இரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் வெளியிட்டுள்ள 32438 பல்வேறு பணிக் காலிப்பணியிடங்கான அறிவிப்பு 21.01.2025 அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 23.01.2025 ஆம் தேதியிலிருந்து 22.02.2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு வரும் 17.02.2025 அன்று விருதுநகர்.ஸ்ரீ வித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. இவ்வகுப்பு திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது.. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/8hB1dvzGvctLtMAs9 என்ற கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை 93601-71161 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்புகொள்ளலாம். எனவே இத்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S , அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை அரசு பொது தேர்வு நடக்கும்பொழுதும், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் அரசு அங்கீகாரம் பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் அணுகி அவர்களை சேர்ப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.ஒரு சில ஆசிரியர்களே மாணவர்களின் விவரங்களை இது போன்ற கல்லூரிகளுக்கு தருவதாகவும் புகார்கள் வருகின்றன. அவ்வாறு கல்லூரிகளுக்கு மாணவர்களின் விவரங்களை அளிக்கவோ, மாணவர்களை சேர்க்கவோ கூடாது. மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த சந்தேகங்கள் இருப்பின் அந்தந்த பள்ளியினுடைய முதுகலை உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரையே அணுகி ஆலோசனை பெற வேண்டும்.கல்லூரிகளுக்கு நேரடியாக மாணவர்களின் விவரங்களை அளிப்பதோ அல்லது சேர்ப்பதோ, அங்கீகாரம் இல்லாத கல்லூரிகள் மாணவர்களை நேரடியாக அணுகினாலோ அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், படிக்காசு வைத்தான்பட்டி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் (12.02.2025) நடைபெற்றது.இம்முகாமில், 42 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல் ரூ.45,73,658/- மதிப்பிலும், 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா 9,67,895/- மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் சார்பாக 10 பயனாளிகளுக்கு ரூ.39,500/- மதிப்பிலும், தோட்டக்கலைத் துறை சார்பில், 4 பயனாளிகளுக்கு ரூ.7385/- மதிப்பிலும், 13 பயனாளிகளுக்கு ரூ.13,00,000/-மதிப்பிலான விபத்து நிவாரண தொகைகளையும், 18 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 132 பயனாளிகளுக்கு ரூ.68.88 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும்; அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.ஏழை எளிய கிராமப்புற மக்கள் தமக்கான சந்தேகங்களை போக்கிக் கொண்டு, அறிவியல் பூர்வமாக தெரிந்து கொண்டு பயன்பெறுவதே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதின் நோக்கம். தமிழ்நாடு அரசு மூலம் ஒவ்வொரு துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.ஒரு பெண்ணுக்கு உண்மையான வலிமை என்பது நிறைய சுதந்திரம் இருக்கலாம். பெண்ணிற்கு கல்வி கற்பதற்கான முழு சுதந்திரம், விரும்பிய இடத்திற்கு செல்வதற்கான சுதந்திரம் இப்படி எத்தனை சுதந்திரம் இருந்தாலும், பெண்களுக்கான உண்மையான சுதந்திரம் என்பது அவர்களுடைய பொருளாதார சுதந்திரம் தான். தன்னுடைய பொருளாதாரத்திற்கு மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடாது. புதிய பயிற்சிகளை பெற்று, கடனுதவிகள் பெற்று, தன்னம்பிக்கையோடு முன்னேறக்கூடிய பொருளாதார வலிமை மிகுந்த பெண்களாக நமது பெண்கள் இருக்க வேண்டும்.மேலும், கால்நடைத்துறையின் சார்பில், ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் அந்த இடத்தில் தீவனப் பயிர்களை வளர்ப்பதற்கு உரிய கடன் வழங்கப்படுகிறது மற்றும் கால்நடைகளை பராமரிப்பதற்கு உரிய கடன்களும் வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த பெண்கள் ஏறத்தாழ 1.20 இலட்சம் பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் மூலமாக பல்வேறு பொருளாதார வளர்ச்சிகள் அடைய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.தொழிற்பயிற்சிகள் மட்டுமல்லாமல் அவர்களுக்கென்று பல்வேறு துறைகளின் சார்பாக அதிகமான கடன்களையும் வழங்கி வருகிறது. நமது மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த பெண்களுக்கு தொடர்ச்சியாக கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடனை பெற்று நீங்கள் அனைவரும் அதனை முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் அனைவரும் கடனை பெற்று அதனை நல்ல முறையில் முதலீடு செய்து அதிலிருந்து வருமானம் பெற்று, கடனையும் அடைத்து, வாழ்வாதாரத்தையும் பார்த்து கொள்ள வேண்டும்.தற்போது, பொதுமக்களிடையே மாறி வரும் உணவு பழக்கவழக்கத்தின் காரணமாக நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவை மூலம், எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் வருவதற்கான காரணமாக அமைகின்றது.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலமாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகளை நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது.ஒரு குடும்பத்திற்கு அவர்கள் வழங்கக்கூடிய பரிசு என்பது அவரது உடல்நலம் தான். ஒருவருடைய உடல்நலத்தை சிறப்பாக பேணிக்காத்து கொள்ள வேண்டும். 30 வயது கடந்த உடன் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்ய வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசினுடைய மருத்துவத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே அதிகப்படியான பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் ஒரு மாவட்டத்தில் இருக்கிறார்கள் என்றால் அது நமது மாவட்டம் தான் இந்தியாவில் இருக்கக்கூடிய மாவட்டங்களிலே முதல் மாவட்டமாக இருக்கிறது.18 வயதிற்கு குறைவாக உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது மிகப்பெரிய குற்றமாகும். 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு உடல் நிலையும், மன நிலையும் ஒரு குழந்தையை சுமக்கக் கூடிய அளவில் இல்லை.அதனால் பிறக்கக்கூடிய குழந்தைகள் குறைப்பாட்டுடன் பிறக்கிறார்கள். 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு இரத்த சோகை என்று சொல்லக்கூடிய இரும்புச்சத்தின் அளவும் குறைவாக தான் உள்ளது. எனவே குழந்தை திருமணத்தை அனைவரும் சமூகமாக சேர்ந்து அவற்றை எதிர்க்கொள்ள வேண்டும்.மேலும், நமது பகுதியில் அதிகமான இளைஞர்கள் படித்து வேலைவாய்ப்பை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகமான போட்டித்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில் ஒவ்வொரும் தொழில் முனைவோராக ஆக வேண்டும். நமது மாவட்டத்தில் தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் மிக அதிகமான சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் செய்யக்கூடியதில் ஒன்றாக இருக்கிறது. அதனால் தான் அனைத்து இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக கடனுதவி வழங்கப்படுகிறது.எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டுமெனவும், மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., அவர்கள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, வட்டாட்சியர் திரு.பாலமுருகன் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையில் ஒன்றிய அரசு வேளாண் அடுக்கு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் பதிவு விவரம், நில உடமை வாரியாக புவியிடக்குறியீடு செய்த பதிவு விவரம் ஆகிய 3 விவரங்களும் முக்கியமானவை ஆகும். இதில் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விவரம் திட்டமானது, ஒன்றிய அரசின் வேளாண்மை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையின்படி மாநில முழுவதுமாக செயல்படுத்தப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் மின்னணு முறையில், அனைத்து விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே, அவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் அனைத்து அரசு திட்ட உதவிகளும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும். நில விவரங்களை இணைப்பதன் மூலம் அனைத்து துறை திட்டங்களையும் எளிதில் பெறலாம்.ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிதில்லை. அரசு நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும். விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் நலத்திட்டஙகள் பெற்றுக்கொள்ள முடியும். பிரதமரின் கௌரவ நிதி திட்டம் மற்றும் பயிர் காப்பீடு போன்ற இதர ஒன்றிய மற்றும் மாநிலத் திட்டங்கள் அனைத்தும் இத்தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் தற்போது ஐம்பத்து ஓராயிரத்து நானூற்று அறுபத்து நான்கு விவசாயிகள் பிரதமரின் கவுர நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் பதிவு (பார்மர் ரிஜிஸ்டர்) திட்டத்தின் மூலம் தரவுகளையும் சரிபார்த்து அவர்களுக்கு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இப்பணியை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் 601 வருவாய் கிராமங்களிலும் ஊராட்சி அலுவலகங்களில் 10.02.2024 முதல் 10 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள், பயிர் அறுவடை பரிசோதகர்கள் மற்றும் மகளிர் திட்ட சமுதாய வள பயிற்றுநர்கள் வருகை தந்து, தனிப்பட்ட அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொள்கின்றனர்.எனவே விவசாயிகள் தங்களுடைய சிட்டா, ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட செல்போனையும் கொண்டு வந்து அடையாள எண் பதிவு செய்ய தங்களின் விவரங்களை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மின்னணு குடும்ப அட்டைகளில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) படி வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்ப அட்டைகளான PHH மற்றும் AAY குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் மற்றும் இதர குடும்ப அட்டைகளின் உறுப்பினர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அல்லது அருகிலுள்ள நியாய விலைக் கடைகளில் 12.02.2025 முதல் 15.02.2025 வரை தங்களது கைவிரல் ரேகை பதிவு செய்யலாம்.மேலும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அல்லது அருகிலுள்ள நியாய விலைக் கடை POS இயந்திரத்தில் கைவிரல் ரேகை பதிவு செய்வது கட்டாயம் என்பதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மீசலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் (10.02.2025) பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வயது முதல் 19 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை இன்று வழங்கப்படுகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ள 5,79,432 சிறுவர், சிறுமியர்களுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 1,33,116 பெண்களுக்கும் குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.மனித உடல் இயங்க வேண்டும் என்றால் அதிகமான சத்துக்கள் வேண்டும். மனிதனுடைய உடல் கட்டமைப்பு புரதச்சத்;துக்களில் தான் வருகிறது. நமது உடல் எடையை பொறுத்தமட்டில் ஒரு கிலோ எடைக்கு சுமார் 1 கிராம் புரத சத்து உள்ள உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும். நம்முடைய உடலுக்கு தேவையான புரதச்சத்தை விட குறைவாக நாம் பெறும் போது தான் உடல் வலிமை குறைகிறது.இந்நிலையில் நம்முடைய வயிற்றில் உள்ள குடற்புழுக்கள் ஒட்டுண்ணியாக செயல்பட்டு, நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து சத்துக்களை உறிஞ்சி கொள்ளும்.சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண்மூலம் குடற்புழு ஒட்டுண்ணிகளால் குடற்புழு தொற்று பரவுவதால், குழந்தைகளின் வளர்ச்சியிலும் மற்றும் உடல்நலனிலும் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு இரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. எனவே, திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும் இரத்தசோகை வராமல் தடுக்க முடியும்.உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பது குடல் ஆரோக்கியம் தான். நம்முடைய கைகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கால இடைவெளியிலும் இந்த குடற்புழு நீக்க மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலமாக உடல் ஆரோக்கியமும், குடல் ஆரோக்கியமும் பெற முடியும்.மேலும், இம்மாத்திரைகளை தவறாமல் வாங்கி மென்று உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வே.யசோதாமணி, மருத்துவர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ / மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (10.02.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது. ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.கல்லூரி, வீடு என்ற கதகதப்பான இந்த மதில் சுவருக்குள் இருக்கும் வாழ்க்கை ஒரு போதும் சமூகம் உங்களுக்கு வழங்காது.உங்களுக்கு விரும்பத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய குணநலன்கள் அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கு விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய குண நலன்களை நீங்கள் உருவாக்கிக் கொள்வதில், நீங்கள் ஏற்படுத்திக் கொள்வது அல்லது நீங்கள் மாற்றிக் கொள்வது என்பதை தாண்டி மற்றொருவர் இந்த குணங்களை மாற்றுவது என்ற நிலை வரும் போதும், அதை எதிர்கொள்ளும்போதும் சட்டப் பாதுகாப்புகள் என்ன இருக்கின்றன என்ற விழிப்புணர்வு இருக்க வேண்டும்.படிப்பு, அறிவு, திறமை, உழைப்பு இந்த நான்கும் தான் மனிதனின் உடைய வெற்றியை தீர்மானிக்கிறது. ஆனால், இந்நான்கும் இருக்கக்கூடிய எல்லோரும் முன்னேறவில்லை.வாழ்க்கையில் சிறப்பாக வெற்றியை அடைந்தவர்கள் அல்லது தாங்கள் விரும்பக்கூடிய ஒன்றை சரியாக பெற்று பொருளாதாரத்தில், சமூகத்தில் நல்ல வலிமையோடு இருக்கக்கூடிய எல்லோருக்கும் முக்கியமான ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. அது தான் இன்றைக்கு இருக்கக்கூடிய விழிப்புணர்வும், அந்த விழிப்புணர்வை பெற்ற பிறகு அவர்கள் தேடிய தேடல்கள் தான். எனவே, படிப்பு, அறிவு, திறமை, உழைப்பு இந்த நான்கும் முக்கியமானது தான். ஆனால் இது எல்லாவற்றையும் விட வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு தான் மிகவும் முக்கியம்.நீங்கள் எவ்வளவு விரிவாகவோ, ஆழமாகவோ தேடுகிறீர்களோ நீங்கள் அவ்வளவு மிக மதிப்பு மிக்க வைரங்களை வாழ்க்கையில் பெறுவீர்கள். இன்றைக்கு மாறி வரக்கூடிய உலகில் கற்றல், கற்பித்தல், புதியனவற்றை தெரிந்து கொள்ளுவதற்கான சூழல் மிகப்பெரிய அளவில் மாறி உள்ளது.இன்று தனது தொடர் வளர்ச்சிக்கு தேவையான கற்றலை உலகம் முழுவதும் இணைய வழியில் பெற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கும் போது, நமக்கான இடம் எங்கு இருக்கிறது. சட்ட பாதுகாப்பு எங்கு இருக்கிறது, நமக்கான சமூக பாதுகாப்பு எது, சமூக பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது, தனி மனித பிரச்சினைகள் அணுகுவது என்பதை பற்றி எல்லாம் தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியம்.எனவே, நீங்கள் விழிப்புணர்வு பெற்ற மாணவிகளாக உங்களது தனிப்பட்ட வாழ்வில், சமூக வாழ்வில் உங்களுடைய குடும்ப வாழ்வில், தொழில் வாழ்வில் இவற்றிற்கு எல்லாம் தனக்கு தேவையான தகவமைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.எனவே, நாம் ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப வாழ்க்கையை தகவமைத்து கொள்வதற்கான புரிதல்கள் நமக்கு வேண்டும். அதற்கான அறிவை வாசிப்பதன் மூலமாக, கேட்பதன் மூலமாக, இந்த சமூகத்தினை புரிந்து கொள்;வதன் மூலமாக கிடைக்கும். அறிவு என்பது நம்மை துன்பத்தில் இருந்து காக்கும்.சமூக வாழ்விற்கும், தனி மனித வாழ்விற்கும், பொருளாதார விடுதலைக்கும் நீங்கள் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும். இதனை எதிர்கொள்ள உங்களுக்கு கல்வியின் கேள்வியின் மூலமாக வரக்கூடிய அறிவு மற்றும் மற்றவர்களின் அனுபவங்களின் மூலம் நாம் அறிவை பெற்றுக்கொள்வது.எனவே, அடுத்தவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு அதிகமான வாய்ப்புக்களை பெற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். நீங்கள் விழிப்புணர்வை பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.வாய்ப்புகளை பெற்று தனிமனித வாழ்விலும், பொருளாதார வாழ்விலும் மிக பெரிய நிலையை நீங்கள் அடைய வேண்டும். நீங்கள் அடைவது மட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கு எடுத்துக்கூறுவதற்கான சிந்தனையும், அறிவையும் பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அரிசி கடத்தல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் நோக்கிலும், மிகை புழக்கத்தைக் குறைக்கும் நோக்கிலும், அரிசி குடும்ப அட்டைகளை பிற வகைகளாக மாற்ற விரும்பும் தன்னார்வலர்களை வரவேற்று குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய, விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH), அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் (AAY), முன்னுரிமை அற்ற அரிசி ,குடும்ப அட்டைகள் (NPHH(R)) ஆகியவற்றை விருப்பமுடைய தன்னார்வலர்கள், 15.02.2025 அன்று அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில், விண்ணப்பப் படிவங்கள் கொடுத்து முன்னுரிமையற்ற சர்க்கரை குடும்ப அட்டையாகவோ (NPHH-S) அல்லது எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைகளாகவோ (NPHH-NC) மாற்றலாம். விருப்பமுடைய, தன்னார்வலர்கள் இம்முகாமை பயன்படுத்தி பொது விநியோக திட்டம் பயன்பாடு சரியான முறையில் தேவைப்படும் மக்களுக்கு சென்றைடைய முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வீ.ப.ஜெயசீலன் , I A S,அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் நுகர்வோரைச் சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள், உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் எடுத்து வரப்படுகின்றன. குறிப்பாக தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சமூக ஊடகங்களில் போதைப்பொருட்கள் கலந்துள்ள மிட்டாய் வகைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி வருகின்ற நிலையில், மாவட்டம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் கடைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இது போன்ற போதைப்பொருள் அல்லது போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கக்கூடிய மிட்டாய் வகைகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்மாவட்டத்தில் எந்தவொரு வணிகராவது இதுபோன்ற மிட்டாய் வகைகளையோ அல்லது போதைப்பொருள் கலந்துள்ள உணவுப்பொருட்களையோ விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அந்த கடையின் வணிகம் நிறுத்தப்பட்டு, அபராதம் விதித்து வழக்குகள் தொடரப்படும். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுப்பட்டால், வழக்குகள் முடியும்வரை கடைகள் வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என எச்சரிக்கப்படுகிறது.தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினர் இணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளிலும் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 01.01.2024 முதல் 31.01.2025 வரை 430 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டும், ரூ.1,13,91,000/- (ரூபாய் ஒரு கோடியே பதின்மூன்று இலட்சத்து தொண்ணூற்று ஓராயிரம்) அபராதம் விதிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள், இம்மாதிரியான வித்தியாசமான வகையில் சந்தேகத்திற்குரிய மிட்டாய் அல்லது சாக்லேட் வகைகள் விற்பனை செய்யப்படுவது கண்டறிய நேரிட்டால் 94440-42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது 04562-225255 என்ற மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் அலுவலக தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (10.02.2025) செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள் வழங்கும் தமிழி மொழிநுட்ப நிரலாக்கப்போட்டி குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு பதாகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வெளியிட்டார்.வளரும் தமிழ் மொழிநுட்பத் தேவைகளை ஈடு கொடுத்துப் புதிய படைப்புகளை உருவாக்க, செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள் முன்னெடுப்பில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான ஸ்டார்ட் அப் டிஎன் (Startup TN)- உடன் இணைந்து தமிழி என்ற நிரலாக்கப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.திரள் தளத்துடன் ஸ்டார்ட் அப் டிஎன் (Startup TN)- உடன் வாணி பிழைதிருத்தி, அக்ரிசக்தி, தமிழ் அநிதம், சிஐஎஸ்-ஏ2கே போன்ற நிறுவனங்களுடன் இணைந்து நடக்கும் இந்தத் தமிழ் மொழிநுட்ப நிரலாக்கப் போட்டியில் மாணவர்களும், மொழி வல்லுநர்களும், தொழில்முனைவோர்களும் கலந்து கொள்ளலாம்.சந்தைப்படுத்தக் கூடிய புத்தாக்கச் சிந்தனை தரும் போட்டியாளர்களுக்குப் படைப்புகளை வளர்த்தெடுக்கத் தேவையான ஊக்கத் தொகையும் அது சார்ந்த தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படும். மேலும் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களின் வழிகாட்டுதல்களும் பயிற்சியும் வழங்கப்படுவதால் தமிழில் தொழில்நுட்பப் புத்தாக்கங்களை உருவாக்கிச் சாதனை படைக்கலாம்.எனவே, ஆர்வமுள்ள மாணவர்கள், மொழி வல்லுநர்கள், தொழில்முனைவோர்கள் http://form.startuptn.in/TLTH என்ற கூகுள் படிவத்தினை 02.03.2025-க்குள் நிரப்பிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 78452-50039(தனபிரகாஷ்) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில், ஸ்டார்ட் அப் டிஎன் (Startup TN) மதுரை வட்டார மைய அலுவலர் திரு.க.சக்திவேல், திரள் தளத்தின் சார்பாக திரு.நீச்சல்காரன் இராஜாராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.