விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / அவரைச்சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 03.11.2025 அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.எனவே, விருதுநகர் மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள்/அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினர் மேற்படி சிறப்பு குறைதீர்க்கும் நாளன்று கலந்து கொண்டு தங்களின் குறைகள் பற்றிய விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மழைநீர் சேரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,., அவர்கள் (29.10.2025) தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி, வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆண்டுதோறும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரை வீணாக்காமல் சேமித்து வைப்பதாகும். மேலும், மழைநீரை சேமிப்பதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, வீடுகள், நிறுவனம், கடைகள் , பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கட்டிடங்களில் வரும் மழைநீரை சேகரிப்பதால், கோடைகாலங்களில் வரும் தண்ணீர் பிரச்சினையை தவிர்க்க முடியும்.மேலும், திறந்தவெளிக் கிணறுகள் இல்லாத வீடுகளில் மொட்டை மாடியில் இருந்து கொண்டுவரப்படும் மழைநீரை சிறு கால்வாய் மூலம், வடிகட்டும் தொட்டிக்குள் பாய்ச்சுவதால், சிறு தொட்டிக்குள் மழைநீரைச் செலுத்தி சேகரிக்கவும், கிராமப்புறங்களில் கிணறுகள் மூலமும், தூர்வாரப்பட்ட குளங்கள் மூலமும் மழைநீர் சேகரிக்க முடிகிறது. நம் மக்களிடையே பல்வேறு வகையான நோய்கள் அதாவது, காலரா, காய்ச்சல் , வயிற்றுபோக்கு, வயிற்றுவலி, இருமல், வாந்தி போன்ற நோய்கள் நீரின் மூலம் பரவுகின்றன.அதனை தடுப்பதற்கு, குடிக்கும் நீரை காய்ச்சி குடிக்க வேண்டும். திறந்த வெளியில் இருக்கும் நீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள பழைய டயர்கள் மற்றும் காலி பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், மழைநீர் சேகரிப்பு தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இப்பேரணியில் பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு, விருதுநகர் மாரியம்மன் கோவில் முன்பாக தொடங்கி, பழைய பேருந்து நிலையம் வழியாக நகரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் திருமதி கற்பகம் மற்றும் உதவி நிர்வாகப் பொறியாளர்கள், இளநிலை நீர் பகுப்பாய்வாளர், பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (29.10.2025) 4-ஆவது விருதுநகர் புத்தக திருவிழா, விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாக பொருட்காட்சி மைதானத்தில் 14.11.2025 முதல் 24.11.2025 வரை 11 நாட்களுக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, “அறிவும் வளமும்” என்ற தலைப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இலச்சினையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தகவாசிப்பு முக்கிய பங்குவகிக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தினை ஊக்கப்படுத்த வேண்டும். புத்தகவாசிப்பினை ஒருமக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தகக் காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், இலக்கிய சிந்தனைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் புத்தகத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில், முதலாவது புத்தக திருவிழா கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய கருப்பொருளை மையப்படுத்தி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நான்காவது விருதுநகர் புத்தக திருவிழா - 2025 “அறிவும் வளமும்” என்ற தலைப்பில், விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாக பொருட்காட்சி மைதானத்தில் 14.11.2025 முதல் 24.11.2025 வரை 11 நாட்கள் நடத்தப்பட இருக்கிறது.இப்புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், தொல்லியல்துறை அரங்குகள், அறிவரங்கம், பசுமை அரங்குகள், புத்தக நன்கொடை அரங்கு, உணவு மற்றும் சிற்றுண்டி அரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.மேலும், பிரபல எழுத்தாளர்கள் மற்றும் தலைசிறந்த ஆளுமைகளின் சிறப்புரைகள், சிறப்புப் பட்டிமன்றங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதன்படி, இந்த புத்தகக் கண்காட்சி குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், “அறிவும் வளமும்” என்ற தலைப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில், இந்தப் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் கண்டுகளித்து, புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களில் தாங்கள் விரும்புகின்ற புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறும், இந்த புத்தகத் திருவிழா குறித்து அனைத்துத் தரப்பினருக்கும் தகவல்களையும் கொண்டு செல்வதற்கும், போதுமான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி அனைவரும் பயன்பெறுவதற்கு போதிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (29.10.2025) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக 2025 நவம்பர் 4ம் தேதி முதல் வீடு வீடாக கணக்கெடுப்பு படிவ வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும். வாக்காளர்கள் மேற்படி படிவத்தினை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதனுடன் எந்தவொரு ஆவணத்தையும் அப்போது இணைத்து வழங்கத் தேவையில்லை.வாக்காளர்கள் தங்களது பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், அதன் விபரத்தை கணக்கெடுப்பு படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாத நபர்கள், தங்கள் குடும்ப நபர்கள்/உறவினர்கள் பெயர்கள் 2002 பட்டியலில் இடம் பெற்றிருந்தால், அதன் விபரத்தையும் குறிப்பிடலாம்.கணக்கெடுப்பு படிவங்கள் வழங்குதல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்ப பெறுவது போன்ற பணிகள் 2025 நவம்பர் 4ம் தேதி முதல் 2025 டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறும். இக்காலத்தில் இதுவரை பெயர் சேர்க்கப்படாத நபர்களும் குடியிருப்பு இடம் மாறியுள்ளவர்களும், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ப்பதற்கு முறையே படிவம் 6 மற்றும் 8ஏ அல்லது 8பி ஆகிய படிவங்களில் விண்ணப்பிக்கலாம்.கணக்கெடுப்பு படிவங்களை கையொப்பமிட்டு அளித்த அனைத்து வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் 2025 டிசம்பர் 9 முதல் 2025 ஜனவரி 8 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோருதல், ஆட்சேபணைகள் தெரிவித்தல், திருத்தம் செய்யக் கோருதல் போன்ற படிவங்கள் / கோரிக்கைகள் பெறப்பட்டு, அப்படிவங்களுடன், ஏற்கனவே பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களின் மீதும் 2025 ஜனவரி 31ம் தேதி வரை விசாரணை செய்யப்பட்டு, பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நல்ல முறையில் நடைபெறுவதற்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகம்து இர்பான்,I A S., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா, தேர்தல் வட்டாட்சியர் திரு.ரமணன், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர், தேர்தல் பணி அலுவலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (27.10.2025) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், 'நஷா முக்த் பாரத் அபியான் (NMBA) திட்டத்தின் கீழ் போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான பிரச்சாரம் என்ற போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தொடங்கி வைத்தார்.மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் 'நஷா முக்த் பாரத் அபியான் (NMBA) திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கான பிரச்சாரத்தின் 5வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தேசிய நிகழ்வாக போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான பிரச்சாரம் என்ற தலைப்பில் 01.10.2025 முதல் 31.10.2025 வரை நாடு முழுவதும் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழியும், போதைப்பொருள் பயன்பாடுகளினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இப்பேரணியில் பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு, போதையை ஒழிக்கும் பாதையை வளர்ப்போம், போதை வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு , காப்போம் நம் குழந்தைகளை - உருவாக்குவோம் போதைப்பொருட்கள் இல்லாத சமூகத்தை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களுடனும், போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்து தங்களுடைய சுய விபரங்கள் இன்றி புகார் செய்வதற்கு DRUG FREE TN அலைபேசி செயலி குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், “நான் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன், போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்கும் அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன்“ என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.மதன்குமார், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தலைமையில் (27.10.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில், மாவட் வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் (26.10.2025 முதல் 01.11.2025 வரை) கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (27.10.2025) அனைத்துத்துறை அலுவலர்களும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.அதன்படி, நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். எனவே நான், அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என்ற உறுதி மொழியினை அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.காளிமுத்து உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு;ம் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 31.10.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், விருதுநகர் சூலக்கரையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் TVS SUNDARAM BRAKE LININGS LIMITED, ANAAMALAIS TOYOTA, ELEVATE DIGI TECHNOLOGIES, RANBA CASTINGS, ADISON INTERNATIONAL TRADE CO போன்ற 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு I.T.I. டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலை நாடுநர்கள் 31.10.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு, சுய விவரச் சான்றிதழ் (RESUME), அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnrjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில், (25.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவிகள் வழங்கும் விழாவில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் சிவகாசி நகர்ப்புர மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 148 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1,300 மகளிர்களுக்கு ரூ10.10 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.பின்னர், விருதுநகரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவிகள் வழங்கும் விழாவில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் விருதுநகர் நகர்ப்புர மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 181 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1,537 மகளிர்களுக்கு ரூ.11.68 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.மகளிர் சுய உதவிக்குழுக்கள் சமூக முதலீட்டு நிதி, நுண்கடன், சுய உதவிக்குழு கடனுதவி போன்ற உதவிகளை பெற்று அதை மீண்டும் மீண்டும் பெருக்கி உங்களுக்கான மகளிர் தற்சார்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசின் மூலம் தமிழ்நாட்டில் அணைகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளோடு, பொருளாதாரத்திலும் சமுதாயம் வளர்ந்து வருகிறது.2010 ஆம் ஆண்டிற்கு பிறகு ஏறத்தாழ 14 ஆண்டுகள் கழித்து, நம்முடைய முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில், தமிழ்நாடு சுமார் 11.2 சதவிகிதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநில பொருளாதார வளர்ச்சியும் இந்த அளவுக்கு இல்லை.பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று நான் பெருமையாக கூறுகிறேன். இந்த பெரிய பொருளாதார வளர்ச்சிக்கு நம்முடைய தொழில், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன.தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய மாநிலமாக இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களிலும் பெண்கள் அதிகமான அளவில் தொழிற்சாலைகளில் சென்று வேலை செய்யக்கூடிய முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.இந்த பொருளாதார வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், பெண்கள் சமூக வளர்ச்சியில் மேலே வர வேண்டும். நம்முடைய சமுதாயம் மேலே வர வேண்டும். அந்த சமுதாயத்தின் மிக முக்கியமான பங்காக இருக்கக்கூடியவர்கள் பெண்களான உங்களை மேலே கை தூக்கி விட வேண்டும் என்று சொன்னால் உங்களுக்கான மரியாதையும், சம உரிமையும் வழங்க வேண்டும்.பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்று சட்டம் இயற்றப்பட்டது. ஆணுக்கு பெண் இழைத்தவள் அல்ல என்பதை சொல்வதற்காக உங்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், கடனுதவிகள் மூலம் பெண்களுக்கான பொருளாதார வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கிறது.விடியல் பயணம் என்பதன் நோக்கம் என்றால் வீட்டில் இருந்து ஒரு பெண் தைரியமாக படிப்பதற்கு, வேலைக்கு, தன்னுடைய சுய காரியங்களுக்காக செல்வதற்கு தைரியம் வர வேண்டும் என்பதற்குதான்.. இந்த மகளிர் பயணத்தின் மூலமாக என்னுடைய ஒவ்வொரு சகோதரிகளுக்கும் அவர்கள் கையில் எவ்வளவு பணம் மிச்சப்படுகிறது என்பது தான் முக்கியம். அதே உணர்வோடுதான் மகளிர் உரிமைத் தொகையானது வழங்கப்படுகிறது.இந்த குழுக்கள் மூலமாக தயாரிக்கப்படும் பொருட்கள் இன்று மதி மூலம் உலகம் முழுவதும் சென்றடைகிறது.இதுபோன்று பெண்களுக்கான சக்தி மென்மேலும் வளரக்கூடிய வகையில் நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் பெண்கள் பயன்படுத்திக் கொண்டு பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். அதற்கு அமைச்சர்களும், மாவட்ட நிர்வாகமும் என்றைக்கும் உங்களுடன் இணைந்து, உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து, உறுதுணையாக இருப்போம் என தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு முழுவதும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 329 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சுமார் ரூ.21.78 கோடி அளவில் கடனுதவிகள் வழங்கப்பட உள்ளன.விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்த அளவில் தற்போது வரை சுமார் 14,638 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2024-2025 ஆம் ஆண்டில் 18,930 உறுப்பினர்கள் அடங்கிய 982 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதனைப்போல், 2025-2026 ஆம் ஆண்டில் 12,923 உறுப்பினர்கள் அடங்கிய 921 குழுக்கள் அமைக்கப்பட்டன. இப்புதிதாக அமைக்கப்பட்ட சுய உதவிக்குழுவினருக்கு 2024-2025 ஆம் ஆண்டில் 900 கோடி வரையிலும், 2025-2026 ஆம் ஆண்டில் 500 கோடி வரையிலும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இதனைத்தொடர்ந்து சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 349 முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது வரை 322 முகாம்கள் நடந்து முடிந்துள்ளன. இம்முகாமில் ஏறத்தாழ 65,000 வரை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 75 சதவீதம் வரை மனுக்கள் நிலுவையிலின்றி முடிக்கப்பட்டுள்ளன.மேலும், இம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி ஏறத்தாழ 60,000 மகளிர் விண்ணப்பத்துள்ளனர். இவ்விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்ப்பு நிலையில் உள்ளன.மற்றொரு முக்கிய திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 36 முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது வரை 12 முகாம்கள் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளன.இதுபோன்ற, பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் நமக்கு வழங்கியுள்ளனர். இவற்றையெல்லாம் பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.தற்போது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் - 3644 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை 02/2025, நாள் 21.08.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு 09.11.2025 அன்று நடைபெறும்.இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு இலவச முழுமாதிரித் தேர்வுகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் 29.10.2025 (புதன் கிழமை) மற்றும் 01.11.2025 (சனிக்கிழமை) ஆகிய நாட்கள் நடைபெறவிருக்கிறது. இத்தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/k3oJqkaDqmmUBkGr6 என்ற Google form link-ல் பதிவு செய்தோ அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம்.எனவே, TNUSRB-PC EXAM தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.