25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Nov 19, 2025

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.11.2025 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில்  நவம்பர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.11.2025 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில்  மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும், விவசாயிகள் வட்டாரத்திற்கு இருவர் வாரியாக பொதுவான கோரிக்கைகள் மட்டும் விவாதிக்கவும், சிறந்த முறையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தினை நடத்திட முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்கேட்டுக்கொண்டுள்ளார்.

Nov 18, 2025

பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு, அணைகளிலிருந்து பாசனத்திற்காக அமைச்சர் அவர்கள் தண்ணீரினை திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள  பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு, அணைகளிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்,  தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள் மற்றும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்  (17.11.2025) நீர் பாசனத்திற்காக தண்ணீரினை மலர் தூவி திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைளை ஏற்று,  பிளவுக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளிலிருந்து நீர்  இருப்பு,  நீர்வரத்து மற்றும்  நீர்த்தேவை அடிப்படையில் தண்ணீர் திறந்துவிட  உத்தரவிட்டிருந்தார்கள். அதனடிப்படையில், இன்று வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள  பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.          பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு ஆகிய அணைகள் முறையே 13.90 சதுர மைல், 9.57 சதுர மைல் நீர்ப்பிடிப்பு பகுதி கொண்டவை. 192.00 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பெரியாறு அணையில் தற்போது 143.52 மில்லியன் கன அடி நீரும், 133 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கோவிலாறு அணையில் தற்பொழுது 22.55 மில்லியன் கனஅடி நீரும் இருப்பில் உள்ளது. மேலும்,பிளவுக்கல் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 0.08 கனஅடி நீரும், கோவிலாறு அணைக்கு 0.08 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.  பிளவுக்கல் பாசன திட்டத்தில் பயன்பெறும் பாசன பரப்பு 8531.71 ஏக்கர (3452.515 ஹெக்டேர்) ஆகும்.தற்பொழுது பாசனத்திற்காக  பிளவுக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளின் மூலம் 17.11.2025 முதல் 7 நாட்களுக்கு வினாடிக்கு 150 கன.அடி வீதமும், நேரடி கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 3.00 கனஅடி வீதம் 28.02.2026 வரையிலும் தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது.          மேலும் 17.11.2025 இன்று பிளவுக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் திறப்பினால் மீதமுள்ள கண்மாய்களுக்கு அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து பாசனத்திற்காகவும், பெரியாறு பிரதானக்கால்வாய் மூலம் நேரடி பாசனத்திற்காகவும் தண்ணீர் வழங்கப்படவுள்ளது. இத்தண்ணீர் திறப்பினால் பிளவக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 40 கண்மாய்களின் 7219 ஏக்கர் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதான கால்வாய் நேரடி பாசனத்தின் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடையவுள்ளன. இதன் மூலம் கொடிக்குளம், கான்சாபுரம், மகாராஜபுரம். வ.புதுப்பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி, சுந்தரபாண்டியம், நத்தம்பட்டி, மூவரைவென்றான், மங்கலம், செம்மாண்டிகரிசல்குளம், பாட்டக்குளம் சல்லிபட்டி, விழுப்பனூர், தச்சகுடி, கிருஷ்ணபேரி, நெடுங்குளம், குன்னூர் ஆகிய 17 வருவாய் கிராமங்கள் பயன்பெறும்.          இதேபோல் அணை நீர் இருப்பினை கருத்தில் கொண்டு பாசன பருவகாலம் வரை தேவைக்கேற்ப  தண்ணீர் வழங்கப்படும். எனவே விவசாயப்  பெருமக்கள்  நீரை  சிக்கனமாக  பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வின்போது,  நீர்வளத்துறை  கண்காணிப்பு பொறியாளர் பொறி.சு.மதனசுதாகரன், செயற்பொறியாளர் பொறி.மு.மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் பொறி.சி. ஜான்சி அனிதா மற்றும் உதவி பொறியாளர்கள் பொறி.காளி சரண் பாபு, பொறி.அருண் பிரசாத், பொறி. உமாபதி, பொறி. அருண்குமார் மற்றும்உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 18, 2025

வனமும் வாழ்வும் என்ற தலைப்பில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சி பட்டறையினை, அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வன விரிவாக மையத்தில் (17.11.2025) திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் (திருவில்லிபுத்தூர் கோட்டம்) சார்பில், வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித-விலங்கு மோதல் மேலாண்மை பயிற்சி திட்டத்தின் கீழ் வனமும் வாழ்வும் என்ற தலைப்பில்  நடைபெற்ற மாவட்ட அளவிலான இரண்டு நாள் ஆசிரியர் பயிற்சி பட்டறையினை துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ.வ.ப.,  அவர்கள் தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் 20,000 அரசு பள்ளி மாணவர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித-விலங்கு மோதல் மேலாண்மை குறித்த சான்றிதழ் பயிற்சி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 அரசு மேல்நிலை/உயர்நிலை பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற அரசு வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்டத்திற்குள் உள்ள 25 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு பள்ளியிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களில் இருந்து 10 மாணவர்கள், 10 மாணவிகள் என மொத்தம் 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் பயிற்சி பெறுவதற்கான மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும், தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் உயிரியல் அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் தொகுப்புகளை கற்பிக்கும் 25 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வனத்துறையின் பயிற்சியாளர்கள் (Forest Range Officer) மூலம் இரண்டு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி பட்டறை இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிரிவாக்க மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டுத்தீ தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய விளக்கங்கள், பள்ளிகளில் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சி முறையை ஒருங்கிணைத்து பயிற்சி அளித்தல், வனவிலங்கு கணக்கெடுப்பு அடிப்படை நடைமுறைகள் மற்றும் புது தலைமுறைக்கு வன பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மனித-விலங்கு மோதல் தடுப்பு, மேலாண்மை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்குதல் ஆகியவை குறித்து இவ்வகுப்பில், பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.இந்த இரண்டு நாள் பயிற்சி நிறைவடைந்த பின், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக பயிற்சி வழங்குவார்கள். பின்னர், மாணவர்களின் மதிப்பீடு செய்யப்பட்டு அரசு வழங்கும் சான்றிதழ் வழங்கல் நிகழ்ச்சி நடைபெறும்.இயற்கை என்பது நாம் ரசிக்கக் கூடியது. இயற்கையை அழித்து விடலாம். ஆனால் அதை நம்மால் உருவாக்குவது கடினம். அந்த இயற்கை மீதான விழிப்புணர்வை உண்டாக்குவதற்கு தான் இது போன்ற பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.  நம்முடைய குழந்தைகளுக்கு இதனை சொல்லித் தர வேண்டும். மாணவர்களிடையே இயற்கை மற்றும் மரங்களின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மரம் வளர்ப்பை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். தாங்கள் வைத்த மரங்கள் தங்களுக்கு முன்னே வளர்ந்து வரும் பொழுது அதனை பார்த்து ரசிக்க கூடிய உணர்வை அவர்களுக்கு உருவாக்க வேண்டும்.  நம்முடைய நாட்டு மரங்களை வளர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும். எனவே, இந்த பயிற்சி வகுப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திருவில்லிபுத்தூர் உதவி வனப்பாதுகாவலர் திரு.ஞானப்பழம், வனச்சரக அலுவலர்(சிவகாசி வன உயிரின சரகம்) திரு.பூவேந்தன், சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) திரு.ரெ.சுரேஷ், சீர்மரபினர் வாரிய துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி, திருவில்லிபுத்தூர் நகர்மன்றத்தலைவர் திரு.ரவிக்கண்ணன், திருவில்லிபுத்தூர் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.மல்லி கு.ஆறுமுகம், வன சர அலுவலர்கள், அரசு அலுவலர்கள்,  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 18, 2025

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

இளைஞர் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2015, பிரிவு 56-ன்கீழ் தத்தெடுத்தல் திட்டத்தின் மூலம் குழந்தையை சட்டப்படி தத்தெடுத்து வளர்க்கலாம்.  அவ்வாறின்று சட்டத்திற்கு புறம்பாக குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது மற்றும் குழந்தையை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து புகார் வரப்பெற்றால் சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வழக்கு விசாரணையின்போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படும்.குழந்தைத் தத்தெடுத்தல் திட்டத்தின்கீழ் பெற்றோர் இருவரும் இல்லாத குழந்தைகள் (Orphan), பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் (Abandoned), பெற்றோரால் வளர்க்க முடியாமல் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் (Surrendered) மற்றும் உறவுமுறையில் குழந்தைகளை (Relative child adoption) தத்தெடுத்து வளர்க்கலாம். அவ்வாறு குழந்தையை தத்தெடுக்க விருப்பம் உள்ளவர் Mission Vatsalya Portal - https://missionvatsalya.wcd.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்யவேண்டும்.அவ்விணையதளத்தில் பெற்றோருக்கான (Parents) என்ற பகுதியினை தெரிவு செய்து அதில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கணவன், மனைவி ஆகியோரின் பின்கண்ட சான்றுகளான 1.பிறப்புச்சான்று, 2.ஆதார்/வாக்காளர் அடையாள அட்டை/ரேசன் கார்டு, 3.பான்கார்டு, 4.திருமண பதிவுச்சான்று, 5.மருத்துவ அலுவலரின் உடற்தகுதிச்சான்று, 6.தம்பதியரின் புகைப்படம், 7.குடும்ப ஆண்டு வருமானச்சான்று, 8.அரசு/தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான சான்று, 9.நண்பர்/உறவினரால் வழங்கப்படும் ஆளறிச்சான்றுகளை பதிவேற்றம் செய்யவேண்டும்.மேலும், விபரங்களுக்கு “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்.503, 5-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் – 626002, தொலைபேசி எண். 04562 – 293946 மற்றும் சிவகாசி, ஈஞ்சார் விலக்கு பகுதியில் செயல்பட்டு வரும் ஜீவக்கல் சிறப்பு தத்தெடுப்பு மையத்தினையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 18, 2025

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.11.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு;ம் மையத்தின்; வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 21.11.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், விருதுநகர் சூலக்கரையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு;ம் மையத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BHAVAN, TVS SUNDARAM BRAKE LININGS LIMITED, ANAAMALAIS TOYOTA, TTK HEALTH CARE, MTC POLYMERS & PACKAGING போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள்  கலந்து கொண்டு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும்  பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 21.11.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு சுய விவரச் சான்றிதழ் (RESUME), அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும் இச்சேவையானது  முற்றிலும் கட்டணமில்லா இலவச சேவையாகும்.இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள்இ விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnrjobfair@gmail.com  என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 18, 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கியமேம்பாட்டுச் சங்கம் மூலம் 2024-2025-ஆம் ஆண்டில் சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையினை பெறதகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் .

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் தொடர்பான திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் தோற்றவிக்கப்பட்டு அச்சங்கம் மூலம் 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தெரிவு செய்து அவர்களுக்கு தலா ரூ.1,00,000/- ஆக நிதி உதவியினை உயர்த்தி வழங்கிட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. 2024-2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையினை பெற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதற்கான விண்ணப்பங்களை தொடர்புடைய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திலும் வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் tn.gov.in  என்ற இணைய தளத்திலும் (website) (or)  https://www.tn.gov.in/form view.php?dep  id=MQ= பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது படைப்பினை இரு நகல்களிலும் டிஜிட்டல் (Digital) முறையிலும், உரிய படிவத்தில் அனுப்ப வேண்டும், இதற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.11.2025-அன்றாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 17, 2025

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாலையம்பட்டி B.P.V.சாலா மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் .

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாலையம்பட்டி B.P.V.சாலா மேல்நிலைப்பள்ளியில்  (15.11.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில், “நலம் காக்கும் ஸ்டாலின்”  திட்டத்தின் கீழ்,  பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.தமிழ்நாடு அரசு சாமானிய மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் போன்ற பல்வேறு  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசாங்க அதிகாரிகள், மருத்துவர்கள் பொது மக்களை நேரடியாக சென்று அவர்களுக்கு சேவைகளை வழங்க வேண்டும். மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கே சென்று அமர்ந்து அவர்களுக்கான உதவியை, சேவைகளை செய்ய வேண்டும் என்று யோசித்து  செயல்படுத்திக் கொண்டிருப்பவர் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் இருந்து மிகச் சிறந்த மருத்துவர்கள் இங்கு வருகை தந்து இருக்கிறார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 13 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 14 ஆவது முறையாக நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுகிறது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவு நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு வேண்டிய மருத்துவ வசதிகள், அறிவுரைகள் அந்தந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலே அளிக்கப்பட்டு வருகிறது.அருப்புக்கோட்டை தலைமை மருத்துவமனையில் சுமார் ரூபாய் 37 கோடி  செலவில் பல்வேறு வசதிகளுடன்  மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில்  விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி பெறப்பட்டுள்ளன.அதில் தகுதியான அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.பாலையம்பட்டி பகுதி மக்களுக்கு தேவையான  குடிநீர் வசதிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் பணிகள் நிறைவடைய உள்ளன.இதுபோன்று எண்ணற்ற திட்டங்கள் மூலம் மக்களுக்கு தேவையான சேவைகளை அவர்களின் இருப்பிடம் தேடிச் சென்று வழங்கி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.இம்முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டங்களையும், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், தாட்கோ மூலம் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டைகளையும் அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில்,  விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 17, 2025

வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள்

விருதுநகர் மாவட்டம் 1.1.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கி வருகின்றனர். இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 14,62,874 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நாளை (16-11-2025 ஞாயிற்றுக் கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஏற்கெனவே வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள் எவரேனும் இதுவரை கணக்கெடுப்புப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால் இச்சிறப்பு முகாம்களுக்குச் சென்று தங்களுக்கான மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், கணக்கெடுப்புப் படிவங்களை ஏற்கெனவே பெற்றுள்ளவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை திரும்ப அளிக்க இயலும். படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரையோ அல்லது தங்களின் தந்தை/தாய்/தாத்தா/பாட்டி பெயர்களைக் கண்டறிவதற்கும் உதவி தேவைப் பட்டால் இம்முகாம்களுக்குச் சென்று தேவையான உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.இம்முகாம்களில் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தன்னார்வலர்கள் இந்தப் பணிகளை மேற்கொள்வார்கள்.பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் எந்த ஆவணத்தையும் இணைத்து வழங்கத் தேவையில்லை. வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04562)-1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 15, 2025

அருப்புக்கோட்டையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியினைத், தொடங்கி வைத்து அமைச்சர் அவர்கள் உரையாற்றினார்.

 தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் 2025-2026ன் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும்  பணிகளைத் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம்,  அருப்புக்கோட்டை, தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  (14.11.2025) பள்ளிக்கல்வித்துறை / பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் 2025-2026ன் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் 11-ஆம் வகுப்பு பயிலும் 419 பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நம்முடைய தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்களால்  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரிலே பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவினை தொடக்கி வைத்தார். அதனடிப்படையில், இன்று அருப்புக்கோட்டை பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு  விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு வகையான திட்டங்களை வகுத்து வருகிறார்.இன்றைய காலகட்டத்தில் ஒரு போட்டியான உலகம் அமைந்துள்ளது. இன்றைய சமூகத்தில் அனைவரும் கல்வி கற்றவர்களாக உள்ளனர். அவர்களின் திறமைக்கேற்றவாறு வேலைக்கு செல்கின்றனர்.  நமது அரசாங்கம் செயல்படுத்தியுள்ள நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை  மாணவச் செல்வங்களாகிய நீங்கள் பயன்படுத்தி தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.மாணவச் செல்வங்களாகிய நீங்கள் தங்கள் குடும்பக் கஷ்டங்களை போக்கி ஒரு வசதியான தலைமுறையாக வாழ வேண்டும்  என்று தெரிவித்தார்.நம்முடைய   தமிழ்நாடு துணைமுதலமைச்சர் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, இன்றைய தினம் விருதுநகர்  மாவட்டத்தில் உள்ள 166 – பள்ளிகளைச் சேர்ந்த 18,585 பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.இதில், இன்றைய தினம் மட்டும் அருப்புக்கோட்டை  சட்டமன்றத் தொகுதியில் 415 பள்ளி மாணவ /  மாணவியர்களுக்கும், எம்.ரெட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில்  144 பள்ளி மாணவ / மாணவியர்களுக்கும் என மொத்தம் 559  மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.விருதுநகர் மாவட்டம்,  அருப்புக்கோட்டை நராட்சியில் மாணவர்களுக் கு 1050 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு 1283 மதிவண்டிகளும் ஆக மொத்தம் 2333 எனவும்,   காரியாபட்டியில் மாணவர்களுக்கு  463  மதிவண்டிகளும்,  மாணவிகளுக்கு 666  மதிவண்டிகளும்  ஆக மொத்தம் 1129 எனவும்,  நரிக்குடியில்  மாணவர்களுக்கு 285, மிதிவண்டிகளும் , மாணவிகளுக்கு 262  மிதிவண்டிகளும் ஆக மொத்தம்  547  எனவும்,  இராஜபாளையம் நகராட்சியில் மாணவர்களுக்கு 1492 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு 1992  மிதிவண்டிகளும் ஆக மொத்தம்  3484 எனவும்,  சாத்தூரில்  மாணவர்களுக்கு 504 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு 676 மிதிவண்டிகளும்  ஆக மொத்தம்  1180 எனவும், சிவகாசி  நகராட்சியில் மாணவர்களுக்கு 1107 மிதிவண்டிகளும்,  மாணவிகளுக்கு 1766  மிதிவண்டிகளும் ஆக மொத்தம்  2873 எனவும், திருவில்லிபுத்தூர் ஊராட்சியில் மாணவர்களுக்கு 932 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு மிதிவண்டிகளும் 1003 ஆக மொத்தம்  1935 எனவும், திருச்சுழியில் மாணவர்களுக்கு  411 மிதிவண்டிகளும்,  மாணவிகளுக்கு 471  மிதிவண்டிகளும் ஆக மொத்தம்  882 எனவும், வெம்பக்கோட்டையில் மாணவர்களுக்கு 329, மாணவிகளுக்கு 413, ஆக மொத்தம்  742 ஆக மொத்தம் எனவும், விருதுநகரில்  மாணவர்களுக்கு 1072 மிதிவண்டிகளும் , மாணவிகளுக்கு 1315 மிதிவண்டிகளும் ஆக மொத்தம்  2387 எனவும் , வத்திராயிருப்பு ஊராட்சியில் மாணவர்களுக்கு 515 மிதிவண்டிகளும் ,  மாணவிகளுக்கு 578 மிதிவண்டிகளும்   ஆக மொத்தம்  1093 எனவும்,   என  ஆக மொத்தம் 18585 மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், மாணவ / மாணவியர்களின் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, அருப்புக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திருமதி சுந்தர்லட்சுமி சிவப்பிரகாசம், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 15, 2025

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் விழிப்புணர்வு பேரணி.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தேசபந்து மைதானத்தில்  (14.11.2025) தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14“-யினை முன்னிட்டு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில், “குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” – “என் நாள் - என் உரிமை (My Day, My Rights)” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.மாவட்டத்தில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று 14.11.2025 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு,  “குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” – “என் நாள் - என் உரிமை (My Day, My Rights)”   என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளான குழந்தைத் திருமணம், இளம்வயது கர்ப்பம், பாலியல் வன்முறை, பள்ளி இடைநிற்றல், போதைப்பொருள் பயன்பாடு, குழந்தைத் தொழிலாளர், சமூக ஊடகங்கள் தாக்கம், பாலின வேறுபாடு மற்றும் வேறு எந்தவிதமான குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை கண்டறிந்தால் உடனடியாக குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபட வேண்டும். சாதி மன இன வேறுபாடுடின்றி அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும். பாலின தேர்வு நிலையற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு சூழலை அனைத்து நிலையிலும் உறுதிபடுத்த வேண்டும்.  மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும், மனவளர்ச்சி குன்றிய, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கும் அவர்களது அணுகல்களை உறுதி செய்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.குழந்தைகள் தொடர்பாக பிரச்சனைகள் கவனத்திற்கு வரும் பட்சத்தில் உடனடியாக 1098, 181 மற்றும் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். நம் எதிர்காலத்தில் முதலீடு செய்வது என்பது நம் குழந்தைகளுக்காக முதலீடு செய்வதாகும் என்பதை உணர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். பாதுகாப்பான குழந்தைப்பருவத்திற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான குழந்தைநேய செயல்பாடுகளில் அனைவரும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.                        இந்த பேரணியில் அரசு அலுவலர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு,  குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்தல், கல்வியின் அவசியம் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியபடி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முன்னதாக, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கையெழுத்து இயக்கத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.மேலும், இப்பேரணியில் 1098 - குழந்தைகளுக்கு சிறப்பு இலவச உதவி எண் தொடர்பான துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.  இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 51 52 53 54 55 56 57 ... 138 139

AD's



More News