அமெரிக்காவில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ‘யூத்’ தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 21வது சீசன் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியா சார்பில் பூஜா சிங் (19) பங்கேற்றார்.அதிகபட்சமாக 1.84 மீட்டர் உயரம் தாண்டிய பூஜா சிங், 7வது இடத்தைப் பிடித்தார்.பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியின் இறுதிச்சுற்றில் பூமிகா, தஹுரா, தானு, தியா ஆகியோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. பந்தய தூரத்தை 3 நிமிடம் 45.28 வினாடிகளில் கடந்த இந்திய அணி 9வது இடத்தைப் பிடித்தது.இந்தத் தொடரில் இந்தியாவுக்கு 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தம் 3 பதக்கங்கள் கிடைத்தன.
துரந்த் கோப்பை கால்பந்து தொடரில் மோகன் பகான் அணி காலிறுதிக்கு முன்னேறியது. லீக் போட்டியில் சி.ஐ.எஸ்.எப். புரோடக்டர்ஸ் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.இந்தியாவில் 135வது துரந்த் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன.கொல்கத்தாவில் நடைபெற்ற ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் மோகன் பகான் அணி, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எப்.) புரோடக்டர்ஸ் அணியை எதிர்கொண்டது.ஆட்டம் தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய மோகன் பகான் அணி, கோல் மழை பொழிந்தது. முடிவில் 6-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் மனாஸ் தம்னே முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தென் கொரியாவின் சியோல் நகரில் வரும் செப். 18, 19 ஆகிய தேதிகளில் டேவிஸ் கோப்பை பைனலுக்கான தகுதிச்சுற்றின் 2வது சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதுகின்றன.இப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 362வது இடத்தில் உள்ள மனாஸ் தம்னே முதல்முறையாக இடம் பிடித்துள்ளார்.மற்ற இந்திய வீரர்களான சுமித் நாகல் (235வது இடம்), தக்ஷினேஸ்வர் சுரேஷ் (393வது இடம்) ஆகியோர் ஒற்றையர் பிரிவில் தங்களது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி (28வது இடம்), ஸ்ரீராம் பாலாஜி (57வது இடம்) ஜோடி மீண்டும் களமிறங்குகிறது.
திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டியில் மதுரை, சேலம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சேலம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது.சவாலான இலக்கை துரத்திய சேலம் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் மதுரை அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் நத்தம் பகுதியில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டியில் திண்டுக்கல் மற்றும் சேப்பாக்கம் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற சேப்பாக்கம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில் நெல்லை மற்றும் திருப்பூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நெல்லை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.கடினமான இலக்கை துரத்திய திருப்பூர் அணி அதிரடியாக விளையாடி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது.
தென்கொரியாவில் நடைபெற்ற 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, சீனாவின் ஹான் கியான்சியை எதிர்கொண்டார்.53 நிமிடங்கள் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் அஷ்மிதா 14-21, 21-14, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.அசாமைச் சேர்ந்த அஷ்மிதா, பி.டபிள்யு.எப். உலக டூர் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பசந்த் குமார் மேக்வால் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.இறுதிப்போட்டியில் பசந்த் குமார், அல்ஜீரியாவின் யூனஸ் அயாச்சி மற்றும் பிரிட்டனின் ஓடிஸ் பூலே ஆகியோர் தலா 2.21 மீட்டர் உயரத்தைத் தாண்டினர்.இதையடுத்து, அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பசந்த் குமார் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.ராஜஸ்தானைச் சேர்ந்த இந்திய கடற்படை வீரரான பசந்த் குமார், உலக இளையோர் தடகள போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்றனர். இதன் மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்தது.பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் வென்ற மீராபாய் சானு உள்ளிட்ட இந்திய நட்சத்திர வீரர், வீராங்கனைகள் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது தாங்கள் வென்ற பதக்கங்களை பிரதமரிடம் காண்பித்தனர்.வீரர்களை வாழ்த்திய பிரதமர் மோடி, இந்தியாவை தொடர்ந்து உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.தங்கப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சாக்ஷி கூறுகையில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை பிரதமர் மோடி வரவேற்றது பெருமையாக இருந்ததாகவும், அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
செயின்ட் லூயிஸ்: ‘கிராண்ட் செஸ் டூர்’ 11-வது சீசன் 5 தொடர்களாக நடைபெற்று வருகிறது. இதன் 4-வது தொடரான செயின்ட் லூயிஸ் செஸ் தொடர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்றது. போட்டிகள் ‘ரேபிட்’ மற்றும் ‘பிளிட்ஸ்’ முறையில் நடத்தப்பட்டன.முதலில் நடைபெற்ற ‘ரேபிட்’ பிரிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.இதையடுத்து நடைபெற்ற ‘பிளிட்ஸ்’ பிரிவில் 18 சுற்றுகள் முடிவில் 11.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.ஒட்டுமொத்தமாக ‘ரேபிட் + பிளிட்ஸ்’ பிரிவுகளில் 23.5 புள்ளிகள் (12.0 + 11.5) பெற்ற பிரக்ஞானந்தா, செயின்ட் லூயிஸ் தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டியில் சேப்பாக்கம் மற்றும் நடப்பு சாம்பியன் திருப்பூர் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற திருப்பூர் கேப்டன் சாய் கிஷோர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.முதலில் பேட்டிங் செய்த சேப்பாக்கம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய திருப்பூர் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில் நெல்லை மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நெல்லை அணி கேப்டன் சோனு யாதவ், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து நெல்லை அணியின் பேட்டிங் தொடர்கிறது.