முதலமைச்சரின் விடியல் பயணத்திட்டமானது, அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் இல்லதரசிகள், உயர்கல்வி பயிலும் மாணவிகள், பணிபுரியும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லா பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால், பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள்.இத்திட்டமானது தமிழகத்தை பின்பற்றி கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரையில், அனைத்து தரப்பு மக்களிடத்திலும் இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பணிபுரியும் பெண்கள் மட்டுமின்றி, சுயதொழில் செய்யும் பெண்கள், இலவச பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள், குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் தாய்மார்கள், குழந்தைகளை நாள்தோறும் பள்ளிக்கு அழைத்து செல்லும் பெண்கள், வயதான பெண்கள்; மற்றும் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டம் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது.அரசுப்பேருந்துகளில் அனைத்து மகளிர் , திருநங்கைகள் , மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் இந்த திட்டத்தின் வாயிலாக 445 கோடி முறை பயணம் செய்து மாதந்தோறும் ரூ.888 வரை சேமிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், இத்திட்டத்தின் வாயிலாக மூன்று ஆண்டுகளில் 11.27 கோடி மகளிர்கள், 73,552 திருநங்கைகள், 9.44 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 11.37 கோடி நபர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.மேலும், பொது போக்குவரத்து பயணங்களை ஊக்குவிப்பதும் பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்தாக அமைந்துள்ளதால், அனைத்து தரப்பு மக்களிடமும் மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”;நோய் என்ன? நோயிக்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஒப்ப, தமிழக அரசு பதவியேற்று மக்களின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்து சிறப்பாக பணியாற்றி நல்லாட்சியை மக்களுக்கு வழங்கி கொண்டு, தொற்றா நோயாளிகளின் தன்மை அறிந்து, அவர்களின் அலைச்சலையும், மன உலைச்சலை தவிர்க்கும் வண்ணம், தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், இந்தியாவிலேயே முதன் முறையாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் ‘மக்களைத் தேடி மருத்துவம்” என்ற உன்னதமான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.‘மக்களை தேடி மருத்துவம்” என்ற திட்டம் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயாளிக்கு பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகளை நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.இந்த திட்டத்தின் மூலம், பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம்,நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவச் சேவைகள், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சமுதாயநலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழை எளியோரின் இல்லம்தேடிச் சென்று இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கும் இத்திட்டத்தினால் தமிழகத்தில் ரூ.1.70 கோடி நபர்கள் பயனடைந்துள்ளனர். அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இத்திட்டத்தின் கீழ், 3,31,833 நபர்கள் உயர் இரத்த அழுத்தத்தினாலும், 1,52,307 நபர்கள் நீரிழிவு நோயினாலும், 1,43,683 நபர்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டு என மொத்தம் 6,27,823 நபர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், 130 -ற்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள், 55 செவிலியர்கள், 13 பிசியோதெரபிஸ்ட், 11 வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் செவிலியர்கள், 205 இடைநிலை சுகாதார பணியாளர்கள், 245 பெண் சுகாதார தன்னார்வலர்கள் ஆகியோர்கள் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றினார்கள்.
விருதுநகர் மாவட்டம், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்து கடந்த ஒரு வாரத்தில் பெட்டிக்கடைகளில் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருத்த கடைகளுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து, கடந்த ஒரு வாரத்தில் (19.05.2024 முதல் 25.05.2025 வரை) உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து பெட்டிக் கடைகள் மற்றும் வாகனங்களில் தடை செய்த புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனை நடத்தினர். அதில் 16 பெட்டிக்கடைகளில் 20 கிலோ 350 கிராம் எடையுள்ள ரூபாய் இருபதாயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 16 பெட்டிக்கடைகள் சீல் வைக்கப்பட்டு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2-வது முறையாக தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரை கடை மூடி சீல் வைக்கப்படும.3-வது முறையும் தவறு செய்தால் ரூ.1லட்சம் அபராதம், மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். இம்மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத்துறை) அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, ஏகம் அறக்கட்டளை மற்றும் கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (25.05.2024) பார்வையிட்டார்.இம்முகாம் மூலமாக விருதுநகர் சுகாதார பிரிவு மாவட்டத்தில் 60 குழந்தைகள் மற்றும் சிவகாசி சுகாதார பிரிவு மாவட்டத்தில் 90 குழந்தைகள் தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம் (Rashtriya Bal Swasthya Karyakram-RBSK) ) குழு மூலமாக அழைத்து வரப்பட்டனர்.மேலும், இக்குழந்தைகளுக்கு இருதய நோய் நிபுணர்கள் இருதய பரிசோதனையான ECHO SCAN செய்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.பின்னர் அவர்களில் தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம் மூலம் அழைத்து வரப்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து, அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகள் உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவர்;. அவர்களுக்கான அறுவை சிகிச்சைகள் கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் (CMCHIS) மூலமாக நடைபெறும் என்று தெரிவித்தார்கள்.இம்முகாமில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர்.மரு.கி.சீதாலெட்சுமி, துணை முதல்வர் மரு.திருமதி.ச.அனிதா மோகன், மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.திருமதி.வே.யசோதாமணி (விருதுநகர்), மரு.திரு.நா.கலுசிவலிங்கம் (சிவகாசி), மருத்துவர்கள் திரு.மு.கல்யாணசுந்தரம், திரு.இரா.விஜயக்குமார் (இருதய நோய் நிபுணர்கள், ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை, கோவை) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
உலக அளவில் சுயமரியாதையாக வாழக்கூடிய பல்வேறு சமூகங்களில், ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலை மனிதர்களுடைய வாழ்க்கை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் கைகளில் பணம் இருக்க வேண்டும்.ஒவ்வொருவருடைய கைகளில் பணம் இருக்கின்ற போது, அது தரக்கூடிய தன்னம்பிக்கையும், ஆறுதலும் எழுத்திலும் சொல்லிலும் சொல்ல முடியாது. இன்றைய நவீன பொருளாதார அறிஞர்கள் கூட, மக்கள் கையில் அவர்கள் விருப்பத்திற்கும் அத்தியாவசியமான செலவுக்கு பணம் கையில் இருப்பது பொருளாதார வளர்ச்சிக்கும் தனி மனிதனுடைய மேம்பாட்டிற்கும் மிக முக்கியம் என்று குறிப்பிடுகிறார்கள்.இது இன்றைக்கு மட்டுமல்ல 2000 ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழர்களின் உடைய அறிவின் அடையாளமாக கருதப்படும் திருக்குறளில்“செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்” என பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லை என திருவள்ளுவர் கூறுகிறார்.ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தை அந்த நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மூலமாக கணக்கிடப்படும் பொழுது உழைப்பை முதலீடாகக் கொண்ட பல்வேறு அங்கத்தினரின் உழைப்பு முறையாக கணக்கிடப்படவில்லை என்று பொருளாதார அறிஞர்கள் தொடர்ச்சியாக குறிப்பிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இருந்து இரவு வரை வீட்டு வேலைகளை செய்யக்கூடிய நம் மகளிர் தன்னுடைய அவர்களின் உழைப்பு முறையாக வகைப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்தால் அதை அதில் பெரிய இடைவெளி இருப்பதாக பல்வேறு ஆராய்ச்சிகளும் பொருளாதார அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் பெண்களுடைய உழைப்பை அங்கீகரிக்கக் கூடிய வகையில் அவர்களுக்கான உரிமை தொகை வழங்கும் இந்த கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை என்ற சிறப்புமிகு திட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டு, மாதந்தோறும் ரூ.1000/- பெண்களின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதும், பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.வீட்டை விட்டு வெளியில் சென்று வேலை பார்ப்பவர்கள் தான் வேலை செய்கிறார்கள் என்று காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த சமுதாயத்திற்கு அடிப்படையான குடும்பத்தின் ஆணிவேராக இருப்பது பெண்கள்தான்.குடும்பத்தை உயர்த்துவதற்கும், குழந்தைகள், கணவர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்காகவும் உழைக்கும் பெண்களுக்கு இந்தியாவிலேயே முதல் முதலாக அங்கீகாரம் கொடுத்தது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு.இது உதவியாக இல்லாமல் இதை பெறுவதற்கு பெண்களுக்கு உரிமை இருக்கின்றது. பெண்கள் செய்து கொண்டிருக்கின்ற கடமைக்கான உரிமையை பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.அதன்படி தமிழகத்தில் முதற்கட்டமாக 15.09.2023 அன்று 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.இரண்டாம் கட்டமாக 10.11.2023 அன்று மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000ஃ- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பயனாளிகளான 7.35 இலட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக தற்போது வரை இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில், வரவு வைக்கும் இத்திட்டத்தின் மூலம் நாளது வரையில் 1 கோடியே 15 இலட்சம் குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் 3,27,830 குடும்பத் தலைவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகளுக்காக இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக தகவல் தொழில்நுட்ப பணி என்ற பெயரில், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் (பர்மா) உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சென்றவுடன் சட்டவிரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அம்மாதிரி சட்டவிரோதமான இணையதள பணிகளை செய்ய மறுக்கும் நபர்களை கடுமையாக துன்புறுத்துகிறார்கள். நமது விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இதுபோல் தகவல் தொழில்நுட்ப பணி என்ற பெயரில் வெளிநாட்டிற்கு சென்ற இளைஞர்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்களை நம்நாட்டிற்கு மீட்டெடுத்து வருவதில் மிகுந்த சிரமங்களும், கால தாமதமும் ஏற்படுகிறது. அன்மைகாலங்களில் தாய்லாந்து வழியாக லாவோஸ் நாட்டிற்கு தகவல் தொழில்நுட்ப பணி என்றும் டிஜிட்டல் சேவைகளை சந்தைபடுத்துகின்ற மேலாண்மை பணி என்றும் நமது இளைஞர்களை அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இம்மாதிரியாக இளைஞர்களை கவர்ந்து அழைத்து செல்லும் முகவர்கள் துபாய், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனர். இம்முகவர்கள் இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பணிக்கென்று மிக எளிமையான நேர்காணல் வழியாகவும், எளிமையான தட்டச்சு தேர்வு வைத்து தெரிவு செய்வதோடு அதிக சம்பளம், தங்குமிட வசதி, நாடு திரும்புவதற்கான விமானப் பயணச் சீட்டு மற்றும் விசா ஏற்பாடு செய்யப்படும் என்று ஆசை வார்த்தைகளை சொல்லி இளைஞர்களை பணிக்கு தேர்வு செய்கின்றனர்.தகவல் தொழில்நுட்ப பணி என்று நம்பி சென்ற இளைஞர்கள் சட்டவிரோதமாக தாய்லாந்து எல்லை வழியாக லாவோஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, லாவோஸில் உள்ள Golden Triangle என்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கடுமையான மற்றும் கட்டுப்பாடான நிலைமைகளின் கீழ் பணிபுரிய சிறைபிடிக்கப்படுகின்றனர்.தாய்லாந்து அல்லது லாவோஸ் நாடுகளில் வருகைக்கான விசா (Arrival visa) வேலைவாய்ப்பை அனுமதிக்காது. மேலும், அத்தகைய விசாவில் லாவோஸ் நாடுகளுக்கு வருபவர்களுக்கு லாவோஸ் நாட்டு அதிகாரிகள் வேலைக்கான அனுமதியை (Work Permit) வழங்குவதில்லை. சுற்றுலா விசா, சுற்றுலா நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. லாவோஸில் மனித கடத்தல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.இதுபோன்ற மோசடி வலையில் நமது இளைஞர்கள் மாட்டிக்கொள்ளாமல் எச்சரிக்கை உணர்வுடன், ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் வேலை செய்யவிருக்கும் நிறுவனத்தை பற்றி நன்றாக விசாரித்து பணிக்கு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வேலைக்கான விசாவின் உண்மைதன்மை மற்றும் முறையான பணி ஒப்பந்தம் (Work Permit) குறித்து பயணிப்பதற்கு முன் பணிபுரிய செல்ல உள்ள நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அல்லது இந்தியாவிலுள்ள அந்நாட்டின் தூதரகம் மூலம் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும்.லாவோஸ் மற்றும் கம்போடியாவில் வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை லாவோஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண் 856-2055536568, மின்னஞ்சல் cons.vientianne@mea.gov.in மற்றும் கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்தின், மின்னஞ்சல் cons.phnompehh@mea.gov.in. visa.phnompehh@mea.gov.in ஆகியவற்றின் மூலம் சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.அயலக வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் மற்றும் அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து தீர்வு காண தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.அ) 18003093793 (இந்தியாவிற்குள்)ஆ) 8069009901 (அயல்நாடுகளிலிருந்து தொடர்புக்கு)இ) 8069009900 (Missed Call No..)மேலும் குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலர், சென்னை (Protector of Emigrants,Chennai) உதவி எண்- 90421 49222 அவர்களையும் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாட்டில் ஒன்றிய அரசில் பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் / முகமைகள் மீது காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே வெளிநாட்டிற்கு செல்லும் இளைஞர்கள்; எச்சரிக்கை உணர்வுடன், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (24.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணன்கோவில் ஊராட்சி, விழுப்பனூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.9.77 இலட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடை கட்டப்பட்டு வருவதையும்,விழுப்பனூர் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.5.83 இலட்சம் மதிப்பில் சுற்றுச்சூழல் வளர்ச்சிக்காக ஊரணி தூர்வாருதல், கால்வாய் ஆழப்படுத்துதல், தடுப்புச்சுவர் கட்டுதல் மற்றும் குழந்தைகளுக்கான நீச்சல் குளம் கட்டப்பட்டு வருவதையும்,அச்சன்குளம் ஊராட்சியில் அயோத்தி தாஸ் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்தும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த நிகழ்வுகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் (24.05.2024) விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள மேற்பார்வையாளர்கள் / உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோர்களுக்கான முதற்கட்ட சீரற்ற தெரிவு பணிகள் (1st Randomization process) தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மக்களவை பொதுத்தேர்தல் - 2024 கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய 6 தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான விருதுநகரில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.மேலும், விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையானது வருகின்ற 04-06-2024 அன்று நடைபெற உள்ளது. இவ்வாக்கு எண்ணிக்கையில், வாக்கு எண்ணிக்கைக்கான மேற்பார்வையாளர்கள்,உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோர்கள் மூன்று கட்டமாக சீரற்ற தெரிவு முறையில் (Randomization process) தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியாளர்களை தேர்வு செய்வதற்கான முதற்கட்ட சீரற்ற தெரிவு முறையானது தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அவர்களால் வழங்கப்பட்ட மென்பொருளில் மேற்கொள்ளப்பட்டது.இதில், கீழ்கண்ட விபரப்படி வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள்/ உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோர்கள் சீரற்ற தெரிவு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 120 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 120 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் மற்றும் 120 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 360 வாக்கு எண்ணிக்கை பணியாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பானது, 27.05.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தனித்தனியாக தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.இதன் பின்னர், தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் வரப்பெற்ற பின்பு 2ம் கட்ட சீரற்ற தெரிவு முறையில் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்வு செய்வதற்கான பணியானது தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெறும். அப்போது 2ம் கட்ட பயிற்சியானது, தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் தலைமையில் வழங்கப்படும்.மேலும், 3ம் கட்ட சீரற்ற தெரிவு முறை தேர்வானது, வாக்கு எண்ணிக்கை அன்று (04.06.2024) வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்து அன்று காலை 5.00 மணியளவில் தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் முன்னிலையில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் மேஜை வாரியாக தேர்வு செய்யப்படவுள்ளனர் என தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் மூலம் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.விருதுநகர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலமும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பசுமை விருதுநகர் இயக்கம் மூலமும் பல்வேறு கட்டங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 5 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.இதன் தொடர்ச்சியாக, வருகின்ற ஜீன்-5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஜீன் மாதத்தில் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து அரசு அலுவலர்கள், பொதுமக்கள், அமைப்புச்சாரா நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பள்ளிக், கல்லூரி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம்.இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) 74026-08260 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.சமீப காலமாக புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்படும் வறட்சியினை தடுப்பதற்கும் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையினை போக்குவதற்கும், மரம் நடுதல் ஒன்றே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்பதையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள், ஊடகவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இதை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டியதின் அவசியத்தை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.இது போன்று தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்த சீரிய முயற்சியில் அனைவரும் தவறாது பங்கு கொண்டு ஒரு மக்கள் இயக்கமாக இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்து இந்த பூமியை அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்விடமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராம, நகர்புற பகுதிகளில் உள்ள குழந்தைகள் பள்ளிகள் தூரமாக இருப்பதாலும், சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் காலை உணவு சாப்பிடுவதில்லை என்பதை கருத்தில் கொண்டும், அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும், ஊட்டசத்து குறைபாட்டை போக்குவதற்காகவும் இந்திய நாட்டிலேயே முன்னோடி திட்டமான அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான “முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்”-னை கடந்த 15.09.2022 அன்று முதற்கட்டமாக தொடங்கி வைத்தார்கள்.அதனடிப்படையில், மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவை குறிக்கோளாக கொண்டு, விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டமாக இத்திட்டத்தின் கீழ், ரூ.99.73 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 69 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 3098 மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ரூ.7.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்கள் மற்றும் 7 பேரூராட்சிகளில் உள்ள 768 அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் 33231 மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம், வழங்கப்படும் காலை உணவினால், பசிப்பிணி நீங்கி மனநிறைவோடு பிள்ளைகள் படிப்பார்கள். அவர்கள் மனதில் பாடங்கள் பதியும். மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வத்துடன் வருவதுடன், சீரான வருகைப் பதிவும் இருக்கும். தமிழ்நாட்டின் கல்வி கற்போர் விகிதமும் அதிகம் ஆகும். இதன் மூலம் கல்வியில் சிறந்த மாநிலமாக உருவாவதற்கும்,மாணவர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் இத்திட்டம் அடித்தளமாக இருக்கும்இத்திட்டத்தில் பயன்பெற்று வரும் மாணவி தெரிவிக்கையில்:என் பெயர் ஆனந்தி. நான் பாலவனத்தம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறேன். என் தந்தை தினக்கூலி வேலை செய்து வருகிறார். தாய் விவசாயம் கூலி வேலை செய்து வருகிறார். நான் தினமும் பள்ளிக்கு வரும்போது, என் பெற்றோர் வேலைக்கு செல்வதன் காரணமாக அவர்களால் காலை உணவை சரிவர எனக்கு தயார் செய்து கொடுக்காமல் அவசர அவசரமாக வேலைக்கு சென்று விடுவார். நானும் வீட்டில் இருந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வருவேன். சில நேரங்களில் காலை உணவை சாப்பிடாமல் கூட பள்ளிக்கு வந்துள்ளேன். இந்த நிலையில் முதலமைச்சர் ஐயா அவர்கள் எங்களுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி உணவு வழங்கி வருகின்றனர். இதில் உப்புமா, கிச்சடி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த காலை உணவினால் எனக்கு மிகவும் உற்சாகம், சுறுசுறுப்பாகவும் இருக்கின்றது. இங்கு வழங்கப்படும் உணவுகள் சுவையாகவும் இருக்கின்றது. எங்களுக்கு இந்த காலை உணவு திட்டத்தை கொண்டு வந்து காலை உணவு அளித்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.பள்ளி குழந்தைகளுக்கு முதலில் மதிய உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது காலை உணவும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் இரண்டு வேளை திருப்தியாக உணவருந்துகிறார்கள். இத்திட்டத்தினால் பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவும், அவர்களின் கற்றல் திறனும் மேம்பட்டுள்ளது. இத்திட்டம் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.