு, வேலைக்கு, அறிவுக்கு உதவி செய்யும். ஆனால் சக மனிதர்களிடம் பழகுதல், இந்த உலகினை புரிந்து கொள்ளுதல் ஆகியவை உங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியம்.எனவே, மாணவர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். எதிர்காலத்தில், பொருளாதாரத்தில்; வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். பொருளாதார தன்னம்பிக்கை தான் மிகச் சிறந்த ஒன்று.எனவே உங்களுடைய வாழ்க்கையில் புதிய மாற்றங்களை எதிர்க்கொள்ளும் போது, அறிவின் துணையோடு, அனுபத்தின் துணையோடு, சிறந்த ஆலோசனையின்; துணையோடு உங்களை தகவமைத்து கொள்ளுங்கள். எப்போதும் வாழ்க்கை மாற்றத்திற்குட்பட்டது. எல்லாவற்றையும் எதிர்கொள்வதற்கும், புதியவற்றை பெறுவதற்கும் அறிவையும், அனுபவத்தையும் தயாராக்கி கொள்ளுங்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக மாணவியர்களுக்கு “சாதிக்கலாம் வாங்க” என்ற தலைப்பில் உயர்கல்வி மற்றும் வேலைவழிகாட்டி புத்தத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், (25.01.2025) தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் திரு.இரா.விஜயாலயன் அவர்கள் விளக்கவுரை ஆற்றினார்.இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக சனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக (National Voters' Day) ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் இன்று வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது.ஒரு தனி மனிதனுடைய வளர்ச்சி தொடர்பாக எந்த ஒரு தத்துவ நூலை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது உலகில் வெற்றி பெற்ற மனிதர்கள் தொடர்பான நூல்கள் அல்லது சுயசரிதைகளை எடுத்து படித்தாலும் சரி அவர்களின் வெற்றிக்கான காரணங்களாக அவர்களின் சரியான திட்டமிடல் மற்றும் கடின உழைப்பு ஆகிய இரண்டு மையக்கருத்துக்களை தான் கூறுகின்றன.“இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர் “ “உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர்” ஆகிய திருக்குறளில் ஒரு விஷயத்தை அது முடியும் வரை அதற்காக காத்திருப்பது அல்லது முடியும் வரை அதற்காக முயற்சி செய்வது என்பதை எல்லோரும் செய்வதில்லை. சில நபர்கள் தான் செய்கிறார்கள். எல்லோரும் அந்த இலக்காக அடையும் வரை சென்று முயற்சி செய்வதில்லை. அதனுடைய வழியை அறிந்து முடியும் வரை வெற்றி பெறக் கூடியவர்கள் சிலர் தான் இருக்கிறார்கள் என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 15 முதல் 20 இலட்சம் இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயார் செய்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 10 முதல் 12 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.அதுபோல, ஆண்டுதோறும் இந்திய அளவில் ஏறத்தாழ 2 இலட்சம் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது. ஆனால் இந்த தேர்வுகளுக்கு தயார் செய்யும் சுமார் 15 இலட்சம் தமிழக இளைஞர்களில் வெற்றி பெறுபவர்களின் சதவீதம் என்பது ஒற்றை இலக்க எண்ணாக தான் இருக்கிறது. இதில் வெற்றியைத் தாண்டி, போட்டி தேர்வுக்கு உண்மையிலேயே தயார் செய்யக் கூடியவர்களுக்கு ஒரு விரிவான இந்த சமூகத்தைப் பற்றியும், நம்முடைய சூழலை பற்றியும், அரசியலைப் பற்றியும், பொருளாதாரத்தைப் பற்றியும், சுற்றுச்சூழலை பற்றியும் மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்படுகிறது. அந்த விழிப்புணர்வு அவருடைய வாழ்க்கைக்கும், அவர்களுடைய குடும்பத்திற்கும், அவர்களுடைய குழந்தைகளுக்கும் மிகப்பெரிய ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது.அப்படி மிகச் சிறந்த மனித வளத்தை உருவாக்கக்கூடியதாக இந்த போட்டி தேர்வு என்பது அதற்கு தயார் செய்யக்கூடிய மாணவர்களை உருவாக்குகிறது. போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வது என்பதும், இது போன்ற அறிவு சார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்பதும், ஒரு அறிவு சார்ந்த மனித வளத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதற்கு சான்றாகும்.எனவே இந்த நிகழ்ச்சிக்காக வருகை தந்திருக்க கூடிய அனைவரும் இதில் வெற்றி தோல்வி என்பதை எல்லாம் தாண்டி இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருப்பதும், ஒரு அறிவு சார்ந்த நிகழ்ச்சிக்கு உங்களை ஈடுபடுத்திக் கொள்வதும், உங்கள் எதிர்காலத்திற்கும் உங்களுடைய எதிர்காலத்தில் சிலரை ஆற்றுப்படுத்துவதற்கும், வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் இருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த வினாடி - வினா போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒரு குழுவிற்கு இரண்டு நபர்கள் வீதம் 262 குழுக்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (25.01.2025) 15-ஆவது தேசிய வாக்காளர் தினம் - 2025 -ஐ முன்னிட்டு, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம், கருமாதிமடம், அல்லம்பட்டி முக்கு, அரசு மருத்துவமனை, மாரியம்மன் கோவில், பழைய பேருந்து நிலையம், பர்மா காலனி, ஆத்துப்பாலம், சிவகாசி பாலம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்று பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முன்னதாக, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.பின்னர், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவில் நடத்தப்பட்ட சுவர் பதாகை தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்ற இராஜபாளையம் அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி.ரம்யா என்பவருக்கு முதல் பரிசாக ரூ.2000/-மும், சாத்தூர் கம்ம மகாஜன டிரஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி. அட்சயா ஸ்ரீ என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.1000/-மும், சாத்தூர் கம்ம மகாஜன டிரஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி.திவ்ய சரஸ்வதி என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.500/-ம்,கல்லூரி மாணவர்களுக்கான சுவர் பதாகை தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்ற இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரி மாணவி செல்வி. மோகன கிருத்திகா என்பவருக்கு முதல் பரிசாக ரூ.2000/-மும், இராஜபாளையம் ஏ.கே.டி.ஆர். பெண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவி செல்வி.விஜயலெட்சுமி என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.1000/-மும், சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவி செல்வி.மகாலெட்சுமி என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.500/-ம்,மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற திருவில்லிபுத்தூர் சிவம் சக்தி சுய உதவிக்குழுவிற்கு முதல் பரிசாக ரூ.5000/-மும், திருச்சுழி மல்லிகை சுய உதவிக்குழுவிற்கு இரண்டாம் பரிசாக ரூ.4000/-மும், காரியாபட்டி சுதா காளியம்மன் சுய உதவிக்குழுவிற்கு மூன்றாம் பரிசாக ரூ.3000/-மும் என ஆக மொத்தம் ரூ.19,000/- மதிப்பிலான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் (25.01.2025) “பருத்தி திருவிழா “ என்ற தலைப்பில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் பார்வையிட்டார்.மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வேளாண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பங்கள், விதைகள் நவீன விவசாய கருவிகள் உள்ளிட்டவை குறித்து அறிந்து பயன்பெறும் வகையில் வட்டார அளவில் ஒவ்வொரு தலைப்பிலும் நடைபெற்று வருகிறது.அதன்படி, இன்று அருப்புக்கோட்டையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் பருத்தி திருவிழா என்ற தலைப்பில் நடைபெறுகிறது.இவ்வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் பயனடைந்திடும் வகையில் வேளாண் தொழில் நுட்ப விளக்கக் காட்சிகள், நவீன விவசாய தொழில் நுட்ப விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. வேளாண் ஆராய்ச்சி நிலைங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வேளாண் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில் நுட்பங்கள், இடுபொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் நெல், சிறுதானியங்கள், மா, பருத்தி, மிளகாய், மக்காச்சோளம், வேளாண் இயந்திரங்கள் பயன்பாடுகள், காய்கறிகள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், தென்னை பயிர்கள் தொடர்பாக அனைத்து தொழில் நுட்பம் சார்ந்த கருத்தரங்குகள் மற்றும் செயல் விளக்கங்களும் வழங்கப்படுகிறது.மேலும், அனைத்து வட்டார விவசாயிகளுக்கும் பயிர் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.விவசாயிகள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையிலும், புதிய நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடனும், சந்தை மதிப்புள்ள வேளாண் பொருட்களை விளைவிப்பதின் மூலமும் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.
விருதுநகர் கௌசிகா நதி பாலம் புதிய பேருந்து நிலைய அருகில் (25.01.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவு சேகரிக்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் துவக்கி வைத்தார்.பின்னர், நெகிழி பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு மாற்றாக துணிப்பைகளின் உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.தமிழக அரசு உத்தரவின்படி 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் இணைந்து நெகிலியால் ஆன பொருட்களை நீர்நிலைகள், நகர்புற பகுதிகள், கிராம பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெகிலியை அகற்றுவதற்கான மாபெரும் இயக்கம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிலியை நாம் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று நம்முடைய அரசு உறுதி கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிட வேண்டும். பல இடங்களிலே இத்தகைய உணவுப் பொருட்களை உபயோகப்படுத்தக்கூடிய பைகள், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிப்பதோடு உடல் நலக்கத்திற்கும் பெரிய அளவில் தீங்கு விளைவிப்பதாக உள்ளது.எனவே பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய நிகழ்ச்சி இன்று தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்(தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்) திரு.ஹேமந்த் ஜோசன், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.