விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத்தொகுதி, அ.முக்குளம் கிராமத்தில் (08.11.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்- 2026 கீழ் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெப்புகள் பணிகள் மேற்கொண்டு வருவதையும், வாக்காளர் படிவம் வழங்கப்பட்டு வருவதையும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S,. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(07.11.2025) முன்னேற விழையும் மாவட்டம் (Aspirational District) தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் முன்னிலையில், கூடுதல் செயலாளர் (இந்திய அரசின் கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை) / மத்திய பொறுப்பு அலுவலர் (Central Prabhari Officer) திரு.ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல், I A S., அவர்கள் அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.மத்திய அரசு நிதி ஆயோக் அமைப்பினால் பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை, நிதி உள்ளடக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு, அடிப்படை உட்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் 112 முன்னேற விழையும் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து முற்றிலும் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது தான் இத்திட்டத்தின் நோக்கமாகும். விருதுநகர் மாவட்டத்தில் பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை, நிதி உள்ளடக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு, அடிப்படை உட்கட்டமைப்பு ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தி அந்த துறைகளை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வதற்கு அலுவலர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஒன்றிய அரசினால் முன்னேற விழையும் மாவட்டங்களாக(Aspirational District) தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒன்றிய, மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாக கூடுதல் செயலாளர் (இந்திய அரசின் கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை) / மத்திய பொறுப்பு அலுவலர் (Central Prabhari Officer) திரு.ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல்,இ.ஆ.ப., அவர்கள் முன்னேற விழையும் மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காரணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து, காரணிகளின் மீது தனிக்கவனம் செலுத்தி, இந்த காரணிகளின் தரத்தினை மேம்படுத்த தொடர்புடைய துறைத்தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ரத்தசோகை குறைபாடு உள்ள 56 சதவீதம் பள்ளிக் குழந்தைகளின் முன்னேற்றம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து, மாவட்டத்தில் உள்ள ரத்தசோகை குறைபாடு உள்ள பெண் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு இரத்த சோகை குறைபாட்டை போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக பேறு காலத்தில் ஏற்படும் சிசு மரண விகிதம் வெகுவாக குறைந்ததை பாராட்டினார்.மாவட்டத்தில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் அதிகமாக இருப்பதை பாராட்டி, இந்த சதவிகிதம் வருங்காலங்களில் குறையாமல் இருப்பதற்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கி, தொடர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.அருப்புக்கோட்டை வட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களில் காட்டுக் பன்றிகளால் ஏற்படக்கூடிய இழப்புகளை தடுப்பதற்கு அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறும், திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டாரப்பகுதிகளில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.மேலும் திறன் வளர்ச்சி துறை மூலமாக கொடுக்கப்பட்டு வரும் பயிற்சிகளை நவீனப்படுத்துமாறும், செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் டெக்னாலஜிஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பம் தொடர்பாகவும் பயிற்சி வழங்கும்படி தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதாரத்தின் சார்பாக மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக புதுமையான பொருட்களை தற்போதுள்ள கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்து அவர்களுடைய வாழ்வாரத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் மானிய கடன் வழங்கியதற்காக பாராட்டி, சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கி அவர்களுடைய தொழில் வளர்ச்சிக்கு உதவுமாறு தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். முன்னேற விழையும் மாவட்டத்தின் கீழ், தனித்தனியாக ஆய்வு செய்து மாவட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடர்ந்து கண்காணித்து, முன்னேற விழையும் மாவட்டத்தின் கீழ் உள்ள அனைத்து குறியீடுகளிலும் தனிக்கவனம் செலுத்தி பணிகளை துரிதபடுத்தி, மாவட்டத்தின் முழுமையான வளர்ச்சிக்கு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.முன்னதாக விருதுநகர், கன்னிச்சேரிபுதூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை, பயன்பெறும் கிராமங்களின் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மருத்துவமனையில் மகப்பேறு அடைந்த கர்ப்பிணித்தாய்மார்களுக்கு தாய் சேய் நல பரிசு பெட்டகங்கள், மற்றும் பிறப்புச் சான்றிதழ்களையும், வளரிளம் பெண்களுக்கு இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்யும் வகையில் இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும் கூடுதல் செயலாளர் (இந்திய அரசின் கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை) / மத்திய பொறுப்பு அலுவலர் (Central Prabhari Officer) அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வுகளில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆரோக்கிய ரூபன்ராஜ், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மாற்றுத்திறனாளிகளின் நலன் வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது.அதன்படி, விருதுநகர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஒவ்வொருவாரம் புதன்கிழமையும், அருப்புக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமையும், திருவில்லிபுத்தூர், அரசுமருத்துவமனையில் மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய்கிழமையும், இராஜபாளையம், அரசுமருத்துவமனையில் மாதந்தோறும் மூன்றாவது வியாழக்கிழமையும், சிவகாசி அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் நான்காவது வெள்ளிக்கிழமையும் முகாம்கள் நடைபெறும்.மேற்காணும் முகாம்கள் நடைபெறும் நாட்களில் மாற்றுத்திறனாளிகளின் வகைகளான கை,கால் இயக்கக் குறைபாடு, தொழுநோயிலிருந்து குணமடைந்தோர், மூளை முடக்குவாத பாதிப்பு, குள்ளத் தன்மை, தசைசிதைவு நோய், அமிலவீச்சினால் பாதிக்கப்பட்டோர், கண் பார்வையின்மை, குறைந்த பார்வையின்மை, காதுகேளாமை, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, அரிவாளது இரத்தக்சோகை, இரத்த அழிவுச்சோகை, இரத்த உறையாமை (அல்லது) இரத்த ஒழுகுகுறைபாடு, அறிவுசார் குறைபாடு, குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, புற உலகு சிந்தனையற்றோர், மனநோய், நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, பல்வகைகுறைபாடு, நடுக்குவாதம், பல்வகை குறைபாடு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டமாற்றுத்திறன் உடையவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (Unique Disability Identity Card) பெறுவதற்கு ஆதார் அட்டைநகல், குடும்ப அட்டைநகல் மற்றும் பாஸ்போட் சைஸ் போட்டோ-4, ஆகியவற்றை கொண்டு வந்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.மேலும் இது தொடர்பாக விபரம் ஏதேனும் இருப்பின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலனை கருத்தில்கொண்டு “ தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14“-யினை முன்னிட்டு 14.11.2025 அன்று காலை 10.00 மணியளவில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசபந்து மைதானத்திலிருந்து ”குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” - ”என் நாள் - என் உரிமை (My Day, My Rights)“ என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் கையெழுத்து பிரச்சாரம், விழிப்புணர்வு பேரணி மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இப்பேரணியின்போது குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்தல், கல்வியின் அவசியம் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து தெருக்கூத்து கலைக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளில் தொடர்புடைய அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பத்திரிக்கையாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே இவ்விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ளலாம். இப்பேரணியில் கலந்து கொள்பவர்கள் நீலநிற (Blue) உடை அணிந்து பங்கேற்றவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கோபாலபுரம் கிராமத்தில் (06.11.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்- 2026 கீழ் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டு வருவதையும், வாக்காளர் படிவம் வழங்கப்பட்டு வருவதையும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S,. அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசுஅதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம். மேலராஜகுலராமன் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் மதிப்பில் நர்சரி பூங்கா அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தலைமையில் (03.11.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மூன்றுச்சக்கர வண்டிகள் வேண்டி மனு அளித்த 5-மாற்றுத்திறனாளிகளின் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, 5-நபர்களுக்கு தலா ரூ.11,500/- வீதம் மொத்தம் ரூ.57,500/- மதிப்பில் மூன்றுச்சக்கர வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் சங்கரபாண்டியபுரம் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியிடை மரணமடைந்த திரு.சுப்புராஜ் என்பவரின் வாரிசுதாரரான அன்னாரது மனைவி திருமதி மல்லிகா என்பவருக்கு கிராம உதவியாளர் பணியிடத்திற்கான ஆணையினையும்,சாத்தூர் வட்டம், கஞ்சம்பட்டி கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியிடை மரணமடைந்த திரு.ச.கருத்தபாண்டியன் என்பவரின் வாரிசுதாரரான அன்னாரது மகன் திரு.க.சங்கர் கணேஷ் என்பவருக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான ஆணையினையும், திருச்சுழி வட்டம், முத்துனேந்தல் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியிடை மரணமடைந்த திரு.சோ.செல்லம் என்பவரது வாரிசுதாரரான அன்னாரது மகள் திருமதி சத்தியவாணிமுத்து என்பவருக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான ஆணையினையும், காரியாபட்டி வட்டம் சிறுவேப்பங்குளம் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியிடை காலமான திரு.வே.பரமன் என்பவரின் வாரிசுதாரரான அன்னாரது மகள் திருமதி சமுத்திரசெல்வி என்பவருக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான ஆணையினையும்,என கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியிடை காலமான 4 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ, தலை சிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற (Tattoo Making Course, Aesthetic Training Course and Semi Permanent Makeup Courses) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயதிற்குள்ளும் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள். மேலும் திருச்சி மாவட்டத்தில் தங்கி படிப்பதாற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.15,000/- முதல் ரூ.25,000/- வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரம் புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி விருதுநகர் மாவட்டத்தில் எதிர்வரும் 09.11.2025 அன்று காலை 6.30 முதல் நடைபெற உள்ளது.மேலும், 18 முதல் 25 வயது வரை உள்ளவர்களில் ஆண்களுக்கு 8 கி.மீ பிரிவின் கீழும், பெண்களுக்கு 5 கி.மீ பிரிவின் கீழும் மற்றும் 25 வயதிற்கு மேல் நிரம்பியவர்களில் ஆண்களுக்கு 10 கி.மீ பிரிவின் கீழும், பெண்களுக்கு 5 கி.மீ பிரிவின் கீழும் இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மேற்கண்ட பிரிவுகளில் முதல் 10 இடம் பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/- மும், இரண்டாம் பரிசாக ரூ.3,000/- மும், மூன்றாம் பரிசாக ரூ.2,000/- மும், நான்கு முதல் பத்தாம் இடம் பிடித்தவர்களுக்கு பரிசாக ரூ.1,000/- மும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.இப்போட்டிகளில் பங்கேற்க தகுதியுள்ள பள்ளி மாணவ/மாணவியர் தங்களது வயதுச் சான்றிதழை தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று 09.11.2025 அன்று காலை 6.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் முன்பாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களிடம் ஆஜராகுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.வெற்றி பெற்ற மாணவ/மாணவியர் தங்களது வங்கிக்கணக்கு புத்தக நகலினை (Active Account with correct A/C Number & IFSC Code Only) மாவட்ட விளையாட்டு அரங்கில் சமர்ப்பிக்க வேண்டும் பரிசுதொகை வங்கி பரிவர்த்தனை மூலம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். எனவே, மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேசிய ஆயுஷ் இயக்கம் மற்றும் இந்திய மருத்துவம் & ஓமியோபதித்துறை (NAM) மற்றும் தேசிய சுகாதார திட்டத்தின்(NHM) கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களுக்கு கல்வித்தகுதி மற்றும் ஊதியத்தின் அடிப்படையில் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த பணியாளராக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 14.11.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.1. பதவியின் பெயர் : ஆயுஷ் மருத்துவ ஆலோசகர் (Consultant – Yoga and Naturopathy)கல்வித்தகுதி : BNYS (Bachelor of Naturopathy and Yogic Sciences) Registration with respective Board/counciவயது வரம்பு : 59 – ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவாகமொத்த காலிப் பணியிடங்கள் : 03 (அரசு மருத்துவமனைகள் - திருவில்லிபுத்தூர் – 01, சாத்தூர் - 01, இராஜபாளையம் – 01)மாத தொகுப்பூதியம் : ரூ.40,000/- 2. பதவியின் பெயர் : ஹோமியோபதி மருத்துவர்கல்வித்தகுதி :BHMS (Bachelor of Degree BHMS From recognized university) வயது வரம்பு : 59 – ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவாகமொத்த காலிப் பணியிடங்கள் : 01 (டி.மானகசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்) மாத தொகுப்பூதியம் : ரூ.34,000/- 3. பதவியின் பெயர் : பல்நோக்கு பணியாளர்கள் (Attender / Multipurpose Worker) கல்வித்தகுதி :எட்டாம் வகுப்பு தேர்ச்சி தமிழில் எழுதப் படிக்க தெரிய வேண்டும். வயது வரம்பு : 59 – ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவாக மொத்த காலிப் பணியிடங்கள் :04 (அரசு மருத்துவமனைகள் - ஸ்ரீவில்லிபுத்தூர்-1, சாத்தூர் -1, இராஜபாளையம்-1, சிவகாசி-1)மாத தொகுப்பூதியம் : ரூ.10,000/- 4. பதவியின் பெயர் : சிகிச்சை உதவியாளர்கள் (Therapeutic Assistant) கல்வித்தகுதி :Diploma in Nursing Therapist course (for certificate issued by Government of Tamilnadu only) வயது வரம்பு : 59 – ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவாக மொத்த காலிப் பணியிடங்கள் : 04 [அரசு மருத்துவமனைகள் - இராஜபாளையம்-2 (ஆண் - 1, பெண்-1) , சிவகாசி-2 (ஆண்-1 , பெண்-1)]மாத தொகுப்பூதியம் : ரூ.15,000/-மேலும், இந்த பதவி முற்றிலும் தற்காலிகமான ஒன்றாகும். எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்கவேண்டும். மேற்குறிப்பிட்டபதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.விண்ணப்ப படிவங்களை http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ அல்லது அருகிலுள்ள மாவட்ட சுகாதார நல அலுவலகத்திலோ பெற்றுக்கொள்ளலாம்.மேலும், விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். சுயசான்றொப்பமிட்ட கல்வித்தகுதிக்கான சான்றிதழ் (ம) மதிப்பெண் சான்றிதழின் நகல், சுயசான்றொப்பமிட்ட சாதிச்சான்றிதழ் நகல், சுயசான்றொப்பமிட்ட இருப்பிடச் சான்றிதழ் நகல் (குடும்பஅட்டை/ஆதார் அட்டை ) உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் , மாவட்ட சுகாதார நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம்-626 001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ அனுப்பலாம். மேலும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் மற்றும் சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,.அவர்கள் தெரிவித்துள்ளார்.